திங்கள், ஆகஸ்ட் 06, 2007

பட்டறை - இணையமும், தமிழ் இணையமும்

கலந்து கொள்ள வந்தவர்களில் சிலர் தமது எதிர்பார்ப்புகளையும் கருத்துகளையும் சொன்னார்கள். பத்ரி, சிவஞானம்ஜி, ராமகி, மாலன், காசி, முகுந்த் என்று ஆரம்பித்து அந்த அரங்கில் நிரம்பியவர்களின் பட்டியலில் மைசூர், காரைக்கால், பாண்டிச்சேரி, கோவை, மதுரை, நாகூர், நாகர் கோவில், விழுப்புரம், கடலூர் என்று பல ஊர்களிலிருந்து பட்டறைக்காகவே வந்திருந்தவர்களும் இருந்தார்கள். பெங்களூருலிருந்து, சென்னைக்கு அடுத்த அளவில் பதிவர்கள் கலந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

விக்கி unconference என்றால் என்ன என்று விளக்கினார். பட்டறையின் மூன்று அறைகள், அதில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள், எல்லோரும் பங்கேற்க வேண்டியதன் அவசியம், பட்டறை ஏற்பாடு செய்ததின் பின்னணி என்று கலகலப்பாக ஆரம்பித்து வைத்த உணர்வு நாள் முழுவதும் தொடர்ந்தது.

மேல் அறைகளில் பொன்ஸ், வினையூக்கி ஒருங்கிணைப்பில் நடந்த தொழில் நுட்ப அமர்வுகளைப் பற்றிப் பிற்பாடு நிறையக் கேட்க முடிந்தது. இடையில் செந்தழல் ரவி நடத்திய வகுப்பில் பெருந்திரளான மக்கள் தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்களைப் போலக் கூடி இருந்ததையும், பினாத்தல் சுரேஷ் மதியத்துக்கு மேல் நடத்திய பிளாஷ் வகுப்பு மிக அதிக ஆர்வம் காட்டப்பட்ட அமர்வாகவும் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

வினையூக்கி மட்டும் 30 பேருக்கு மேல் பயிற்சி அளித்ததாகச் சொன்னார். சில கல்லூரி மாணவர்கள் பிளாக்கர் கணக்கு ஆரம்பித்துத் தமிழில் பதிவு போட ஆரம்பித்து விட்டிருந்தார்கள். பயிற்சி அறைகளில் நிலவிய சூழல் மனம் நிறைப்பதாக இருந்தது.

என்னுடைய நேரம் பெரும்பாலும் கருத்தரங்கில் கழிந்தது. பத்தரை மணிக்கு பத்ரி இணையம் குறித்த தனது குறிப்புகளை வழங்கினார். அமர்வுகளை ஒலிப்பதிவு செய்ய தனது கையடக்க கருவியை அமைத்திருந்தார். நாள் முழுவதும் புரஜெக்டரில் குறிப்புகளைப் போடுவது, ஒலி அமைப்புகளில் உதவுவது என்று முன் வரிசையில் அவரும் நந்தாவும் அமர்வுகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

சரியாக பத்தரைக்கு ஆரம்பித்த பத்ரி இணையத்தில் என்னென்ன சாத்தியம் என்று பட்டியலிட்டு விட்டு,
  • அதையெல்லாம் தமிழில் செய்ய முடியுமா? - ஆம்
  • செய்கிறோமா? - இல்லை,
  • ஏன்?
என்று கொளுத்திப் போட்டார். அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் முனைப்பெடுத்துச் செயல்பட வேண்டும். தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும், இது வரை தமிழ்க் கணிமையின் வளர்ச்சி தனிநபர் சார்ந்ததாகவே இருந்து வருகிறது என்று தனது கருத்தைச் சொன்னார்.

தமிழ் நாட்டில் விற்கப்படும் கணினிகளில் தமிழ் அமைப்புகள் கட்டாயமாக இருக்க வேண்டும். தமிழ் ஆதரவு இருக்கும் செல் பேசிகள் மட்டுமே விற்கப் பட வேண்டும் என்று சட்டம் போடுவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றார்.

'இது போன்ற கருத்தரங்குகளில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதால் என்ன பயன்? இங்கு வந்திருப்பவர்களால் முடிகிள பணியை பேசுவது பொருத்தமாக இருக்கும்' என்று மாற்றுக் கருத்து வர, 'நாம் பேசினால்தான் கருத்துத் திரட்டல் நடந்து மாற்றங்கள் ஆரம்பிக்கும்' என்று வித்யா சொன்னார்.

'இது போன்ற கொள்கை குறித்த விவாதங்கள் நடக்க வேண்டுமா' என்று கேள்வி எழுப்பி, வேண்டும் என்று தனது கருத்தையும் சொல்லி விட்டு, இணையத்தில் பத்திரிகைகளும் அரசுத் தளங்களும் ஒருங்குறியையே பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கை நாராயணன் பேசினார்.

'இந்தப் பட்டறையின் நோக்கம், தமிழ்க் கணிமை, வலைப்பதிதல், இணைய நுட்பங்களைப் பரவலாக்குதல், புதியவர்களுக்கு அறிமுகம் செய்தல். கொள்கைகள் குறித்து விவாதிப்பதால் அந்த நோக்கத்துக்கு மாறாக நேரம் செலவழியும்' என்று மாலன் பேசி அந்த திசையை அடைத்து விட்டார்

அமெரிக்கை நாராயணன் தனது நன்கொடையாக அரங்கிலேயே 5000 ரூபாய்கள் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து முகுந்தராஜ் - மில்லியன் தட்டச்சுகளை உருவாக்கிய eகலப்பையின் படைப்பாளி- தமிழ் இணைய மைல் கற்கள் என்று பேசினார். தமிழ் டாட் நெட், முரசு அஞ்சல், மதுரைத் திட்டம், திஸ்கி, டேப், டேம், eகலப்பை, ஒருங்குறி, தமிழ் லினக்ஸ், வலைப்பதிவுகள், விக்கிபீடியா என்று பட்டியலை முடித்ததும் இணையத் தமிழ் மாநாடுகள் அவற்றில் விடுபட்டதாக மாலன் சேர்த்தார்.

இன்னும் செய்ய வேண்டிய பணிகளாக தொடர விரும்பிய முகுந்த் காபி இடைவேளைக்குப் பிறகு செய்யலாம் என்று ஏற்றுக் கொள்ள ஒரு சின்ன இடைவேளை.

4 கருத்துகள்:

aynthinai சொன்னது…

Interesting sir,
waiting for the post on, the rest of the days activities also.
Vivek.

சந்திப்பு சொன்னது…

சிவா காபி குடிப்பதற்கு இப்படி பாதியிலேயே விட்டுட்டுப் போகலாமா? நான் பங்கேற்கவில்லை என்ற ஏக்கத்தை இதனை படித்தன் மூலம் போக்கிக் கொள்கிறேன். ஆறுதலடைகிறேன். வாழ்த்துக்கள்..

சிவபாலன் சொன்னது…

அழகாக தந்துள்ளீர்கள்!

பகிர்வுக்கு நன்றி!

மா சிவகுமார் சொன்னது…

விவேக்,

எல்லா பதிவுகளையும் தொடர்ந்து போட்டு விட்டேன் :-)

சந்திப்பு,

எனக்குக் கூட மனமே இல்லைதான், இடைவேளை விட. ஆனால் கொஞ்சம் மாற்றம் வேண்டுமே!

நன்றி சிவபாலன்.

அன்புடன்,

மா சிவகுமார்