வெள்ளி, பிப்ரவரி 08, 2019

மோடியின் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து நிற்கும் "விவேகம்"


விவேகம்  - Reason
நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையேயான போர்
ஒரு ஆனந்த் பட்வர்தன் - திரைப்படம்
8 பகுதி ஆவணப்படம் (240 நிமிடங்கள், வண்ணப்படம், 2018)


2013 முதல் நம் நாட்டில் நடக்கும் பல்வேறு அரசியல் மாற்றங்களை எப்படி தொகுத்து சொல்லலாம்? மகாராஷ்டிராவின் தாராளவாத/ஜனநாயக படைப்பாளியின் பார்வையில் பார்க்கும் போது இந்த மாற்றங்கள் என்னவாக தெரிகின்றன?

ஆனந்த் பட்வர்தனின் 2018 ஆவணத் திரைப்படம் Reason இந்தக் கேள்விகளுக்கான விடையை தருகிறது. 8 பகுதிகளாக மொத்தம் 4 மணி நேரம் ஓடும் படம்.

Reason என்பது மராத்திய மொழியில் விவேக் என்பதன் மொழிமாற்றம், தமிழில் விவேகம் என்று மொழிபெயர்க்க வேண்டும். 

நரேந்திர தாபோல்கரில் தொடங்கி கவுரி லங்கேஷ் வரை மகாராஷ்டிராவில் புனே, கோலாப்பூர், குஜராத்தில் ஊனா, உ.பியில் தாத்ரி, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம், டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகம், கோவாவின் ராம்னாதி கிராமத்தில் மக்கள் மத்தியில் மர்மமாக இயங்கும் சனாதன் சன்ஸ்தாவின் ஆசிரமம் என்று பயணிக்கிறது இந்தக் கதை.

மோடி ஆட்சிக்கு வருவது, ரோகித் வெமுலாவின் தற்கொலை, கன்னையா குமார் மீது தேசத் துரோக வழக்கு, அக்லக் படுகொலை, ஜிக்னேஷ் மேவானி, சிவாஜி, சாவார்க்கர், காந்தி, கோட்சே, மாலேகான் குண்டு வெடிப்பு, மும்பை பயங்கரவாத தாக்குதல், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி என்று பல டஜன் இழைகளை கவனமாகவும், நுணுக்கமாகவும் பிணைத்து நெய்திருக்கும் திரைக்கதை. மகாராஷ்டிராவில் மராட்டா, குஜராத்தில் தலித்துகள், பீகாரைச் சேர்ந்த ஒரு பூமிகார், ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்கள், சனாதன் சன்ஸ்தாவின் ஜெயந்த் அத்வாலே என்று சாதியக் கட்டமைவு பிரிக்க முடியாமல் பிணைந்திருக்கிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட
பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தாபோல்கர்
ஊடகங்கள், அர்னாப் கோஸ்வாமி, கல்வி தனியார் மயம் என்ற வகையில் கார்ப்பரேட் அரசியலும் எட்டிப் பார்க்கிறது. மைய இழையில் சேர்க்கப்படவில்லை என்றாலும், அது மறைக்கப்படவோ, மறக்கப்படவோ இல்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோவியத் யூனியன், அமெரிக்கா என்று உலகளாவிய ஏகாதிபத்திய அரசியலையும் படம் தொட்டுச் செல்கிறது.

நரேந்திர தாபோல்கரும், கோவிந்த் பன்சாரேவும் மகத்தான மனிதர்களாக நம் மனத்திரையில் உருவெடுக்கிறார்கள். ரோகித் வெமுலாவின் போராட்டமும், கன்னையா குமாரின் எதிர்ப்பும் உயிர் பெற்று திரையில் ஓடுகின்றன. ஆர்.எஸ்.எஸ், சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத், பஜ்ரங் தள், ஏ.பி.வி.பி, விஸ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா போன்ற சங்க பரிவார அமைப்புகளின் அதிகொடூர செயல்பாடுகளும், திட்டங்களும், பிரச்சாரங்களும் திரையில் நிஜமாக உருவெடுக்கின்றன. ஊனா, தாத்ரி, ஜம்மு, ராஜஸ்தான் என்று சனாதன பயங்கரவாதிகளுக்கு போலீஸ் துணை நிற்கிறது.

நிழல் வேலைகள் நடக்கும் சனாதன் சன்ஸ்தா ஆசிரமம்
ஆயிரக்கணக்கான காக்கி-வெள்ளை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் முன் மோகன் பாகவத் உரையாற்றுகிறார். வீர சாவார்க்கருக்கு நாடாளுமன்றத்தில் உருவப் படம் திறக்கப்படுகிறது. அதைச் செய்பவர்கள் வாஜ்பாயியும், அப்துல் கலாமும்.

ஆர்.எஸ்.எஸ்-ன் தோற்றம் பற்றியும், அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடாதவர்கள் பற்றியும் படம் பேசுகிறது. அந்தமான் சிறைக்குப் போன சாவார்க்கர் 5 முறை மன்னிப்புக் கடிதம் கொடுத்து சாம்ராஜ்யத்துக்கு விசுவாசமாக சேவை செய்ய முன்வந்து வெளியில் வந்தவர். அதன் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடாமல் இந்து மகாசபா, முஸ்லீம் வெறுப்பு என்று அரசியல் செய்தார். காந்தியை கொலை செய்ய சதித்திட்ட வழக்கில் முதல் குற்றவாளி. சில விபரங்களின் போதாமை காரணமாக விடுவிக்கப்பட்டார். கோட்ஸே இந்து மகாசபாவைச் சேர்ந்தவர் என்கின்றனர் சங்கிகள். ஆனால், இந்து மகாசபாவின் நிறுவனர் சாவார்க்கரின் உருவப்படத்தை நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி படத்துக்கு நேர் எதிரே திறக்கின்றனர்.

சனாதன் சன்ஸ்தா தலைமை சாமியார்
ஜெயந்த் அதவாலே
இந்திய அரசியல் சட்டத்தை நிராகரிக்கிறோம், மனு சாஸ்திரம்தான் நமது அரசியல் சட்டம். பசுவை புனிதமாக கும்பிட வேண்டும், அயோத்தியில் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்ட வேண்டும், இந்தியாவில் வாழ வேண்டுமானால் வந்தே மாதரம் சொல்ல வேண்டும், காஷ்மீர் எங்களுக்கே என்று சூத்திரங்களை கொள்கைகளாக வைத்திருக்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் நிழலில், அதன் பெயரில் ஹேமந்த் கர்கரே திட்டமிட்டு கொலை செய்யப்படுகிறார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பயங்கரவாத கொலையாளிகள் ஒவ்வொருவராக விடுவிக்கப்படுகின்றனர். பங்கஜ் நிகிலியானியும், கஜேந்திர சவுகானும் தணிக்கைத் துறை தலைவராக, திரைப்படக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுகின்றனர்.

குஜராத்தில் ஊனா வன்கொடுமையை தொடர்ந்து செத்த மாட்டை புதைக்க மாட்டோம் என்று தலித்துகள் போராடுகின்றனர். ஆகஸ்ட் 15 அன்று சுயமரியாதை, சுயகௌரவ உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்கள் மீது ஆதிக்க சாதியினரின் தாக்குதல் தொடர்கிறது. ரோகித் வெமுலாவின் நினைவாக இந்தியா கேட்-ல் மெழுகுவர்த்தி ஏற்ற வந்தவர்களை போலீஸ் குண்டுகட்டாக தூக்கிச் செல்கிறது.
சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளர்
கவுரி லங்கேஷ்
தாபோல்கரும், கோவிந்த பன்சாரேவும் தமது வாழ்வை உழைக்கும் மக்களுக்காக, பகுத்தறிவுக்காக, சரியானதற்காக அர்ப்பணிக்கிறார்கள். அவர்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான இளங்குருத்துக்கள் முளைக்கின்றன. ராம்னாதி கிராம மக்கள் சனாதன் சன்ஸ்தா ஆசிரமத்தை எதிர்த்து கூட்டம் போடுகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னையா குமார், கோவிந்த் பன்சாரே, காங்கிரஸ்-ஐ சார்ந்திருக்கும் ஜிக்னேஷ் மேவானி வருகிறார். ஹார்திக் பட்டேல் வரவில்லை. யாகூப் மேமனின் நியாயம் பேசப்படுகிறது, அப்சல் குருவின் நியாயம் பேசப்படுகிறது. மரண தண்டனைக்கு கொள்கை ரீதியான எதிர்ப்பு என்கிறார். இறைச்சி உணவு, அது மாட்டிறைச்சியாக இருந்தாலும் சரி, கோழி இறைச்சியாக இருந்தாலும் சரி தவிர்ப்பது நல்லது என்கிறார். பீமா கோராகான் பற்றி எதுவும் பேசப்படவில்லை. மும்பையின் தாராவி பற்றி பேசப்படவில்லை. பேராசிரியர் சாய்பாபா பற்றி, சுதா பரத்வாஜ் பற்றி, ஆனந்த் தெல்டும்டே பற்றி எதுவும் பேசப்படவில்லை. குஜராத்தில் இறைச்சி சாப்பிடுவதற்குக் கூட தனி பகுதிக்குத்தான் போக வேண்டும் என்பதைப் பற்றி கேட்ட இளைஞருக்கு ஆனந்திடம் பதில் இல்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவிந்த் பன்சாரேவும்,
(மதவாத எதிர்ப்புக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்)
அவரது மனைவியும்
ஆனந்த் பட்வர்தன் சொல்லும் அரசியல் என்ன?

'இந்து மதம் வேறு இந்துத்துவா வேறு. இந்து மதத்தில் சாதியை ஒழிக்கா விட்டால் இந்து மதத்தையே நிராகரிக்க வேண்டும். மகாத்மா காந்தி இந்துத்துவத்தை எதிர்த்தவர். காங்கிரஸ் அமைத்த ஓஷிவாரா ரயில் நிலையத்தின் பெயரை ராம் மந்திர் என்று பா.ஜ.க அரசு மாற்றுகிறது.

பாகிஸ்தானும் இந்தியாவைப் போல மதச்சார்பற்ற நாடாகத்தான் தோன்றியது. 1980-ல் தொடங்கி ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை எதிர்ப்பதற்காக ரீகனின் அமெரிக்கா, பாகிஸ்தானில் ஜிகாதி இசுலாமிய தீவிரவாதத்தை வளர்த்து விட்டது. அப்போது ஜியா உல் ஹக் பாகிஸ்தானை இசுலாமிய குடியரசு என்று மாற்றி விட்டார். நாம் அந்த பாதையில் போக வேண்டும் என்று சொன்னால் இந்து ராஷ்டிரம் என்று பேசுங்கள். நான் அப்படி சொல்லவில்லை, மதச் சார்பற்ற விவேகத்தின் அடிப்படையிலான நாடாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'

ஒரு மாணவர் ஏன் இந்துக்களை மட்டும் மோசமாக காட்டுகிறீர்கள் என்று ஆரம்பித்து காஷ்மீர், ஹஜ் மானியம், இந்து நாடு என்று கேள்விகள் கேட்டார். அந்தக் கேள்விகளை ஊக்குவித்து பதில் சொன்னார், ஆனந்த். இன்னொரு பெருசு மாட்டிறைச்சிதான் புவி வெப்பமயமாதலுக்கு காரணம் என்று வாதிட்டுக் கொண்டிருந்தார். ஊடகங்களில் கன்னையா குமார், ரோகித் வெமுலா பற்றி சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டதும் அதற்கு யாகூப் மேமன், அப்சல் குருவைப் பற்றி விளக்கம் அளித்தார்.

அறிவுத்துறையினர் மத்தியில் பரவலாகக் கொண்டு போய் போதுமான ஆதரவு கிடைத்த பிறகுதான் படத்தை பரவலாக வெளியிட முடியும். தமிழில் மாற்றுவதற்கு நிறைய முயற்சி தேவைப்படும். ஆனால், அதை ஒரு திரையிடும் இயக்கமாகக் கொண்டு செல்லும் ஒரு டீம் வேண்டும். இல்லை என்றால் முயற்சி வீணாகப் போய் விடும்.

இன்றைய காலத்துக்கு தேவையான, அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய கலைப் படைப்பு இது. ஆனந்த் பட்வர்தன் போன்ற படைப்பாளிகள் இருக்கும்வரை ஜனநாயகமும், பகுத்தறிவும் உயிர்த்துடிப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கும்!

சனாதன் சன்ஸ்தா பற்றிய விளக்கமான ஆங்கிலக் கட்டுரை (படங்களுடன்)

கருத்துகள் இல்லை: