ஞாயிறு, மார்ச் 10, 2019

ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்

வ்வாறாக, தோல் பொருட்களாக இருக்கலாம், மின்னணு பொருட்களாக இருக்கலாம் அல்லது ஆயத்த ஆடையாக இருக்கலாம். ஆயத்த ஆடைகள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள். தோல் பொருட்களை செய்வதே ஏற்றுமதிக்குத்தான். உற்பத்தி ஆவதில் 85% - 90% வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது. வெளி நாட்டுக்கு ஏற்றுமதி ஆகும் தோலுக்காக தொழிலாளர்கள் சாகின்றனர்.

ஒரு கணக்கு போட்டு பார்க்கலாம். தொழிலாளிக்கு என்ன கூலி கொடுக்கிறார்கள்?

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் ஏன் தமிழ்நாட்டு தொழிலாளியை வைத்துக் கொள்ளவில்லை. அவர் ரூ 500 – ரூ 600 கூலி கேட்பார். சட்டம் பேசுவார். “சார் 5 மணிக்கு மேலே எல்லாம் வேலை செய்ய முடியாது" என்பார். மிதினாப்பூரில் இருந்து தொழிலாளி வந்தால் 200 ரூபாய் 250 ரூபாய் கூலியில் வேலை வாங்கலாம். டேனரியிலேயே ஓரமாக படுத்துக் கொள்ளச் சொல்லலாம். வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை கடைக்குப் போய் கோதுமை மாவு வாங்கி வந்து ரொட்டி செய்து சாப்பிட்டுக் கொண்டு வாழ்வார். மாதம் 2,000 ரூபாய் செலவழித்தால், மீதி 7,000 – 8,000 ஊருக்கு அனுப்புவார். இது போன்று நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான இடங்களில் வட இந்தியத் தொழிலாளர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

சீனாவிலும் ஜார்ஜ் ஷூ தொழிற்சாலையிலோ, ஆப்பிள் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலோ வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் சீனாவின் விவசாய பிரதேசங்களில் இருந்து இடம் பெயர்ந்து சென்றவர்கள். அதனால்தான் அவர்கள் தொழிற்சாலையிலேயே தங்கியிருந்து வேலை செய்ய வருகிறார்கள். இவர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும்? ராணிப்பேட்டைக்கு வெளியூரில் இருந்து வேலைக்கு வருபவர் தன் குடும்பம், குழந்தைகளை அழைத்து வந்து தங்கி வேலை செய்ய வேண்டுமானால் ரூ 50,000 மாதச் சம்பளம் கொடுத்தால்தானே முடியும். நாம் என்ன கொடுக்கிறோம், ரூ 9,000. அப்படியானால், தொழிலாளியின் தேவையான கூலியிலிருந்து 41,000 ரூபாய் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் எங்கு போச்சு?

உள்ளூர் முதலாளியும் பெரிய மாட மாளிகை கட்டி இந்தியாவை வல்லரசாக்கி விடவில்லை. இந்தியா பாகிஸ்தானுடன் சண்டை போட பிரான்சிடமிருந்து விமானம் வாங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. ராணிப்பேட்டை தொழிலாளர்களின் கூலியிலிருந்து மிச்சப்படுத்தப்படும் இந்தப் பணம், கடைசியாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிராண்டுகளால் கைப்பற்றப்படுகிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

இது ஒரு அம்சம்தான். கூலி குறைய குறைய உபரி மதிப்பு அதிகமாகும். லாபத்தை தீர்மானிக்கும் இன்னொரு அம்சம் உள்ளீட்டு பொருட்களுக்கான செலவுகள். உள்ளீட்டு பொருட்களின் செலவை குறைத்தால் லாப வீதம் கூடும். கழிவு நீரை பல கோடி செலவழித்து முறையாக சுத்திகரித்து, இங்கிலாந்து, ஜெர்மனியில் செய்வது போல செங்கலாக மாற்றி பாதுகாப்பாக கையாள்வதற்கு எவ்வளவு செலவாகும். அதையும் நீங்கள் மிச்சப்படுத்தியிருக்கிறீர்கள்.

இதை எல்லாம் சேர்ந்து உங்கள் நாட்டு முதலாளி கூட வாழவில்லை. இந்தியாவாக இருக்கட்டும், சீனாவாக இருக்கட்டும், வங்கதேசமாகட்டும். இந்த நாடுகளில்தான் உலகளாவிய உற்பத்தித் துறையின் பெருமளவு மனித உழைப்பு நிகழ்கிறது. 1990-களுக்குப் பிறகு இது போன்ற நாடுகளில் உலகளாவிய உற்பத்தி பரவியிருக்கிறது. இந்த நாடுகளில் தொழிலாளிக்கு குறைவான கூலி கொடுத்து கடுமையாக சுரண்டலாம். இது தொடர்பாக ஜான் ஸ்மித் ஒரு புதிய கோட்பாட்டை முன் வைக்கிறார்.

மார்க்ஸ் மூலதனம் நூலில் வேலை நாளின் நேரத்தை நீட்டிப்பதன் மூலம் பெறப்படும் அறுதி உபரி மதிப்பு, தொழிலாளிக்குத் தேவையான பொருட்களின் விலையை குறைப்பதன் மூலம் கூலியை குறைத்து பெறப்படும் ஒப்பீட்டு உபரி மதிப்பு 2 வகையான உபரி மதிப்புகளை பரிசீலிக்கிறார். ஆனால், மூன்றாவது வகையை குறிப்பிட்டு விட்டு அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்று ஒதுக்கி வைக்கிறார். அதுதான் தொழிலாளியில் உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவான கூலி கொடுத்து சுரண்டுவது. இது அதீத சுரண்டல் என்று அழைக்கப்படுகிறது.

