திங்கள், ஜூன் 14, 2010

"உலகத்" தமிழ்ச் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 3

செம்மொழி மாநாடு - ஏன் வரவேற்க வேண்டும்?
  1. தமிழ் செம்மொழி என்பதிலோ, தமிழுக்கு மாநாடு நடத்துவதிலோ யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

  2. 2009ம் ஆண்டிலும் அதன் பிறகும் தொடர்ந்து தமிழ் ஈழத்தில் நடந்து வரும் இனப் படுகொலைகளை, இன அழிப்பை தடுக்க நடவடிக்கைகள் எடுக்காமல் தமிழ் நாட்டில் அதிகாரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதிக்கு 'உலகத் தமிழ்', 'செம்மொழி தமிழ்' என்று மாநாடு நடத்த வெட்கமாக இருக்க வேண்டும்.

  3. அப்படியே 'அன்றைக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, கையாலாகாதவனாகத்தான் இருக்க முடிந்தது. ஏதாவது செய்திருந்தால் ஜெயலலிதா ஆட்சி அமைத்திருப்பார். அதனால் நான் தொடைநடுங்கியாக இருந்து விட்டேன்' என்று சொன்னால் அந்த வெட்கத்திலாவது இது போன்று 'உலகத் தமிழ்' மாநாடு என்று நடத்தத் துணியக் கூடாது.
புறக்கணிப்பும், எதிர்ப்பும் தமிழுக்கும் மாநாட்டுக்கும் இல்லை. லக்கிலுக்
தெளிவாகச் சொல்வது போல 'உலகத் தமிழினத்துக்கு பச்சைத் துரோகம் செய்த கருணாநிதி
நடத்துவதால்தான் புறக்கணிப்பு'.

பணமும், அதிகாரமும், ஊடக ஆதிக்கமும் தாரை தப்பட்டைகளோடு சத்தம் போட்டாலும்,
நேர்மையுடனும் உண்மையுடனும் ஒரு சிலராவது தமது உணர்வுகளை பதிவு செய்வது அவசியம்
என்ற நோக்கில்தான் இந்த புறக்கணிப்பு பதிவுகள்.

வரலாற்றில் நாமெல்லாம் புழுக்களாக பதிவு செய்யப்பட்டாலும் கொஞ்சம் துடித்தோம் என்று
புரிந்து கொள்ளட்டும்.

5 கருத்துகள்:

South-Side சொன்னது…

நன்றி திரு.சிவக்குமார்......

எமது கருத்துக்களையும் இங்கே எடுத்து வைத்திருக்கிறோம்.

http://lakaram.blogspot.com/2010/06/blog-post_14.html

கல்வெட்டு சொன்னது…

//வரலாற்றில் நாமெல்லாம் புழுக்களாக பதிவு செய்யப்பட்டாலும் கொஞ்சம் துடித்தோம் என்று
புரிந்து கொள்ளட்டும். //

Well said

மா சிவகுமார் சொன்னது…

அருமையான தெளிவான பதிவு ழகரம்.

வணக்கம் கல்வெட்டு,

பாரதியாரின் வரிகள் இன்றைய நிலைமைக்கே எழுதியது போல இருப்பதைப் பாருங்கள்,

================
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!

--- பாரதியார்
========

கல்வெட்டு சொன்னது…

FYI:

சிவா,
தமிழ்ச்செலவன் என்ற‌ ஒரு பதிவரின் முரண்களைச் சொன்னபோது நீங்கள் சொன்ன கருத்து..

http://masivakumar.blogspot.com/2010/04/blog-post_23.html

// ஒரு அமைப்பில் இருக்கும் போது (இருப்பது வரை) அதன் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி இருக்கத்தானே வேண்டியிருக்கிறது.//


--

இதே அளவுகோலை ஏன் உடன்பிறப்புகளுக்கு நீங்கள் வைக்கக்கூடாது?

உடன்பிறப்புகளும் ஒரு அமைப்பில் இருப்பதால் "நீங்கள் வக்காலத்து வாங்கிய தமிழ்செல்வன் போல" உடன்பிறப்புகளும் தலைமை சொன்னதை கேட்டுச் செயல்படுகிறார்கள். :-(((


***

எத்தனைபேர் கட்சிக் கொள்கைகளைப்படித்துவிட்டு அதை ஏற்று கட்சியில் சேர்கிறார்கள்?

அப்படி இருந்தால் கட்சி அதன் கொள்கைகளில் இருந்து விலகும்போது இவர்கள் வெளியேறிவிடுவார்கள்.

உடன்பிறப்புகளோ அல்லது தமிழ்ச்செல்வன்களோ அப்படிச்செய்வதில்லை. ஏன் என்றால் கட்சி என்ற ஒன்றில் இவர்களுக்கு கிடைக்கும் சில ஆதாயங்கள்.

உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் இதுதான் தமிழக / இந்திய அரசியலின் நிலை.

மா சிவகுமார் சொன்னது…

உண்மை கல்வெட்டு,

ஒரு கட்சியில் தலையைக் கொடுத்து விட்டால், அதன் முடிவுகளுக்கு ஏற்றபடி ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. கட்சியின் முடிவுகளுக்கு மாற்றுக் கருத்து சொல்வது என்பது முடியாமல் போய் விடுகிறது.

உடன் பிறப்புகளுக்கும் இதே நிலைமைதான்!