திங்கள், மார்ச் 25, 2019

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் - ராஜாவின் மேஜிக், எஸ்.பி.பியின் கண்ணீர்

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்ற பாடல், மூலம் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குடும்பத்தை அழவைத்த பாடகர்கள்.

கல்பனா என்ற பாடகியும், ரித்திக் என்ற பையனும் இந்தப் பாடலை பாடுகின்றனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியனும், அவரது மகன் எஸ்.பி.பி. சரணும் நிபுணர்களாக உட்கார்ந்திருக்கின்றனர்.

இது போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் இசை, பாடல், மெட்டு, சூழல், பார்வையாளர் எல்லாம் மிகச்சிறப்பாக ஒத்திசைந்து விடும் தருணங்களில் இதுவும் ஒன்று. பாடலை அந்தக் குட்டிப் பையன் பாடும்போது எஸ்.பி.பியும் அவரது மகனும் கையைத் தூக்கி விடுகின்றனர். "எப்படிடா இப்படி பாடுகிறாய்?" என்று வியக்கிறார் எஸ்.பி.பி. அவரது கண்களில் கண்ணீர், துடைத்துக் கொள்கிறார்.

“டேய், எங்க மொத்தக் குடும்பத்தையும் அழ வைக்கிற நீ, ஒன்னை பார்த்துக்கறேன். உங்க வீடு நொளம்பூர்லதான இருக்கு, வர்றேன்" என்கிறார் சரண்.

எஸ்.பி.பி "இளையராஜா பற்றி பேசப் போகிறேன்" என்று ஆரம்பிக்கிறார்.

"இது போன்ற ஒரு மெட்டை யார் போட முடியும், இதன் ஒவ்வொரு இஞ்சும், ஒவ்வொரு பகுதியும், மிக கடினமான மெட்டமைப்பு, இளையராஜா நீடுழி வாழ வேண்டும்.

இதற்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். அங்க இருக்கிற யாருக்காவது இது என்னென்னு புரியுமா? ஏதோ நல்லா இருக்குன்னு நினைச்சிப்பாங்க. இந்த பாட்டை நானும் ஜானகி அம்மாவும் பாடுவதற்கு எவ்வளவு நேரம் பிடிச்சது. இதில பல சின்னச்சின்ன நுணுக்கங்கள் எல்லாம் வருது, அது ஒவ்வொன்றையும் அவர் விடாமல் பிடித்து பாட வைப்பார். எந்த வாத்தியத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

அதை எல்லாம் எவ்வவளவு அனாயசமாக பாடுகிறான் இந்தப் பையன். ஒவ்வொண்ணும் செமி, செமி நோட்ஸ்தான். இந்த மாதிரி ஒரு மெட்டமைப்பு, நாங்க எல்லாம் இந்தப் பாட்டை கஷ்டப்பட்டு பாடி கைத்தட்டல் எல்லாம் வாங்கிட்டோம். இப்போ இந்த சுண்டக்கா பையன் குட்டிப் பையன் வந்து பாடிட்டு போயிட்டான்."

என்று தழுதழுக்கிறார்.

விஜய் டி.வியும், முர்டோக்கின் ஸ்டார்-ம் உலகின் அனைத்து விதமான வணிக நோக்கத்துக்காக இந்த நிகழ்ச்சிகளை நடத்தினாலும் அதில் பாடுபவர்களின் உழைப்பும், திறமையும், முயற்சியும் நிஜம். ஸ்டார் விஜயும், முர்டோக்கும் இந்தப் பூமியில் பிறப்பதற்கு முன்பும் இது போன்ற திறமைகள் இருந்தன, அவை ஒரு சிறிய வட்டத்தில் அவர்களது குடும்பத்தில் ஊரில் ஒரு சிலரை மகிழ்வித்துக் கொண்டிருந்தன. இப்போது அவை முதலாளித்துவ லாப தேடல் அலையில் மிதந்து மிகப்பெரிய மேடைகளில் ஏறுகின்றன. இன்னும் பலரது கலையை ஊக்குவிக்கின்றன.

பாடலை கேட்டு மகிழ்வோம்.

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் 

கருத்துகள் இல்லை: