சனி, பிப்ரவரி 02, 2019

கார்ப்பரேட் சாதி இந்துத்துவ அரசியலின் மூக்கில் குத்திய ஓவியர் முகிலனுக்கு பாராட்டு

பிப்ரவரி 1-ம் தேதி மாலை ஓவியர் முகிலனை பாராட்டி பெரியார் விடுதலை கழகம் சார்பாக ஒரு கூட்டம் நடத்தினார்கள். மயிலாப்பூர், சிட்டி சென்டருக்கு பின்புறம் பெரியார் பாலத்தின் அருகில் இருக்கும் அவர்களது அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. வெளியில் போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள்.

சிறியதாக இருந்த அந்த அலுவலகத்துக்குள் நிறைய பேர் கூடி விட்டார்கள்.

திராவிடர் விடுதலை கழகம் என்பது பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்தின் வாரிசு. திராவிடர் கழகத்திலிருந்து பெரியார் திராவிடர் கழகம் என்று பிரிந்து செயல்பட்டு வந்த தோழர்கள் பின்னர் அதுவும் இரண்டாக பிரிந்து திராவிடர் விடுதலை கழகம் என்ற இந்த அமைப்பு உருவானது. இதில் முக்கியமாக கொளத்தூர் மணி என்பவர் தலைவராகவும், விடுதலை ராஜேந்திரன் என்பவர் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்கள்.

ஓவியர் முகிலன் கார்ப்பரேட் அரசியலையும், இந்துத்துவ சாதி அரசியலையும் எதிர்த்து ஓவியங்கள் வரைபவர். கடந்த 15 ஆண்டுகளாக தாமிரபரணி தண்ணீரை கோக்கோ கோலாவுக்கு கொடுப்பதை எதிர்த்து, மகாராஷ்டிராவில் உள்ள கயர்லாஞ்சி என்ற ஊரில் சுரேகா அவரது மகள் பிரியங்கா இருவரும் சாதி வெறியர்களால் கொடூரமாக கொல்லப்பட்டது பற்றி, கந்தமாலில் சாதிக் கொடுமையை தாங்க முடியாமல் மதம் மாறிய பழங்குடி மக்களின் கிராமத்தையே மதவெறியர்கள் கொளுத்தியது ஆகிய பல பிரச்சனைகள் பற்றி ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளை ஒட்டி அந்தந்த காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களில் 34-ஐ சமீபத்தில் லயோலா கல்லூரியில் நடந்த ஒரு நாட்டுப்புறக் கலைக்கான திருவிழாவில் காட்சிக்கு வைத்திருக்கிறார். அதில் நமது நாட்டு மக்கள் மீது அன்னிய கார்ப்பரேட்டுகளின் தாக்குதலை ஆதிக்கத்தை பாரத மாதாவின் மீது 'பாலியல்' சீண்டல்கள் பாய்வது போல வரைந்திருந்த ஓவியம் பா.ஜ.கவின் எச்.ராஜாவின் வெறுப்பை ஈட்டியிருக்கிறது. 'நாட்டை பாரதமாதா என்று சித்தரிக்கும் நீங்கள் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் யார் வேண்டுமானாலும் நமது நாட்டை கொள்ளை அடிப்பதற்கு திறந்து விட்டிருப்பது நீங்களே சொல்லிக் கொள்ளும் பாரதமாதாவை பாலியல் ரீதியாக தாக்குவதை அனுமதிப்பது' என்று உருவகித்திருக்கிறார். அதை சமீபத்தில் பெருமளவு சர்ச்சைக்குள்ளான பெண்களை பாலியல் ரீதியில் சீண்டும் பெரிய மனிதர்கள் பற்றிய #MeToo என்பதுடன் இணைத்திருந்தார்.

இன்னொரு பிரச்சனைக்கு உள்ளான ஓவியம், நந்தினி என்ற தலித் பெண் மணிகண்டன் என்ற இந்து முன்னணி பிரமுகரால் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டு இந்து முன்னணி கும்பல் நந்தினியின் வயிற்றில் வளர்ந்த சிசுவை பிறப்புறுப்பு வழியாக குத்தி வெளியில் எடுத்து, அந்தப் பெண்ணை வெட்டி கிணற்றில் வீசி எறிந்த கொடூரத்தை பற்றியது. அதில் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் ஈட்டி தாக்குவதாக வரையப்பட்டிருந்தது. ஈட்டி என்பது இந்துத்துவ கும்பல் குஜராத்தில் 3,000 இசுலாமியர்களை படுகொலை செய்த போது கையில் ஏந்தியிருந்த ஆயுதம். நமது கிராமங்களில் அய்யனார் சிலை முன்பு நிற்கும் அப்பாவி ஈட்டி இல்லை அது இந்துத்துவ கும்பல் கையில் கொலைகார ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அதை காட்சிப்படுத்தும் வகையில் வரைந்த ஓவியத்தை "பெண்களை இழிவுபடுத்தி விட்டார், ஈட்டியை இழிவுபடுத்தி விட்டார்" என்று பழிக்கிறார்கள்.

இதற்கு முன்பு இதே ஓவியங்களை சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் வாங்கிச் சென்று காட்சி நடத்தியிருந்தார்கள். அப்போது எதுவும் பிரச்சனை செய்யாத பா.ஜ.கவினர் இப்போது லயோலா கல்லூரியில் நடப்பதால் அதை வைத்து அரசியல் செய்கின்றனர். லயோலா கல்லூரியை குறி வைக்கின்றனர்.

முகிலனுக்கு நிறைய நிதி வருவதாக பிரச்சாரம் செய்கின்றனர். உண்மையில், அவரது ஓவியங்கள் 20 ரூபாய் அட்டைகளில் வரையப்படுபவைதான். ஆனால், அவை சொல்லும் அரசியல், சொல்லும் வடிவம், அதன் கலை உணர்ச்சி அவர்களுக்கு பீதியை உருவாக்குகிறது. முகிலன் மீது போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் எச்.ராஜா. அதைத் தொடர்ந்து முற்போக்கு ஜனநாயக சக்திகள் முகிலனுக்கு தமது ஆதரவை தெரிவித்தன.

இதை ஒட்டித்தான் திராவிடர் விடுதலை கழகம் முகிலனுக்கு பாராட்டு விழா நடத்தியது. முதலில் மனிதி இயக்கத்தைச் சேர்ந்த செல்வி பேசினார்.

தொடர்ந்து பேசிய விடுதலை ராஜேந்திரன் பெரியார் இயக்கமும் பார்ப்பன எதிர்ப்பும்தான் தமிழக அரசியல். அன்று வர்க்கம் பேசியவர்கள் எல்லாம் இன்று பார்ப்பனீயம் பற்றி, பிள்ளையார் பற்றி, ராமர் பற்றி பேச வேண்டியிருக்கிறது. இன்றைக்கு, பெரியார் செய்தது போன்ற வேத, புராண புரட்டுக்களை அம்பலப்படுத்தி மக்களின் மூட நம்பிக்கைகளை உடைக்கும் பிரச்சாரத்தை நாம் கைவிட்டிருக்கிறோம். அதை மீண்டும் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்று திராவிடர் கழக அரசியலை பேசினார்.

அடுத்து முகிலன் சிறப்பாக பேசினார். மேலே சொன்ன விபரங்களை சொல்லி விட்டு தனது "ஓவியத்துக்குப் பின் இருக்கும் அரசியல் கார்ப்பரேட் இந்துத்துவ எதிர்ப்பு அரசியல். அதன் மீதான எதிர்ப்பு ஒரு கலைஞனாக என்னுடைய ஓவியங்களில் வெளிப்படுகிறது. அது கோபமாக இருக்கிறது, வன்முறையாக இருக்கிறது, மனதை புண்படுத்துவதாக இருக்கிறது என்றால் உண்மைதான். ஏனென்றால் அந்த கார்ப்பரேட் இந்துத்துவ அடக்குமுறைகள் கோபமாக உள்ளன, வன்முறையாக உள்ளன, மனதை புண்படுத்துவதாக உள்ளன. அதை எதிர்த்த எனது கலை வடிவிலான போராட்டத்தை நான் தொடர்ந்து செய்வேன்" என்றார். "உதாரணமாக, நம் நாட்டின் ஒவ்வொரு முக்கிய ஆறுகளிலிருந்தும் கோக், பெப்சி என்று பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் பல லட்சம் லிட்டர் தண்ணீரை தினமும் உறிஞ்சுகின்றன. குஜராத்தில் கொல்லப்பட்ட 3,000 இசுலாமியர்களின் பிணங்கள்தான் மோடியின் முகம், இதை நான் எங்கு வேண்டுமானாலும்" சொல்வேன் என்று பேசினார்.

கூட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அரசியல் முன்னணியாளர்கள் வந்திருந்தார்கள். முகிலனுக்கு தமது ஆதரவை தெரிவித்தார்கள்.

ஜோடியாக கைகோர்த்து நிற்கும் கார்ப்பரேட் - சாதி இந்துத்துவ அரசியலை ஜனநாயக சக்திகள் அனைவரும் எதிர்த்து நிற்க வேண்டிய காலம் இது. இதை எதிர்க்காவிட்டால் நம் நாட்டு தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், அறிவுத்துறையினர் ஆகியோரின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டு விடும். 'நாங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு அடங்கி இருந்தால் மூன்று வேளை சோறு பிச்சையாக போடுகிறோம். தின்று விட்டு கம்மென்று இருக்க வேண்டும். எதிர்த்து கேட்டால், கருத்து சொன்னால் அடிதான், உதைதான்' என்று உழைக்காமல் கொழுக்கும் சாதியினரும், கார்ப்பரேட் முதலாளிகளும் சொல்வார்கள். அவர்கள் போடும் கோட்டுக்குள் நாம் வாய் பொத்தி, கைகட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

கருத்துகள் இல்லை: