திங்கள், செப்டம்பர் 14, 2009

தமிழ்மணத்துக்கு நன்றிகளுடன் - மா சிவகுமார்

'உங்கள் நட்சத்திர வாரத்தில் அண்ணா நூற்றாண்டு நாள், பெரியார் பிறந்த நாளும் வருகின்றன. . இப்பொழுதுள்ள சூழ்நிலையில் அண்ணா செய்தது மிகப்பெரிய சாதனையாகத் தோன்றுகிறது. அவருடைய இயக்கம் இன்று சுயநலக்கும்பல்களால் சீரழிக்கப் பட்டு விட்டாலும், அதனால் சில நேரங்களில் அண்ணா மீதே கோபமெழுந்தாலும், அமர்ந்து சிந்திக்கையில் அன்று அவர் செய்தது பெரும் ஜனநாயக மாற்றம். ஒபாமாவின் 'மாற்றம்' போல் அன்றே தமிழகத்தில் நிகழ்ந்தது.'
என்று சொர்ணம் சங்கர் எழுதியிருந்தார்.

தனிப்பட்ட முறையில், கடந்த ஒரு ஆண்டுகளாக இருந்த அலுவலகத்தை மாற்றி இன்றைக்குக் காலையிலிருந்து புதிய அலுவலகத்தில் செயல்பட ஆரம்பித்திருக்கிறோம். தமிழ்மண நட்சத்திரமாக இருக்கும்படி மடல் வந்த அன்று இன்றைக்கு புது இட மாற்றம் நடக்கும் என்று தெரியாது.

சோதிடம் போன்ற (மூட) நம்பிக்கைகள் இருப்பவர்களுக்கு, அடுத்த வாரம் விசேஷம். சனி கிரகம் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குப் போகிறார். 'சிம்மராசிக் காரரான தனக்கு ஏழரை நாட்டுச் சனி பிடித்ததால்தான் தேர்தலில் தோற்றோம், இப்போது நிலவும் கிரகச் சூழலில் இடைத்தேர்தலில் பங்கேற்க வேண்டாம்' என்று மலை மேல் ஏறிக் கொண்டிருப்பது 'திராவிட' என்று பெயரில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தலைவி.

H1N1 நுண்கிருமி மூலம் பரவும் நோயின் பரபரப்புகள் கொஞ்சம் ஆறிப் போய் விட்டிருக்கின்றன.

ஒன்றரை ஆண்டுகளாக பிடித்தாட்டிய பொருளாதார சுணக்கம் கொஞ்சம் தெளிந்து இளங்குருத்துக்கள் துளிர் விட ஆரம்பித்திருக்கின்றன. ஆனாலும் இருண்ட முகங்களும், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமின்மையும்தான் ஏற்றுமதித் துறை, கட்டிடத் துறை வட்டாரங்களில் காணக் கிடைக்கின்றன. இந்தியாவில் அரசாங்க திட்டங்களில் பங்கேற்கவும், வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் தொலைதொடர்புத் துறையிலும் வாய்ப்புகளுக்குக் குறைவே இல்லை.

பொய்த்துப் போன தென்மேற்கு பருவ மழையால் இன்னொரு பக்கம் தளர்ச்சி. நுகர்பொருட்கள், வாகனங்கள், வேளாண் பொருட்கள் துறையில் இருக்கும் நிறுவனங்கள் தற்காலிகப் பின்னடவைத் தவிர்க்கப் பாடுபட வேண்டியிருக்கும்.

ஒரு ஆண்டாக கீழே கீழே போய்க் கொண்டிருந்த பங்குச் சந்தை வெறி பிடித்தது போல ஒரு வாரம் மேலே அடுத்த வாரம் கீழே என்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பொதுவாக மேல்நோக்கிய போக்கு தெரிகிறது. நாளுக்கு நாள் மணிக்கு மணிக்கு நடக்கும் மாறுதல்களில் வாங்கி விற்க முனையும் சிறுமுதலீட்டாளர்கள் இன்னும் கையைச் சுட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

தமிழகத்தின் தெற்குப்பகுதியில் ஈழத்தில் காரிருள் சூழ்ந்திருக்கிறது. கேட்பதற்கு நாதியில்லாமல் ஒரு இனமே நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனம், காஷ்மீர், ஈழம் என்று தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் உலகில் பொதுவாக நிலவும் 'தீவிரவாத' அடக்குப் போக்கில் திணறிக் கொண்டிருக்கின்றன.

பொறியியல் கல்லூரிகளில் அரசு கலந்தாய்வுக்கு இருக்கும் இடங்களை விட விண்ணப்பித்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. ஏற்கனவே பல லட்சம் கட்டி பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் நெற்றிகளில் கவலைக் கோடுகள். பெற்றோர்களின் மனதில் கலக்கம். மென்பொருள் துறையால் கவரப்பட்டு பல்லாயிரக்கணக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி இடங்கள் காற்றாடுகின்றன.

அமெரிக்காவில், சாதாரண மக்கள் வயிற்றில் ஈரத் துணி போட்டுக் கொள்ள வேண்டிய நிலையைத் தவிர்க்க போராடிக் கொண்டிருக்க, Wall Street முதலீட்டாளார்களும், வங்கி பெருந்தலைகளும் இன்னமும் மில்லியன் டாலர் ஊக்கத் தொகைகள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். உடல்நலத் துறையில் சீர்திருத்தங்களின் கழுத்தை முறித்துப் போடும் முயற்சியில் பெரும் மருந்து நிறுவனங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன.

மென்பொருள் உலகில் திறவூற்று மென்பொருட்கள் (open source) மைய நீரோட்டத்திற்கு வந்து விட்டன. 'முதலில் உங்களைப் புறக்கணிப்பார்கள், அதன் பிறகு உங்களைப் பார்த்துக் கை கொட்டி சிரிப்பார்கள், அடுத்ததாக உங்களை நசுக்கி விட முயற்சிப்பார்கள், அத்தோடு நீங்கள் வெற்றி பெறுவீர்கள்'. பெரும் சக்திகளை எதிர்த்து அறத்தின் வலிமையை மட்டும் துணையாகக் கொண்டு போராடும் முயற்சிகளுக்கு சொன்னது லினக்சு முதலான திறவூற்று மென்பொருட்களுக்கு பொருந்துமானால், இப்போது நசுக்கி விடும் முயற்சிகளைத் தாண்டி வந்து விட்டிருக்கிறோம்.

அகில இந்திய அளவில் காங்கிரசுக் கட்சி கூடுதல் 40 இடங்களைப் பிடித்ததன் மூலம் ராகுல்காந்தியும் சோனியா காந்தியும் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக காட்சியளிக்கிறார்கள். திராவிடப் பெருந்தலைகள், கூடுதல் இரண்டு மத்திய அமைச்சரவை பதவிகளுக்காக கையில் கப்பறையுடன் தில்லி போய் அவர்கள் முன் நிற்க வேண்டியிருந்தது. அத்தோடு மாநில நலன்கள், அல்லது தமிழர் நலன்கள் குறித்துப் பேசுவதற்கான உரிமையும் அடகு வைக்கப்பட்டு விட்டது.

இந்துத்துவா இயக்கங்கள் தேர்தலில் ஏற்பட்ட தற்காலிகப் பின்னடைவால் ஒருத்தரை ஒருத்தர் புதைத்து முன் தான் முன்னேறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது அப்படியே தொடர்ந்து அந்த இயக்கங்களே வேரறுந்து போகும் என்று நப்பாசை இருந்தாலும், அவ்வளவு சீக்கிரத்தில் நல்லது நடந்து விடாது என்ற எச்சரிக்கையும் ஒலிக்கத்தான் செய்கிறது.

வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளும் எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் தனிக் குணமுள்ள தமிழினம், தமக்குப் பிடித்தபடி தகவமைத்துக் கொள்கிறது. இணையமும், தமிழ்த் தளங்களும், கணித்தமிழுக்காக ஆர்வலர்கள் போட்ட அடித்தளமும் இன்றைக்கு எப்படிப் பயன்படுகிறது என்று கண் கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் பெரும்பாலான முயற்சிகள் திரைப்படங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், இவற்றுக்கு வெளியே கொஞ்சம் சின்ன அளவில் கதை, கவிதை கட்டுரை என்று படைப்புகளாக வெளி வருகின்றன. அறிவியல் தொழில்நுட்பத்தில் படைப்பாக்கங்கள் தமிழ் சமூகத்திலிருந்து உருவானதாக எதுவும் கண்ணுக்கெட்டியது வரை காணக் கிடைக்கவில்லை.

இப்படி மனதை ஆக்கிரமிக்கும் பல பொருள்களைப் பற்றி அடுத்து வரும் ஒரு வாரத்தில் பதிவுகளாக எழுதுகிறேன். இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே நிறைய எழுதி தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டங்கள் எல்லாம் திட்டமாகவே இருந்து விட்டன. தினமும் இந்திய நேரப்படி அதிகாலை 7 மணிக்கு ஒன்று, காலை 9 மணிக்கு ஒன்று மதியம் 1.30க்கு ஒன்று, மாலை 6.30க்கு ஒன்று என்று பதிவிட வேண்டும் என்று நினைப்பு.

45 கருத்துகள்:

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

வாழ்த்துக்கள் சிவகுமார்

துளசி கோபால் சொன்னது…

நல்வரவு.

அன்பான வாழ்த்து(க்)கள்.

ஆயில்யன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் :)

SurveySan சொன்னது…

//தினமும் இந்திய நேரப்படி அதிகாலை 7 மணிக்கு ஒன்று, காலை 9 மணிக்கு ஒன்று மதியம் 1.30க்கு ஒன்று, மாலை 6.30க்கு ஒன்று என்று பதிவிட வேண்டும் என்று நினைப்பு.//

புது ஆபீஸ்ல வேல கம்மியா? just kidding. welcome back :)

பெயரில்லா சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்

Jerry Eshananda சொன்னது…

வாழ்த்துகள் சிவா.

☼ வெயிலான் சொன்னது…

வாழ்த்துக்கள் மா.சி.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!!!!!!

வல்லிசிம்ஹன் சொன்னது…

நல்வரவு சிவக்குமார். தினம் மீண்டும் உங்கள் எழுத்துக்களைப் படிக்க வாய்ப்பு. நல்லதொரு நட்சத்திரத்தைக் காண்பதில் மகிழ்ச்சி.

உண்மைத்தமிழன் சொன்னது…

தமிழ்மணத்துக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்..

நல்லாத்தான இருந்தாங்க.. ஏன் இப்ப திடீர்ன்னு இப்படி..?!!!

உண்மைத்தமிழன் சொன்னது…

சனி பகவான் என் ராசிக்கு போன மாசம் 29-ம் தேதியே குடி புகுந்துட்டாரே..! இல்லையா..?

ஜெகதீசன் சொன்னது…

வாழ்த்துக்கள் மா.சி.

Indian சொன்னது…

Super...!
Welcome back.

வஜ்ரா சொன்னது…

வாழ்த்துக்கள்!

குடந்தை அன்புமணி சொன்னது…

வலைப்பட்டறை நடத்தி பல புதிய பதிவர்களை உருவாக்கியதில் தங்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது.தங்களைப் போன்றவர்களால்தான் எனக்கு வலையுலகம் அறிமுகமாகியது. அதை இன்று நினைத்துப் பார்க்கிறேன். நட்சத்திர பதிவராக பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்.

சந்தனமுல்லை சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்!!

கலகலப்ரியா சொன்னது…

வாழ்த்துக்கள்ங்க..!

K.R.அதியமான் சொன்னது…

///சோதிடம் போன்ற (மூட) நம்பிக்கைகள் இருப்பவர்களுக்கு, அடுத்த வாரம் விசேஷம். சனி கிரகம் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குப் போகிறார். 'சிம்மராசிக் காரரான தனக்கு ஏழரை நாட்டுச் சனி பிடித்ததால்தான் தேர்தலில் தோற்றோம், இப்போது நிலவும் கிரகச் சூழலில் இடைத்தேர்தலில் பங்கேற்க வேண்டாம்' என்று மலை மேல் ஏறிக் கொண்டிருப்பது 'திராவிட' என்று பெயரில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தலைவி.
/////


நண்பர் மா.சி,

சிம்ம ராசிக்காரரான நீங்க, அடுத்த தடவ எம்மிடம் ஜோதிட‌ம் "கேட்கும்" போது, இந்த டையலாக்கை நினைவுபடுத்திவேன் !!

மற்றபடி, வாழ்த்துக்கள்.

புருனோ Bruno சொன்னது…

வாழ்த்துக்கள் :) :)

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

வாழ்த்துக்கள்.....

தேவன் மாயம் சொன்னது…

வாழ்த்துக்கள்! கலக்குங்க!

மாயா சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் :)

manjoorraja சொன்னது…

நட்சத்திரவாரத்தில் பல பிரச்சினைகளை முன் வைத்து எழுதப்போவதாக கூறியுள்ளீர்கள். மிகுந்த ஆவலை ஏற்படுத்துகிறது.

காத்திருக்கிறேன்

சென்ஷி சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணே!

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

வாழ்த்துகள் சிவக்குமார்.

சிங். செயகுமார். சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்

தமிழநம்பி சொன்னது…

பாராட்டும் வாழ்த்தும்!

Thekkikattan|தெகா சொன்னது…

மா. சி இப்படி ஒரே நேரத்தில் அள்ளித் தெளிக்க உங்களை விட்டா யாருங்க கிடைப்பா? கிடைச்ச நேரத்தில, எங்களோடும் பகிர்ந்துக்கோங்க :)

நட்சத்திர வார வாழ்த்துக்கள்!

தமிழ்நதி சொன்னது…

வாழ்த்துக்கள் சிவகுமார். நட்சத்திர வாரத்திலும் உங்களிடமிருந்து நிறைய அனுபவப் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

ILA (a) இளா சொன்னது…

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணே!

மா சிவகுமார் சொன்னது…

அது ஒரு கனாக்காலம்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

துளசி அக்கா,
உங்கள் பின்னூட்டம்தான் எப்போதுமே ஒரு பதிவை முழுமை பெறச் செய்கிறது. மிக்க நன்றி.

ஆயில்யன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி. பாருங்கள், பல மாதங்களுக்குப் பிறகு ஒரு பதிவில் சந்திக்கும் போதும் நட்பு தெரிகிறது எனக்கு!

சர்வேசன்,

ஆபிசு புதுசானாலும், வேலை புதுசு புதுசா வந்துட்டேதான் இருக்கும் :-)

அதிகாலை 4 மணி முதல் 5.30 வரை 4 பதிவுகளுக்கு எழுதி வைத்து விட்டு, அடுத்த அரை மணிநேரத்தில் பதிந்து விடலாம். பதிவுகளை 7 மணி, 9 மணி, 1.30 மணி, 6.30 மணி என்று நேரங் குறித்து விட்டால் அந்தந்த நேரத்துக்கு பிளாக்கர் வெளியிட்டு விடும். அப்படித்தான் செய்ய நினைத்திருக்கிறேன். நாளை முதல் :-)

சின்ன அம்மிணி,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

ஜெரி ஈசானந்தா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

நன்றி வெயிலான்,
திருப்பூர் எல்லாம் எப்படி இருக்கு இப்போ?

முனைவர் குணசீலன்
உங்கள் வாழ்த்துக்களுக்கு சிறப்பு நன்றிகள்.

வல்லி அம்மா,
வணக்கமும் நன்றிகளும்.

உண்மைத் தமிழன்,

போன மாசம் 29ம் தேதி என்ன நடந்தது? அதியமானைக் கேட்டால் விபரம் தெரியும், சனிப்பெயர்ச்சி பற்றி. நாளிதழ் செய்தி ஒன்றில் திருநள்ளாறு ஏற்பாடுகள் பற்றி எழுதியிருந்ததில் செப்டம்பர் மூன்றாவது வாரம் என்று படித்தேன்.

ஜெகதீசன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

Indian
நன்றி.

வஜ்ரா,
காரமான எதிர்க்கருத்துக்களுக்கு தயாராகிக் கொள்கிறேன் :-) நன்றி!

குடந்தை அன்புமணி,

வலைப்பதிவுகளின் மூலம் மாற்றங்களை சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுத ஆரம்பித்தேன். சில படிகளோடு தேங்கி விட்டிருக்கிறது. நீங்கள் சொன்னது மிகவும் நிறைவைத் தருகிறது!

சந்தனமுல்லை,
நல்ல பெயர். வாழ்த்துக்களுக்கு நன்றி.

கலகலப்ரியா,
நன்றி.

அதியமான்,
அடுத்த வாய்ப்பில் சோதிட பலன்களை தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்! :-)

டாக்டர் புருனோ,
போன வாரம் ஒரு நிகழ்ச்சியில் மருத்துவம் படித்த ஒருவர் காவல் துறை அதிகாரியாக பணி புரிவதாகக் கேட்ட போது உங்கள் நினைவுதான் வந்தது. வாழ்த்துக்களுக்கு நன்றி.

கிளியனூர் இஸ்மத்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

தேவன் மாயம்,
தமிழ் வலைப்பதிவுலகம் எங்கேயோ நகர்ந்து போய் விட்டிருக்கிறது. சுற்றுமுற்றும் பார்த்து இடம் புரியவே கொஞ்ச நாள் ஆகும் போல தோன்றுகிறது. வாழ்த்துக்களுக்கு நன்றி.

மாயா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

மஞ்சூர் ராசா,
நல்லா இருக்கீங்களா! மனதுக்குப் பட்டதை எழுதலாம் என்றுதான். அதிக கனமில்லாமல் எனது பார்வையில் தெரியும் உலகை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சிகள்தானே இந்த வலைப்பதிவுகள்.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சென்ஷி,
எப்படி இருக்கீங்க? வாழ்த்துக்களுக்கு நன்றி.

சிங் செயகுமார்,
நன்றி. வலைப்பதிவில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உங்கள் வாழ்த்துக்கள் ஊக்கத்தைத் தருகின்றன. :-)

நன்றி தமிழ்நம்பி,

தெகா,

பகிர்ந்து கொள்தலைத்தான் மிகவும் தேடுகிறது. எல்லாம் மனதில் வைத்து வைத்து ஓரே இரைச்சலாக ஆகி விடுகிறது. எழுதுவதும் பகிர்ந்து கொள்வதும் நல்ல ஒரு அனுபவம்.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

தமிழ்நதி,

பதிவுகள் எல்லாமே அனுபவப்பதிவுகள்தான். புள்ளி விபரங்கள் இல்லாமல், தோன்றியதை எழுதுவதுதான் எளிதாக வருகிறது :-) வாழ்த்துக்களுக்கு நன்றி.

இளா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…

வாங்க வாங்க... :)

நல்வரவு சிவகுமார்.

வந்தவுடனே ஸ்டார் ஆய்ட்டீங்க.

வாழ்த்துக்கள்.

மலைநாடான் சொன்னது…

சிவகுமார்! வாழ்த்துக்கள். ஆர்வமாக இருக்கிறது.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்

gulf-tamilan சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்!!
welcome back !!!

பெயரில்லா சொன்னது…

என் வாழ்த்துக்களும் உங்களூக்கு உரித்தாகுக

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

மா.சி,

நட்சத்திர வாழ்த்துகள்.

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்!

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

உங்களை மாதிரி ப்ளான் பண்ணி என்னால் வேலை செய்ய முடிவதில்லை.

பல சமயங்களில் ப்ளானோடு நின்று விடுகிறது.. :(

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள்

மா சிவகுமார் சொன்னது…

மஸ்தான்,
வரவேற்புக்கு நன்றி. இது மீள்வருகை, அதுதான் ஸ்டாராக :-)

மலைநாடான்,
வணக்கம். நல்லா இருக்கீங்களா! அடுத்தது சென்னைக்கு எப்போ?
வாழ்த்துக்களுக்கு நன்றி.

டிவி ராதாகிருஷ்ணன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஸ்டார்ஜென்,
நன்றி.

கல்ஃப் தமிழன்,
வரவேற்புக்கு நன்றி.

கோவை ரவீ,
நன்றி.

கோபி,
தமிழ்ப்பணிகள் எல்லாம் எப்படிப் போகுது. உங்கள் அதியன் என் பயர் பாக்சில் நிரந்தர அங்கம் :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி.

பாலா,
வணக்கம், நன்றிகள்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாணி. நீங்க உங்க பாணியில அடித்த ஆடுங்க :-)

நன்றி ஷிர்டி சாய்தாசன்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html