40,000 ரூபாய் உழைப்பு சக்தியின் மதிப்பு. அதற்கு பதிலாக ரூ 10,000 கொடுத்து சுரண்டப்படுகிறார், தொழிலாளி. இவ்வாறு இந்தியா, வங்கதேசம், சீனா போன்ற நாடுகளின் தொழிலாளர்களை சுரண்டுவது உலக முதலாளித்துவத்துக்கு பிரதான தேவையாக மாறியிருக்கிறது என்று ஒரு கருதுகோளாக ஜான் ஸ்மித் முன் வைக்கிறார்.

இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். ஐஃபோன் நம்மில் பலரிடம் இல்லை. எல்லோரும் பயன்படுத்தும் ஒரு பொருளான ஒரு டி-ஷர்ட்டை எடுத்துக் கொள்ளலாம். அந்த டி-ஷர்ட் ஜெர்மனியில் €4.95 விலைக்கு விற்கிறது. இந்த பிராண்டுக்கு சொந்தமானது எச்&எம் என்ற ஸ்வீடன் நிறுவனம். இந்த டி-ஷர்ட் வங்க தேசத்தில் உற்பத்தி ஆகி ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதி விலை €1.35. இதில் பருத்தித் துணியை இறக்குமதி செய்ய €0.40 செலவாகி விடுகிறது. எனவே, வங்கதேச முதலாளிக்கு கிடைப்பது, வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேர்வது €0.95 தான். மீதி எல்லா மதிப்பும் ஜெர்மனியில் கைப்பற்றப்படுகிறது. ஜெர்மனியில் எச்&எம் லாபம், அங்குள்ள சில்லறை விற்பனை நிறுவனம், போக்குவரத்து நிறுவனம், ஜெர்மன் அரசுக்கு வரி என்று போகிறது.

வங்கதேசத்தில் தொழிலாளர்கள் என்ன நிலைமையில் வேலை செய்கிறார்கள்? 10-12 மணி நேர வேலை என்பது சர்வசாதாரணமான ஒன்று. அவர்களுக்கு ஒரு நாளைக்குக் கூலி €1.30. சுமார் 150 ரூபாய்தான் கூலி. இதை வாங்கிக் கொண்டு அவர்கள் உழைக்கிறார்கள்.

2015-ல் வங்க தேசத்தில் நடந்த விபத்து எல்லோருக்கும் நினைவு இருக்கும். ராணா பிளாசா என்ற கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த பழைய கட்டிடத்தில் மேல் மாடியில் ஆயத்த ஆடை ஆலை. கீழே வங்கி, கடைகள். அந்தக் கட்டிடத்தை ஒரு வாரத்துக்கு முன்பு ஆய்வு செய்து இது பயன்படுத்த தகுதி இல்லாத கட்டிடம் என்று கூறியிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்களை அழைத்து வேலையை தொடங்குகின்றனர், ஆலை முதலாளிகள். எந்திரத்தை ஆன் செய்ததும் கட்டிடம் இடிந்து விழுகிறது. இதில் 1133 தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர், 2500 தொழிலாளர்கள் காயமடைகின்றனர்.

இதிலும் கேப் (Gap) முதலான உலகத்தின் முன்னணி பிராண்ட் ஆடைகள் இடிபாடுகளுக்கிடையே கிடக்கின்றன. இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வெளியாகின்றன. ஒரு புகைப்படத்தில் ஒரு பையனும் பெண்ணும் கட்டிப் பிடித்த நிலையில் புதைந்திருப்பார்கள். இது எல்லாம் உலகம் எங்கும் flash ஆகிறது. இதை எல்லாம் பார்க்கும் அமெரிக்க, ஐரோப்பிய நுகர்வோர் பதட்டமடைகின்றனர். நாம் போடும் ஆடைகளை இவ்வளவு கொடூரமான நிலையிலா உற்பத்தி செய்கிறார்கள் என்று பிராண்ட் நிறுவனங்களை நோக்கி கேள்வி எழுகிறது.

இதற்கு முன்னேயே தோல் துறை, ஜவுளித் துறை போன்ற ஏற்றுமதி துறைகளில் 1990களில் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் முறை, பின்னர் சுற்றுச் சூழல் ஆய்வு, தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வு என்று பல்வேறு சான்றிதழ்களை வழங்க ஆரம்பித்தார்கள். யாரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். நான் வேலை செய்த பிரிட்டிஷ் நிறுவனம் போன்றவர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் கொடுப்பார்கள். இந்த ஆய்வு எப்படி நடக்கும் எந்த அடிப்படையில் சான்றிதழ் கொடுப்பார்கள் என்று நமக்கெல்லாம் நடைமுறை தெரியும். இவற்றின் மூலம் நாங்கள் சரியாகத்தான் இருக்கிறோம் என்று காண்பிப்பதற்காக செய்கிறார்கள்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 4

(5-வது பகுதியில் தொடரும்...)

  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

கருத்துகள் இல்லை: