வெள்ளி, பிப்ரவரி 15, 2019

மோடியின் எழுச்சி - பா.ஜ.க.விலும் கலக்கம்தான்

"மோடி" என்ற இந்துத்துவ மோசடியில் ஏமாந்த இந்தியா - 3

கேஷூபாய் பட்டேலுடன் சேர்ந்து, அவரது போட்டியாளரும் இன்னொரு மூத்த தலைவருமான சங்கர் சிங் வகேலாவின் ஆதரவாளர்களை ஓரம் கட்ட ஆரம்பித்தார் மோடி. அதை எதிர்த்து வகேலா செய்த கலகத்தைத் தொடர்ந்து எட்டப்பட்ட சமரசத்தின்படி முதலமைச்சராக சுரேஷ் மேத்தா என்ற வகேலா ஆதரவாளர் நியமிக்கப்பட்டார். மோடி டெல்லி தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

1996-ம் ஆண்டு வகேலா நடத்திய மாநாடு ஒன்றில் அவரது ஆதரவு அமைச்சர் ஒருவர் மோடி-கேஷூபாய் கோஷ்டியினரால் வேட்டியை அவிழ்த்து அவமானப்படுத்தப்பட்டார். வகேலா கட்சியை விட்டு வெளியேறி தனிக் கட்சி தொடங்கி பின்னர் காங்கிரசுடன் இணைந்தார். 1997-ல் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று கேஷூபாய் பட்டேல் மீண்டும் முதல்வர் ஆனார்.

2000-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ.க அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் நகராட்சிகளை இழந்தது. பலவீனமான கேஷூபாய் பட்டேல் தலைமையில் 2003-ம் ஆண்டு ஆரம்பத்தில் வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறுவது சிரமம் என்று மோடி கட்சித் தலைமையின் மத்தியிலும், பத்திரிகையாளர் மத்தியிலும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்ச் பகுதியை பூகம்பம் தாக்கியது. பூகம்பத்தின் மையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அகமதாபாதில் கூட அடுக்கு மாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 750 பேர் கொல்லப்பட்டனர்.  மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கேஷூபாய் பட்டேல் அரசு சொதப்பியது.

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி சட்டமன்ற தொகுதிக்கும், வடக்கு குஜராத்தில் உள்ள சபர்கந்தா நாடாளுமன்ற தொகுதிக்கும் செப்டம்பர் மாதம் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியதும், கேஷூபாய் பட்டேல் நீக்கப்பட வேண்டும் என்ற முடிவை கட்சித் தலைமை எடுத்தது. 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி டெல்லி தலைமையின் முடிவின் படி, சட்ட மன்ற உறுப்பினராகக் கூட இல்லாத மோடி குஜராத்தின் சுல்தானாக முடிசூடிக் கொள்ள அனுப்பி வைக்கப்பட்டார்.

மோடி குஜராத் முதல்வராகும் போது வலுவான இரண்டாம் கட்டத் தலைவர்களாக, மோடியின் அதிகாரத்துடன் போட்டி போட்டு எதிர்ப்பவர்களாக கட்சியில் இருந்தவர்கள் ஹரேன் பாண்டியா, சஞ்சய் ஜோஷி மற்றும் கோர்தன் ஜஃபாடியா. ஒரு தேர்தலில் கூட  போட்டியிட்டு வெற்றி பெற்றிராத மோடி இவர்கள் அனைவருக்கும் மேல் டெல்லி தலைமையால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஹரேன் பாண்டியா கேஷூபாய் பட்டேல் அமைச்சரவையில் நிதித் துறை பொறுப்பு வகித்தவர். 2001-ல் மோடி முதலமைச்சராக நியமிக்கப்பட்ட போது ஹரேன் பாண்டியாவின் தொகுதியான எல்லிஸ் பிரிட்ஜில் போட்டியிட விரும்பினார். எல்லிஸ் பிரிட்ஜ் சிறிய தொகுதியாகவும் பாஜகவின் செல்வாக்கு மண்டலமாகவும் இருந்தது.

ஆனால், “யாராவது ஒரு இளைஞனுக்கு வழிவிடச் சொல்லுங்கள், செய்கிறேன். ஆனா இந்த ஆளுக்காக (மோடிக்காக) நான் தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்று பாண்டியா மறுத்திருக்கிறார். அந்த அளவு மோடியின் மீது கடுப்பில் இருந்திருக்கின்றனர் கேஷூபாய் படேல் கோஷ்டியினர். மோடி சவுராஷ்டிராவில் உள்ள ராஜ்கோட் சட்ட மன்ற உறுப்பினரான வாஜூபாய் வாலா என்ற அமைச்சரை வழி விடச் செய்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டார். ரியல் எஸ்டேட் முதலாளியான வாஜூபாய் வாலா பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தார்.

அதன் பிறகு 2002-ல் முஸ்லீம் படுகொலைகளுக்குப் பிறகு நடந்த சட்ட மன்ற தேர்தலில் ஹரேன் பாண்டியாவை வேட்பாளராக நியமிக்க மறுத்தார், மோடி. நாக்பூரில் இருந்து ஆர்.எஸ்.எஸ் தலைமையும், டெல்லியிலிருந்து பா.ஜ.க தலைமையும் தொலைபேசியிலும், நேரில் ஆள் அனுப்பியும் மேலும் பிரச்சனை செய்யாமல் பாண்டியாவுக்கு எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியை கொடுக்கும்படி வலியுறுத்தினார்கள். மோடி பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், தனக்கு சோர்வாகவும், தளர்ச்சியாகவும் இருக்கிறது என்று அகமதாபாத் பொது மருத்துவமனைக்குப் போய் படுத்துக் கொண்டார்.

கொதித்துப் போன ஹரேன் பாண்டியா மருத்துவமனைக்குள் சென்று, “யேய், கோழையைப்போல தூங்காதே, தைரியமிருந்தா எனக்கு சீட் தர மாட்டேன்னு நேருக்கு நேரா சொல்லு" என்று வசை மழை பொழிந்து விட்டு வந்திருக்கிறார். ஆனால், மோடியின் பிடிவாதம் வென்றது. பாண்டியா தேர்தலில் போட்டியிடவில்லை.

பாண்டியாவை பலனுள்ள தலைவர் என்று கருதிய பா.ஜ.க. தலைமை, அவரை தேசிய செயற்குழு உறுப்பினராகவோ, கட்சி செய்தித் தொடர்பாளராகவோ நியமித்து டெல்லிக்கு அழைத்துக் கொள்ள முடிவு செய்தது. “மோடி தனது சுயநலத்துக்காக கட்சியையும் சங்க பரிவாரத்தையும் அழித்து விடுவார்" என்று பாண்டியா பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்து தொடர்ந்து பேசி வந்தார். இவர் டெல்லிக்கு முக்கியப் பொறுப்பில் போனால் மோடியின் நீண்டகால அரசில் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தல் நேரலாம் என்ற சூழலில் ஹரேன் பாண்டியாவை டெல்லிக்கு மாற்றும் கட்சியின் உத்தரவு கடிதம் அவருக்கு தொலை நகல் மூலம் வந்து சேர்ந்த அடுத்த நாள் காலையில் அவர் அகமதாபாத்தில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

தனது மகனது மரணத்துக்கு அரசியல் பின்னணிதான் காரணம் என்றும் மோடியின் கட்டளையின் பேரில் அது நடத்தப்பட்டது என்றும் பாண்டியாவின் தந்தை விட்டல்பாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். போதிய சாட்சியங்கள் இல்லை என்று நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து விட்டிருந்தது.

ஹரேன் பாண்டியாவிற்கு நேர்ந்தது தனக்கும் நேர்ந்து விடாமல் பாதுகாத்துக் கொண்டு உலாவுகிறார் மோடியின் சக சங்க பரிவார ஊழியர், 2002 கலவரத்தின் சக குற்றவாளி கோர்தன் ஜடாஃபியா. 2005-ம் ஆண்டு அவரை உளவுத் துறை அதிகாரி ஒருவர் தன்னை பின்தொடர்வதை உணர்ந்து, என்ன சமாச்சாரம் என்று அவரிடம் கேட்டிருக்கிறார் கோர்தன். "உள்துறை அலுவலகம்தான் உங்களை பின் தொடரச் சொல்லியது" என்று அதிகாரி சொல்லியிருக்கிறார்.

அடுத்த முறை முதலமைச்சர் சட்ட மன்ற உறுப்பினர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில், 'உங்க சொந்தக் கட்சி எம்.எல்.ஏவையே உளவு பாக்கிறீங்களே, என்ன விஷயம்" என்று குரல் எழுப்பியிருக்கிறார் ஜடாஃபியா. வாஜுபாய் வல்லா என்ற மூத்த அமைச்சர் அவரை சமாதானப்படுத்தியிருக்கிறார். மோடி எதுவும் பேசவில்லை. கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் அழைப்பதாக ஜடாஃபியாவுக்கு சீட்டு வருகிறது.

முதல்வரின் அறையில் அவரை சந்தித்த ஜடாஃபியாவிடம், “இல்லாம போயிடுவே கோர்தன்" என்று ஆரம்பித்திருக்கிறார் மோடி. உடன் மோடியின் நம்பிக்கைக்குரிய அமித் ஷாவும் உட்கார்ந்திருக்கிறார். “நீ அத்வானியிடமும், ஓ.பி மாத்துரிடமும் (பா.ஜ.க மூத்த தலைவர்கள்) என்னைப் பற்றி புகார் சொல்லிக்கிட்டு இருக்கிறாயாமே, பத்திரமா இருந்துக்கோ' என்கிறார் மோடி.

“இல்லாம போயிடுவேன்னா, உயிர் இல்லாமலா, அரசியல் ரீதியாகவா. எப்போ சாகணுமோ அப்போதான் நான் சாவேன். உன்னைக் கண்டு நான் பயப்பட மாட்டேன்" என்று பதிலளித்த ஜடாஃபியா இப்போது அரசு அளித்த போலீஸ் பாதுகாப்போடு தனியாக 12 ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களோடுதான் சுற்றுகிறார். குஜராத்தில் நிலவும் அமைதியின் மறுபக்கம் இது.

மோடியை எதிர்த்த, அவருக்கு அடி பணிந்து சேவை செய்ய தயாராக இல்லாத, கோர்தன் ஜடாஃபியாவும், ஹரேன் பாண்டியாவும் தவிர குஜராத்தில் ஓரம் கட்டப்பட சஞ்சய் ஜோஷி டெல்லிக்கு மாற்றப்பட்டு 2008-ல் பாலியல் காட்சிகள் அடங்கிய போலி சீடி விவகாரத்தில் சிக்கினார். மீண்டும் பதவி கொடுக்கப்பட்டு 2011-ல் மோடியின் வற்புறுத்தலின் பேரில் தேசிய பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

(தொடரும் ...)
ஆதாரங்கள்

1. மோடியை பாசிஸ்டாக வரையறுக்கும் கட்டுரை - 2002 Obituary of a culture - ASHIS NANDY
2. 2007 குஜராத் தேர்தலுக்குப் பிறகு ஆஷிஷ் நந்தி Gujarat: Blame The Middle Class By Ashis Nandy
3. வினோத் ஜோஸின் புரோபைல் The Emperor Uncrowned
4. ஷிவ் விஸ்வநாதன் ஆய்வு - துண்டு துண்டான, ஆனால் முக்கியமான கருத்துக்கள்
The remaking of Narendra Modi - SHIV VISVANATHAN
5. இடது சாரி அமைப்புகள் இணைய வேண்டி அழைப்பு
Narendra Modi And The Reality Of Fascism That Haunts Us All: A Call To All Comrades To Unite! By V. Arun Kumar
6. வைமர் குடியரசின் அரசியலமைப்பு சட்டமும் ஹிட்லரின் எழுச்சியும்
THE RISE OF FASCISM: ASSESSING THE CONSTITUTION OF THE WEIMAR REPUBLIC

கருத்துகள் இல்லை: