புதன், பிப்ரவரி 13, 2019

"மோடி" என்ற இந்துத்துவ மோசடியில் ஏமாந்த இந்தியா - 1

ரேந்திர மோடி. 'இன்றைய இந்தியாவின் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண வந்த தேவதூதர்.' 'குஜராத்தின் முதலமைச்சராக 12 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வரும் வளர்ச்சி நாயகர்.' என்று பாரதிய ஜனதா கட்சியாலும், ஊடகங்களாலும் 2014 நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்டமைக்கப்பட்ட பிரதமர் பதவிக்கான வேட்பாளர்.

'குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, 6 கோடி குஜராத்திகளுக்கும் வளர்ச்சியின் பலன்களை எந்த பாகுபாடும் இன்றி அள்ளிக் கொடுத்ததாக சொல்லப்படும் மோடியின் பாரதிய ஜனதா கட்சி குஜராத் மாநிலத்தில் நடந்த எந்த தேர்தலிலும் 50% வாக்குகளுக்கு மேல் பெற முடியவில்லை. கேள்விகளுக்கு அப்பாற்பட்ட சாதனை புரிந்ததாக சொல்லப்படும் அவருக்கு 90 சதவீதத்தையும் தாண்டிய மகத்தான மக்கள் ஆதரவு ஏன் இல்லை?

'எது குஜராத்துக்கு நல்லதோ, அது குஜராத்திகளுக்கு நல்லது. எது குஜராத்துக்கு நல்லது என்பதை மோடி முடிவு செய்வார். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் குஜராத்தின் நலனுக்கு விரோதமானவர்கள்.' இது அன்றைய மோடித்துவம். இந்தக் கோட்டின் இரு புறமும் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் குஜராத் சரிபாதியாக பிரிந்து நின்றது.

'எது இந்தியாவுக்கு நல்லதோ அது இந்தியர்களுக்கு நல்லது. எது இந்தியாவுக்கு நல்லது என்பதை மோடி முடிவு செய்வார். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தேசத் துரோகிகள்' என்ற இன்றைய மோடித்துவம் அப்போது கட்டமைக்கப்பட்டது. இந்த இந்துத்துவ-கார்ப்பரேட் கோட்டின் இருபுறமும் இந்திய சமூகத்தை சரிபாதியாக பிரித்து விடுவதுதான் பா.ஜ.க மற்றும் மோடி முன் வைத்து அமல்படுத்தி வரும் அரசியல் திட்டம். அதாவது, உரிமைகளுக்காக போராடும் தாழ்த்தப்பட்ட சாதியினர், தேசிய இனங்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்க்கட்சி. மோடியும், பார்ப்பன-பனியா-மேட்டுக்குடி சாதியினர், கார்ப்பரேட் முதலாளிகள் ஆளும் கட்சி.

குஜராத்தின் மோடித்துவ பாணியிலான வளர்ச்சியை அகமதாபாத்திலிருந்து 30கி.மீ. தூரத்தில் உருவாக்கப்பட்டு வரும் கிஃப்ட் சிட்டி (Gujarat International Finance and Technology city - குஜராத் பன்னாட்டு நிதி மற்றும் தொழில்நுட்ப நகரம்) என்ற நிதிமூலதன தலைநகரம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இங்கு 884 ஏக்கர் நிலப் பரப்பில் 124 பல் அடுக்கு அலுவலக கட்டிடங்கள் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

'ஒரு பேரரசர், எனக்காக புதியதொரு நகரத்தை ஏற்படுத்து' என்று சிற்பியை பணிக்க அவர் போய் கண்ணாடியாலும், கான்கிரீட்டாலும் ஆன ஒரு புத்தம் புதிய நகரை உருவாக்குவது போல தோன்றுகிறது' என்கிறார் அந்த பணியில் ஈடுபட்டிருந்த  கட்டிட வடிவமைப்பாளர் ஒருவர்.

நவீன ஷாங்காயை வடிவமைத்த "கிழக்கு சீனா கட்டிட வடிவமைப்பு கழகம்" என்ற நிறுவனத்தை மோடி இதற்காக பணியில் அமர்த்தியிருந்தார். "இந்த நகரத்துக்கான ஒவ்வொரு வரைபடமும் சீனாவிலிருந்து வருகின்றது" என்கிறார் அந்த வடிவமைப்பாளர். இங்கு உருவாக்கப்பட உள்ள 7.3 கோடி சதுர அடி நவீன அலுவலக கட்டிங்களின் பரப்பளவு ஷாங்காய், டோக்கியோ, லண்டன் நகரங்களில் உள்ள மொத்த நிதித் துறை அலுவலக கட்டமைப்பை விட அதிகம். இவற்றில் பட்டை தீட்டப்பட்ட வைர வடிவத்திலான 80 மாடிகளைக் கொண்ட "டயமண்ட் டவர்" கட்டிடமும் பின்னிக் கொண்டிருக்கும் பாம்பின் வடிவிலான "நாகா டவர்" கட்டிடமும் அடங்கும். உலகின் முன்னணி நிதித் துறை நிறுவனங்களை மும்பையிலிருந்தும், முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை ஹைதராபாத், பெங்களூருவிலிருந்தும் குஜராத்துக்கு வர வைப்பதுதான் மோடியின் திட்டம்.

இது குஜராத்தின் ஒளிரும் பாதி. ஒவ்வொரு தேர்தலிலும் மோடிக்கு சரி பாதி ஓட்டுக்களை கொண்டு சேர்க்கும் நடுத்தர வர்க்க மேட்டுக்குடி சாதியினரின் சுயநலத்துக்கும், கார்ப்பரேட் லாப வேட்டைக்கும் இரை போடும் பாதி. இந்த பாதிக்கு, மோடி டாலர் கனவுகளை காட்டினார், “இங்கு ஒரு ரூபாயை விதைத்தால், நீங்கள் ஒரு டாலரை அறுவடை செய்யலாம்" என்று அன்னிய முதலீட்டாளர்களிடம் குஜராத்தை சந்தைப்படுத்தினார்.

இன்னொரு பாதியில் மோடியின் நெருங்கிய நண்பரான கார்சன் பட்டேலின் நிர்மா நிறுவனத்துக்கு குஜராத் அரசு ஒதுக்கிய 700 ஏக்கரின் கதை உள்ளது. 2003-ம் ஆண்டு மோடி அரசு மஹூவா பகுதியில் 700 ஏக்கர் புறம் போக்கு நிலத்தை சிமென்ட் ஆலை கட்டுவதற்காக நிர்மாவுக்கு ஒதுக்கியது. ஒதுக்கப்பட்ட நிலத்தில் 300 ஏக்கர் பரப்பளவிலான சதுப்பு நிலங்களும், நீர்நிலைகளும் அடங்கியிருந்தன. நீர்ப்பாசனத்துக்கும், கால்நடை வளர்ப்புக்கும் அவற்றைச் சார்ந்து இருந்த 50,000 விவசாயிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். ஆனால், நிர்மாவும், குஜராத் அரசும் அவர்களது எதிர்ப்பை புறக்கணித்தன.
மஹூவாவின் பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் கனுபாய் கல்சாரியா மோடியை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். 11,000 விவசாயிகள் தமது இரத்தத்தால் எதிர்ப்பு மனுவில் கையெழுத்திட்டு அனுப்பினர். 5,000 விவசாயிகள் 400 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அகமதாபாத் வரை நடந்து வந்து தமது எதிர்ப்பைக் காட்டினர்.

குஜராத் அரசும், நிர்மாவும் இந்த நிலங்களை தரிசு நிலங்கள் என்று வாதிட்டனர். இதை ஏற்றுக் கொள்ளாத விவசாயிகள் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்திடம் முறையிட்டனர். ஆலையின் சுற்றுச் சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டது. மோடியின் கட்டளைக்கேற்ப நடத்தப்படும் குஜராத்தின் 'வளர்ச்சி' மாதிரிக்கு எதிராக கிடைத்த அரிதான வெற்றியாக இதை மக்கள் கொண்டாடினர். ஆனால், டாக்டர் கல்சாரியா பா.ஜ.கவை விட்டு வெளியேற்றப்பட்டார். 2012 தேர்தலில் தனியாக நின்று தோல்வியை தழுவினார். மோடியும், கார்சன் பட்டேல்களும் தமது வெற்றிப் பயணத்தை தொடர்கின்றனர்.

இத்தகைய நவீன தொழில் மயமாக்கப்படும் நகர பொருளாதாரத்தின் பலன்களை குவிக்கும் வர்க்கத்தினருக்கும், படிப்படியாக தமது வாழ்வாதாரங்களை இழந்து கொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே கனன்று கொண்டிருக்கும் வன்முறை ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை எரிமலையாக வெடிக்கிறது. 1970-களில் அகமதாபாத் ஜவுளித் துறை வீழ்ச்சிக்குப் பிறகு தமது வாழ்வாதாரங்களை இழந்த தொழிலாளர்களின் கோபத்துக்கு வடிகால் தேவைப்பட்டது. இப்போது தனியார் மய, தாராள மய, உலக மய பொருளாதாரத்தில் தொழில் முனைவோர்களின் ரியல் எஸ்டேட் வேட்டையில் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களின் சீற்றத்துக்கு இரை தேவைப்படுகிறது.

குஜராத்தில் 57 நகரங்கள் உள்ளன. தொழில் மயமாக்கப்பட்ட நகரப் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. நடுத்தர வர்க்கத்தினருக்கும், தொழில் முனைவோருக்கும், அவர்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் அரசியல் தரகர்களுக்கும் வாய்ப்புக்களின் களமாக நகரங்கள் விளங்குகின்றன. இந்நகரங்களில் பெரும்பாலான பகுதிகள் முஸ்லீம்களும், இந்துக்களும் தனித்தனியாக, கறாராக பிரிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வதாக உருவாக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் இந்து மதத்தைச் சேர்ந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் கணிசமான பகுதியினர் மதவாதத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருக்கின்றனர். கலவரங்களின் போது கொள்ளைகளில் பங்கேற்றல், இல்லை என்றால் வன்முறைகளில் வெறித்தனமாக ஈடுபடுதல் என்று நடுத்தர வர்க்கத்தினர் மத வெறியாட்டத்தில் உற்சாகமாக இறங்குகின்றனர்.

இத்தகைய குஜராத், மோடி என்ற தேவதூதனின் வருகைக்காக பல பத்தாண்டுகளாக தயாரிக்கப்பட்டதா அல்லது பல பத்தாண்டுகளாக இந்துத்துவா சோதனைக் கூடமாக  கட்டமைக்கப்பட்ட குஜராத்துக்காக மோடி வளர்ந்து வந்தாரா?

(தொடரும் ...)

ஆதாரங்கள்

1. மோடியை பாசிஸ்டாக வரையறுக்கும் கட்டுரை - 2002 Obituary of a culture - ASHIS NANDY

2. 2007 குஜராத் தேர்தலுக்குப் பிறகு ஆஷிஷ் நந்தி Gujarat: Blame The Middle Class By Ashis Nandy

3. வினோத் ஜோஸின் புரோபைல் The Emperor Uncrowned

4. ஷிவ் விஸ்வநாதன் ஆய்வு - துண்டு துண்டான, ஆனால் முக்கியமான கருத்துக்கள்
The remaking of Narendra Modi - SHIV VISVANATHAN

5. இடது சாரி அமைப்புகள் இணைய வேண்டி அழைப்பு
Narendra Modi And The Reality Of Fascism That Haunts Us All: A Call To All Comrades To Unite! By V. Arun Kumar

6. வைமர் குடியரசின் அரசியலமைப்பு சட்டமும் ஹிட்லரின் எழுச்சியும்
THE RISE OF FASCISM: ASSESSING THE CONSTITUTION OF THE WEIMAR REPUBLIC

கருத்துகள் இல்லை: