புதன், ஏப்ரல் 25, 2007

ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 8

இவ்வளவு நடந்த பிறகும் விடவில்லை. சிறிது காலத்திலேயே 'மீண்டும் 2வது இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு' என்று ஒரு நாள் நிகழ்ச்சி நடத்தினார்கள். இது முதல் தடவை போல பெருங்கூட்டமாக இல்லா விட்டாலும் கணிசமான மக்கள் கூடியிருந்தார்கள்.

இன்னும் நினைவுக்கு வரும் ஒரு நிகழ்ச்சி:

இந்தக் கலவரங்களுக்கு முன்னால் ஆர்எஸ்எஸ் சிறுவர் முகாம் நடக்கப் போவதாகச் சொல்லி எங்கள் சித்தப்பா அழைத்துச் சென்றார். பல்வேறு பகுதிகளிலிருந்தும் குழுக்களாக வந்திருந்தவர்களுடன் நாங்களும் சேர்ந்தோம். நல்ல வேளையாக எங்கள் பள்ளி அருகிலிருந்து வந்த குழுவில் எங்களுக்குத் தெரிந்த முகங்கள் இருந்ததால் தப்பித்தோம்.

வீட்டை விட்டு மூன்று நாட்கள் வந்திருக்கும் புதிய அனுபவத்தில் எல்லாம் வேகமாக ஓடி விட்டன. மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி, எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் எல்லாச் சிறுவர்களுக்கும் ஒரு ஆவணப் படம் காட்டியது.

முகலாயர் காலத்தில் இந்தியா எப்படி துன்பப்படுத்தப்பட்டது என்று விளக்கிக் கொண்டே வரும் போது அக்பரின் படத்தைப் போட்டு இந்துக்களிடம் நட்பு பூண்டு இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு வழி வகுத்தார் என்று அவர் குறிப்பிட்டார். முகலாயப் பேரரசர்களிலேயே அக்பர்தான் நல்லவர் என்று சொன்னார். அதுதான் நாங்கள் பாடத்தில் படித்ததும். அந்தக் கருத்து வெளி வந்ததும் முன்வரிசையில் இருந்து முகாமை நடத்தும் சங்க உறுப்பினர்களிடையே ஒரு இறுக்கம் வந்தது.

இந்த விளக்கம் முடிந்ததும் நான்கைந்து பேர் அவரைச் சூழ்ந்து கொண்டு விவாதிக்க ஆரம்பித்தார்கள் 'எல்லோரையும் விட அக்பர்தான் நமது மிகப் பெரிய எதிரி. நட்பாக இருந்த நம்மை மழுங்கச் செய்ய முயன்றவர்' என்று அவருக்கு உறுதிபடச் சொல்ல, அவரும் மன்னிப்புக் கேட்டு இனிமேல் சரியாகப் புரிந்து கொள்வதாக வாக்களித்தார்.

'ஒருவரை நல்லவர் என்று சொல்வது கூட அபாயமானது, எல்லா மாற்று மதத்தினரும் கொடியவர்கள் என்ற அவர்களது சித்தாந்தத்துக்கு மாற்றாக எதையும் பேசுவது கூடப் பாவம்' என்பதை உறுதிப்படுத்த முயலும் தீவிரக் கருத்துகள் அந்த வயதிலேயே உறுத்தின.
===
இந்துத்துவா இயக்கங்களுக்குத் தேவையான முதல் ஆதாயங்கள் கிடைத்து விட்டன. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்து முன்னணி சார்பில் சுயேச்சையாக போட்டி போட்ட பாலச்சந்தர் என்பவர் சட்டமன்ற உறுப்பினரானார். நாகர்கோவில் தொகுதியில் இரண்டு முறை கடுமையான போட்டிக்குப் பிறகு இந்துத்துவா வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

இதற்குள் பல மாற்றங்கள், நீண்ட கால மக்கள் போராட்டத்துக்கான எல்லைகள் உருவாகியிருந்தன. இந்துக் கல்லூரியில் இந்துத்துவா இயக்கங்களுக்கு இடம் மறுக்க ஆரம்பித்தார்கள். "'இந்து' என்று பெயர் இருப்பதால் அவர்கள் உரிமை கொண்டாடினால் பெயரைக் கூட மாற்ற தயாராக இருப்பதாக' மூத்த பேராசிரியர் ஒருவர் சொன்னதாக அம்மா பேசிக் கொண்டிருந்தார்கள்.

தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தனின் காத்திருத்தல் இவர்களுக்கும் உண்டு. 'உலகத்திலேயே அதிகத் தாக்குதலுக்கு உள்ளாகும் இயக்கம் ஆர்எஸ்எஸ்' என்று நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். இப்படி எல்லோரும் நம்மை எதிர்க்கிறார்களே, நமது அடிப்படைகளை மறுபரீசிலனை செய்யலாமா என்று சிந்தித்தால் நன்றாக இருக்கும்.

குறிப்பு:

இந்து மதத்தை மேம்படுத்த என்ன பணிகள் செய்யலாம் என்ற எனது ஆக்க பூர்வமான கருத்துக்களோடு இந்தத் தொடரை இப்போதைக்கு முடித்துக் கொள்வேன்.

பல முறை யோசித்த பிறகுதான், எதிர்மறை விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற எனது நம்பிக்கையை மீறி இந்த இரண்டு வாரங்களில் இதை எழுத நேரிட்டது. உபி தேர்தலின் போது வெளியான குறுந்தகடு விபரங்களும், பதிவுலகில நடக்கும் சில மாற்றங்களும் எனக்குத் தெரிந்த இந்த விபரங்களை எழுத வேண்டும் என்று தூண்டின. எனக்குத் தெரிந்த வரை யாரையும் தனிப்பட்ட முறையில் விமரிசிக்கவில்லை என்று நம்புகிறேன்.

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Maasi....

Thoool Kilappu....No more Hindtuva people in Thamizmanam. SO what ever you write no one going to object. This what i needed....

Karuppannasamy

வஜ்ரா சொன்னது…

உங்களுக்கோர் நற்செய்தி

http://sankarmanicka.blogspot.com/2007/04/blog-post_25.html

கால்கரி சிவா சொன்னது…

சிவகுமார், என்னுடைய கேள்வியை மீண்டும் கேட்கிறேன். ஆர் எஸ் எஸ் என்ற வெறிபிடித்த சங்கத்தினரால் விழுந்த கொலைகள் எத்தனை?, வெடித்த குண்டுகள் எத்தனை? தற்கொலைப் படையாக மாறிய சிறுவர்கள் எத்தனை?. அவர்களின் கொள்கையை எதிர்த்தனினால் அறுபட்ட தலைகள் எத்தனை? அவர்களை கார்ட்டுனூக வரைந்ததால் வெடித்த கலவரங்கள் எத்தனை?. அவர்களின் தலைவரை இகழ்ந்து விமர்சனம் எழுதியதால் உருண்ட தலைகள் எத்தனை?

இவைகளில் அதிகம் செய்த இயக்கம் பயங்கரமானது என சொல்லும் தைரியம் தங்களுக்கோ எனக்கோ இல்லையே அது ஏன்?

பெயரில்லா சொன்னது…

மாசி,

தங்கள் திருப்பெயரை இனி "மாசு" என்று அறியப்படுத்திக்கொள்ளவும்.

இவ்வளவு கீழத்தரமான வாதங்களுடன் தங்களின் தொடர் - மறுமுனை வாதங்களுக்கு சிறிதும் பதிலளிக்காத (இயலாத???) ஒரு வெற்று ஆதாரமற்ற ஒரு பதிவு. தங்களின் கருத்துகளை கொய்து அதை உண்மை என திரித்து கலந்து படிப்பவர்கள் அறிவிலிகள் என்று எண்ணி ஒரு கட்டுரை எழுதியுள்ளீர்கள். இது இட்டுக்கட்டுரை என்றே நான் அறிகிறேன்.

தி.ராஸ்கோலு சொன்னது…

சிவகுமார்,

நாட்டின் ஒற்றுமையை ஆட்டம் காண வைக்கும் கொடிய விஷம் கொண்ட நாகத்தை எட்டு பகுதியாக மிக நிதானமான முறையில் அலசி உள்ளீர்கள் நன்றிகள் பல!

அதே வேளை இங்கே தங்களுக்கு எதிராக பொறுமை இழந்து வார்த்தைகளைக் கொட்டும் அந்தப் பயங்கர இயக்கத்தின் அனுதாபிகள் / உறுப்பினர்கள் உணர்ச்சி வசப்பட்டு தங்களைத் தரக்குறைவாக அழைத்துத் தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

உடன்பிறப்பு சொன்னது…

//ஆர் எஸ் எஸ் என்ற வெறிபிடித்த சங்கத்தினரால் விழுந்த கொலைகள் எத்தனை//

குஜராத் கலவரங்களுக்கு பின்னரும் இப்படி எல்லாம் கேட்க இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது

அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…

மா.சி உங்கள் அனுபவங்களை என்னுடைய அனுபவங்களுடன் ஒப்பிடவேண்டாம் என்பேன். 'ஒரே விசயத்தை' இரு கோணஙகளில் நாம் பார்க்கவில்லை. மாறாக மண்டைக்காடு கலவரத்தின் ரணங்களை சுமந்த சகோதரிகளை நான் கண்டிருக்கிறேன். கொல்லங்கோடு பகவதி அம்மனுக்கு திருவிழா நடத்தச்சென்று அடியும் உதையும் வெட்டும் வாங்கி அரசு மருத்துவமனையில் அனாதைகளாக படுத்துக்கிடந்த இந்துக்களுக்கு உணவு எடுத்துச்சென்றவர்களில் நானும் ஒருவன். கிறிஸ்தவர்களின் கேலியை வெளிப்படையாக பார்த்திருக்கிறேன். அவர்களின் பிரசுரங்களை தெருமுனைகளில் வாங்கியிருக்கிறேன். அவர்களின் இந்துக்களை இழிவு படுத்தும் நாடகங்களுக்கு சென்றிருக்கிறேன். அதாவது மிகவும் அன்பான கிறிஸ்தவர்கள் அஞ்ஞானியான இந்துவாகிய என்னை நல்வழிப்படுத்த அன்புடன் என்னை அழைத்துச்சென்றார்கள். உங்க பாணியில் சொல்லுவதானால் அங்கு சவ்வுமிட்டாய் கூட வாங்கிகொடுத்தார்கள். வாங்கி க்கொடுத்த அக்கா கிறிஸ்தவர். விற்ற அந்த ஆள் இந்து என்றுதான் நினைக்கிறேன். எப்படிப்பட்ட மதச்சார்பின்மை பார்த்தியளா....என்ன நாடகத்தில் தான் அம்மனை வணங்கும் மோசடிக்காரனை புனித சேவியர் எல்லாருக்கும் முன்னால் காட்டி நல்வழிப்படுத்துகிறார்.. ஆனால் உங்கள் 'அனுபவங்கள்' இவை அல்ல. குறைந்தபட்சம் இந்து எழுச்சி மாநாடு குறித்து அது நடைபெற ஏதுவான காரணிகள் குறித்தாவது குறைந்தபட்ச நேர்மையுடன் அணுகியிருக்கலாம். ஆனால் உங்கள் வளர்ப்பு அனுபவம் உங்களுக்கு கற்பித்த விசயங்கள் வேறானவை போலும் மண்டைக்காடு நிகழ்வுக்கு கட்டியம் கூறிய வேறு சில உண்மைகளைக் குறித்து இங்கே காணவும்
http://arvindneela.blogspot.com/2007/04/blog-post_26.html

மா சிவகுமார் சொன்னது…

//Thoool Kilappu....No more Hindtuva people in Thamizmanam. SO what ever you write no one going to object. This what i needed....//

அனானி,

யார் வேண்டுமானாலும் தமது கருத்துக்களை பின்னூட்டங்களாக வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வஜ்ரா,

தமிழ்மணத்தில் இணைக்கா விட்டாலும், உங்கள் பதிவுக்ளிலும் பின்னூட்டங்களிலும் தொடர்ந்து சந்திக்க முடியும் என்று நம்புகிறேன்.

கால்கரி சிவா,

மக்களிடையே கலகத்தை உருவாக்கி கொலை, அழிவுக்கு வழிவகுப்பவை என்பதைத்தான் எழுதி விளக்க முயற்சி செய்தேன் ஒன்பது பகுதிகளாக.

மற்ற மதங்களை அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சீர்திருத்திக் கொள்ளட்டும். நம்மிடம் இருக்கும் குறைகளை சரிசெய்து கொள்வதுதான் மேன்மைக்கு வழி என்பது இந்து மதம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

ஒவ்வொரு மனிதரையும் என்னை நான் மதிக்கும் அளவு மதிக்கிறேன்.

//இனி "மாசு" என்று அறியப்படுத்திக்கொள்ளவும்.//

என் பெயர் மா சிவகுமார் என்பதன் சுருக்கமாக மாசி என்கிறார்கள். மாசு என்றால் என் பெயரே மாற வேண்டியிருக்கும் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

ராஸ்கோலு,

தரம் குறைந்தா சொற்கள் என்னைப் பாதிக்காது. அவற்றைப் பயன்படுத்தியவர்களின் மனமும் அறிவும்தானே மாசு பட்டிருக்கும் என்று வருந்துகிறேன்.

உடன்பிறப்பு,

1980களுக்குப் பிறகு நடக்கும் எல்லா மதத்தின் பேரிலான கலவரங்களிலும் இந்துத்துவா இயக்கங்களின் திட்டமிடல் இருக்கும் என்று நம்புகிறேன். கலங்கிய குட்டையில்தான் அவர்களுக்கு மீன் கிடைக்கும்.

அரவிந்தன்,

உங்கள் பாதையை இதய சுத்தியோடு மறு பரீசிலனை செய்து கொள்ளுங்கள். இதுதான் இந்து மதம் உங்களுக்குக் கற்றுத் தந்ததா?

உள்நோக்கி தன்னை மேம்படுத்திக் கொள்ளும் தனிநபர்
சார்ந்த சமயம் இந்து மதம். நமது குறைகளுக்கு வெளிக்காரணிகளை பழி சொல்லிக் கொண்டிருப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது.

எனது இறுதி இடுகையில் சொன்ன தீர்வுகளை நடைமுறைப்படுத்தி விடுவதை விட இந்துத்துவா இயக்கங்களின் இன்றைய ஆள்திரட்டும் முறைகள் இந்து சமூகத்திற்கு வளம் சேர்க்கும் என்று நினைக்கிறீர்களா?

அன்புடன்,

மா சிவகுமார்

கால்கரி சிவா சொன்னது…

சிவகுமார், அவரவர்கள் அவரவர் மதங்களை திருத்திக் கொள்ளட்டும் என்பதில் தவறே இல்லை. நாமும் நம்மை சுயவிமர்சனம் செய்து முன்னேறுவதும் தவறில்லை.

ஆனால் அவர்களின் அடக்குமுறை வன்முறை மூளைச்சலவை போன்றவை நம் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிப்பதை பார்த்துக் கொண்டு சுயவிமர்சனம் அல்லது சுயஏளனம் செய்துக் கொண்டிருப்பீர்களா இல்லை உங்கள் சுதந்திரத்தை பாதுகாக்க போரடுவீர்களா?

உடன்பிறப்பே, குஜராத்தில் கலவரம் அதற்குகாரணம் யார்? அதற்கு முன் நாட்டில்(நம் நாடு என்றால் காஷ்மீரும் சேர்த்துதான்_ நடந்த குண்டு வெடிப்புகள் தற்கொலைப்படை தாக்குதல்கள் இதெல்லாம் கணக்கெடுக்க மாட்டீங்களா? ஓட்டு கிடைக்கிறது என்பதற்காக இவ்வளவு தரம் தாழ முடியுமா உங்களாள் ஆ...

மா சிவகுமார் சொன்னது…

கால்கரி சிவா,

நமது நலிவுக்குக் காரணம் சமூகத்தில் இருக்கும் குறைபாடுகள்தான். அவற்றைக் களைவதுதான் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஒரே வழி.

ஆதிக்க சாதியினருக்கு வேண்டுமானால் இன்னும் 100 ஆண்டுகள் பொறுத்திருக்க மனம் இருக்கலாம். பல கோடி நலிவுற்ற மக்களுக்கு தேவை உடனடி தீர்வு. மறு பிறவியில் நல்ல கதி கிடைக்கும் என்ற பேச்சுக்களைக் கேட்டு பொறுமையுடன் காத்திருக்க யாரும் தயாராக இல்லை.

அன்புடன்,

மா சிவகுமார்