திங்கள், மார்ச் 11, 2019

உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்

த்தகைய குறைவான கூலி, மோசமான பணிச் சூழலில் முன்னணி பிராண்ட் பொருட்கள் உற்பத்தி ஆவதை நியாயப்படுத்துபவர்களி்ல ஒருவர் ஜக்தீஷ் பகவதி என்ற பொருளாதாரவியல் நிபுணர்.

ராணா பிளாசா விபத்துக்கு 6 மாதங்களுக்கு முன்பு அதே டாக்காவில் தஸ்றீன் ஃபேஷன்ஸ் என்ற தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு 112 பேர் இறந்து விட்டனர். இது தொடர்பாக ஜக்தீஷ் பகவதி ஒரு கட்டுரை எழுதுகிறார். "உற்பத்தி ஆவது பிராண்ட் பொருளாக இருக்கலாம். ஆனால், பணத்தை கொடுத்து பொருளை வாங்குவதோடு எங்கள் பொறுப்பு முடிந்தது. அவர்கள் சுதந்திர சந்தையில் பேரம் பேசித்தானே உற்பத்தி செய்கிறேன். €1.35 என்ற விலையை சுதந்திரமாக ஏற்றுக் கொண்டுதானே உற்பத்தி செய்கிறான். அதனால் அவர்கள் நாட்டு தொழிலாளியை அப்படி நடத்தினால் எனக்கு என்ன ஆச்சு? வங்கதேச அரசு என்ன செய்கிறது? அவர்களுக்குத்தான் பொறுப்பு" என்று எழுதுகிறார். ராணா பிளாசா விபத்துக்குப் பிறகும் அதே போல எழுதுகிறார்.

ஆனால், வெறும் பொருளாதார உறவுதான் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று சொன்னாலும், பொறுப்பை தட்டிக் கழிக்க முடியவில்லை. இத்தகைய உற்பத்தி நிறுவன உறவுகளை எப்படி புரிந்து கொள்வது என்று ஜான் ஸ்மித் கேட்கிறார். வங்கதேசத்தில் கடந்த 10-15 ஆண்டுகளில் பொருளாதாரம் நிறைய மாறியிருக்கிறது. முன்பு இருந்தது போல இல்லாமல் ஆயத்த ஆடை உற்பத்திக்காக 5,000 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அவற்றில் 45 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் 85% பெண்கள். இது தொடர்பாக ஐ.நா நிறுவனங்கள் ஆய்வுகள் செய்துள்ளன.

ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களில் பெரும்பாலும் பெண்களாக இருப்பார்கள். உழைப்பு பட்டாளத்தை பெண்மயமாக்குவது என்று இதை அழைக்கிறார்கள். பெண்களுக்கு ஆண்களுக்குக் கொடுக்கும் கூலியில் முக்கால் பங்கு கொடுத்து கூலிச் செலவை குறைக்க முடிகிறது. வங்க தேச ஆயத்த ஆடைத் துறையில் பெண்களின் கூலி ஆண்களுக்குக் கொடுக்கப்படும் கூலியில் சுமார் 73% ஆக உள்ளது என்கிறார் ஜான் ஸ்மித். சென்னைக்கு அருகில் இயங்கிய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் நோக்கியா ஃபோன் உற்பத்தி தொழிற்சாலையில் கூட பெண்கள்தான் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் கூலியை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கு முதலாளித்துவம் வழி கண்டு பிடிக்கிறது, குறைந்த விலை, குறைந்த கூலி, செலவுக் குறைப்பு, அதிக லாபம், மூலதனக் குவிப்பு என்று ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த உந்து சக்தி எப்படி இயங்குகிறது என்பதிலிருந்து ஜான் ஸ்மித் பேசுகிறார். இதை எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம். ஜக்தீஷ் பகவதி போன்ற முதலாளித்துவ அறிஞர்களை விட்டு விடுவோம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிய இயக்கத்தில் இதை எப்படி புரிந்து கொள்கிறோம். இதற்கு என்ன விளக்கம் அளிக்கிறோம்? ஏகாதிபத்தியம் பற்றி நாம் புரிந்து கொள்வது லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் இருந்து. அந்த நூலில் பெரிய ஏகபோக தொழில் நிறுவனங்கள் உருவாவது, வங்கிகள் ஏகபோகங்களாக உருவெடுப்பது, வங்கிகளும் தொழில் நிறுவனங்களும் இணைந்து நிதி மூலதனம் உருவாவது, மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுவது, ஏகாதிபத்திய நாடுகள் காலனிகளாக பிரித்துக் கொள்வது என்று 5 அம்சங்களை அந்த நூல் விளக்குகிறது.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் என்ற நூல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது போன்ற ஒரு பிரகடனம். அரசியல் ரீதியாக என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஜான் ஸ்மித் இதை எப்படி பார்க்கிறார்?

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகளான சான் சிமோன், ஃபூரியே, சிஸ்மாண்டி போன்றவர்கள் முதலாளித்துவ சமூகத்தை மிகக் கடுமையாகவும் துல்லியமாகவும் விமர்சிக்கிறார்கள். “என்ன மாதிரியான உலகம் இது. இவ்வளவு பொருட்கள் உற்பத்தியாகி குவிகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில், பட்டினியில் உழல்கிறார்கள். எதிர்காலத்தில் நாம் ஒரு பொன்னுலகை படைப்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் ஒரு உலகத்தை படைப்போம்" என்று இவர்கள் பேசுகின்றனர். இவை அனைத்தும் அறிவியல் அடிப்படை இல்லாத கற்பனாவாத சிந்தனைகள்.

முதலாளித்துவம் பற்றிய அறிவியல் அடிப்படையை வழங்குவது மார்க்ஸ் தனது 20-30 ஆண்டு கால உழைப்பின் மூலம் படைத்த மூலதனம் நூல். மூலதனம் நூல் சரக்கு - பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு, மதிப்பை படைப்பது எது, உழைப்பின் இரட்டைத் தன்மை என்று ஆரம்பிக்கிறது. மூலதனம் நூலில் மார்க்ஸ் பேசக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் இந்தப் புள்ளியில் இருந்து வளர்த்துச் சென்று அடையலாம்.

அறிவியல் இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது. உதாரணமாக, 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க அறிஞர் தேல்ஸ் உலகத்தில் எல்லாமே நீரால் ஆனது என்று முன் வைத்த கருதுகோள் அறிவியல் சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய ஒரு பாய்ச்சல் என்கிறார்கள் அறிஞர்கள்.

இவ்வாறு முதலாளித்துவத்தின் எல்லா நிகழ்வுகளையும் ஒரு அடிப்படை கருதுகோளிலிருந்து விளக்கும் போது அவற்றில் என்னென்ன பாத்திரங்கள் உள்ளன, அவர்களுக்கிடையே இருக்கும் உறவு என்ன, மாறிச்செல்லும் இயக்கத்தின் விதிகள் என்ன என்று எல்லா விஷயங்களும் மூலதனம் நூலில் விளக்கப்படுகின்றன.

அத்தகைய அறிவியல் அடிப்படையில் லெனினின் ஏகாதிபத்தியம் நூல் எழுதப்படவில்லை. அவரது நோக்கமும் அதுவாக இருக்கவில்லை. அடுத்த 100 ஆண்டுகளில் உலக கம்யூனிச இயக்கத்தில் என்ன நடந்தது என்று ஜான் ஸ்மித் பரிசீலனை செய்கிறார். 1915 முதல் 2010 வரையில் மார்க்சிய அறிஞர்கள் செய்த ஆய்வுகளை பரிசீலிக்கிறார். சோவியத் யூனியனிலும் உலகின் முன்னணி கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் ஸ்டாலினிசம் பொருளாதாரத் துறையில் அறிவியல் அணுகுமுறையை காலி செய்து விட்டது என்கிறார். பால் ஸ்வீசி, பால் பேரன் அவர்கள் மதிப்பு விதியை ஒட்டி ஏகபோகங்களை பரிசீலிக்கிறார்., பின்னர் சார்புநிலை கோட்பாட்டு வாதிகள் மதிப்பு விதியின் அடிப்படையில் பேசியிருக்கின்றனர். 1990-கள், 2000-களில் டேவிட் ஹார்வி, எலன் வுட், மைக்கேல் ராபர்ட்ஸ் போன்ற கல்வித்துறை அறிஞர்கள் ஆய்வு செய்கின்றனர்.

இவர்கள் யாரும் புதிதாக தோன்றியிருக்கும் ஒரு நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 1970-80களில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் இருந்தார்கள். இன்று 80% தொழிலாளர்கள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளனர். இந்தத் தொழிலாளர்கள் மதிப்பை படைத்து இந்த மதிப்பு பல்வேறு நிறுவனங்களுக்கிடையே பங்கிடப்படுகிறது. இந்த நிகழ்வை தீர்மானிக்கும் விதிகள் என்ன என்று எப்படி கண்டுபிடிப்பது?

மேலே சொன்ன உதாரணத்தில் வங்கதேசத்தின் ஜி.டி.பியை பார்த்தால் ஒரு சட்டைக்கு €0.90 தான் சேர்ப்பார்கள். €1.35 ஏற்றுமதி, €0.40 இறக்குமதி. €.95தான் வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேரும். ஜெர்மனியின் ஜி.டி.பில் €3.60 சேரும். இதன்படி 'ஜெர்மனி பணக்கார நாடு, அங்குதான் உற்பத்தித் திறன் அதிகம். அவர்கள் €3.60 உற்பத்தி செய்திருக்கிறார்கள். வங்கதேச தொழிலாளர்கள் €0.90 தானே உற்பத்தி செய்திருக்கிறார்கள்' இப்படி நாம் எடுக்கும் தரவுகளில் பல தவறான சித்திரங்களை தருகின்றன. புள்ளிவிபரங்களையே இந்த பார்வையோடு கையாள வேண்டியிருக்கிறது என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 5

(6-வது பகுதியில் தொடரும்...)

கருத்துகள் இல்லை: