வியாழன், டிசம்பர் 14, 2006

பத்ரியின் எண்ணங்கள்

பிளாக் என்பது முதலில் தெரிய வந்தது பத்ரியின் மூலம்தான். அப்போது ழ-கணினி வேலைகளில் மூழ்கி, மடற்குழுக்களில் அடித்துக் கொண்டிருந்த நேரம். எங்களை எல்லாம் அபாண்டமாகக் குற்றம் சாட்டுவதாகக் குறைப்பட்டுக் கொண்டு வாதாடிக் கொண்டிருந்தேன் நான். அப்போது ஏற்பாடு செய்திருந்த ழ-கணினி வெளியீட்டு விழாவுக்கு அவரும் வந்து அதைப் பற்றித் தன்னுடைய பிளாக்கில் எழுதுவதாக தமிழினிக்ஸ் குழுவில் மடல் எழுதியிருந்தார்.

அவராவது வந்து பார்த்து, 'நாங்கள் ஒன்றும் இது வரை பணி செய்த தன்னார்வலர்களை ஒதுக்கி விட்டுப் போக நினைக்கவில்லை என்று நடுநிலையாக எழுதட்டும்' என்று நினைத்துக் கொண்டேன். அன்றையக் கூட்டத்துக்கு அரைக் கால் சட்டையுடன், அமெரிக்க பாணி இயல்பான உடையில் வந்திருந்தவர்தான் பத்ரி என்று ஊகித்துக் கொண்டோம்.

அடுத்த நாளிலிருந்து மூன்று பகுதிகளாக கூட்டம் பற்றி எழுதி புகைப்படங்களையும் தன்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டிருந்தார். அன்றிலிருந்து thoughtsintamil.blogspot.com என்ற வலைமுகவரி தினசரி போய்ப் பார்க்கும் இடமாக மாறி விட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய இடுகைகள், நாட்டு நடப்புகளை அலசும் பார்வைகள் என்று வலைப்பதிவுகள் என்ற பரிமாணம் கொஞ்சம் கொஞ்சமாக புலப்பட ஆரம்பித்தது பத்ரியின் வலைப்பதிவின் மூலமாக.

இந்திய அளவில் நடந்த சிறந்த வலைப்பதிவுகளுக்கான போட்டிகளில் பரிசுகள் பெற்றது, ஆர்வம் குறையாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தது என்று கவனத்தை இழுத்துப் பிடித்தே வைத்திருந்தது பத்ரியின் வலைப்பதிவு. அவரது பதிவில் இணைத்திருந்த வலது பக்கச் சுட்டிகளின் மூலம் மற்ற வலைப்பூக்களையும் போய்ப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். பல மாதங்களாக அவரது முகப்புப் பக்கம்தான் எனக்கு வலைப்பூக்களை மேய்வதற்கான நுழைவாயிலாக இருந்தது.

தமிழ் மணத்தில் ஏற்பட்ட சச்சரவுகள், மறு மொழி மட்டுறுத்தல் கட்டாயமாக்கப்பட்டது, சிலபதிவுகள் திரட்டுதல் நிறுத்தப்பட்டது போன்றவை நடக்கும் போது பத்ரியின் எழுத்துக்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு எப்போது அந்தத் தொட்டிலை விட்டு வளர்ந்து வெளியே வந்து வலைப்பூவுலகில் தன்னிச்சையாக உலாவவும், எனக்கென ஒரு அடையாளமும் உருவாக்கி வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தேன் என்பது நினைவில்லா விட்டாலும், தாயின் மடியைப் போல வலைப்பூக்களின் அரிச்சுவடியை கற்றுக் கொள்ள உதவியது பத்ரியின் பதிவுதான். என்னைப் போலவே பலர் பத்ரியின் பதிவு மூலம் வலைப்பதிவுலகத்துக்குள் நுழைந்திருப்பார்கள் என்பது உறுதி.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ழ-கணினி இப்பொழுது எப்படி இருக்கு?

மா சிவகுமார் சொன்னது…

ஹரிராமும், ஜெயராதாவும் தொடர்ந்து தனிஆர்வலர்களாக தமிழ் லினக்சு மொழிபெயர்ப்பு தொடர்பான வேலைகளைச் செய்து வருகிறார்கள். ழ-கணினி என்ற குழுவும், திட்டமும் நிலைகுலைந்து போய் உள்ளன.

அன்புடன்,

மா சிவகுமார்