இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 12, 2019

மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

தை 21-ம் நூற்றாண்டு உலகமயமான முதலாளித்துவம் பற்றிய ஒரு முழுமையான கோட்பாடாக உருவாக்க வேண்டும் என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார். எப்படி மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கு விதிகளை, மதிப்பு விதியிலிருந்து முழுமையாக விளக்கினாரோ, அதே போல இன்று தோன்றியிருக்கும் புதிய கட்டத்தை மதிப்பு விதியின் அடிப்படையில் விளக்க வேண்டும்.

மூலதனம் நூலில் மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாட்டை எடுத்து்க கொள்கிறார். "வெளிநாட்டு வர்த்தகம், அரசின் செயல்பாடுகள், கூலி உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவாக கொடுக்கப்படுவது இவற்றை எல்லாம் பற்றி நான் பேசப் போவதில்லை, அவற்றை அடுத்தடுத்த ஆய்வுகளில் எடுத்துக் கொள்வோம்" என்று ஒதுக்கி வைத்து ஆய்வு செய்கிறார்.

இன்றைக்கு நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வு மையமான விஷயமாக வந்திருக்கிறது. அன்று சரக்கு இங்கிலாந்திலேயே உற்பத்தியாகி இங்கிலாந்திலேயே விற்பனையானது. உற்பத்தி முதலாளியிடமிருந்து விற்பனை முதலாளி உபரி மதிப்பை கைப்பற்றினாலும் அது ஒரே நாட்டுக்குள் நடந்து விடுகிறது. இன்றோ உற்பத்தி முதலாளி இந்தியாவில் இருக்கிறார், விற்பனை முதலாளி அமெரிக்காவில் இருக்கிறார். எனவே, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவில் மதிப்பு விதி செயல்படுவதை பற்றி ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இது போல பல விஷயங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

இதனை ஒரு முழுமையான மார்க்சிய கோட்பாடாக உருவாக்குவதை தனிப்பட்ட ஒருவர் செய்து முடிக்க முடியாது. "நான் எடுத்துக் கொண்டிருப்பது, உற்பத்தி உலகமயமாதலில் மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களின் மதிப்பு அதிகரித்திருப்பது, இதில் மதிப்பு எப்படி கைப்பற்றப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறேன்" என்கிறார். இதை ஒரு ஆய்வறிக்கையாக 2010-ல் எழுதுகிறார். இதை தரவுகள், வாதங்களை, கருத்துக்களை அப்டேட் செய்து 2016-ல் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

மூலதனம் நூலை புரட்டிப் பார்த்தால், ஜான் ஸ்மித், அறுதி உபரி மதிப்பு, ஒப்பீட்டு மதிப்பின் உற்பத்தி அறுதி மற்றும் ஒப்பீட்டு உபரி மதிப்பின் உற்பத்தி என்ற முதல் பாகத்தின் மூன்று பகுதிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். இது போக மூன்றாம் பாகத்தில் லாப வீதம் குறைந்து கொண்டு போவது, உபரி மதிப்பு சராசரி லாபமாக மாற்றமடைதல் போன்ற பகுதிகளையும் தனது வாதங்களில் பயன்படுத்துகிறார்.

மூலதனம் நூலின் முதல் பாகத்தின் முதல் பகுதியில் 3 அத்தியாயங்களில் பரிசீலிக்கப்படும் பணம் என்பதும் இன்றைக்கு மார்க்ஸ் பரிசீலித்த நிபந்தனைகளிலிருந்து வெகுவாக மாறியிருக்கிறது. மார்க்ஸ், “நான் தங்கச் சரக்கை பணமாக எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்கிறார். தங்கம் என்பது மனித உழைப்பு சக்தியை செலுத்தி உற்பத்தி செய்யப்பட்ட ஒரு சரக்கு. மூலதனம் நூலில் தங்க அடிப்படையிலான பண முறை, வங்கிகளின் செயல்பாடுகள் தங்கக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றுதான் பரிசீலிக்கப்படுகின்றன. 3-வது பாகத்தில் இங்கிலாந்து வங்கி பணம் அச்சடித்து வெளியிடுவதற்கு குறிப்பிட்ட அளவு தங்கக் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

உலகப் பொதுப்பணமாக தங்கத்தை பயன்படுத்தும் நடைமுறை 2-ம் உலகப் போரின் சமயத்தில் மாறுகிறது. அப்போது உலக முதலாளித்துவ நாடுகள் ஒன்று கூடி அமெரிக்க டாலருக்கு தங்கத்துடன் நிலையான விகிதத்தை வரையறுக்கிறார்கள். $35-க்கு ஒரு அவுன்ஸ் தங்கம் பரிவர்த்தனை செய்து கொள்வதாக அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதன் அடிப்படையில் அனைத்து முதலாளித்துவ நாடுகளும் டாலரை உலகப் பொதுப்பணத்தை பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கிறது. உதாரணமாக, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பலில் தங்கத்தை ஏற்றி அனுப்பத் தேவையில்லை. டாலரை பரிமாறிக் கொள்வார்கள். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும், டாலரை அமெரிக்க மத்திய வங்கியிடம் கொடுத்து தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

1970-களில் உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம், மூலதனத் திரட்சியினால் ஏற்பட்ட விளைவுகளினால் அமெரிக்க அரசு, “இனிமேல், டாலருக்கு பதிலாக தங்கம் தருவது என்ற உத்தரவாதத்தை கைவிடுகிறோம். இந்த இரண்டுக்கும் பிணைப்பு இல்லை. 100 டாலர் கொண்டு கொடுத்தால் சில்லறை தருகிறோம். தங்கம் தரப் போவதில்லை" என்று அறிவிக்கின்றனர். 1970-கள் முதல் எந்த நாணயத்துக்கும் தங்க அடிப்படை இல்லை, உலகம் முழுவதும் யூரோ, டாலர், யென், பவுண்ட், சமீபத்தில் சீன யுவான் ஆகிய நாணயங்கள் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. டாலருடைய முற்றாதிக்கம் நிலவுகிறது.

மார்க்ஸ் எழுதிய முதல் 3 அத்தியாயங்களில் பணம் பற்றி விவாதிக்கப்படுகிறது. அதில் மார்க்ஸ் தவறாக எழுதவில்லை. அன்றைய நிலைமையில் தங்கம் உலகப் பொதுப்பணமாக உள்ளது. சூக்குமமற்ற மனித உழைப்பு உருவேற்றப்பட்ட உடனடி வடிவமாக தங்கம் உள்ளது. காகிதப் பணமும் சுற்றோட்டத்தில் பயன்பட்டது. அப்படி இல்லாத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இதுதான் நிலைமை. இன்னும் 10 ஆண்டுகளில் இது மாறுமா என்று தெரியவில்லை, ஆனால், இன்றைக்கு தங்கம் உலகப் பொதுப்பணமாக இல்லாத கட்டமைவுதான் செயல்படுகிறது.

இதே போல மூலதனத் திரட்சியின் நிகழ்முறை, வங்கித் துறை எப்படி செயல்படுகிறது என்று ஆய்வு தேவைப்படுகிறது. பங்குச் சந்தையாகட்டும், அன்னியச் செலாவணி சந்தையாகட்டும், பிட் காய்ன் பற்றிய பிரச்சனை ஆகட்டும், கடன் பத்திரச் சந்தை ஆகட்டும் இவற்றின் கட்டமைவு சிக்கலானதாகவும், பிரம்மாண்டமாகவும் வளர்ந்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் இயற்கை வளங்களின் பொருளாதாரம் என்ன. 3 அடி வரை விவசாயம் செய்து கொள்ளலாம் அதற்குக் கீழ் இருப்பது முதலாளிகளுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். இதில் மீத்தேன் எடுக்க லைசன்ஸ் கொடுங்கள் என்று ஒரு இடத்தில், இன்னொரு இடத்தில் இரும்புத் தாது எடுக்க மலையை கேட்கிறார்கள், அலுமினியம் எடுக்க கவுத்தி வேடியப்பன் மலை வேண்டும் என்கிறார்கள்.

இந்தப் பொருளாதாரம் எப்படி இயங்குகிறது. இது ஏதோ ஆய்வுத் துறை ஆர்வத்துக்கானது மட்டும் இல்லை. இதைப் புரிந்தால்தான் நாம் யார் யார் எங்கு நிற்கிறார்கள். ஆலைத் தொழிலாளியின் பங்கு என்ன, சிறு விவசாயியின் நிலை என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் சிறு உடைமையாளர்கள் அழிந்து போவது அவசியமானது என்ற கோட்பாடு எல்லாம் பழைய காலத்தில் எழுதி வைத்தவை. இன்றைக்கு அது அப்படியே பொருந்துமா? சிறு விவசாயிகள் இருக்கிறார்கள். அவர் 8 வழிச்சாலையை எதிர்த்து நிற்கிறார். ஒருவர் அவரை ஆதரிக்க வேண்டும் என்கிறார். இன்னொருவர் நீங்கள் பெருவீத உற்பத்திக்கு எதிராக நிற்கிறீர்கள், முதலாளித்துவத்தை எதிர்க்கிறீர்கள், நீங்கள் பிற்போக்குவாதி என்கிறார்.

இவ்வாறாக, நாம் எல்லோரும் யானையை தடவிப் பார்த்து புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். 4 கண் தெரியாத நபர்கள் யானையை பார்க்க போனார்களாம். ஒருவர் காதை தடவிப் பார்த்து விட்டு யானை முறம் போல இருக்கிறது என்றாராம். இன்னொருவர் காலை தடவிப் பார்த்து விட்டு இல்லை இல்லை யானை தூண் போல இருக்கிறது என்றாராம். இரண்டு பேரும் விவாதம் செய்து கொள்கிறார்கள். முறம் போலத்தான் இருக்கிறது, தூண் போலத்தான் இருக்கிறது என்று அடித்துக் கொள்கிறார்கள்.

முதலாளித்துவ உற்பத்தி முறை என்ற யானை என்னவாக இருக்கிறது என்று காட்டியது மார்க்சின் பணி. மார்க்ஸ் கற்றுக் கொண்டு 21-ம் நூற்றாண்டில் இன்றைய உலக முதலாளித்துவ கட்டமைப்பு எப்படி உள்ளது, எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, சப் பிரைம் நெருக்கடி பற்றி பேசுகிறோம். மார்க்சிய அமைப்புகள் எழுதிய கட்டுரைகள் பலவற்றில் நமது புரிதல் மேலோட்டமாக இருக்கிறது. வீட்டுக்கடன் வாங்கினார்கள், கட்ட முடியவில்லை, கவிழ்ந்து விட்டது என்ற அளவில் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த நிதித்துறைக்கான கட்டமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சிறப்பு படிப்புகளை படித்தவர்கள் முதலீட்டு வங்கிகளை இயக்குகிறார்கள். இந்தக் கட்டமைவுகள் புரிந்து கொள்ளாமல் உலக முதலாளித்துவத்தை புரிந்து கொள்வது எப்படி?

இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் பண மதிப்பு நீக்கம் பற்றி எப்படி பேச முடியும். பண மதிப்பிழப்பு என்பது "நான் அதிகாரத்தில் இருப்பதால் நான் உத்தரவு போட்டு பணத்தை மாற்றி அமைத்து விடலாம்" என்று நினைத்த பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் முட்டாள்தனத்துக்கு நல்ல உதாரணம். "எல்லோரும் பணத்தைக் கொடுங்க என்று அறிவித்தால் எல்லாம் மாறி விடும்" என்று நினைத்தார்கள். பணத்தின் பொருளாதார அடிப்படை பற்றிய ஆரம்பநிலை அறிவு கூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் மூலதனம் முதல் பாகத்தைக் கூட படித்திருக்கவில்லை என்பதுதான் இதன் பொருள்.

எல்லாவற்றையும் மார்க்ஸ் அல்லது லெனின் எழுதி வைத்து விட்டு போய் விட்டார். அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று பார்ப்பது தவறு. மார்க்ஸ் அல்லது லெனின் பிரச்சனைகளை எப்படி பரிசீலித்தார், எப்படி முடிவுகளை வந்தடைந்தார் என்பதுதான் முக்கியமானது. லெனின் அந்த காலத்துக்கு, ரசியாவுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முடிவுகளை வந்தடைகிறார். அவற்றை எப்படி வந்தடைந்தார் என்பதுதான் முதன்மையானது.

மூலதனம் நூலில் என்ன சிறப்பு என்றால், அந்நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஒவ்வொரு வாக்கியத்திலும் கற்றுக் கொடுக்கிறது. அதை படித்தால் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான அறிவியல் சிந்தனை முறை வளர்கிறது. அதைப் படிக்க முடியவில்லை, புரியவில்லை என்பதற்குக் காரணம் நமது சிந்தனை முறை தவறாக இருப்பதுதான்.

மேலும், முதலாளித்துவ கட்டமைவு என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் உட்பட்டதாக என்றைக்குமே இருந்ததில்லை. மூலதனம் முதல் பாகம் 4-வது அத்தியாயத்தில் மார்க்ஸ் சொல்வது போல, 16-ம் நூற்றாண்டில் உலகச் சந்தையும் உலக வர்த்தகமும் தோன்றியதில் இருந்துதான் நவீன மூலதனத்தின் ஆட்சி தொடங்கியது. இதை புரிந்து கொண்டால்தான் இன்றைய முதலாளித்துவ சமூகம் என்ற யானையை புரிந்து கொள்ள முடியும்.

அதற்கான பொறுப்பு மார்க்சிய அறிஞர்களின் கையில் இருக்கிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 6 (இறுதிப் பகுதி)

திங்கள், மார்ச் 11, 2019

உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்

த்தகைய குறைவான கூலி, மோசமான பணிச் சூழலில் முன்னணி பிராண்ட் பொருட்கள் உற்பத்தி ஆவதை நியாயப்படுத்துபவர்களி்ல ஒருவர் ஜக்தீஷ் பகவதி என்ற பொருளாதாரவியல் நிபுணர்.

ராணா பிளாசா விபத்துக்கு 6 மாதங்களுக்கு முன்பு அதே டாக்காவில் தஸ்றீன் ஃபேஷன்ஸ் என்ற தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு 112 பேர் இறந்து விட்டனர். இது தொடர்பாக ஜக்தீஷ் பகவதி ஒரு கட்டுரை எழுதுகிறார். "உற்பத்தி ஆவது பிராண்ட் பொருளாக இருக்கலாம். ஆனால், பணத்தை கொடுத்து பொருளை வாங்குவதோடு எங்கள் பொறுப்பு முடிந்தது. அவர்கள் சுதந்திர சந்தையில் பேரம் பேசித்தானே உற்பத்தி செய்கிறேன். €1.35 என்ற விலையை சுதந்திரமாக ஏற்றுக் கொண்டுதானே உற்பத்தி செய்கிறான். அதனால் அவர்கள் நாட்டு தொழிலாளியை அப்படி நடத்தினால் எனக்கு என்ன ஆச்சு? வங்கதேச அரசு என்ன செய்கிறது? அவர்களுக்குத்தான் பொறுப்பு" என்று எழுதுகிறார். ராணா பிளாசா விபத்துக்குப் பிறகும் அதே போல எழுதுகிறார்.

ஆனால், வெறும் பொருளாதார உறவுதான் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று சொன்னாலும், பொறுப்பை தட்டிக் கழிக்க முடியவில்லை. இத்தகைய உற்பத்தி நிறுவன உறவுகளை எப்படி புரிந்து கொள்வது என்று ஜான் ஸ்மித் கேட்கிறார். வங்கதேசத்தில் கடந்த 10-15 ஆண்டுகளில் பொருளாதாரம் நிறைய மாறியிருக்கிறது. முன்பு இருந்தது போல இல்லாமல் ஆயத்த ஆடை உற்பத்திக்காக 5,000 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அவற்றில் 45 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் 85% பெண்கள். இது தொடர்பாக ஐ.நா நிறுவனங்கள் ஆய்வுகள் செய்துள்ளன.

ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களில் பெரும்பாலும் பெண்களாக இருப்பார்கள். உழைப்பு பட்டாளத்தை பெண்மயமாக்குவது என்று இதை அழைக்கிறார்கள். பெண்களுக்கு ஆண்களுக்குக் கொடுக்கும் கூலியில் முக்கால் பங்கு கொடுத்து கூலிச் செலவை குறைக்க முடிகிறது. வங்க தேச ஆயத்த ஆடைத் துறையில் பெண்களின் கூலி ஆண்களுக்குக் கொடுக்கப்படும் கூலியில் சுமார் 73% ஆக உள்ளது என்கிறார் ஜான் ஸ்மித். சென்னைக்கு அருகில் இயங்கிய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் நோக்கியா ஃபோன் உற்பத்தி தொழிற்சாலையில் கூட பெண்கள்தான் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் கூலியை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கு முதலாளித்துவம் வழி கண்டு பிடிக்கிறது, குறைந்த விலை, குறைந்த கூலி, செலவுக் குறைப்பு, அதிக லாபம், மூலதனக் குவிப்பு என்று ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த உந்து சக்தி எப்படி இயங்குகிறது என்பதிலிருந்து ஜான் ஸ்மித் பேசுகிறார். இதை எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம். ஜக்தீஷ் பகவதி போன்ற முதலாளித்துவ அறிஞர்களை விட்டு விடுவோம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிய இயக்கத்தில் இதை எப்படி புரிந்து கொள்கிறோம். இதற்கு என்ன விளக்கம் அளிக்கிறோம்? ஏகாதிபத்தியம் பற்றி நாம் புரிந்து கொள்வது லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் இருந்து. அந்த நூலில் பெரிய ஏகபோக தொழில் நிறுவனங்கள் உருவாவது, வங்கிகள் ஏகபோகங்களாக உருவெடுப்பது, வங்கிகளும் தொழில் நிறுவனங்களும் இணைந்து நிதி மூலதனம் உருவாவது, மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுவது, ஏகாதிபத்திய நாடுகள் காலனிகளாக பிரித்துக் கொள்வது என்று 5 அம்சங்களை அந்த நூல் விளக்குகிறது.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் என்ற நூல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது போன்ற ஒரு பிரகடனம். அரசியல் ரீதியாக என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஜான் ஸ்மித் இதை எப்படி பார்க்கிறார்?

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகளான சான் சிமோன், ஃபூரியே, சிஸ்மாண்டி போன்றவர்கள் முதலாளித்துவ சமூகத்தை மிகக் கடுமையாகவும் துல்லியமாகவும் விமர்சிக்கிறார்கள். “என்ன மாதிரியான உலகம் இது. இவ்வளவு பொருட்கள் உற்பத்தியாகி குவிகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில், பட்டினியில் உழல்கிறார்கள். எதிர்காலத்தில் நாம் ஒரு பொன்னுலகை படைப்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் ஒரு உலகத்தை படைப்போம்" என்று இவர்கள் பேசுகின்றனர். இவை அனைத்தும் அறிவியல் அடிப்படை இல்லாத கற்பனாவாத சிந்தனைகள்.

முதலாளித்துவம் பற்றிய அறிவியல் அடிப்படையை வழங்குவது மார்க்ஸ் தனது 20-30 ஆண்டு கால உழைப்பின் மூலம் படைத்த மூலதனம் நூல். மூலதனம் நூல் சரக்கு - பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு, மதிப்பை படைப்பது எது, உழைப்பின் இரட்டைத் தன்மை என்று ஆரம்பிக்கிறது. மூலதனம் நூலில் மார்க்ஸ் பேசக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் இந்தப் புள்ளியில் இருந்து வளர்த்துச் சென்று அடையலாம்.

அறிவியல் இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது. உதாரணமாக, 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க அறிஞர் தேல்ஸ் உலகத்தில் எல்லாமே நீரால் ஆனது என்று முன் வைத்த கருதுகோள் அறிவியல் சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய ஒரு பாய்ச்சல் என்கிறார்கள் அறிஞர்கள்.

இவ்வாறு முதலாளித்துவத்தின் எல்லா நிகழ்வுகளையும் ஒரு அடிப்படை கருதுகோளிலிருந்து விளக்கும் போது அவற்றில் என்னென்ன பாத்திரங்கள் உள்ளன, அவர்களுக்கிடையே இருக்கும் உறவு என்ன, மாறிச்செல்லும் இயக்கத்தின் விதிகள் என்ன என்று எல்லா விஷயங்களும் மூலதனம் நூலில் விளக்கப்படுகின்றன.

அத்தகைய அறிவியல் அடிப்படையில் லெனினின் ஏகாதிபத்தியம் நூல் எழுதப்படவில்லை. அவரது நோக்கமும் அதுவாக இருக்கவில்லை. அடுத்த 100 ஆண்டுகளில் உலக கம்யூனிச இயக்கத்தில் என்ன நடந்தது என்று ஜான் ஸ்மித் பரிசீலனை செய்கிறார். 1915 முதல் 2010 வரையில் மார்க்சிய அறிஞர்கள் செய்த ஆய்வுகளை பரிசீலிக்கிறார். சோவியத் யூனியனிலும் உலகின் முன்னணி கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் ஸ்டாலினிசம் பொருளாதாரத் துறையில் அறிவியல் அணுகுமுறையை காலி செய்து விட்டது என்கிறார். பால் ஸ்வீசி, பால் பேரன் அவர்கள் மதிப்பு விதியை ஒட்டி ஏகபோகங்களை பரிசீலிக்கிறார்., பின்னர் சார்புநிலை கோட்பாட்டு வாதிகள் மதிப்பு விதியின் அடிப்படையில் பேசியிருக்கின்றனர். 1990-கள், 2000-களில் டேவிட் ஹார்வி, எலன் வுட், மைக்கேல் ராபர்ட்ஸ் போன்ற கல்வித்துறை அறிஞர்கள் ஆய்வு செய்கின்றனர்.

இவர்கள் யாரும் புதிதாக தோன்றியிருக்கும் ஒரு நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 1970-80களில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் இருந்தார்கள். இன்று 80% தொழிலாளர்கள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளனர். இந்தத் தொழிலாளர்கள் மதிப்பை படைத்து இந்த மதிப்பு பல்வேறு நிறுவனங்களுக்கிடையே பங்கிடப்படுகிறது. இந்த நிகழ்வை தீர்மானிக்கும் விதிகள் என்ன என்று எப்படி கண்டுபிடிப்பது?

மேலே சொன்ன உதாரணத்தில் வங்கதேசத்தின் ஜி.டி.பியை பார்த்தால் ஒரு சட்டைக்கு €0.90 தான் சேர்ப்பார்கள். €1.35 ஏற்றுமதி, €0.40 இறக்குமதி. €.95தான் வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேரும். ஜெர்மனியின் ஜி.டி.பில் €3.60 சேரும். இதன்படி 'ஜெர்மனி பணக்கார நாடு, அங்குதான் உற்பத்தித் திறன் அதிகம். அவர்கள் €3.60 உற்பத்தி செய்திருக்கிறார்கள். வங்கதேச தொழிலாளர்கள் €0.90 தானே உற்பத்தி செய்திருக்கிறார்கள்' இப்படி நாம் எடுக்கும் தரவுகளில் பல தவறான சித்திரங்களை தருகின்றன. புள்ளிவிபரங்களையே இந்த பார்வையோடு கையாள வேண்டியிருக்கிறது என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 5

(6-வது பகுதியில் தொடரும்...)

ஞாயிறு, மார்ச் 10, 2019

ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்

வ்வாறாக, தோல் பொருட்களாக இருக்கலாம், மின்னணு பொருட்களாக இருக்கலாம் அல்லது ஆயத்த ஆடையாக இருக்கலாம். ஆயத்த ஆடைகள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள். தோல் பொருட்களை செய்வதே ஏற்றுமதிக்குத்தான். உற்பத்தி ஆவதில் 85% - 90% வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது. வெளி நாட்டுக்கு ஏற்றுமதி ஆகும் தோலுக்காக தொழிலாளர்கள் சாகின்றனர்.

ஒரு கணக்கு போட்டு பார்க்கலாம். தொழிலாளிக்கு என்ன கூலி கொடுக்கிறார்கள்?

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் ஏன் தமிழ்நாட்டு தொழிலாளியை வைத்துக் கொள்ளவில்லை. அவர் ரூ 500 – ரூ 600 கூலி கேட்பார். சட்டம் பேசுவார். “சார் 5 மணிக்கு மேலே எல்லாம் வேலை செய்ய முடியாது" என்பார். மிதினாப்பூரில் இருந்து தொழிலாளி வந்தால் 200 ரூபாய் 250 ரூபாய் கூலியில் வேலை வாங்கலாம். டேனரியிலேயே ஓரமாக படுத்துக் கொள்ளச் சொல்லலாம். வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை கடைக்குப் போய் கோதுமை மாவு வாங்கி வந்து ரொட்டி செய்து சாப்பிட்டுக் கொண்டு வாழ்வார். மாதம் 2,000 ரூபாய் செலவழித்தால், மீதி 7,000 – 8,000 ஊருக்கு அனுப்புவார். இது போன்று நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான இடங்களில் வட இந்தியத் தொழிலாளர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

சீனாவிலும் ஜார்ஜ் ஷூ தொழிற்சாலையிலோ, ஆப்பிள் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலோ வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் சீனாவின் விவசாய பிரதேசங்களில் இருந்து இடம் பெயர்ந்து சென்றவர்கள். அதனால்தான் அவர்கள் தொழிற்சாலையிலேயே தங்கியிருந்து வேலை செய்ய வருகிறார்கள். இவர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும்? ராணிப்பேட்டைக்கு வெளியூரில் இருந்து வேலைக்கு வருபவர் தன் குடும்பம், குழந்தைகளை அழைத்து வந்து தங்கி வேலை செய்ய வேண்டுமானால் ரூ 50,000 மாதச் சம்பளம் கொடுத்தால்தானே முடியும். நாம் என்ன கொடுக்கிறோம், ரூ 9,000. அப்படியானால், தொழிலாளியின் தேவையான கூலியிலிருந்து 41,000 ரூபாய் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் எங்கு போச்சு?

உள்ளூர் முதலாளியும் பெரிய மாட மாளிகை கட்டி இந்தியாவை வல்லரசாக்கி விடவில்லை. இந்தியா பாகிஸ்தானுடன் சண்டை போட பிரான்சிடமிருந்து விமானம் வாங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. ராணிப்பேட்டை தொழிலாளர்களின் கூலியிலிருந்து மிச்சப்படுத்தப்படும் இந்தப் பணம், கடைசியாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிராண்டுகளால் கைப்பற்றப்படுகிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

இது ஒரு அம்சம்தான். கூலி குறைய குறைய உபரி மதிப்பு அதிகமாகும். லாபத்தை தீர்மானிக்கும் இன்னொரு அம்சம் உள்ளீட்டு பொருட்களுக்கான செலவுகள். உள்ளீட்டு பொருட்களின் செலவை குறைத்தால் லாப வீதம் கூடும். கழிவு நீரை பல கோடி செலவழித்து முறையாக சுத்திகரித்து, இங்கிலாந்து, ஜெர்மனியில் செய்வது போல செங்கலாக மாற்றி பாதுகாப்பாக கையாள்வதற்கு எவ்வளவு செலவாகும். அதையும் நீங்கள் மிச்சப்படுத்தியிருக்கிறீர்கள்.

இதை எல்லாம் சேர்ந்து உங்கள் நாட்டு முதலாளி கூட வாழவில்லை. இந்தியாவாக இருக்கட்டும், சீனாவாக இருக்கட்டும், வங்கதேசமாகட்டும். இந்த நாடுகளில்தான் உலகளாவிய உற்பத்தித் துறையின் பெருமளவு மனித உழைப்பு நிகழ்கிறது. 1990-களுக்குப் பிறகு இது போன்ற நாடுகளில் உலகளாவிய உற்பத்தி பரவியிருக்கிறது. இந்த நாடுகளில் தொழிலாளிக்கு குறைவான கூலி கொடுத்து கடுமையாக சுரண்டலாம். இது தொடர்பாக ஜான் ஸ்மித் ஒரு புதிய கோட்பாட்டை முன் வைக்கிறார்.

மார்க்ஸ் மூலதனம் நூலில் வேலை நாளின் நேரத்தை நீட்டிப்பதன் மூலம் பெறப்படும் அறுதி உபரி மதிப்பு, தொழிலாளிக்குத் தேவையான பொருட்களின் விலையை குறைப்பதன் மூலம் கூலியை குறைத்து பெறப்படும் ஒப்பீட்டு உபரி மதிப்பு 2 வகையான உபரி மதிப்புகளை பரிசீலிக்கிறார். ஆனால், மூன்றாவது வகையை குறிப்பிட்டு விட்டு அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்று ஒதுக்கி வைக்கிறார். அதுதான் தொழிலாளியில் உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவான கூலி கொடுத்து சுரண்டுவது. இது அதீத சுரண்டல் என்று அழைக்கப்படுகிறது.

40,000 ரூபாய் உழைப்பு சக்தியின் மதிப்பு. அதற்கு பதிலாக ரூ 10,000 கொடுத்து சுரண்டப்படுகிறார், தொழிலாளி. இவ்வாறு இந்தியா, வங்கதேசம், சீனா போன்ற நாடுகளின் தொழிலாளர்களை சுரண்டுவது உலக முதலாளித்துவத்துக்கு பிரதான தேவையாக மாறியிருக்கிறது என்று ஒரு கருதுகோளாக ஜான் ஸ்மித் முன் வைக்கிறார்.

இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். ஐஃபோன் நம்மில் பலரிடம் இல்லை. எல்லோரும் பயன்படுத்தும் ஒரு பொருளான ஒரு டி-ஷர்ட்டை எடுத்துக் கொள்ளலாம். அந்த டி-ஷர்ட் ஜெர்மனியில் €4.95 விலைக்கு விற்கிறது. இந்த பிராண்டுக்கு சொந்தமானது எச்&எம் என்ற ஸ்வீடன் நிறுவனம். இந்த டி-ஷர்ட் வங்க தேசத்தில் உற்பத்தி ஆகி ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதி விலை €1.35. இதில் பருத்தித் துணியை இறக்குமதி செய்ய €0.40 செலவாகி விடுகிறது. எனவே, வங்கதேச முதலாளிக்கு கிடைப்பது, வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேர்வது €0.95 தான். மீதி எல்லா மதிப்பும் ஜெர்மனியில் கைப்பற்றப்படுகிறது. ஜெர்மனியில் எச்&எம் லாபம், அங்குள்ள சில்லறை விற்பனை நிறுவனம், போக்குவரத்து நிறுவனம், ஜெர்மன் அரசுக்கு வரி என்று போகிறது.

வங்கதேசத்தில் தொழிலாளர்கள் என்ன நிலைமையில் வேலை செய்கிறார்கள்? 10-12 மணி நேர வேலை என்பது சர்வசாதாரணமான ஒன்று. அவர்களுக்கு ஒரு நாளைக்குக் கூலி €1.30. சுமார் 150 ரூபாய்தான் கூலி. இதை வாங்கிக் கொண்டு அவர்கள் உழைக்கிறார்கள்.

2015-ல் வங்க தேசத்தில் நடந்த விபத்து எல்லோருக்கும் நினைவு இருக்கும். ராணா பிளாசா என்ற கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த பழைய கட்டிடத்தில் மேல் மாடியில் ஆயத்த ஆடை ஆலை. கீழே வங்கி, கடைகள். அந்தக் கட்டிடத்தை ஒரு வாரத்துக்கு முன்பு ஆய்வு செய்து இது பயன்படுத்த தகுதி இல்லாத கட்டிடம் என்று கூறியிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்களை அழைத்து வேலையை தொடங்குகின்றனர், ஆலை முதலாளிகள். எந்திரத்தை ஆன் செய்ததும் கட்டிடம் இடிந்து விழுகிறது. இதில் 1133 தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர், 2500 தொழிலாளர்கள் காயமடைகின்றனர்.

இதிலும் கேப் (Gap) முதலான உலகத்தின் முன்னணி பிராண்ட் ஆடைகள் இடிபாடுகளுக்கிடையே கிடக்கின்றன. இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வெளியாகின்றன. ஒரு புகைப்படத்தில் ஒரு பையனும் பெண்ணும் கட்டிப் பிடித்த நிலையில் புதைந்திருப்பார்கள். இது எல்லாம் உலகம் எங்கும் flash ஆகிறது. இதை எல்லாம் பார்க்கும் அமெரிக்க, ஐரோப்பிய நுகர்வோர் பதட்டமடைகின்றனர். நாம் போடும் ஆடைகளை இவ்வளவு கொடூரமான நிலையிலா உற்பத்தி செய்கிறார்கள் என்று பிராண்ட் நிறுவனங்களை நோக்கி கேள்வி எழுகிறது.

இதற்கு முன்னேயே தோல் துறை, ஜவுளித் துறை போன்ற ஏற்றுமதி துறைகளில் 1990களில் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் முறை, பின்னர் சுற்றுச் சூழல் ஆய்வு, தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வு என்று பல்வேறு சான்றிதழ்களை வழங்க ஆரம்பித்தார்கள். யாரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். நான் வேலை செய்த பிரிட்டிஷ் நிறுவனம் போன்றவர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் கொடுப்பார்கள். இந்த ஆய்வு எப்படி நடக்கும் எந்த அடிப்படையில் சான்றிதழ் கொடுப்பார்கள் என்று நமக்கெல்லாம் நடைமுறை தெரியும். இவற்றின் மூலம் நாங்கள் சரியாகத்தான் இருக்கிறோம் என்று காண்பிப்பதற்காக செய்கிறார்கள்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 4

(5-வது பகுதியில் தொடரும்...)

  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

சனி, மார்ச் 09, 2019

அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்

ன்னொரு காட்சியை பார்ப்போம்.

உலகத்தின் உற்பத்தி தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சீனாவில் உற்பத்தி நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன? நான் அத்தகைய ஒரு தொழிற்சாலைக்கு போயிருக்கிறேன்.

டாடாவில் இருந்து தோல் வாங்கும் ஒரு தொழிற்சாலை, சீனாவின் தென் பகுதியில் உள்ள ஷென்சென் பகுதியில் உள்ளது. ஷென்சென் பகுதி, 1978ல் மேக் இன் சீனா திட்டத்துக்காக அப்போதைய சீன அதிபர் தெங் ஷியாவ் பிங் தேர்ந்தெடுத்த பிராந்தியம். ஹாங்காங்-தீவில் இருந்து படகில் ஏறினால் கடலைக் கடந்து அரை மணி நேரத்தில் ஷென்சென் போய்ச் சேர்ந்து விடலாம். அப்போது ஹாங்காங் பிரிட்டிஷ் கையில் இருந்தது. ஷென்சென் பகுதியில் நூற்றுக் கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. தோல் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள், பொம்மை தொழிற்சாலைகள், மின்னணு பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. அதன் பூர்வீகத்தில் ஷென்சென் பகுதியில் 1970-களில் சிறிய கிராமங்கள்தான் இருந்தன. இன்று அங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.
சீனத் தொழிலாளர்கள் தங்கும் இட வசதி (மாதிரி)

நான் போன தொழிற்சாலையின் உரிமையாளர் அவர் தாய்வானைச் சேர்ந்தவர். அங்கு சுமார் 5000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒரு கட்டிடத்தில் உற்பத்தி, 5000 தொழிலாளர்களும் தங்குவதற்கு அதற்கு பக்கத்திலேயே கட்டிடங்கள். தங்குமிடம் எப்படி இருக்கும் என்றால் ரயிலில் படுக்கை வசதி பெட்டி போல எதிரெதிராக மூன்று மூன்று படுக்கைகள், பெட்டி வைத்துக் கொள்வதற்கு ஒரு இடம் இருக்கும். அங்கேயே தங்கிக் கொள்ள வேண்டியதுதான். நம் ஊர் வடமாநில தொழிலாளர்கள் போல இவர்கள் சீனாவின் விவசாய பிரதேசங்களில் இருந்து வேலைக்காக ஷென்சென் வந்தவர்கள். எனவே, தங்குவதற்கும் அவர்களது புகலிடம் தொழிற்சாலையேதான்.

காலையில் 8 மணிக்கு வேலை ஆரம்பிக்கும் என்றால் அதிகாலை 6.30-க்கு ஆலை மணி ஒலித்து 5,000 தொழிலாளர்களும் மைதானத்துக்கு வந்து விடுவார்கள். அந்தந்த பிரிவு சூப்பர்வைசர் தலைமையில் உடற்பயிற்சி செய்வித்து, நேற்று முடிந்த உற்பத்தி பற்றியும் இன்று நடத்த வேண்டிய வேலைகள் பற்றியும் சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லி விட்டு கலைந்து செல்வார்கள். 7 மணிக்கு போய் விட்டு 8 மணிக்குள் தயாராகி காலை உணவு நிறுவனத்தின் உணவுக் கூடத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாப்பிட்டு விட்டு வருவார்கள்.

ஆப்பிள் உற்பத்தி தொழிலாளர்கள்


8 மணிக்கு வேலை ஆரம்பித்து மதிய உணவு வரை வேலை. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் வேலை. மாலை வேலை நேரம் முடிந்த பிறகு அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று பொழுது போக்கலாம். பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மறுபடியும் திரும்பி வந்து தொழிற்சாலையில் சாப்பிட்டு விட்டு தூங்கி விடலாம்.

இதே போன்ற ஒரு தொழிற்சாலையில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் உற்பத்தியாகிறது ஆப்பிள் ஐஃபோன் அல்லது சாம்சங் அல்லது நோக்கியா ஃபோன் சீனாவில் உற்பத்தியாகிறது. ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தியாகும் தொழிற்சாலை ஆப்பிளுக்கு ஒரு ரூபாய் கூட ஷேர் சொந்தம் கிடையாது. அது ஒட்டுமொத்தமாக ஃபாக்ஸ்கானுக்கு சொந்தமானது. ஹோன் ஹாய் ஹோல்டிங் என்ற தாய்வான் நிறுவனத்தின் ஆலை அது. அங்கு பல 10,000 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு வேலை செய்கிறார்கள். இதே போன்று தங்குமிடங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

ஆப்பிள் ஐஃபோன் தொடர்பான ஒரு நிகழ்வை பார்க்கலாம்.

2007-ம் ஆண்டில் ஐஃபோன் கருவியை ஆப்பிள் முதன் முதலாக அறிமுகம் செய்யவிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் ஒரு மாதிரியான eccentric, maniac. கூட வேலை செய்பவர்கள் கன்னா பின்னாவென்று திட்டுவார், தன்னைத் தானே மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்து கொள்பவர். உண்மையில் திறமைசாலியும்தான். அவர் புதிதாக சந்தைக்கு வரவிருந்த ஐஃபோனை தானே பயன்படுத்தி சோதனை செய்து கொண்டிருக்கிறார். தனது பையில் ஐஃபோனை வைத்திருந்த போது உடன் போட்டு வைத்திருந்த சாவிக் கொத்து உராய்ந்து ஐஃபோன் திரையில் ஸ்க்ராட்ச் விழுந்து விட்டன.

ஸ்டீவ் ஜாப்ஸ்
 டிசைன் டீமை கூப்பிட்டு திட்டுகிறார். "கஸ்டமர் சாவிக்கொத்துடன் ஃபோனை போட்டு வைத்திருந்தால் இப்படி ஸ்கிராட்ச் ஆவதை ஏற்றுக் கொள்ள முடியாது? ஐஃபோன் சந்தைக்கு வருவதற்கு ஒரு சில வாரங்கள்தான் இருக்கிறது. நீங்கள் உடனடியாக புதிய மெட்டீரியலை கண்டு பிடித்து இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும்" என்று உத்தரவிடுகிறார்.

ஆய்வுக்கு பிறகு கண்ணாடி திரைகளை பயன்படுத்த வேண்டும் என்று முடிவாகிறது. இந்தக் கண்ணாடியை திரைகளாக வெட்டித் தரும் ஆலையும் சீனாவில்தான் உள்ளது. அங்கு ஆப்பிள் டீம் ஆய்வுக்கு செல்லும் போது ஆப்பிள் ஆர்டர் வந்தால் பயன்படுத்துவதற்கு என்று புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள், அரசு மானியத்துடன். அந்த ஆலைக்கு ஆர்டர் கொடுத்து ஐஃபோனுக்கான கண்ணாடி திரைகள் தயாராகின்றன. வெட்டப்பட்ட கண்ணாடி திரைகள் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு வருகின்றன. இரவு 10 மணிக்கு மேல் வந்து சேர்கின்றன. வந்தவுடன் தொழிற்சாலை மணி அடிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் படுக்கையில் இருந்து எழுப்பப்படுகின்றனர். ஆளுக்கு ஒரு டீ, 2 பிஸ்கட் கொடுத்து உற்பத்தியில் உட்கார வைக்கப்படுகின்றனர். உற்பத்தி ஆரம்பமாகி விட்டது. அடுத்த 36 மணி நேரத்துக்குள் ஆலையிலிருந்து ஐஃபோன் அனுப்பப்பட ஆரம்பிக்கிறது.

ஐஃபோன் ஆகட்டும், ஷூவாகட்டும் பொருளை உற்பத்தி செய்து அதில் பிராண்ட் பெயரை பொறித்து, அட்டைப் பெட்டியில் நிரப்பி, எந்த அமெரிக்கக் கடைக்குப் போக வேண்டும் என்ற பெயரைக் கூட சீனத் தொழிற்சாலையிலேயே எழுதி விடுவார்கள். ஆப்பிளுக்கு பொருள் போகாது. இது உலகத்தின் தொழிற்சாலை என்று பேசப்படும் சீனாவில் நடப்பது. இதை எப்படி புரிந்து கொள்வது? சீனாவில் ஐஃபோன் உற்பத்தியாகி வருகிறது. அமெரிக்காவில் விற்கப்படுகிறது. அமெரிக்காவில் என்ன வேலை நடக்கிறது. பெட்டியை ஏற்றி இறக்குவது, கடையில் விற்பவர்கள், கணக்கு வைப்பவர்கள், ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் டிசைன் வேலை நடக்கிறது. இதுதான் அமெரிக்காவில் நடக்கும் வேலை. இதே முறைதான் காலணிக்கும் சரி, இந்தியாவில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைக்கும் சரி பொருந்தும்.

பொருள் உற்பத்தி முழுவதும் நடந்து முடிந்து விடும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் கிடைக்கும் விலையை விட இரண்டு மடங்குக்கும் மேல் உற்பத்திக்கு முந்தைய டிசைன் வேலைகளையும் உற்பத்திக்குப் பிந்தைய விற்பனை வேலைகளையும் செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கைப்பற்றப்படுகிறது. இந்தப் பொருட்களின் உற்பத்தி செலவு பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வது கஷ்டமானது. இதை ஆய்வு செய்த ஒரு குழு ஐபாட் தொடர்பான விலை விபரங்களை வெளியிட்டிருக்கிறது. ஐஃபோன் தொடர்பான ஆய்வும் செய்யப்பட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு ஐபாட் ஒன்றின் விற்பனை விலை $299, சீனாவில் இருந்து தயார் நிலையில் ஏற்றுமதியாகும் பொருளின் ஏற்றுமதி விலை $144.5. அதாவது 52% மதிப்பு அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தால் கைப்பற்றப்படுகிறது.

மதிப்பு சீனாவிலும் பிற நாடுகளின் தொழில்சாலைகளிலும் படைக்கப்படுகிறது. மதிப்பு அமெரிக்காவில் ஆப்பிளில் கைப்பற்றப்படுகிறது. ஆனால், சீனாவில் படைக்கப்பட்ட மதிப்பாக $144.5 கூட வராது. ஏனென்றால் பல பகுதிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. சீனத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியான சுமார் $6 தான் மதிப்பாக ஒரு ஃபோனுக்கு சீன ஜி.டி.பியில் சேர்கிறது. மீதி எல்லாம் சீனத் தொழிற்சாலையின் செலவில் சேர்க்கப்படுகிறது.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 3

(4-வது பகுதியில் தொடரும்...) 
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

வெள்ளி, மார்ச் 08, 2019

ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?

டுத்த காட்சி. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி ராணிப்பேட்டையில் நடந்த ஒரு விபத்து பற்றியது. அதில் 10 வட மாநிலத் தொழிலாளர்கள் உயிரோடு சேற்று சுனாமியில் புதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

ராணிப்பேட்டை நகரம் இருப்பது சென்னையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரம்தான். 1970-80-களில் தோல் பதனிடும் தொழிலை மிகப்பெரிய அளவில் அங்கு கொண்டு வருகிறார்கள். சிப்காட் 1, சிப்காட் 2 என்று அரசே நிலத்தை கையகப்படுத்தி, விவசாய கிராமங்களுக்கு மத்தியில் டேனரிகளை கொண்டு வருகிறார்கள்.


பொதுவாக, தோல் பதனிடுவதற்கு பயன்படுத்தும் இரசாயனங்கள் கழிவு நீரில் வெளியேறும். ஐரோப்பாவில் கழிவு நீரை சுத்திகரித்துதான் வெளியில் விட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு (1990-கள் வரை) யாருமே சுத்திகரிப்பு செய்யவில்லை. இரசாயனம் கலந்த கழிவு நீரை அப்படியே வெளியிட்டனர்.
அது சுற்றியிருந்த கிராமங்களில் நிலத்தையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கியது. 1990-களில் ஒரு என்.ஜி.ஓ போட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை இல்லை என்றால் எல்லா பதனிடும் தொழிற்சாலைகளையும் இழுத்து மூடி விடும்படி உத்தரவிட்டது.

இதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. இங்கிலாந்தில் இருந்து, நெதர்லாந்தில் இருந்தும் நிபுணர்கள் வருகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் பொது சுத்திகரிப்பு ஆலை ஒன்றை ஏற்படுத்துகின்றனர். அதாவது, 100 ஆலைகள் இருந்தால் அவர்கள் அனைவரும் கழிவுநீரை வெளியிடுவதை ஒன்றாக சேர்த்து சுத்திகரிப்பார்கள். இத்தகைய சுத்திகரிப்பு ஆலை ராணிப்பேட்டை சிப்காட் 1-ல் இயங்கி வருகிறது.

இரசாயனம் கலந்த கழிவு நீரை சுத்தப்படுத்தும் போது கரைந்திருந்த இரசாயனங்கள் எல்லா்ம் பிரித்து எடுக்கப்படும். தண்ணீர் சுத்தமாக்கப்பட்டு வெளியில் விட்ட பிறகு (அப்படி சுத்தமாக்கப்படுகிறதா என்பது வேறு கேள்வி, அதை இங்கு பேசப் போவதில்லை) பிரித்து எடுக்கப்பட இரசாயனங்களின் சேறு, சகதி மிஞ்சும். இதை என்ன செய்வது? பொதுவாக அதை காயவைத்து லாரியில் எடுத்துச் சென்று அதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலத்தில் கொட்டி வைக்க வேண்டும். இந்த சுத்திகரிப்பு ஆலையில் கழிவு இரசாயன சகதியை சேமித்து வைப்பதற்கு ஒரு தொட்டி கட்டியிருந்தார்கள். தொட்டி நிரம்பியதும் அதை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் அதை எடுத்துக் கொண்டு போகவில்லை. குறிப்பிட்ட கட்டத்தில் தொட்டி நிரம்பி விட்டது. தொட்டிக்கு பக்கத்தில் எந்தவிதமான முறையான திட்டமும், வடிவமைப்பும் செய்யாமல் மதில் கட்டி சகதியை கொட்ட ஆரம்பிக்கிறார்கள்.

இந்தச் சுவரை ஒட்டி சுமார் 4-6 டன் சகதி தேங்கி நிற்கிறது. அதற்கு பக்கத்தில் சுவரை ஒட்டி ஆர்.கே லெதர்ஸ் என்ற தோல் ஆலை உள்ளது. ஜனவரி 30-ம் தேதி இரவு சகதியின் அழுத்தத்தால் சுவர் உடைந்து போனது. சகதி சுனாமி போல வெளியேறி அந்தப் பகுதி முழுக்க சேறு நிரம்பி விட்டது. பக்கத்தில் இருந்த டேனரியில் 10 தொழிலாளர்கள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.



அது ஒரு தொழிற்பேட்டை, இரசாயனம் பயன்படுத்தும் இடம். சாதாரணமாக வேலை செய்ய அனுப்பினாலேயே முகத்தை மூடி, கையில் உறை போட்டுத்தான் போக வேண்டும். இங்குதான் 10 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த 10 தொழிலாளர்களும் சேறில் மூழ்கடிக்கப்பட்டு, இரசாயனத்தில் மூச்சுத் திணறி, மின் கசிவில் பரவிய மின்சாரத்தில் சிக்கிக் கொல்லப்பட்டனர். 10 பேரும் மேற்கு வங்கத்தின் மிதினாப்பூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள். இங்கு இந்த தோல் தொழிற்சாலையில் வேலை செய்ய வந்திருக்கிறார்கள்.

எனக்கு இது தனிப்பட்ட முறையில் நெருக்கமான இடம். ராணிப்பேட்டையில் தொழில் தொடர்பாக பல முறை சுற்றி வந்திருக்கிறேன். ஆர்.கே லெதர் நிறுவனத்தை பற்றி பலமுறை பேசியிருக்கிறேன். இதை எப்படி புரிந்து கொள்வது? இதற்கு எங்கு போய் விளக்கம் தேடுவீர்கள்?

இந்த டேனரியும் சரி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் சரி, சீனத் தொழிற்சாலையும் சரி பொருளாதாரத் துறையில்தான் வருகின்றன. ஆனால், நான் கல்லூரியில் படிக்கும் போது வாசித்த பால் சாமுவேல்சன் போன்றவர்கள் எழுதிய முதலாளித்துவ பொருளாதாரவியல் நூல்களில் இதற்கான விடை கிடைக்காது. "இது எல்லாம் எங்கள் துறையில் வராது, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை என்ன செய்து கொண்டிருந்தது, அரசு என்ன செய்தது" என்று இவற்றைப் பற்றிய ஆய்வை சமூகவியல் துறைக்கு ஒதுக்கி விடுவார்கள்.

இந்த ஒரு காட்சியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆர்.கே லெதர் என்பது என்ன? இந்த நிறுவனத்தின் பார்ட்னர்கள் நான் வேலை செய்த டாடா நிறுவனத்தில் நான் சேர்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் வேலை செய்தார்கள். டாடா நிறுவனத்தின் தோலை ஹாங்காங் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் பணியில் இருந்தார்கள். சிறிது காலத்துக்குப் பிறகு டாடா நிறுவனத்தை விட்டு விலகி தனியாக நிறுவனம் ஆரம்பித்து ராணிப்பேட்டையில் தாமே ஆலை நடத்தி தோல்களை சீன தொழிற்சாலைகளுக்கு ஹாங்காங் வழியாக ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தினார்கள்.

ஆர்.கே லெதர்ஸ் ஆகட்டும், டாடா நிறுவனம் ஆகட்டும், இந்தியாவில் உற்பத்தி ஆகும் தோலை ஹாங்காங் அலுவலகம் மூலமாக சீனத் தொழிற்சாலைகளுக்கு சந்தைப்படுத்தி வந்தனர். சீனத் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் தோல் பொருட்கள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி ஆகும்.


சென்னை சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி

ஹாங்காங் விற்பனை மீட்டிங்கில் என்ன நடக்கும்? அத்தகைய மீட்டிங் ஒன்றுக்கு நான். போயிருக்கிறேன்.

அமெரிக்காவின் பிராண்ட் நிறுவனத்தின் பிரதிநிதி வருவார். அமெரிக்க பிராண்ட் பிரதிநிதி, தோல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர், சீனாவில் இருக்கும் காலணி உற்பத்தி நிறுவன பிரதிநிதி, ஹாங்காங் வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்தவர். இந்த நான்கு பேரும் உட்கார்ந்து பேசுவார்கள். அடுத்த சீசனில் நைன் வெஸ்ட், அல்லது நைக், ரீபோக் போன்ற அமெரிக்க பிராண்ட் எத்தனை லட்சம் ஜதை காலணிகள் செய்வது என்று விவாதிப்பார்கள்.
"இதற்கு தேவையான தோலை இவரிடம் இருந்து இன்ன விலையில் வாங்கிக் கொள்ளுங்கள். இவர் இன்ன விலையில் காலணி உற்பத்தி செய்து தருவார்" என்று எல்லாவற்றையும் அமெரிக்க பிராண்ட் நிறுவனமே திட்டமிட்டு ஏற்பாடு செய்யும். காலணியில் என்ன மாதிரியான தோலை பயன்படுத்த வேண்டும், அதன் விலை என்ன என்பது வரை முடிவு செய்து சொல்லி விடுவார்கள்.

இப்போது கேள்வி, ராணிப்பேட்டையில் நடந்த விபத்துக்கு யார் பொறுப்பு? தோல் தொழிற்சாலை முதலாளியா, சீன காலணி உற்பத்தி நிறுவனமா, ஹாங்காங் வர்த்தக நிறுவனமா, அல்லது அமெரிக்க பிராண்ட் நிறுவனமா அல்லது எல்லோருமா?
பொதுவாக என்ன சொல்கிறார்கள்? "இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை, லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்திய முதலாளி அவர்கள் நாட்டு தொழிலாளியையே ஈவு இரக்கம் இல்லாமல் சுரண்டுகிறார். ஏன் டேனரியில் தூங்க வைத்தார்கள். இந்தியாவில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்" என்கிறார்கள்.

ஜான் ஸ்மித் இந்த வாதத்தை மறுக்கிறார். உலகளாவிய இந்த உற்பத்திச் சங்கிலி எப்படி இயங்குகிறது? இதை எப்படி புரிந்து கொள்வது என்று அவர் விளக்குகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 2
(3-வது பகுதியில் தொடரும்....)
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

வியாழன், மார்ச் 07, 2019

உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்

நாம் ஏன் மார்க்சியத்தையோ வேறு ஏதோ ஒரு தத்துவத்தையோ நாடுகிறோம்? நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை பார்க்கிறோம். பார்க்கும் போது இது ஏன் இப்படி உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

ஒரு விபத்து நடக்கிறது, ஒரு புதிய கண்டுபிடிப்பு வருகிறது, ஒரு படுகொலை அரங்கேற்றப்படுகிறது. இதிலெல்லாம் யாருடைய பங்களிப்பு என்ன? யாருக்கு ஆதாயம், யாருக்கு இழப்பு? இவற்றுக்கு என்னதான் தீர்வு என்று பல கேள்விகள் வருகின்றன. அவற்றுக்கு விடை கிடைப்பதில்லை.

என்னுடைய வாழ்க்கையில் இவ்வாறு நான் எதிர்கொண்ட பல கேள்விகளுக்கு மார்க்சின் மூலதனம் நூலை படிப்பதன் மூலம் விடைகள் கிடைத்தன. மேலும், மூலதனம் நூலை 21-ம் நூற்றாண்டு முதலாளித்துவத்துக்கு பொருத்தும் ஜான் ஸ்மித்தின் ஆய்வறிக்கையான ஏகாதிபத்தியமும் உற்பத்தி உலகமயமாதலும் இன்னும் பல கேள்விகளுக்கு விடைகளை வந்தடைய உதவியது

நான் மூலதனம் நூலை சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு மூலதனம் வாசிப்பு வட்டம் சைதாப்பேட்டையில் உள்ள மருந்து விற்பனையாளர்கள் பிரதிநிதிகள் சங்கக் கட்டிடத்தில் நடத்தும் வகுப்பில் வாசிக்கத் தொடங்கினேன். இந்த வாசிப்பு 3-4 ஆண்டுகளாக தொடர்ந்து 3 பாகங்களும் வாசித்து முடிக்கப்பட்டன. நடுவில் பல வகுப்புகளை நான் தவற விட்டிருந்தேன். இதற்கிடையில் ஜான் ஸ்மித்தின் ஏகாதிபத்தியமும் உற்பத்தி உலகமயமாதலும் என்ற ஆய்வறிக்கையின் பிரதியும் கிடைத்து அதை படித்திருந்தேன்.

மார்க்சின் மூலதனமும், ஜான் ஸ்மித்தின் ஆய்வறிக்கையும் எனது வாழ்க்கையில் நான் சந்தித்த சில விடை தெரியாத கேள்விகளுக்கு எப்படி விடை அளித்தன என்பதை பேச வேண்டுமானால் எனது பணி வாழ்க்கை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும்.

நான் படித்தது பி.டெக் (லெதர் டெக்னாலஜி). வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, ஆம்பூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளை தெரிந்தவர்களுக்கு தோல்துறை பற்றி தெரிந்திருக்கும். ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோலை அழுகாமல் பதப்படுத்தி கெமிக்கல் போட்டு ஷூ, கைப்பை, தோல் மேலாடை போன்றவை செய்ய பொருத்தமான லெதராக மாற்றுவதை டேனிங் என்று அழைக்கிறோம். அந்தத் தொழில்நுட்பத்தை சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் 4 ஆண்டுகள் படிப்பாக படித்தேன்.

தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் டேனரிகள் மிக அதிக அளவில் உள்ளன. ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளிலும், சென்னையிலும் பல சிறிய மற்றும் நடுத்தர தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், நான் படித்து முடித்ததும் வேலை செய்யப் போனது மத்திய பிரதேசம் தேவாஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள டாடா குழுமத்தின் தோல் உற்பத்தி தொழிற்சாலைக்கு. இந்தியாவிலேயே அதுதான் மிகப்பெரிய தோல் பதனிடும் ஆலை. அந்த ஆலையில் 4 ஆண்டுகள் வேலை செய்தேன்.

அந்த ஆலையில் ஒரே கூரையின் கீழ் 1000 தொழிலாளர்கள் வேலை செய்தனர். இங்கு semi-finished தோலை finished தோலாக உற்பத்தி செய்தனர்.

இங்கு 4 ஆண்டுகள் வேலை செய்த பிறகு டாடாவின் சீன அலுவலகத்தில் ஷாங்காய் நகரத்துக்குச் சென்றேன். டாடாவில் உற்பத்தியாகும் தோல்கள் அதன் ஹாங்காங் அலுவலகம் மூலம் சீன தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

டாடா ஷாங்காயில் 2 ஆண்டுகள் வேலை செய்த பிறகு தொழில்நுட்ப கன்சல்டன்ட் சேவை வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஷாங்காய் அலுவலகத்தில் 2 ஆண்டுகள் வேலை செய்தேன்.

அதன் பிறகு சென்னைக்கு வந்து தோல் தொழிற்சாலைகளுக்கான ERP மென்பொருள் செய்யும் நிறுவனத்தை தொடங்கி நடத்தினேன்.

ERP என்றால் என்ன? ஒரு உற்பத்தி நிறுவனத்தில் பல பொருட்களை வாங்குவார்கள். அவை உள்ளீட்டு பொருட்கள். என்ன வாங்கினோம், யாரிடம் வாங்கினோம், நம் கையில் என்ன சரக்கு இருக்கிறது. என்ன உற்பத்தி நடக்கிறது, என்ன உற்பத்தி நிகழ்முறை, இறுதியாக என்ன பொருள் உற்பத்தி செய்து வெளியில் விற்றோம், யாரிடமிருந்து பணம் வர வேண்டியிருக்கிறது, உற்பத்திச் செலவு என்ன போன்றவற்றை நிர்வகிக்கும் மென்பொருள் செய்ய வேண்டும்.

இந்த மென்பொருள் உற்பத்தி உலகமயமாதல் என்ற நிகழ்முறையில் மிக முக்கியமான விஷயம். எனவே, இதைப் பற்றி சுருக்கமாக பார்த்து விடலாம்.

டாடா ஆலை மிகப்பெரியது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். நான் அங்கு வேலை செய்யப் போகும் போது அவர்கள் ஒரு ERP மென்பொருளை பயன்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். அதற்கு முன்னர் விற்பனை பிரிவில் இருக்கும் ஒருவர் கச்சா பொருள் கையிருப்பு என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தப் பிரிவுக்குப் போய் கேட்க வேண்டும். அந்தப் பிரிவு நிர்வாகி ஒரு அறிக்கை வைத்திருப்பார், அல்லது லெட்ஜரை புரட்டிப் பார்த்து தகவல் சொல்வார்.

இந்த ERP மென்பொருளில் எல்லோரும் ஒரே கணினி கட்டமைவில் வேலை செய்வார்கள். கச்சாப் பொருள் பிரிவில் அவர்கள் தமது தகவல்களை உள்ளிடுவார்கள். விற்பனை பிரிவில் விற்பனை தொடர்பான தகவல்களை உள்ளீடு செய்வார்கள். ஒரு பட்டனை தட்டினால் என்ன சரக்கு இருக்கிறது, என்ன வாடிக்கையாளருக்கு என்ன ஆர்டர் என்று பல விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு நான் வேலை செய்யப் போன்ற சீனாவிலும் சரி இந்தியாவிலும் சரி டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் குறைவு. சிறு, நடுத்தர நிறுவனங்கள்தான் அதிகமாக உள்ளன. இத்தகைய நிறுவனங்களுக்கு மென்பொருள் செய்யலாம் என்று திட்டமிட்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். இதில் கூடுதலாக ஒரு புதிய சிந்தனையை சேர்க்க திட்டமிட்டேன்.

ராணிப்பேட்டையில் உற்பத்தியாகும் தோல் சீனாவில் காலணியாக மாற்றப்பட்டு ஹாங்காங் வழியாக அமெரிக்கா போய் சேருகிறது. அமெரிக்காவில் காலணி வாங்கும் ஒருவர் ஒரு பட்டனை தட்டினால் தோல் எங்கு செய்யப்பட்டது என்று தெரிய வேண்டும் என்பது கனவுத் திட்டம். எனவே, ஏன் இந்த உற்பத்தி சங்கிலியில் இருப்பவர்கள் எல்லாம் ஏன் தனித்தனியாக தரவுகளை வைத்திருக்க வேண்டும் என்று யோசித்தேன். ஒரே நிறுவனத்துக்கு ஒற்றை மென்பொருள் இருப்பதைப் போல எல்லா நிறுவனங்களுக்கும் ஒரே மென்பொருளை பயன்படுத்தக் கொடுத்தால் ஒட்டு மொத்த உற்பத்தி சங்கிலியையும் இணைத்து விடலாம் என்று திட்டம். அதாவது, இன்று பிரபலமாகியிருக்கும் கிளவுட் முறையில் அனைத்து நிறுவனங்களையும் இணைத்து தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கான மென்பொருள் செய்ய திட்டமிட்டோம்.

உதாரணமாக, காலணி தொழிற்சாலையில் இருந்து டேனரிக்கு தொலைபேசி தான் கேட்டிருந்த தோல் தயாராகி விட்டதா என்று கேட்டால் கூட சரியான பதில் கிடைக்காது. இவர்கள் சொல்வதைத்தான் அவர் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த நிலைமை ஏன் இருக்க வேண்டும்? அவரே கணினியில் பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்த முடியாதா?

ஆனால், இன்றைய தனியார் அடிப்படையிலான உற்பத்தி முறையில் இது வேலை செய்யவில்லை. உற்பத்தி நிறுவனத்தை பொறுத்தவரையில் எல்லா தகவல்களையும் கஸ்டமருக்கு வெளிப்படையாக சொல்ல விரும்புவதில்லை. எல்லோரும் தத்தமது தரவுகளை தமது கட்டுப்பாட்டில் மட்டும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

இப்படி பல தடைகளைத் தாண்டியும், தாண்ட முடியாமலும் வணிக ரீதியாக அந்த நிறுவனம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அரசியல், பொருளாதாரம், ஆய்வு என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இதை ஒரு பின்னணியாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 1

(2வது பகுதியில் தொடரும்....)
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

இணைய இதழ்களும் இளைய சமுதாயமும்


இணைய இதழ்களும் இளைய தலைமுறையும் என்ற தலைப்பின் நோக்கம் இணைய இதழ்கள் இளைய தலைமுறையினரை எப்படி கவர்ந்திருக்கின்றன என்று பார்ப்பதுதான். அவர்கள்தான் எதிர்கால வாசகர்களாக மாறப் போகிறார்கள். அதனால் அது தொடர்பான போக்குகளை தெரிந்து வைத்திருப்பது ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

தகவல் பரிமாற்றத்துக்கான இந்த தொழில்நுட்ப மாற்றம் அடிப்படையானதா அல்லது கடந்து போகும் மேகமாக கலைந்து போய் விடுமா என்ற கேள்வி. இந்த மாற்றம் இனி வரும் ஆண்டுகளில் நிலை பெற்று உலக மக்களின் படிக்கும், தகவல் பெறும் முறைகளில் அடிப்படை மாற்றங்களை உருவாக்கும் என்பதுதான். எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ல முடிகிறது?

நவீன அச்சு தொழில் நுட்பம் 1436ல் கூட்டன்பெர்கால் கண்டுபிடிக்கப்பட்டு 1456ல் கூட்டன்பெர்க் பைபிள் வெளியிடப்பட்டது. ரோட்டரி பிரின்டிங் பிரஸ் 1843ல் கண்டுபிடிக்கப்பட்டது. ஊடகங்களை குறிப்பிடும் சொல்லான பிரஸ் என்பது பிரின்டிங் பிரஸ் என்ற ஆங்கில சொல்லிலிருந்து வந்தது.

புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 15ம் நூற்றாண்டில் அதை பயன்படுத்துவது எவ்வளவு குழப்பமான ஒன்றாக இருந்திருக்கும் என்பதை விளக்க ஒரு காணொளியை பார்க்கலாம்.




அச்சிட்ட புத்தகங்கள், இதழ்கள் கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளாக நமக்கு பயன்பட்டு வருகின்றன. படைப்பாளர், பதிப்பாளர், அச்சு நுட்பத் துறையாளர், வினியோகிப்பு சங்கிலி, வாசகர் என்று நீண்ட காலமாக பழகிப் போன முறை ஒன்று நம்மிடையே இருக்கிறது. அதன் மொழி, அதன் முறைகள் நமக்கு பழகி போயிருக்கின்றன. அந்த பழக்கத்திலிருந்து நாம் சீக்கிரம் மாறி விட முடியுமா? புத்தகங்களும் அச்சு இதழ்களும் முழுக்க முழுக்க இணைய இதழ்களால் இல்லாமல் செய்யப்பட்டு விடுமா என்ற கேள்வி எழுகிறது?

'என்ன இருந்தாலும் புத்தகம் போல வருமா? கையில் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு, தாளின் மணத்தை முகர்ந்து கொண்டு படிப்பது போல வருமா? புத்தகத்தை படித்துக் கொண்டு படிக்கலாம், டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம், பூங்காவில் புல் தரையில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம், படித்த இடத்தைக் குறிக்க விளிம்பை மடக்கிக் கொள்ளலாம், அடிக் கோடிடலாம், குறிப்புகளை எழுதி கொள்ளலாம். இதெல்லாம் கணினியில் அல்லது மின்னணு கருவிகளில் முடியுமா' என்று வாசகர்களாக நமக்குள் கேள்வி எழுகிறது.

முதல் விஷயம் தாளின் வாசனை தரும் கவர்ச்சி. புத்தக வாசனை என்பது புத்தகத்தில் இருக்கும் தகவல், படைப்புடன் இணைத்துதான் நமக்கு கிளர்ச்சியை தருகிறது. அதை ஒதுக்கி விடலாம். மற்ற விஷயங்கள் அனைத்துமே சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட e-book படிப்பான்களில் தீர்வு காணப்பட்டு விட்டது. அவற்றில் e-இங்க் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கண்ணை உறுத்தாமல், காகித எழுத்துக்களை படிப்பது போலவே படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அமேசான் கிண்டில் சாதனத்தின் 2007ம் ஆண்டு பதிப்பு பற்றிய ஒரு காணொளியை பார்க்கலாம்.



நாம் பார்த்தது போல இந்த கருவியில் படிக்கும் போது புத்தகங்களின் வலது பக்க மேல் முனையை மடித்துக் கொள்ளலாம், குறிப்பு எடுத்துக் கொள்ளலாம், தெரியாத விபரங்களை தேடி பார்த்துக் கொள்ளலாம். இதன் எடை சுமார் 170-300 கிராம் மட்டுமே, அதாவது சாதாரண ஒரு பேப்பர் பேக் நாவலின் அளவுதான். அதனால் இதை சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளலாம், படுத்துக் கொண்டு ஒற்றை கையால் பிடித்து பயன்படுத்தலாம்.

அமேசான் கிண்டில் அடிப்படை வடிவம்

கூடவே இந்த கையடக்க கருவியில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வைத்துக் கொள்ளலாம். புத்தகங்களுக்கான பேக் அப் இன்னொரு கணினியில், அல்லது பென் டிரைவில் வைத்துக் கொள்ளலாம். புத்தகங்களை இணையத்தில் வாங்கி சேமித்துக் கொள்ளலாம். கருவி உடைந்து விட்டால் புதிய கருவி வாங்கி பேக் அப்பிலிருந்து புத்தகங்களை ஏற்றிக் கொள்ளலாம். வீடு மாற்றும் போது பெட்டி பெட்டியாக புத்தகங்களை சுமந்து மாற்ற வேண்டியதில்லை. இதன் அமெரிக்க விலை 79 அமெரிக்க டாலர்கள் (சுமார் 4,000 ரூபாய்). யாருக்காவது புத்தகம் இரவல் கொடுக்க வேண்டுமானால் மின்னஞ்சலில் அனுப்பி கொள்ளலாம்.

இவ்வளவு இருந்தும் ஏன் இது இன்னும் பரவலாக பயன்படுத்தப்படவில்லை?

இதற்கு காரணங்கள்

1. இணைய/மின்னணு கருவி வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது.

2. பதிப்பக துறையில் படைப்புக்கான ஊதியம் பெறுவதற்கான மாதிரி இன்னமும் முழுமை பெறாமல் இருப்பது.

முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பெரும்பகுதி மக்கள் இணையத்தில் இணைந்துள்ள மின்னணு கருவிகளை வாங்க முடிந்தாலும், தகவலை படைத்தவர், பொதிபவர், வினியோகிப்பவர் இவர்களுக்கு எந்த வகையில் ஊதியம் அளிப்பது என்ற முக்கியமான கேள்வியில்தான் இணைய வழி வினியோகம் சிக்கி நிற்கிறது. பாடல்களாகட்டும், திரைப்படங்களாகட்டும், புத்தகங்களாகட்டும், இணைய இதழ்களாகட்டும் பணம் சம்பாதிக்கும் வழி முறை இன்னமும் தெளிவாகவில்லை.

வாசகர்கள் சந்தா கட்டி படிக்கும் மிகச் சில இணைய பத்திரிகைகளை தவிர மற்ற அனைத்து இணைய இதழ்களும் விளம்பர வருமானத்தையே நம்பி இருக்கின்றன. அல்லது நிறுவனத்தின் மற்ற பகுதிகள் இணைய பிரிவுக்கு ஆதரவு தருகின்றன. இணைய பிரிவின் மூலம் மற்ற பகுதிகளுக்கு விளம்பரமும் விற்பனை அதிகரிப்பும் கிடைக்கிறது.

சந்தா கட்டி படிக்கும் இதழ்களாக தமிழில் ஆனந்த விகடன் முதலான இதழ்கள், ஆங்கிலத்தில் இந்தியா டுடே, பன்னாட்டு அளவில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் போன்றவை இருக்கின்றன.

புதிய கருவிகளான கிண்டில், ஐ-பேட் போன்றவற்றில் பயனாளரிடம் இதழை அல்லது புத்தகத்தை விற்று வருமானம் வருகிறது. அந்த வருமானத்தில் வினியோகிப்பாளருக்கு என்ன பங்கு, படைப்பாளிக்கு என்ன பங்கு, பதிப்பாளருக்கு என்ன பங்கு என்ற சச்சரவு இன்னும் முழுமையாக தீரவில்லை. பெரிய நிறுவனங்களான அமேசான், ஆப்பிள் போன்றவர்கள் இதில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நாளிதழ்கள், வார இதழ்கள், மாத பத்திரிகைகள், அறிவியல் வெளியீடுகள் என்று சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இது போன்ற கருவிகளில் வாங்கும் புத்தகங்களை நகல் எடுக்கவோ பிறருக்கு அனுப்பவோ முடியாது. வாங்கிய புத்தகங்கள் விற்ற நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. ஒரு முறை அமேசான் ஒரு புத்தகத்தை விற்ற பின் ஏதோ காப்புரிமை பிரச்சனை ஏற்பட, அதை வாங்கியவர்களின் கருவிகளிலிருந்து அந்த புத்தகத்தை நீக்கி விட்டது பெரிய பிரச்சனையானது.

இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.

இந்த வணிக ரீதியான மாதிரிகள் உருவாக்கப்பட்டு விட்ட பிறகு வினியோக வீச்சு பெருமளவு விரிந்து விடும். கார்னிங் கண்ணாடி நிறுவனம் உருவாக்கிய எதிர்கால சாத்தியங்கள் பற்றிய காணொளியை இப்போது பார்க்கலாம்.


கவன சிதறல்கள்

கிண்டில், ஐ-பேட் போன்ற கருவிகள் பல வண்ண திரையுடன் வீடியோ, இணைய இணைப்பு, மியூசிக் பிளேயர் என்று பல்லூடக கருவியாக மாற்றப்பட்டிருக்கின்றன. இவற்றால் புத்தகம் படிக்கும் கவனம் கலைகிறது என்று பலர் புகார் சொல்கிறார்கள்.

இணையத்தின் மிகப் பெரிய பிரச்சனை கவனச் சிதறல்தான். இந்து நாளிதழில் ஒரு கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு இருக்கும் சுட்டி மூலமாக அல்லது இன்னொரு தத்தலில் வீடியோ ஒன்றை பார்க்க தாவி விடுகிறோம். அந்த கவனச் சிதறலை கணக்கில் எடுத்துக் கொண்டு இணைய இதழ்கள் இயங்க வேண்டியிருக்கிறது. கவனச் சிதறலை தம் பக்கம் ஈர்க்கவும், தம் பக்கம் வந்தவர்களை தமது தளத்திலேயே இருக்கும் படி தளத்தை வடிவமைப்பதும் தேவையானதாக இருக்கிறது.

இணைய இதழ்கள் புதிய கட்டுரைகள் அல்லது செய்திகள் வெளியானதும் அவற்றுக்கான சுட்டிகளை டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்வது இப்போது பரவலான வழக்கமாகி விட்டது. ஒரு கட்டுரையின் பக்கவாட்டில் அல்லது இறுதியில் தொடர்புள்ள முந்தைய செய்திகள், காணொளிகள், புகைப்படங்களை இணைக்க முடிகிறது.

இன்னொரு முக்கிய கூடுதல் வசதி வாசகர் பின்னூட்டம். தினமலர் இணைய இதழில் ஒவ்வொரு செய்திக்கும் நூற்றுக்கணக்கான பேர் கருத்து சொல்கிறார்கள். (அவர்கள் அனைவருமே ஒரே ஆளா என்று சில சமயம் சந்தேகம் ஏற்பட்டதுண்டு). பின்னூட்டம் எழுதுவதும், வெளியாவதும் எளிதானதாக இருப்பதால் இணைய இதழ்களுக்கு அவை ஒரு முக்கிய உயிரோட்டமாக இருக்கின்றன.

இணைய இதழ்களுக்கு போட்டியாக சமூக வலைத்தளங்கள், வீடியோக்கள், வலைப்பதிவுகள் இருக்கின்றன. தொழில் முறை ஊடகவியலாளர்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள இன்னும் பல மடங்கு திறமையை காட்ட வேண்டியிருக்கும். ஒரு வலைப்பதிவுக்கும், ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரைக்கும் உள்ள வேறுபாடுதான் இணைய இதழ்களின் வலிமை.

ஊடகத்தில் பணி புரியும் ஒருவர் எப்படி தன்னை தயாரித்துக் கொள்ள வேண்டும். மடிக்கணினியில் தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். இணையத்தில் ஒரு வலைப்பதிவு, டுவிட்டர் கணக்கு, பேஸ்புக் கணக்கு வைத்துக் கொள்வது அவசியத் தேவை. வலைப்பதிவுகள் மூலம் தம்மை முன்னிறுத்திக் கொண்டு வளர்ந்த பத்திரிகையாளர்கள், திரைப்படத் துறையினர் சிலரை நாம் அனைவரும் அறிவோம்.

அச்சு பத்திரிகைகள், நாளிதழ்கள் என்ன செய்ய வேண்டும்?

நிச்சயம் இணைய இதழ்களுக்கு போக வேண்டும். அச்சு இதழில் விளம்பர வருமானம் குறைவாக இருக்கும் இதழ்கள் கூட இணையத்தில் வெளியாவதன் மூலம் வருமானம் ஈட்ட ஆரம்பிக்கலாம். கூகுள் ஆட்சென்ஸ், ஆட்வேர்ட்ஸ் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

பேஸ்புக் கணக்கு ஒழிப்பு


பேஸ்புக் கணக்குகள் நீக்குதல்

பேஸ்புக் கணக்குகளை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்து விட்டேன். பேஸ்புக் கணக்கை நீக்குவது எப்படி என்று தேடினால் இரண்டு லிங்குகள் கிடைத்தன. எல்லாமே பேஸ்புக்கின் உதவிக் குறிப்புகள்தான். (http://www.facebook.com/help/search/?q=how+do+i+delete+my+account)

முதல் குறிப்பில், கணக்கில் புகுபதிகை செய்து அமைப்புகள் போய், கணக்கை முடக்கவும் என்று கிளிக் செய்ய வேண்டும். அலுவலக மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட, குறைவான செயல்பாடுகள், நண்பர்கள் கொண்ட கணக்கில் லாகின் செய்திருந்தேன்.

அதை கிளிக் செய்ததும், அடுத்த பக்கத்தில் 'நண்பர்கள்' புகைப்படங்கள் வரிசையாக வைத்து, "இன்னார் உங்களை தேடுவார், அன்னார் உங்களை தேடுவார்" என்று உணர்வுரீதியான அழுத்தம் தரும் பக்கம். அதிலும் உறுதி சொன்ன பிறகு அடுத்த பக்கத்தில் "ஏன் பேஸ்புக் கணக்கை முடக்க விரும்புகிறீர்கள்?' என்ற கருத்தெடுப்பு. 'பாதுகாப்பு குறித்த கவலை' என்று தேர்ந்தெடுத்தேன். அடுத்த பக்கத்தில் கடவுச்சொல்லை உறுதி செய்து, captcha எழுத்துக்களை உள்ளிட வேண்டும். அதற்கடுத்த பக்கத்தில் வெளியில் அனுப்பி விட்டார்கள். மின்னஞ்சலுக்கு, இப்படி "உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் கணக்கை பயன்படுத்த விரும்பினால், உங்கள் மின்னஞ்சல், கடவுச் சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்தால் போதும், உங்கள் விபரங்கள், அமைப்புகள் இப்போது இருந்தபடியே திரும்ப கிடைத்து விடும்' என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

இன்னொரு கணக்கு தனிப்பட்ட மின்னஞ்சலுடன் இணைந்தது. பொதுவாக பேஸ்புக்கில் எதையும் எழுதவோ, தகவல் அறிவிக்கவோ செய்யாமல் இருந்தாலும், பேஸ்புக்கில் செயல்படும் நண்பர்கள், உறவினர்கள் அனுப்பிய அழைப்பை ஏற்பது மட்டும் செய்து கொண்டிருந்தேன். அப்படி நிறைய அழைப்புகள் சேர்ந்து வாரத்துக்கு நான்கைந்து முறையாவது எட்டிப் பார்க்கும் கணக்காக அது இருந்தது. அதில் நுழைந்து கணக்கை நீக்குவது பற்றிய தேடலின் இன்னொரு சுட்டிக்குப் போனேன். 'நீங்கள் கணக்கை நிரந்தரமாக முற்றிலுமாக அழிக்க விரும்பினால்' என்ற தலைப்பில் அதன் விளைவுகளை விளக்கி விட்டு, 'அப்படி விரும்பினால் இந்தச் சுட்டியை கிளிக்கவும்' என்று ஒரு சுட்டி இருந்தது. அதை கிளிக்கியதும் கடவுச்சொல்லை உறுதி செய்து captcha உள்ளிட்டதும் 'உங்கள் கணக்கு முடக்கப்பட்டது. இன்னும் 14 நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைத்து விபரங்களும் அமைப்புகளும் நிரந்தரமாக நீக்கப்பட்டு விடும். அதற்குள் நீங்கள் விரும்பினால் கணக்கை உயிர்ப்பித்துக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல், கடவுச் சொல் மூலம் லாகின் செய்து அதைச் செய்யலாம்' என்று அறிவிப்பு. அதே விபரம் மின்னஞ்சலிலும் அனுப்பி விட்டிருந்தார்கள்.

பேஸ்புக் கணக்கை நீக்குவதில் அதிக மனப் போராட்டம் ஏற்பட்டு விடவில்லை. புகைப்படங்கள், கட்டுரைகள், கருத்துக்கள், விவாதங்கள் என்று எதிலுமே பேஸ்புக்கில் கலந்து கொண்டிருக்கவில்லை. மற்றவர்கள் சேர்த்த புகைப்படங்களில் எனது படத்தில் டேக் செய்திருந்தது மட்டும் எனது டைம்லைனில் வந்தது. இவற்றைத் தவிர வேறு எதுவும் செய்தது போய் விடுமே என்ற வருத்தம் இல்லை.

பேஸ்புக் மீதான ஆரம்ப அணுகுமுறை

ஏன் பேஸ்புக் கணக்கை நீக்க வேண்டும்? இணையத்தில் சமூக வலைத்தளங்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து நிச்சயம் இல்லை. சமூக வலைத்தளங்களின் மூலம் பெரிதும் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை என்று தெரிந்தாலும், அவற்றை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து மாறவில்லை. டுவிட்டர், கூகுள்+, கூகுளின் பிற சேவைகளில் கணக்கு இருக்கிறது. அவ்வப்போது குறைந்த அளவிலான கருத்து தெரிவிப்புகளையும் செய்கிறேன். பிளாக்கர் மூலம் வலைப்பதிவுகளில் நிறைய எழுதி வைத்திருக்கிறேன்.

பேஸ்புக்கின் மீது ஆரம்பத்திலிருந்தே விமர்சனம் நிறைய இருந்தது. பேஸ்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு முன்பே அமெரிக்க பயனர்கள் ஸ்லாஷ்டாட்டில் வைத்த விமர்சனங்களை நிறைய படித்திருந்தேன். அப்போது பேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ் என்று சமூக வலைத்தளங்களின் போட்டி தணிய ஆரம்பித்து பேஸ்புக் முன்னணியில் வர ஆரம்பித்திருந்த சமயம். 'பேஸ்புக்கில் சுய தகவல்களுக்கு பாதுகாப்பு, அந்தரங்கம் இல்லை' என்பதுதான் அந்த விமர்சனங்களின் சாராம்சம்.

என்னைப் பொறுத்த வரை 'அந்தரங்கமாக தகவல்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. வலைப்பதிவில் கூட  நாட்குறிப்பு என்ற பெயரில் முடிந்த வரை மற்றவர்களை குறிப்பிடாமல் எனது தினசரி வாழ்க்கையை பதிவு செய்து வந்தேன். ஆனால் 'பேஸ்புக்கின் கவர்ச்சியில் சிக்கி தம்மைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்பவர்கள் அனைவரும் அதன் விளைவுகளை முழுமையாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது' என்பது லாஜிக்கான வாதமாக இருந்தது. அந்த வாதத்தை நிரூபிப்பது போல நடைமுறையில் பல செய்திகள், நிகழ்வுகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

பேஸ்புக்கின் வெற்றி அடிப்படை

பேஸ்புக்கின் அடிப்படை கோட்பாடு, 'யாருக்கும் அந்தரங்கம் இல்லை' என்பதுதான். 'பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவில் பரப்பி அதன் மூலம் பணம் சம்பாதிப்பதுதான்' பேஸ்புக்கின் வணிக அடிப்படை. அடிப்படையில் பேஸ்புக்கின் வடிவமைப்பு, பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை பொதுவில் வெளியிடும் வகையில் இருந்தது/இருக்கிறது. அந்தரங்க பாதுகாப்பு ஆர்வலர்களின் தொடர்ந்த விமர்சனங்களுக்குப் பிறகு பேஸ்புக் கூடுதல் பாதுகாப்புகளை அடிப்படை வடிவமைப்பின் மீது ஏற்படுத்திக் கொண்டது.

அதன் மூலம், இப்போது ஒருவர் 'விரும்பினால்', தனது விபரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு பேஸ்புக்கை பயன்படுத்த முடியும். ஆனால், அப்படி எத்தனை பேர் 'விரும்பு'வார்கள்? அப்படிப்பட்ட விருப்பத்தை ஏற்படுத்த பேஸ்புக் என்ன செய்கிறது? என்று பார்த்தால் பெரிய அளவில் இல்லை.

'பயனர்களின் தனித் தகவல்களை சரக்காக பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது, வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தனது பயன்பாட்டை வடிவமைப்பது' என்றுதான் பேஸ்புக் செயல்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் அரை மனதோடு, குறை சொல்பவர்களின் வாயை மூட செயல்படுத்தப்பட்டவைதான்.

பேஸ்புக்கும் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று முரணானவை

விண்டோஸ் (3.1, 95, 98, Me) தனிநபர் கணினியில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. அதை நெட்வொர்க் சூழலில், இணையத்தில் பாதுகாப்பாக இயங்க வைக்க எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் போனது. அதே சுமைதான் NT அடிப்படையிலான XP முதலான இயங்குதளங்களுக்கும் இருக்கிறது. ஆரம்ப வடிவமைப்பில் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாத எந்த மென்பொருள் பயன்பாட்டையும் அதன் பிறகு வெளிச்சேர்க்கைகள் மூலம் பாதுகாப்பானதாக மாற்ற முடியாது. இதே பிரச்சனை பேஸ்புக்குக்கும் இருக்கிறது.

பேஸ்புக்கில் சேருபவர்களுக்கு ஏற்படுத்தப்படும் உணர்வு, 'நாம் நமது நண்பர்களின் மத்தியில் இருக்கிறோம்' என்பது. நண்பர்கள் ஏற்பாடு செய்யும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் உணர்வுதான் பேஸ்புக்குக்குள் ஏற்படுகிறது. பார்ட்டியில் சந்திக்கும் போது ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு ஹலோ சொல்லி விட்டு, தெரியாதவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டு சமூக வாழ்க்கையை விரிவுபடுத்திக் கொள்கிறோம். அதே போன்ற தோற்றமும் உணர்வும் பேஸ்புக் பயன்படுத்தும் போது ஏற்படுகிறது.

நண்பர் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும், நண்பர் கோரிக்கைகளை அனுப்புவதும் இயல்பான ஒன்றாக படுகிறது. முகத்துக்கு நேர் பேசுவதில் தயங்கும் இளைஞர்கள் கூட கணினியின் முன்பு கிடைக்கும் முகமிலி வசதியில் நண்பர்கள் ஊடே சகஜமாக பேச, எழுத, எதிர்வினை புரிய முடிகிறது. நண்பர்களை கோரிக்கை அனுப்புவதற்கு பேஸ்புக் தொடர்ச்சியாக பரிந்துரைகளை செய்து கொண்டிருக்கிறது, ஒரு நல்ல பார்ட்டி ஒருங்கிணைப்பாளராக விருந்தில் கலந்து கொண்டிருக்கும் எல்லோரையும் மகிழ்ச்சியாக பிறருடன் சேர்ந்து நேரம் செலவழிக்க ஏற்பாடு செய்து தருகிறது.

விருந்தில் ஏற்படும் தொடர்புகள் வளர்ந்து சிலருடன் தனிப்பட்ட ஆழமான உறவாக வளர்வதற்கும் பேஸ்புக்கில் வசதி கிடைக்கிறது. அது காதல், திருமணம் என்று கூட வளர்ந்து போகலாம்.

80 கோடி பேர் கலந்து கொள்ளும் விருந்து

இதுதான் பேஸ்புக்கின் அடிப்படை. அது ஒரு மிகப்பெரிய பார்ட்டி, அதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். உள்ளே நுழைவதற்கு ஏதாவது ஒரு அடையாள அட்டையை (மின்னஞ்சல், பெயர்) காண்பித்தால் போதும். உள்ளே நுழைந்த பிறகு நீங்கள் அதில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் அனைவரிடமும் உறவாடும் வாய்ப்பு கிடைக்கிறது.

அமெரிக்காவில் உருவானதால் பேஸ்புக் நடத்தும் இந்த பார்ட்டி/விருந்து என்பது மேற்கத்திய பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் அது செயல்படுகிறது. இந்த மகிழ்ச்சியான, வசதியான சூழலில் என்ன நடக்கிறது என்பதன் விளைவுகள்தான் கடந்த சில ஆண்டுகளில் நாம் செய்திகளில் படிக்கும் கேள்விப்படும் நிகழ்வுகள்.

இந்த அடிப்படையின் மிகப்பெரிய சிக்கல், அந்த பார்ட்டி ஒரே ஹாலின் கீழ், சுமார் 80 கோடி பயனர்களும் ஒரே குழுவாக புழங்குவதாக இருப்பதுதான். சுமார் 80 கோடி பேர் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்வதை கற்பனை செய்து கொள்ளுங்கள். நடைமுறையில் அது சாத்தியமில்லாத பார்ட்டியாக இருந்தாலும் நிகர்நிலை உலகில் அது சுமார் 30 முதல் 40 பேர் வரை புழங்கும் பார்ட்டியைப் போல  எளிமையாக இருக்கிறது. அதில் நண்பர்களுடன் கட்டித் தழுவி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்ளலாம். முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும், பார்ட்டிக்குள் வந்திருக்கிறார்கள் என்றால், நிச்சயம் நம்பத் தகுந்தவர்தான் என்ற அடிப்படையில் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிக்கலாம்.

அப்படிப்பட்ட நம்பிக்கையான குழுவின் மத்தியில் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம், புகைப்படங்களை காட்டலாம். 'இவற்றை செய்யும் போது நமக்கும் இருக்கும் உணர்வு 30 முதல் 40 பேர் வரை கலந்து கொண்டிருக்கும் ஒரு நண்பர் குழுவில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். ஆனால், உண்மையில் 80 கோடி பேர் அதே அறையில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்'.

1. அவர்களை அழைத்த பேஸ்புக் அவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மட்டும் உறுதி செய்து கொண்டிருக்கிறது.
2. அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு கலாச்சார பின்னணியிலிருந்து வந்திருப்பவர்கள்.
3. நாம் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு தகவலும் 80 கோடி பேரில் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும்படி இருக்கிறது.

செயற்கையான பாதுகாப்பு உணர்வுடனான, உண்மையில் அப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லாத சூழலில் இயங்குவதுதான் பேஸ்புக்கின் பிரச்சனையே. தேவைப்படும் சமூக பாதுகாப்புகளை உண்மையாகவே செயல்படுத்தி விட்டால், பேஸ்புக்கின் வணிக மாதிரியே இல்லாமல் போய் விடும்.

பேஸ்புக்கில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள்

இந்த முரண்பாட்டின் அடிப்படையில்தான்

1. தனது ஆண் நண்பர் பேஸ்புக்கில் அவரது உறவு நிலையை மாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் ஒரு பெண். அந்த இளைஞரைப் பொறுத்த வரை அவர் தனிப்பட்ட முறையில் தனது புரொபைலில் ஒரு மாற்றத்தை செய்து கொண்டிருக்கிறார். அவரது காதலியோ 'அது உலகின் முன்பு பகிரங்கமாக சொல்லப்பட்டிருக்கிறது' என்பதை உணர்ந்து மனம் உடைந்து தனது உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

2. சாரு நிவேதிதா போன்ற பொறுக்கிகளுக்கு இப்படிப்பட்ட பார்ட்டி ஹால் ஒரு மாபெரும் வாய்ப்பு. தயக்கத்துடனும் கூச்சத்துடனும் பார்ட்டிக்குள் நுழைந்து ஓரமாக ஆரஞ்சு ஜூசை சிப்பிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணை குறிபார்த்து, அவரது அழகைப் புகழ்ந்து, அவரது உடையை பாராட்டி பேச்சு கொடுக்க ஆரம்பித்து, தனியறைக்குள் அழைத்துப் போய் பாலியல் வன்முறை செய்யும் காமக் கொடூரர்களுக்கான களம் இது. அத்தகைய காமக் கொடூரர்கள் பேஸ்புக்கின் அடிப்படையையும் அதில் கலந்து கொள்ள வரும் பலதரப்பட்ட பயனர்களின் மன உணர்வுகளையும் பெருமளவு புரிந்து கொண்டுள்ளார்கள். அத்தகைய புரிதலும், நண்பர்களின் ஆதரவும் இல்லாத மதுரைப் பொண்ணுகள் எண்ணெய்க் காகிதத்தில் மோதி மாட்டிக் கொள்ளும் பூச்சிகளாக மாட்டிக் கொள்கிறார்கள்.

3. சிலர் பேஸ்புக் மூலமாக, பார்ட்டியில் நட்பு ஏற்படுத்திக் கொண்டு, புகைப்படங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதில்லை. அனுப்பப்பட்ட புகைப்படம் உண்மையானதா என்று கூட சரிபார்க்க  முடியாது. ஒரு பெண் பயனரிடம் அவரது பேஸ்புக் நணபர் புரபோஸ் செய்ய அவரும் அதை ஏற்றுக் கொள்ள, அந்த காதலர் 'நாம்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே, உன் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வை' என்று கேட்க இவரும் அனுப்பி வைத்திருக்கிறார். அதை அவன் இணையத்தில் பரவலாக போஸ்ட் செய்து விட்டிருக்கிறான்.

இவை எதுவும் பேஸ்புக்கின் தவறு இல்லை என்பது உண்மை. பேஸ்புக் ஒரு களம் மட்டுமே ஏற்படுத்திக் கொடுக்கிறது. நிஜ உலகில் மனிதர்களிடம் என்னென்ன சிக்கல் இருக்கிறதோ அந்த சிக்கல்கள்தான் பேஸ்புக்கில் வெளிப்படுகின்றன. அந்த சிக்கல்கள் பெரிதாக உருவெடுக்கும்படியான களத்தை உருவாக்கி, அத்தகைய சிக்கல்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வு ஏற்படாதவாறு போலியான சூழலை ஏற்படுத்தி, பயனர்களை சிக்க வைப்பதுதான் ஏற்படுத்துவதுதான் பேஸ்புக் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக சிக்கல்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

1. பேஸ்புக்கில் உங்களுக்கு நண்பர் கோரிக்கை விடுப்பவர் தெருவில் சந்திக்கும் முன்பின் தெரியாத நபர். பார்ட்டியில் சந்திக்கும் நண்பர் வட்டத்துக்குள் உள்ள நபர் இல்லை.

2. பேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவலும், நாற்சந்தியில் சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர் போன்றது. நண்பர்கள் குழுவுக்குள் நம்பிக்கைக்குரியவர்கள் மட்டும் பார்க்கும் படியான வெளிப்பாடு இல்லை.

3. யாரும் பார்க்கவில்லை என்று பார்ட்டி ஹாலின் பக்கவாட்டு அறைக்குள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்களும், தனிமையில் இருக்கிறோம் என்ற உணர்வில் செய்யும் செயல்களும் உலகுக்கே தெரிகின்றன. தனி அறையைச் சுற்றி பல காமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உள்ளே நடப்பவை சக நண்பரால் பொதுவில் வெளியிடுப்படும் என்ற எண்ணத்துடனேயே எதையும் செய்ய வேண்டும்.

3. பேஸ்புக் மூலம் ஏற்படும் எந்த நட்பு அல்லது உறவு, ரயில் பயணத்தில் பேச்சு கொடுத்து ஏற்படும் நட்பு/உறவு போன்றது மட்டுமே. அதைத் தாண்டி வேறு எந்த சமூக ஆதாரமும் நம்பகமும் அதில் இல்லை. நிஜ உலகில் எப்படி உறவுகளை எச்சரிக்கையுடன் சரி பார்க்கிறோமோ அப்படி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. கூடுதலாக, தமிழ் பயனர்களைப் பொறுத்த வரை பேஸ்புக் இடைமுகம் மட்டும்தான் தமிழில் இருக்கிறது, அதன் செயல்பாடுகள் அனைத்துமே மேற்கத்திய பார்ட்டியின் அடிப்படையில்தான் இருக்கின்றன. அதனால் தனியாக  பாதிப்பு இல்லை என்றாலும் சின்னச் சின்ன வழிகளில் மேற்கத்திய பார்ட்டிகளுக்கு பரிச்சயமானவர்கள் சமாளித்துக் கொள்ளும் சிக்கல்கள் அவற்றிற்கு அறிமுகம் இல்லாதவர்களை வீழ்த்தி விடுகின்றன.

இவற்றைப் புரிந்து கொண்டு எல்லோரும் செயல்படுவது சாத்தியமில்லை, அப்படிச் செயல்பட வைக்க பேஸ்புக் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதுமில்லை. பேஸ்புக் போன்ற உலகளாவிய பார்ட்டி என்பது தனிமனித பாதுகாப்புக்கும், இயல்பான சமூக வாழ்க்கைக்கும்  முற்றிலும் விரோதமானது.