செவ்வாய், பிப்ரவரி 05, 2019

கும்பல் அரசியல் - மம்தா, மோடி யார் பெஸ்ட்?

த்தியில் ஆளும் மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ (மத்திய புலனாய்வு கழகம்) கொல்கத்தாவின் காவல்துறை ஆணையாளர் ராஜீவ் குமாரை விசாரிக்கவும் தேவைப்பட்டால் கைது செய்யவும் அவரது வீட்டுக்குப் போயிருக்கிறது. அப்படி போன சி.பி.ஐ அதிகாரிகளை அந்தப் பகுதி போலீஸ் பிடித்துச் சென்று ஸ்டேஷனில் அடைத்து வைத்திருக்கிறது. முதலமைச்சரான மம்தா பானர்ஜி பா.ஜ.கவின் இந்த 'பழிவாங்கும்' நடவடிக்கையை எதிர்த்து கொல்கத்தாவின் மெட்ரோ சென்டர் முன்பு தர்ணா ஆரம்பித்திருக்கிறார்.

கல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் சாரதா சீட்டு மோசடி வழக்கையும் ரோஸ் பள்ளத்தாக்கு சீட்டு மோசடியையும் விசாரித்தவர். இந்த நிறுவனங்கள் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த 2011-க்கு முன்பிருந்தே மேற்கு வங்கத்திலும் அண்டை மாநிலங்களிலும் செயல்பட்டு பண மோசடி செய்து வந்திருக்கின்றன. ஆனால், அந்த மோசடியில் பங்காளிகளாக இருந்த பல பிரமுகர்கள் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசிலும், தற்போது பாரதிய ஜனதா கட்சியிலும் உள்ளனர். மேற்கு வங்கத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சி மற்ற மாநிலங்களைப்  போலவே இது போன்ற 420 நபர்களை சேர்த்துக் கொண்டுதான் நடந்திருக்கிறது என்பதில் ஆச்சரியம் இல்லைதான்.

2013-ம் ஆண்டு இந்த சீட்டு கம்பெனிகளில் பணம் போட்டவர்கள் போராட ஆரம்பித்த பிறகு மம்தா பானர்ஜி அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. சீட்டு கம்பெனியின் உரிமையாளர்கள் சுதிப்தா சென், தேப்ஜனி முகர்ஜி இருவரும் கைது செய்யப்பட்டனர். திரிணாமூல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குணால் கோஷ் கைது செய்யப்பட்டு சுதிப்தா சென், தேப்ஜனி முகர்ஜி இருவரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் குற்றப் பத்திரிகையின் அடிப்படையில் குற்றாவளிகள் என்று தீர்மானிக்கப்படுகிறது. செப்டம்பர் 2014ல் முன்னாள் டி.ஜி.பியும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான ரஜத் மஜூம்தார் கைது செய்யப்படுகிறார்.

இதற்கிடையில் எல்லா சீட்டு மோசடி வழக்குகளையும் விசாரிக்கும்படி உச்சநீதிமன்றம் சி.பி.ஐ-க்கு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ அக்டோபர் 2014-ல் சுதிப்தா சென், தேப்ஜனி முகர்ஜி, குணால் கோஷ் மூவரின் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறது.
  • இது தொடர்பாக காங்கிரஸ் அதிருப்தியாளர் ஹிமாந்தா பிஸ்வ சர்மாவை சி.பி.ஐ விசாரிக்கிறது. அவர் பா.ஜ.கவில் சரணடைகிறார்.
  • மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்படுகிறார்.
  • மம்தா பானர்ஜி கட்சியின் நம்பர் 2 முகுல் ராய்க்கு சி.பி.ஐ சம்மன் அனுப்புகிறது. முகுல் ராய் பா.ஜ.கவில் சரணடைகிறார். இவர் சாரதா சீட்டு மோசடி வழக்கில் முதன்மை குற்றவாளி. 
  • சி.பி.ஐ திரிணாமூல் எம்.பி தபஸ் பால், சுதீப் பண்டோபாத்யாயா ஆகியோரை கைது செய்கிறது.
இந்நிலையில்தான் இந்த வழக்கை விசாரிப்பதில் முறைகேடு என்று ஆகஸ்ட் 2017-ல் ராஜீவ் குமாருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்புகிறது. ஆகஸ்ட் 2017-ல் இரண்டாவது சம்மன், மார்ச் 2018-ல் மூன்றாவது சம்மன், ஜூலை 2018-ல் உச்சநீதிமன்றத்தில் மனு சி.பி.ஐ தொடர்ந்து ராஜீவ் குமாரை விசாரிக்க முயற்சிக்கிறது. ராஜீவ் குமார் உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்கிறார். டிசம்பர் 2018-ல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் சி.பி.ஐ சம்மன்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறது.

எனவே, மம்தா பானர்ஜியின் 'அய்யோ, பழிவாங்குறாங்களே' என்ற கதறல் 'சீட்டு மோசடி பேர்வழிகளை முன் வைச்சு எனக்கு கிடுக்கிப் போடுறாங்களே' என்பதுதான்.

ஆனால், 'பழிவாங்குறாங்களே' என்பதில் இதை விட அதிக நியாயம் இருக்கிறது என்பதுதான் இந்திய 'ஜனநாயகத்தின்' விசித்திரம்.  மேலே சொன விபரங்களிலிருந்து மம்தா பானர்ஜியையும், அவரது கட்சித் தலைவர்களையும், பிற மேற்கு வங்க அரசியல்வாதிகளையும் (இந்த மோசடியில் தொடர்பு இருப்பவர்கள்) மிரட்டுவதற்கு மோடியின் சி.பி.ஐ தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது என்று தெளிவாகிறது. "பா.ஜ.கவிடம் சரணடைந்தவர்களுக்கு எதிரான வழக்குகள் கைவிடப்படுகின்றன. பா.ஜ.கவை எதிர்ப்பவர்களுக்கு எதிரான பழைய வழக்குகளை தூசு தட்டுகிறார்கள்" என்று சொல்பவர் சந்திரபாபு நாயுடு. பா.ஜ.கவுடன் கூடிக் குலாவி அதிகாரத்தில் பங்கு போட்டுக் கொண்ட அவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்

கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிப்பது பற்றிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது திடீரென்று சி.பி.ஐ அவரது வீட்டில் புகுந்து அவரை விசாரிக்க போயிருக்கிறது. இதற்கும் சென்ற மாதம் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடத்திய எதிர்க்கட்சிகள் ஒற்றுமை மாநாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக மம்தா பானர்ஜி சொல்கிறார். எதிர்க்கட்சிகள் மாநாட்டை நடத்தாதீர்கள் என்று பா.ஜ.க மிரட்டியதாகவும், அதை கேட்காததால் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என்றும் சொல்லி தெருவில் இறங்கியிருக்கிறார்.

இப்போது மம்தா பானர்ஜி பாதுகாக்கப் போவதாக சொல்லி தெருவில் இறங்கியிருக்கும் அரசியல் சட்ட நடைமுறை என்ன?

அரசியல் சட்டப்படி போலீஸ் துறை மாநிலங்களின் அதிகாரத்துக்குள் வருகிறது. பொதுவாக ஒரு மாநிலத்தில் நடக்கும் குற்றச் செயல்கள் அந்த மாநில போலீசால் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படும். மாநில போலீஸ் தன்னுடைய வேலையை சரியாக செய்ய முடியாத அரசியல் நிலைமை அல்லது குற்றத்தின் தன்மை மாநில போலீசின் வரம்பை தாண்டி இருக்கும் போது என்ன செய்வது? அப்போதுதான் வெளியிலிருந்து உள்ளூர் அரசியலுக்கு அப்பாற்பட்டதும் மாநில வரம்புகளை தாண்டி செயல்பட முடிவதுமான ஒரு விசாரணை அமைப்பு ஈடுபடுத்தப்படுகிறது. அதன் பெயர்தான் சி.பி.ஐ என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வு ஆணையம்.

சி.பி.ஐ என்பது நாடு முழுவதற்குமான ஒரு போலீஸ் கிடையாது. அது குறிப்பிட்ட மாநிலத்தினுள் விசாரணை நடத்த அந்த மாநில அரசின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். சி.பி.ஐ-ன் தோற்றம் 1941-ல் காலனிய ஆட்சியாளர்களால் போருக்கான பொருட்களை வாங்குவதில் ஊழல், லஞ்சம் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு போலீஸ் அமைப்பு ஆகும். போருக்குப் பின் மத்திய அரசு ஊழியர்களின் ஊழல்களை விசாரிப்பதற்காக டெல்லி சிறப்பு போலீஸ் சட்டம் மூலம் அந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட வழி செய்யப்பட்டது. பின்னர் ஒரு உள்துறை அமைச்சக தீர்மானத்தின் மூலம் சிறப்பு போலீஸ் அமைப்பின் பெயர் சி.பி.ஐ என்று மாற்றப்பட்டது. அடுத்தடுத்த மத்திய அரசுகளாலும், நீதிமன்றங்களாலும் சி.பி.ஐ-ன் அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டு அரசியல் சட்டத்துக்கு வெளியிலான ஒரு போலீஸ் அமைப்பாக மாற்றப்பட்டது.

பா.ஜ.க தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசியல் சட்ட நடைமுறைகளையும் பிற சட்டங்களையும் குப்பைக் காகிதங்களாக தூக்கி எறிவது, இந்திய ஜனநாயகத்தின் நிறுவனங்கள் அனைத்தையும் சீர் குலைப்பது ஆகியவற்றில் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

குஜராத் சட்ட மன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையம் மோடி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தேர்தல் அறிவிப்பை அதே நேரத்தில் நடந்த வேறு மாநில தேர்தல் அறிவிப்போடு செய்யாமல் தள்ளி வைக்கிறது. மாநில ஆளுனர்கள், பல்கலைக் கழக துணை வேந்தர்கள், திரைப்பட தணிக்கைத் துறை அதிகாரிகள், புலனாய்வுத் துறை இயக்குனர், தேர்தல் ஆணையர்கள், நீதிபதிகள் என்று சகட்டு மேனிக்கு தனது ஆட்களை புகுத்துகிறது. ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழுவில் குரு மூர்த்தி சேர்க்கப்படுகிறார். இந்திய அறிவியல் மாநாட்டில் டுபாக்கூர் ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகள் பேச அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனால் என்ன விளைவு ஏற்படும் என்று தெரிந்தும் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை, 'இந்த போலி மதச் சார்பற்ற ஜனநாயகத்தின் நிறுவனங்களை எல்லாம் நாம் கைப்பற்றி நமது நோக்கத்துக்காக பயன்படுத்த வேண்டும். ஏற்றுக் கொள்ளப்பட்ட, கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் பற்றி கவலையில்லை. எதிராளியை பகைவனாக பார்த்து அழித்து விட வேண்டும். அதன் மூலம் வருங்கால இந்து சாம்ராஜ்யத்தை நிறுவி விட வேண்டும். அதற்கு இந்த சூத்திர பதர்களை எல்லாம் அழித்து விடுவது தர்ம யுத்தத்தின் ஒரு பகுதி, அதில் எல்லாம் செல்லும்' என்பது பா.ஜ.கவின் முரட்டுத்தனமான அரசியல். "என்ன ஆனாலும் நான் ஜெயிக்கணும், அதற்கு எதை வேண்டுமானாலும் செய்வேன்" என்பது பா.ஜ.கவின் சாணக்கிய நீதி.

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.கவை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியுடன் கூட்டணியை அறிவித்த உடன் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. கர்நாடகா சட்ட மன்ற தேர்தல்களுக்கு சற்று முன்னால் பெல்லாரி சுரங்க ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்கள் மீதான எல்லா வழக்குகளையும் சி.பி.ஐ இழுத்து மூடியது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க வினரை அதட்டி மிரட்டி வைத்து நாடாளுமன்ற தொகுதி உடன்படிக்கைக்கு இழுத்து வருவதற்கு இதே சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ரெய்டு ஆயுதங்களைத்தான் மோடி பயன்படுத்துகிறார்.

இந்த முரடனிடம் போய் சட்டம் பேசுவது, நியாயம் பேசுவது எல்லாம் நடக்காது. ஜல்லிக்கட்டு காளை திமிறிக் கொண்டு வெளியில்தான் ஓடும். வயிற்றுக்குக் கீழ் முட்டக் கூடாது, பார்வையாளர்களை தாக்கக்கூடாது என்றெல்லாம் அதன் முன் சட்டம் பேச முடியாது. அது மிரண்டு ஓடும் போது சேதம் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகளை மற்றவர்கள்தான் செய்திருக்க வேண்டும்.

இந்த பா.ஜ.வின் முரட்டு அரசியல் இந்திய ஜனநாயகத்தை கலகலக்க வைத்திருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகள் அதிகாரத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு சுமுகமாக ஆட்சி செய்து கொள்ள ஏற்பாடு செய்து வைத்திருக்கும் 'ஜனநாயக' நிறுவனங்களை சீர்குலைக்கிறது. 'நான் அடிப்பது போல அடிப்பேன், நீ அழுவது போல அழு, ஆனால் யாருக்கும் டேமேஜ் வராது' என்ற ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை கிழித்து எறிகிறது.

நாசூக்காக ஊழல் செய்யும் காங்கிரஸ், தடாலடியாக அரசியல் செய்து வந்த மம்தா பானர்ஜி, முலாயம் சிங் கட்சி, லல்லு கட்சி, நாகரீகமாக ஆள்வதாக சொல்லிக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி, நவீன் பட்னாயக், சி.பி.எம் அரசுகள், சந்திரபாபு நாயுடு இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு பரஸ்பர புரிதல் இருந்தது. என்னதான் அடித்தாலும் ஒரு எல்லைக்குள் நிற்க வேண்டும். அதாவது அரசியல் நாகரீகம் இருக்க வேண்டும். உதாரணமாக, மோடியின் ஆட்சியில் குஜராத்தில் 3,000 இசுலாமியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என்றாலும் அதற்காக அவர் மீது வழக்கு போட்டு தூக்கில் போடுவது வரை கொண்டு போவதை காங்கிரஸ் அரசு செய்யாது. ஏனென்றால் 'நமது ஆட்சி நிரந்தரம் இல்லை, நாளைக்கே திரும்பவும் பா.ஜ.க அரசு வந்து விட்டால் நமக்கும் இதே கதி வந்து விடும்' என்று ஒரு பயம் இருந்தது.

இந்த பரஸ்பர புரிதலை பா.ஜ.க உடைத்து விட்டது. தனது நலனுக்காக 'என்ன வேண்டுமானாலும் செய்வேன். நாளைக்கு நீ ஆட்சிக்கு வரும் போது எனக்கு என்ன கிடைக்கும் என்று கவலையில்லை. நானேதான் ஆட்சியில் இருக்கப் போகிறேன். எனவே, அதற்கான வேலைகள்தான் நான் செய்வேன். உன் ஊழலை விசாரிப்பதை ஒரு வரம்புக்குள் வைத்திருக்க வேண்டுமானால், எனக்கு எதிரான அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக் கொள். இல்லா விட்டால் சி.பி.ஐ, அமலாக்கத் துறை, ஆளுனர், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் என்று குடைச்சல்கள் ஆரம்பிக்கும். உன்னுடைய ஊழல் குற்றச்சாட்டுகள் இன்னும் தீவிரமாக இருந்தால், அதை மறைத்து தாக்குப் பிடிப்பதற்கான உனது சொந்த பலம் குறைவாக இருந்தால், நீ என் காலில்தான் விழ வேண்டும்.'

இதை எப்படி எதிர் கொள்ள முடியும்? பா.ஜ.கவின் இந்தத் திட்டமிட்ட, அமைப்பாக்கப்பட்ட அராஜகவாத அரசியலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ், சி.பி.எம், தி.மு.க போன்ற கட்சித் தலைமைகளின் அரசியல் சட்ட வழியிலான அணுகுமுறை வேலைக்கு ஆகாது.

பா.ஜ.க என்ற முரட்டுக் காளை அதிகாரம் என்ற கள்ளை குடித்து வெறி பிடித்திருக்கிறது. அது பிற கட்சியினரை சகட்டு மேனிக்கு அடித்துத் தூக்குகிறது. சாரதா சிட் ஃபண்ட் மோசடி பேர்வழிகளை முட்டியதை பார்த்து ஊழலுக்கு எதிரான தாக்குதல் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டால் எப்போது உங்கள் வயிறு கிழிந்து குடல் வெளியில் சரியும் என்று உத்தரவாதம் கிடையாது. அதனால்தான் பீகாரின் லல்லுவில் ஆரம்பித்து தமிழ்நாட்டின் ஸ்டாலின் வரையில் மம்தா பானர்ஜியின் தைரியத்தை பார்த்து மூக்கில் விரலை வைக்கிறார்கள். அவர் பின் அணிதிரள்கிறார்கள். அ.தி.மு.க அண்ணன்கள் ஏற்கனவே மோடியின் திருவடியில் படுத்தே விட்டதால் அவர்களுக்கு தைரியம் எல்லாம் கிலோ விலைக்கு கிடைத்தாலும் தேவையில்லை.

மம்தா பானர்ஜி எந்தக் கொள்கையும் இல்லாத தனது தலைமையின் கீழ் அதே போன்று கொள்கை/கோட்பாடு இல்லாத ஒரு பட்டாளத்தை குவித்து வைத்திருப்பவர்.  அவரைப் போன்ற தெருச் சண்டை காரரின் எதிர்ப்புதான் பா.ஜ.கவுக்கு எதிராக செல்லுபடியாகும். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவையும் அவர் நடத்திய அ.தி.மு.க கட்சியையும் பார்த்து பா.ஜ.க பம்மியதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், ஜெயலலிதாக்களாலும், மம்தா பானர்ஜிகளாலும் கூட பா.ஜ.க என்ற வெறி கொண்ட மாட்டை முறியடிப்பது அவ்வளவு எளிதில்லை. நீதித்துறை, அதிகார வர்க்கம், ராணுவம், முதலாளிகள், அறிவுத்துறையின் மத்தியில் அதன் அமைப்பு பலத்தையும் வலைப்பின்னலையும் கொண்ட ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க அரசியலை மம்தா பானர்ஜி போன்ற உதிரி அரசியல்வாதிகள் தற்காலிகமாக திகைக்கச் செய்யலாமே தவிர தோற்கடிக்க முடியாது.

உச்சநீதிமன்றம் மம்தா பானர்ஜியின் உதாரை சமாளிக்க இப்போது மோடி அரசுக்கு கறார் காட்டுவது போல காட்டியிருக்கிறது. அதைப் பார்த்து அரசியல் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டு விடும் என்று மனப்பால் குடித்து விட முடியாது. சி.பி.ஐ இயக்குனரை இடமாற்றம் செய்த விவகாரத்தில் இடமாற்றம் செய்வதற்கு முறையை பின்பற்றவில்லை என்று தீர்ப்பு சொல்லி விட்டு அன்று இரவே மோடி முறையாக அவரை இடமாற்றம் செய்வதை அனுமதித்திருக்கிறது. (முதலில் செய்த முறைகேட்டுக்கு ஒரு கண்டனம் கூட கிடையாது). அதே நடைமுறைதான் இங்கும்.

இந்திய ஜனநாயகத்தின் முகத்திரையை கிழித்து அதற்கு கல்லறை கட்டிக் கொண்டிருக்கிறார் மோடி.

கருத்துகள் இல்லை: