சனி, பிப்ரவரி 16, 2019

மோடியின் சுயமோக புராணம்

"மோடி" என்ற இந்துத்துவ மோசடியில் ஏமாந்த இந்தியா - 4

பா.ஜ.க தலைவரும் அப்போதைய பிரதமருமான வாஜ்பாய் மோடியை பற்றிய அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருந்தார். 2002 குஜராத் சட்ட மன்ற தேர்தலின் போது அகில இந்தியத் தலைவர்கள் யாரும் பிரச்சாரத்துக்கு வர விரும்பினால் ஆரம்ப கட்டங்களில் வந்து போய் விடுமாறு உத்தரவிட்டிருந்தார் மோடி. கடைசி நேரத்தில் வந்து ஒரு சுற்று சுற்றி விட்டு, தாங்கள்தான் வெற்றியை உறுதி செய்ததாக யாரும் சொல்லி விடக் கூடாதே.

கோத்ராவின் கொடூரங்களில் விளையவிருந்த வெற்றிக்கு தான் மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருந்தார்.

அருண் ஜேட்லி, உமாபாரதி மற்றும் பிற  கட்சி ஊழியர்களுடன் டெல்லியிலிருந்து விமானத்தில் அகமதாபாத் வரும் வழியில், 'பொதுவாக ஒரு பிரதமர் மற்றும் கட்சித் தலைவர் ஒரு மாநில தலைநகருக்குப் போகும் போது அந்த மாநில முதல்வர்தான் பரபரப்புடன் காத்திருப்பார். இங்கோ, பிரதமரான நான் மோடிஜி என்ன சொல்லி விடுவாரோ என்ற கலக்கத்துடன் போய்க் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லிச் சிரித்தார் வாஜ்பாய். ஆனால், அவரது தொனி சீரியசாகவே இருந்தது.

தனது அயோத்தி யாத்திரையின் குஜராத் பகுதியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை மோடிக்கு கொடுத்து அவரை வளர்த்து விட்டவர் அத்வானி. அத்வானி துணையோடு, முதலில் வகேலாவை கட்சியிலிருந்து ஓரம் கட்டினார் மோடி. 1995-ல் மோடி டெல்லிக்கும் அனுப்பப்பட்ட போதும், 2001-ல் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட போதும், மோடிக்கு ஆதரவாக உறுதியாக நின்றவர் அத்வானி. 2002 கலவரங்களுக்குப் பிறகு மோடி முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது அதை எதிர்த்து மோடியை ஆதரித்தார் அத்வானி. குஜராத்தில் தனது அதிகாரத்தை உறுதி செய்து கொண்ட மோடி, 2014 தேர்தலில் தான் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு அத்வானியை தூக்கி எறிந்திருக்கிறார்.

குஜராத் பா.ஜ.க.வில் மோடியை விட மூத்த போட்டியாளர்கள் சங்கர் சிங் வகேலாவும், கேஷூபாய் பட்டேலும். 1980-களில் பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்த வகேலாவுக்கும் ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளராக இருந்த மோடிக்கும் இடையே பனிப்போர் நடந்தது. 1989-ல் அத்வானி குஜராத்திலிருந்து போட்டியிடலாம் என்று முடிவு எடுக்கப்பட்ட போது வகேலாவின் நாடாளுமன்றத் தொகுதியான காந்திநகரில் போட்டியிடுமாறு பரிந்துரைத்து வகேலாவுக்கு செக் வைத்தார் மோடி. 1990-களில் வகேலா கட்சியிலிருந்து பிரிந்து போய், காங்கிரசில் சேர்ந்தார். இப்போது காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி நடத்துகிறார்.

மோடி முதல்வரான பிறகு தொடர்ந்து ஓரம் கட்டப்பட்ட கேஷூபாய் இப்போது தனிக் கட்சி ஆரம்பித்து நடத்தினார், பின்னர் வயதான காலத்தில் பா.ஜ.கவில் ஐக்கியமாகி விட்டார்.

இவ்வாறாக, ஒரு கட்டத்தில் மோடியின் தலைமையில் ஆளும் கட்சி பா.ஜ.க, வகேலா தலைமையில் எதிர்க்கட்சி காங்கிரஸ், கேஷூபாய் பட்டேல் தலைமையில் மூன்றாவது கட்சி கேஷூபாய் பட்டேல் என்று குஜராத்தின் தேர்தல் அரசியலின் அனைத்து தரப்புமே இந்துத்துவா சக்திகளின் வெவ்வேறு குழுக்களின் கூடாரமாக விளங்கியது.

2002-ம் ஆண்டு கலவரங்களின் போது முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஈசான் ஜாஃப்ரி வசித்து வந்த குல்பர்க் குடியிருப்பு சங்கம் இந்துத்துவா கலவர கும்பலால் சூழப்பட்டது. ஜாஃப்ரியின் வீட்டில் தமக்கும் பாதுகாப்பு என்று அக்கம் பக்கத்திலுள்ள இஸ்லாமியர்களும் அங்கு தஞ்சம் புகுந்தனர். ஜாஃப்ரி தனது நூற்றுக் கணக்கான அரசியல் தொடர்புகளுக்கு தொலைபேசி நிலவரத்தை விளக்கி போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரினார். குஜராத் காவல்துறை தலைமை இயக்குனர், அகமதாபாத் காவல் துறை ஆணையர், மாநில தலைமை செயலர், அமைச்சர்கள், ஏன் டெல்லியில் இருந்த அப்போதைய துணை பிரதமர் அத்வானி வரை தொடர்பு கொண்டார் அவர்.

முதலமைச்சரின் அலுவலகத்துக்கும் தொடர்பு கொண்டதாக தப்பிப் பிழைத்த ஒரு சாட்சியம் பின்னர் நீதிமன்றத்தில் வாக்கு மூலம் அளித்தார். முதலமைச்சரிடமிருந்து அவருக்கு வசவுகள் மட்டுமே கிடைத்தன.

வெளியில் கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. அப்போது குஜராத் உளவுத் துறையின் துணை ஆணையராக பணி புரிந்த சஞ்சீவ் பட்டின் உளவாளி அந்த இடத்தில் இருந்து அவருக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தான். நிலைமை மோசமாகிக்  கொண்டிருப்பதை உணர்ந்த சஞ்சீவ் பட், உள்துறை பொறுப்பையும் தன்னிடம் வைத்திருந்த முதலமைச்சர் மோடியிடம் பல முறை தொலைபேசியில் நிலவரத்தை தெரிவித்ததுடன், பிற்பகலில் நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க கோருகிறார். அமைதியாகக் கேட்டுக்  கொண்ட மோடி, 'சஞ்சீவ், ஜாஃப்ரிக்கு தனது துப்பாக்கியால் சுடும் வழக்கம் இருந்திருக்கிறதா என்று பார்த்து சொல்லு' என்று மட்டும் பதில் சொல்கிறார். வெளியில் வரும் பட், ஈசான் ஜாஃப்ரி தொடர்பாக முதல்வரை சந்திக்க வந்து கொண்டிருந்த காங்கிரசின் முன்னாள் முதலமைச்சர் அமர்சிங் சௌத்ரியையும் முன்னாள் உள்துறை அமைச்சர் நரேஷ் ராவலையும் எதிர் கொள்கிறார்.

அந்த நேரத்தில் களத்தில் இருந்த அவரது உளவாளியிடமிருந்து சஞ்சய் பட்டுக்கு தொலைபேசி வருகிறது. ஜாஃப்ரி வீட்டுக்குள் இருந்து துப்பாக்கியால் சுட்டதாக அவன் தகவல் சொல்கிறான். 'இந்த ஆளுக்குத் (மோடி) தெரியாமல் இந்த நகரில் ஒரு துரும்பு கூட அசைவதில்லை' என்று தான் உணர்ந்ததாக சஞ்சீவ் பட் பதிவு செய்கிறார்.

2010-ம் ஆண்டு மோடி மகராஷ்டிரா எல்லையில் உள்ள சோன்காட் என்ற பழங்குடியினர் பகுதியில் நடத்திய சத்பாவனா உண்ணாவிரத பந்தலுக்குப் வினோத் கே ஜோஸ் என்ற பத்திரிகையாளர் போகிறார். தான் அனைத்து சமூகத்தினருக்கும் சமமாக அருள் பாலிக்கும் பேரரசன் என்ற பிம்பத்தை கட்டியமைப்பதற்கு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மோடி மேற்கொண்ட வரிசையான உண்ணாவிரதங்களின் ஒரு பகுதி அது.

வினோத் கே ஜோஸ் பல மாதங்களாகவே மோடியின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு மோடியை நேர்முகம் காண வாய்ப்பு அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும், 'உங்கள் வேண்டுகோளை மோடிஜிக்கு சொல்லி விட்டேன். அவர் எதுவும் பதில் சொல்லவில்லை. (இல்லை என்றும் சொல்லவில்லை). பொறுமையாக காத்திருங்கள்' என்று மோடியின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜக்தீஷ் தக்கார் பதில் அளித்திருக்கிறார்.

சோன்காட்டுக்கு போவதற்கு முன்பும் தக்காரை தொடர்பு கொண்டு தான் உண்ணாவிரத நிகழ்வில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் மோடியிடம் பேசுவதற்கு நேரம் கேட்க முடியுமா என்றும் கேட்டிருக்கிறார்.

மேடையில் மோடி அசையாமல் தாடையில் கை வைத்து தலையில் ஒரு விரலை நீட்டி மோன நிலையில் அமர்ந்திருக்க உள்ளூர் கட்சிக் காரர்களும் அரசு அலுவலர்களும் அவர் புகழ் பாடும் உரைகளையும் பாடல்களையும் அரங்கேற்றுகிறார்கள். ஒரு சில ஆண்களும், பெண்களும், “முரசு முழங்கவே! முரசு முழங்கவே! அமைதிக்காக முரசு முழங்கவே! மோடிஜியின் புகழ் பாடும் முரசு முழங்கவே!" என்று ஆரம்பிக்கும் ஒரு பாடலை பரிதாபமான மெட்டில் பாடுகிறார்கள். பாடல் முடிந்ததும் எழுந்த கரவொலி அடங்கிய பிறகு, “இந்த அழகான பாடலை எழுதி, இயற்றி, பாடியது வேறு யாருமில்லை,  நம்முடைய மேதகு மாவட்ட ஆட்சியர் ஆர் ஜே பட்டேல்தான்" என்று அறிவிக்கிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். கூட்டம் ஆரவாரமாக கை தட்டுகிறது.

மாலை வரை இதே போல போனால் தாக்குப் பிடிக்காது என்று அருகில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திக் கொண்டிருந்த போட்டி உண்ணாவிரத பந்தலுக்குப் போவதற்காக எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார் வினோத் ஜோஸ். மோடி கையை அசைத்து அவர் கவனத்தை ஈர்க்கிறார். என்னையா என்று தூரத்திலிருந்தே கேட்டு, ஆமோதிப்பையும் பெறுகிறார் வினோத். மோடி தக்காரை நோக்கி சைகை செய்கிறார். 70 வயதுக்கும் அதிகமான தக்கார் மோடியின் வாயருகே தனது காதை கொண்டு போய் உத்தரவை வாங்கிக் கொள்கிறார்.

மேடையிலிருந்து தனது தள்ளாத உடலை தூக்கிக் கொண்டு வேக வேகமாக வினோத்தை நோக்கி ஓடி வருகிறார் அவர். எந்த நேரத்தில் விழுந்து விடுவாரோ என்று  தோன்றும்படி மூச்சிரைக்க வந்து, 'மோடிஜி உங்களுக்கு நேர்முகம் தருவதாக சொன்னார். ஆனால், இங்கு உண்ணாவிரதத்தில் இருப்பதால் முடியாது. வரும் வெள்ளிக் கிழமை காந்திநகரில் வந்து பாருங்கள்' என்று தகவல் சொல்கிறார்.

உண்ணாவிரதம் முடித்து மாலையில் உரையாற்ற மோடி வருகிறார். அவர் கையில் சில துண்டு காகிதங்கள் இருக்கின்றன.

அந்தப் பகுதிக்கான வளர்ச்சி திட்டங்களை விவரிக்கிறார் : ஒரு புதிய பாலம், காட்டின் வழியாக புதிய சாலை, ஒரு அணை. மொத்தம் 200 கோடி ரூபாய். ஒவ்வொரு அறிவிப்புக்கும் கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது. அதன் பிறகு, 'உலகம் வளர்ச்சியை நாடும் போது குஜராத்தை நோக்கி வருகிறது. குஜராத்தை நோக்கி வந்தால் உலகத்திற்கு வளர்ச்சி கிடைக்கிறது' என்று மந்திர உச்சாடனத்தை மோடி ஆரம்பிக்கிறார். 'வளர்ச்சி, வளர்ச்சீசீசீ, வளர்ச்சீசீசீசீ' என்று அவர் முழங்கி கைகளை முன்னும் பின்னும் அசைக்க கூட்டம் அந்த உச்சாடனத்தை திரும்பி சொல்லிக் கொண்டே ஆடுகிறது. 'வளர்ச்சி-குஜராத், குஜராத்-வளர்ச்சீசீசீ'' என்று மோடியும் அவரது பக்தர்களும் பஜனையை தொடர்கின்றனர்.

காந்திநகர் திரும்பிய வினோத் ஜோஸ் நேர்முகம் தொடர்பாக மோடியின் அலுவலகத்தை அணுகிய போதெல்லாம் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பது இந்தக் கதையின் முடிவு.

கருத்துகள் இல்லை: