வியாழன், மார்ச் 14, 2019

சைக்கோ ராட்சசர்கள் - பொள்ளாச்சியில் மட்டும்தானா?

ராட்சசன் படம் வந்தது 2018-ல். பொள்ளாச்சி சைக்கோ ராட்சசர்கள் 2012 முதலாகவே தமது வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ராட்சசன் திரைப்படத்திலும் சரி, பொள்ளாச்சியிலும் சரி சைக்கோக்கள் பண்ணை வீடு, பங்களா வீடு, கார் என்று குற்றம் நடத்த வசதியான இடத்தை சொத்தாக வைத்திருக்கின்றனர்.

பணத் திமிரும், அதிகார போதையும், ஆணாதிக்க வக்கிரமும் ஒன்று கலந்த சைக்கோக்கள் பொள்ளாச்சி கிரிமினல்கள். இவர்களால் 7 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தக் கொடூரத்தைக் கண்டு 2019-ல் நாம் பதைக்கிறோம். அந்தப் பெண்கள் வதைக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளாக அது நமது கவனத்துக்குக் கூட வரவில்லை, அதைப் பற்றி நாம் கவலைப்படக் கூட இல்லை. ஏன்? நக்கீரன் கோபால் சொல்வது போல கடைசியாக புகார் கொடுத்த பெண் தைரியமாக அதைச் செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் பல பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருந்திருப்பார்கள்.

புகார் கொடுத்தால்தான் விசாரிப்போம் என்கிறது போலீஸ். அதாவது, யாரும் புகார் கொடுத்திருக்கா விட்டால் போலீஸ் அதை கண்டு கொள்ளப் போவதில்லை.

இதில் பொள்ளாச்சிக்கு ஏதாவது தனிச்சிறப்பு இருக்கிறதா என்ன? மற்ற ஊர்களில் அ.தி.மு.க அமைச்சர்களும், பிரமுகர்களும், அவரது திமிரெடுத்து அலையும் மகன்களும் இல்லையா? பணக்கார தறுதலைகளுக்கு பண்ணை வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லையா? அங்கெல்லாம் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு நமக்கு என்ன உத்தரவாதம்?

"பெண்கள் பாவம் மயங்கி விட்டார்கள், காரைக் கண்டு ஏமாந்து விட்டார்கள், செல்ஃபோன் சனியனை பயன்படுத்தி சீரழிந்து போய் விட்டார்கள்" என்று நக்கீரன் கோபால் உட்பட பலர் புலம்புகிறார்கள். "செல்ஃபோன் வந்த போதே நான் சொன்னேன், இது கையிலேயே இருக்கும் சனியன்" என்று என்கிறார் நக்கீரன் கோபால்.

ராட்சசன் திரைப்படத்தில் செல்ஃபோன், பண்ணை வீடு எல்லாம் காட்டி அந்தக் குழந்தைகளை மயக்கவில்லை, சைக்கோ கொலைகாரன். பள்ளி நிகழ்ச்சிகளில் மேஜிக் நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் குழந்தைகளை கவர்கிறான். சோப்புக் குமிழ் விட்டே சிறு குழந்தையை மயக்குகிறான். மேஜிக் ஷோக்களும், பெண்கள் பள்ளிக்கு போவதும், சோப்புக் குமிழ் விடுவதும் சனியன்கள் என்று நக்கீரன் கோபால் குமுறினால் எப்படி இருக்கும்?

பிரச்சனை அங்கு இல்லை.

1300 வீடியோக்கள் மொத்தம் இருக்கின்றன என்று நக்கீரன் கோபால் ஒரு புறம் சொல்ல, பாலியல் வீடியோக்களை தேடும் தளத்தில் பொள்ளாச்சி வீடியோ, பொள்ளாச்சி செக்ஸ் வீடியோ என்ற தேடுதல்கள் முதலிடம் பிடித்திருப்பதாக ஒருவர் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கிறார்.

"என் இணையம், என் ஃபோன், நான் வீடியோ பார்ப்பேன்" என்று வக்கிரத்தை தேடும் உலகத்தில், "என் பண்ணை வீடு, என் கார், என் பணம் நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற நினைப்பு ஆதிக்கம் செலுத்தும் உலகத்தில், "நீதாம்மா பத்திரமா இருந்துக்கணும்" என்றும், "ஆண் குழந்தைகளையும் ஒழுக்கமாக வளர்க்கணும்" என்றும் பேசிக் கொண்டே இருந்தால் போதுமா?

"உன் ஃபோட்டோவை வெளியிட்டு விடுவேன்" என்று மிரட்டி கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். "அப்படி யாராவது மிரட்டினால் கவலைப் படாதீர்கள்" என்று பெண்களுக்கும், "பெண்ணுக்கு அறிவுரை சொல்வதை விட்டு ஆண் குழந்தைகளை ஒழுக்கமாக வளருங்கள்" என்று பெற்றோருக்கும் அறிவுரைகள் சொல்கிறோம்.

ஒருவன் காதலிப்பது போல நடித்து பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு பலர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அங்கு காதலனின் அம்மா போல நடிப்பதற்கு ஒரு அம்மாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெல்ட்டால் அடித்து வதைத்திருக்கிறார்கள். இதை எல்லாம் நக்கீரன் கோபால் சொல்கிறார். வீடியோக்களின் சில பகுதிகளையும் காட்டுகிறார்.

அந்தப் பண்ணை வீட்டில் வேலை செய்தவர்கள், அந்த சைக்கோ கிரிமினலின் அம்மாவாக நடித்த பெண் இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும்?

புகார் வந்த பிறகும் புகார் கொடுத்தவரை அடிக்கும் வகையில் அ.தி.மு.க காலிகளுக்கு தகவல் சொன்ன போலீஸ்காரர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும்?

“காவி சொந்தங்களே, நமது கூட்டணியை தேர்தலில் பாதிப்பதற்காக இந்தப் பிரச்சனையை கிளப்புகிறார்கள்" என்று பேசும் பா.ஜ.க/பார்ப்பன கும்பலுக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும்?

முகிலன் காணாமல் போனது பற்றி கேட்ட போது "தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க முடியாது" என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னாரே. அது போல இந்தப் பிரச்சனையில் "ஒவ்வொரு பண்ணை வீட்டு நிகழ்வுகளுக்கும் நான் பொறுப்பு கிடையாது" என்று சொல்லலாம்.

இவர்களுக்கும் அறிவுரை உண்டா? பெற்றோர்களுக்கும், இளம் பெண்களுக்கும் மட்டும்தான் அறிவுரையா?

அந்த சைக்கோ கிரிமினல்களில் ஒருவன் "பல பெண்கள் தனக்கு ஆதரவு" என்றும் வீடியோவில் பேசியிருப்பதாக சொல்கிறார்கள். நித்தியானந்தா மடத்தில் கூட பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு ஆதரவு என்று மார் தட்டிக் கொண்டான் அந்த சைக்கோ.

“நமக்கெதுக்கு வம்பு" என்று ஒதுங்கிப் போவது, "என்னை மட்டும் நான் கவனித்துக் கொண்டால் போதும், என் குடும்பத்துக்கு எது நல்லது என்று மட்டும் பார்த்தால் போதும்" என்றும் தினம் தினம் சொல்லிக் கொடுக்கப்படுகிறதே அதற்கும் 7 ஆண்டுகளாக தொடர்ந்த இந்தக் கொடூரத்துக்கும் தொடர்பு இல்லையா?

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பிரச்சனையை சொல்லும் படியாக அவர்களது குடும்பங்களும், வேலை செய்யும் இடங்களும், படிக்கும் இடங்களும் ஏன் இல்லை? பணியிடங்களில் பாலியல் அச்சுறுத்தல் தொடர்பாக புகார் சொல்ல விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. குடியிருப்புகளில் என்ன கமிட்டி அமைக்க வேண்டும்? கல்லூரியில், பள்ளிக் கூடத்தில் என்ன கமிட்டி அமைக்க வேண்டும்? ஏதாவது பிரச்சனை என்றால் இந்தக் கமிட்டியில் முறையிட்டால் நியாயம்/தீர்வு கிடைக்கும் என்று ஏன் இல்லை?

பொள்ளாச்சி வெளிச்சத்துக்கு வந்து விட்டது, வெளிச்சத்துக்கு வராமல் துன்புறுத்தப்படும் எத்தனை பெண்கள் இந்தக் கொடூர சமூகத்தில் இருக்கிறார்களோ!

கருத்துகள் இல்லை: