திங்கள், பிப்ரவரி 04, 2019

சுவாமிநாதன் அய்யரின் மோடித்துவ திருப்பணி!

ப்போது குஜராத்தி/மார்வாடி/மும்பை இந்திய முதலாளிகளுக்கு வயிற்றை கலக்கும் விஷயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஜெயிக்காமல் போய் விடுவாரோ என்ற பயம்தான். அவர்களுக்கு தீனி போடும் டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிகைகள் அவர்களது பயத்தை தணித்து மனப்புண்ணுக்கு மருந்து போட வேண்டியிருக்கிறது. அதே நேரம் அவர்களது ஆதரவை மோடிக்கு தக்க வைக்கும் வேலையையும் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த வேலையை திறமையாகச் செய்து முதலாளிகளின் மனதை தடவிக் கொடுக்கும் நபர்தான் இந்த சுவாமிநாதன் அய்யர் என்பவர்.

வேலையின்மை வீதம் மோடி ஆட்சியில் கடுமையாக உயர்ந்திருப்பது பற்றி இவர் ஞாயிற்றுக் கிழமை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். (“Job data’s is bad, but do not assume Modi will lose). ஸ்வாமினாமிக்ஸ் (ஸ்வாமியியல்) என்று அவரது 'திருநாமம்' சூட்டப்பட்ட அறிவியல் பெயரின் கீழ் இந்தப் பத்தியை தொடர்ந்து எழுதி வருகிறார், இந்த அறிவாளி. அவர் தன்னை தாராளவாத முதலாளித்துவ ஆதரவாளர் என்று தன்னைச் சொல்லிக் கொள்பவர்.

வேலையின்மை வீதம் 2011-12ல் 2.2% ஆக இருந்தது 2017-18-ல் 6.1% ஆக உயர்ந்திருக்கிறது இது 45 ஆண்டுகளாக இல்லாத ஒரு நிலைமை.

இந்த விஷயம் தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனத்தின் அறிக்கையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசு அந்த அறிக்கையை வெளியிடாமல் வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கிறது, அல்லது பதுக்கி வைத்திருக்கிறது. அதன் மூலம் தனது மோசமான திருவிளையாடல்கள் மூலம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்து போட்டிருப்பதை மூடி மறைக்க முயன்றது. இந்த அறிக்கையை டிசம்பர் 2018-லேயே வெளியிட்டிருக்க வேண்டும்.

இந்த அறிக்கையை வெளியிடாததை கண்டித்து தேசிய புள்ளிவிபரங்கள் ஆணையத்தின் உறுப்பினர்கள் பி.சி மோகனன், ஜே.வி மீனாக்சி ஆகியோர் ஜனவரி 29-ம் தேதி பதவி விலகியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து  இந்த அறிக்கையின் விபரங்களை பிசினஸ் ஸ்டேண்டர்ட் நாளிதழ் வெளியிட்டு விட்டது. அதில் அம்பலமான வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய  மோடி அரசின் புளுகுகளை அம்பலப்படுத்தி காங்கிரஸ் முதலான எதிர்க்கட்சிகளும், ஒரு சில பத்திரிகைகளும் எழுதி வருகின்றனர்.

இந்த அறிக்கையில் தெரிய வரும் இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் உழைப்புச் சந்தையில் பங்கேற்பவர்களின் சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பது. உழைப்புச் சந்தை பங்கேற்பு என்பது 16 முதல் 64 வயது வரை உள்ளவர்களில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையை இது குறிக்கிறது. இது 2004-05-ல் 43% ஆக இருந்தது 2011-12ல் 39.5% ஆகக் குறைந்து, 2017-18ல் 36.9% ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

அதாவது, வேலை செய்யத் திறமை உடைய மக்கள் பிரிவினரில் மேலும் மேலும் அதிகமான பிரிவினர் வேலை தேடுவதைக் கூட நிறுத்தியிருக்கின்றனர். 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், குடும்ப வேலை செய்பவர்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள் இவர்கள் இயல்பாகவே வேலை தேடப் போவதில்லை, வேலையிலும் சேர்ந்திருக்கவில்லை. இவர்களைத் தவிர வேலையில் ஈடுபடுபவர்களும், வேலை தேடுபவர்களும் சேர்த்துதான் இந்த உழைப்புச் சந்தை பங்கேற்பு வீதம் கணக்கிடப்படுகிறது. இது ஆரோக்கியமான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் 60%-க்கு மேல் இருக்கிறது (உதாரணமாக சீனாவில் 68% ஆகவும் வங்கதேசத்தில் 56% ஆகவும், ஜப்பானில் 60% ஆகவும் உள்ளது).

நமது நாட்டில் ஏற்கனவே நலிந்து இருந்த இந்த வீதம் கடந்த 5 ஆண்டுகளில் கவலைக்கிடமான மட்டத்துக்கு போய் விட்டிருக்கிறது.

சரி, இவ்வளவு பேர் வேலை தேடுவதையே நிறுத்தி விட்டார்கள். வேலை தேடும் நடைமுறையில் இருப்பவர்களிடையே என்ன நிலைமை என்பதைத்தான் வேலையில்லாதவர்களின் சதவீதம் (6.1%) காட்டுகிறது.

இளைஞர்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசம். 15-29 வயது வரையிலான இளைஞர்களிடையே வேலையின்மை வீதம் ஆண்களுக்கு 2011-12ல் 8.1% ஆக இருந்தது 2017-18ல் 18.7% ஆக உயர்ந்திருக்கிறது. பெண்களுக்கு 2011-12ல் 13.1% ஆக இருந்தது 2017-18ல் 27.2% ஆக உயர்ந்திருக்கிறது.

அதாவது இந்த வயதில் வேலைக்கு போக தயாராக இருக்கும் பெண்களில் 4-ல் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை, ஆண்களில் 6-ல் ஒருவருக்கு இந்த நிலைமை. இவர்கள் போக இந்த வயதில் உள்ளவர்களில் பெரும்பகுதியினர் வேலை செய்யவே முன் வர முடியாத அளவுக்கு பொருளாதார, சமூக காரணங்களால் முடங்கியிருக்கிறார்கள்.

மேலே சொன்ன தரவுகளை உறுதி செய்யும் இன்னொரு விபரம் Centre for Monitoring Indian Economy – CMIE எனப்து ஒரு தனியார் நிறுவனம். அந்நிறுவனம் டிசம்பர் 2018-ல் வேலையின்மை வீதம் 7.4% ஆக இருந்ததாக மதிப்பிட்டிருக்கிறது. அதன் மதிப்பீட்டின்படி 2018 முழுவதும் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே சென்றிருக்கின்றன, 1.1 கோடி வேலை வாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கின்றன.

இதை எல்லாம் பற்றி தாராளவாத முதலாளித்துவாதியான ஸ்வாமினாமிக்ஸ் எழுதும் அய்யருக்கு பதறவில்லை. இவ்வளவு உழைப்பு சக்தி வீணாகி பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறதே, முதலாளிகள் லாபம் ஈட்டுவது தடைப்படுகிறதே என்று கூட அவருக்கு கவலை இல்லை. இளைஞர்களின் ஆற்றல்கள் வீணடிக்கப்படுகின்றனவே என்றெல்லாம் அவர் யோசிக்கவே போவதில்லைதான்.

இந்த நிலைமையிலிருந்து மோடி அரசை காப்பாற்ற வேண்டும் என்றுதான் அவருக்குக் கவலை.  அரசு நிறுவனம் மட்டும் மேலே சொன்ன புள்ளிவிபரத்தை சொல்லியிருந்தால் இது அரசு நிறுவனத்தின் திறன் குறைவு என்று சொல்லி விடலாம். தனியார் நிறுவனமான CMIE தரவுகளும் அதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, புள்ளிவிபரத்தை டபாய்க்க முடியாது.

எனவே, ஒரு பொருளாதாரவியல் 'நிபுணர்' ஆக இந்தக் கவலை அளிக்கும் நிலையைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத இந்த ஜால்ரா பேர்வழி சைடு வாங்கி ஜி.டி.பி வளர்ச்சிக்கு போய் விட்டார். 'மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 7% ஆக உள்ளதே, மேலே சொன்னது உண்மையாக இருந்திருந்தால் அது ஆழமான பொருளாதார பெருமந்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே' என்று கேட்கிறார்.

அதாவது 'உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது, முதலாளிகள் முதலீடு செய்வதும் குறைந்திருக்கிறது. இந்நிலையில் 7% வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் உழைப்பாளர்களின் உற்பத்தித் திறன் பல மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். அப்படி அதிகரித்திருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லையாம். ஏனென்றால் உற்பத்தித் திறன் அதிகரித்திருந்தால் ஏற்றுமதி அதிகரித்திருக்க வேண்டும். அதுவும் குறைந்திருக்கிறது.' இத்தோடு இவரது பொருளாதார அறிவு முடிந்து விடுகிறது.

ஜி.டி.பி கணக்கிடுவதில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் கூட இப்போது விட்டு விடுவோம். அய்யர் யோசிக்கும் திசையிலேயே போய் நாமும் பரிசீலிக்கலாம்.

புதிய முதலீடுகள் இல்லை, உழைப்பாளர் பங்கேற்பு குறைந்திருக்கிறது. இந்நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர வேண்டுமானால் உற்பத்தித் திறன் அதிகரிப்புதான் வழியா?

இன்னும் ஒரு முக்கியமான வழி, தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு தொழிலாளி ஒரு நாளில் உழைக்கும் நேரம் அதிகமானாலும், அவரது உழைப்பின் தீவிரம் அதிகமானாலும் உற்பத்தியின் மதிப்பு அதிகரிக்கத்தான் செய்யும்.
  • டீ பிரேக், உணவு இடைவேளையை குறைத்தல் முதலியன
  • ஓவர் டைம் செய்தல்
    அல்லது 2வது 3வது வேலையில் ஈடுபடுதல் போன்றவை மூலம் ஒரு நாளில் வேலை செய்யும் நேரத்தை ஒரு தொழிலாளி/உழைப்பாளி அதிகரித்துக் கொள்கிறார். 
  • சம்பளம் போதவில்லை என்றால் ஓவர் டைம், அதுவும் போதவில்லை என்றால் காலையில் பேப்பர் போடப் போவது, அதுவும் போதவில்லை என்றால் இரவில் செக்யூரிட்டி வேலைக்கு போவது என்று 3 வேலைகள் வரை செய்பவர்கள் இருக்கிறார்கள்.
  • இதோ போக தொழிற்சாலையில் வேலை தீவிரத்தை அதிகப்படுத்தியும் மதிப்பை அதிகரிக்கலாம்.
இந்த வகையில் ,
  • 2011-12ல் 40 கோடி தொழிலாளர்கள் ஒரு வாரத்துக்கு சராசரியாக 40 மணி நேரம் வேலை செய்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆண்டில்  83,200 கோடி மணி நேரம் (40 கோடி உழைப்பாளர்கள் x வாரத்துக்கு 40 மணி நேரம் உழைப்பு x ஆண்டுக்கு 52 வாரம்) உழைப்புக்கான மதிப்பு படைக்கப்பட்டிருக்கும்.
  • 2017-18-ல் பங்கேற்பு குறைவு, வேலையின்மை வீதம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக 5 கோடி தொழிலாளர்கள் உழைப்பில் ஈடுபடாமல் இந்த எண்ணிக்கை 35 கோடியாக குறைந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாம் (மேலே சொன்ன புள்ளிவிபரங்கள் காட்டுவது இத்தகைய போக்கைத்தான்)

    இவர்கள் ஒரு வாரத்துக்கு சராசரியாக 60 மணி நேரம் உழைப்பதாக வைத்துக் கொள்ளலாம்.

    இப்போது 2017-18ல் மொத்த உழைப்பு 1,09,200 கோடி மணி நேரம். எனவே, குறைவான தொழிலாளர்கள் அதே முதலீடு என்ற நிலையில் உற்பத்தி மதிப்பு 36,000 கோடி மணி நேரம் அதிகரித்திருக்கிறது. அதாவது 6 ஆண்டுகளில் 31.25% அதிகரிப்பு.
(இந்திய உழைப்பாளர்களில் கூலிக்கு வேலை செய்பவர்களும் உண்டு; சொந்தமாக சிறிய கடை, சிறிதளவு நிலம், ஆட்டோ, செய்தொழில் வைத்துக் கொண்டு இயங்குபவர்களும் உண்டு. இரண்டாவது பிரிவினர் தம்மைத் தாமே வருத்திக் கொண்டு வாழ்க்கை பயணத்தை ஓட்ட பணமீட்ட ஓடுகின்றனர்.)

இது மிக அடிப்படையான கணக்கீடு. இன்னும் சிக்கலான விஷயங்களை இதற்குள் கொண்டு வரலாம். ஆனால், இதைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு 'நிபுணர்'தான் தன் பெயரில் ஒரு அறிவியலையே உருவாக்கிக் கொண்டிருக்கின்ற இந்த முதலாளிகளின் கால்நக்கி.

புள்ளிவிபரங்களை அந்த அளவுக்கு பேசி விட்டு இதனால் எல்லாம் மோடியும் பா.ஜ.கவும் தோற்றுவிடப் போவதில்லை என்று முதலாளிகளுக்கு ஆதரவு சொல்ல ஆரம்பிக்கிறார். '

வேலை வாய்ப்பு நிலைமை இவ்வளவு மோசமாக இருந்த போதும் திரும்பத் திரும்ப மாநில தேர்தல்களில் பா.ஜ.க ஜெயித்தது. எனவே பா.ஜ.கவுக்கு ஓட்டு போட்ட மக்கள் எல்லாம் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளவில்லையாம், அல்லது இதை ஒரு பிரச்சனையாக பொருட்படுத்தவில்லையாம்.

அதற்கு ஆதரமாக டிசம்பர் 2018 வரையில் 21 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி செய்து வந்ததாம். அதில் கோவா, மணிப்பூர், பீகார் போன்ற மாநிலங்களில் புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்தது இவருக்கு மறந்து போயிருக்கிறது. ஒட்டு மொத்தமாக கட்சிகளை விலைக்கு வாங்கி வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது நினைவுக்கு வரவில்லை. அரியானாவிலும், மகாராஷ்டிராவிலும் கூட்டணி கட்சிகளையே விழுங்கி ஆட்சியில் அமர்ந்ததும் இவருக்கு தெரியவில்லை. இதெல்லாம் மக்கள் மத்தியில் ஆதரவை பெருக்காமலே கொல்லைப் புற வழியாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்ததற்கான உதாரணங்கள். ஆனால் 21 மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதாலேயே மக்கள் வேலை இழப்புகளை தாங்கிக் கொண்டு மோடியை ஆதரித்திருக்கிறார்கள் என்று கதை விடுகிறார்.

மேலும் உ.பி நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள், டெல்லி சட்டமன்ற தேர்தல், கர்நாடகா சட்ட மன்ற தேர்தல் இவற்றை எல்லாம் பற்றி பேசாமல் விட்டு விடுகிறார்.  சமீபத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் தோற்றாலும் அங்கும் வாக்கு சதவீதம் குறையவில்லையாம். மேலும், அந்த மாநிலங்களில் வரப் போகும் தேர்தலில் ஜெயித்து விடுவோம் என்று பா.ஜ.க நம்புகிறதாம். எனவே, அந்தத் தேர்தல்களிலும் வேலை வாய்ப்பு இழப்பினால் மக்கள் பாதிக்கப்படவில்லையாம். இவரைப் பொறுத்தவரை பா.ஜ.கவினரின் நம்பிக்கைதான் அறிவியலின் ஆதாரம்.

எனவே, வேலை வாய்ப்பு நிலைமைக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் தொடர்பு இல்லையாம்.

ஆகவே, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால்  "முதலாளித்துவ பண முதலைகளே கவலைப் படாதீர்கள். நீங்கள் வழக்கம் போல உங்கள் சூறையாடலை, ஆடம்பர வாழ்க்கையை தொடருங்கள். மோடியும் பா.ஜ.கவும் மதவெறி, இனவெறி, சாதி வெறி, அரசியல் பேரம், அதிகார அமைப்புகளை ஏவி விடுவது, தேர்தல் முறைகேடுகள் என்று ஏதாவது செய்து தேர்தலில் ஜெயித்து தொழிலாளி வர்க்கத்தின் கோபத்திலிருந்து உங்களை காப்பாற்றும் வேலையை செய்து விடுவார்கள்" என்று முதலாளிகளுக்கு என்று தடவிக் கொடுக்கிறார், சுவாமிநாதன் அய்யர்.

கருத்துகள் இல்லை: