ஞாயிறு, செப்டம்பர் 20, 2009

இன்றைய சூழலில் வேலை வாய்ப்புகள்

மென்பொருள் துறையில் நிலவரங்கள்
கடந்த ஒரு ஆண்டு கால பொருளாதாரச் சுணக்கத்தின் போது வளர்ந்த நாடுகளுக்கு மென்பொருள் சேவை அளிக்கும் நிறுவனங்களின் விற்பனை முறைகளில் பெரிய மாற்றங்கள் நடந்திருப்பதாக தெரிகின்றது. time and materials என்ற முறையில் இத்தனை பேர் இத்தனை நாள் வேலை பார்த்தார்கள் என்று கணக்குக் காட்டி அதன் பேரில் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிப்பது மாறி, இன்ன வேலை இன்ன நாளுக்குள் முடித்தால் இவ்வளவு கட்டணம் என்ற fixed price ஒப்பந்தங்கள் அதிகமாகியிருக்கின்றன.

இதனால், தலைகளின் எண்ணிக்கைக் காட்டுவதற்காக பெருமளவு பொறியியல் பட்டதாரிகளை எடுத்து benchல் வைத்திருக்கும் பழக்கம் பெரிதும் குறைந்து விடும்.

முன்னணி மென்பொருள் சேவை நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒரு நண்பரின் தகவலின்படி, மொத்தத் திட்டப்பணியில் சுமார் 40% நிரல் எழுதுதல், சோதனை செய்தலில் செலவிடப்படுகிறது. 60% மற்ற பணிகளில் செலவாகிறது.

வெறும் நிரலாக்கம் மட்டும் தெரிந்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு குறையவதற்கான சாத்தியங்கள்தான் தெரிகின்றன.

கணினி அறிவியல், கணினி பயன்பாடு அல்லது தகவல் தொழில் நுட்பத் துறையில் பட்டப்படிப்பு படிப்பவர்கள், இன்னொரு துறையில் தமது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணம் : கணக்கியல், வணிகவியல், மேலாண்மை, சமூகவியல்.

கணினி அறிவியலில் உயர் நிலை ஆராய்ச்சி செய்யத் தேவைப்படும் சில ஆயிரம் பேர்களுக்கு மட்டும்தான் வெறும் கணினியியலில் தேவைகள் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு. மற்றவர்களுக்கு கணினி பயன்பாடு குறித்த அறிவு, எழுதத் தெரிவது போன்ற அடிப்படைத் தேவையாக இருக்கும். அதற்கு மேல் ஒரு வித்தை, ஒரு துறையில் வல்லமை இருப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

பொதுவான ஒரு குறிப்பு

என்ன செய்தாலும் தகவல் பரிமாற்றத் திறமைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, பன்மொழி வன்மை என்று நம்மிடம் இருப்பதை வெளிப்படுத்திக் கொள்ளும் திறமைகள் எல்லா காலத்துக்கும் தேவையான ஒன்று.

படிப்பது, பயணம் செய்வது, புதியவர்களை சந்திப்பது, செவி மடுத்துக் கேட்பது என்று உள்ளதை உள்வாங்கிக் கொள்ளும் திறமை மேலே சொன்னதின் மறுபுறம். மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது நம்மை நாமே முன்னேற்றிக் கொள்வதற்கான அடிப்படைத் தேவை.

கருத்துகள் இல்லை: