சனி, ஏப்ரல் 21, 2007

புதியதோர் உலகம் செய்வோம்

ஏப்ரல் 10ம் தேதியிட்ட இந்து நாளிதழில் ஒரு அரசியல் கட்டுரை. 2009ம் ஆண்டின் G5 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஹில்லாரி கிளின்டனும், பிரெஞ்சு அதிபர் ராயல்், ஜெர்மன் அதிபர் மெர்க்கலும் பங்கு பெறுகிறார்கள். பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கிறார்கள்.

அதை நம்ம ஊருக்கு நீட்டிப் பார்ப்போம். 2010ம் ஆண்டு தெற்காசிய கூட்டு நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மாயாவதியும், பங்களாதேஷ் பிரதமர் கலீடா ஜியாவும், பாகிஸ்தானிய பிரதமர் பெனாசிர் புட்டோவும், நேபாள பிரதமர் சஹானா பிரதானும்் (இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார்). சந்திக்கிறார்கள்.

நேபாள இடைக்கால அரசில் மாவோயிஸ்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர் பதவிகளில் வெளியுறவுத் துறைக்கு பொறுப்பேற்றிருப்பவர் சஹானா பிரதான். சார்க் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர் ஒரு வகையாக ஒதுங்கித் தெரிந்தார்.

'மேற்கத்திய உடை உடுத்து, முள்ளுக் கரண்டியால் சாப்பிட்டு விட்டு ஒயின் உறிஞ்சும் கூட்டத்தினர் மட்டும்தான் வெளியுறவுத் துறை போன்ற அமைச்சகங்களை நிர்வகிக்க முடியும்' என்று இருக்கும் மூடம் உடைய வேண்டும்.

குடியரசுத் தலைவர் ஆனதும், கழுத்து வரை மூடிய பணக்கார உடையை அணிந்தால்தான் ஆச்சு என்று அடம் பிடித்து அப்துல் கலாமை உடை மாறச் செய்தார்களாம். தேவ கவுடா பிரதமரானதும், வேட்டி கட்டிய ஒருவர் பிரதமரா என்று பல தில்லி வாசிகளுக்கு வயிறு எரிந்ததாம்.

அரசியலில், அரசுக்குத் தலைமை வகிக்க வர வேண்டியது, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வளர்ந்தவர்கள்.
  • குடிசையின் உட்புறத்தில் வாழ்ந்து தெரிந்தவர் உள்துறை அமைச்சராக வேண்டும்.
  • சேரியில் வாழ்க்கை நடத்திப் பழக்கப்பட்ட பெண்மணி ஒருவர் நிதியமைச்சர் ஆக வேண்டும்.
  • வெளியுறவுத் துறையும், பாதுகாப்புத் துறையும், பிரதமர் அலுவலகமும் பெண்களுக்கே ஒதுக்கப்பட்டு விட வேண்டும்.
  • நாட்டின் நல்லுறவுகளை வளர்க்க, பாதுகாப்புக்காக நாட்டுப் படைகளை போருக்கு அனுப்ப, இதை எல்லாம் மேய்க்க குழந்தை பெற்ற வலி தெரியாத ஆண்களுக்கு உரிமை கிடையாது.
ஹைதராபாத்தில் ஓய்வெடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் கூட குளிரூட்டப்பட்ட வண்டியிலிருந்து கீழே இறங்க முடியாத ஜெயலலிதாக்களோ, அறுபது கால பொது வாழ்வில் திருக்குவளை ஏழையாகத் துவங்கி இன்று குடும்பம் முழுவதும் கோடீஸ்வரர்களால் நிரப்பிக் கொண்ட கருணாநிதிகளோ தேவையில்லை.

மாயாவதி என்னென்ன ஊழல் செய்தார், திருமாவளவன் எப்படி எப்படி சொதப்பினார் என்று பட்டியலிட ஆரம்பிக்கலாம். ஆனால் அவர்களின் ஆட்சி நாட்டின் பெரும்பான்மையான வயிற்றில் ஈரத்துணி போட்டுக் கொண்டு தூங்கும் கூட்டத்தினருக்கு வழி காட்டுவதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் அந்த பெரும்பான்மை மக்களின் வலி அவர்களுக்குப் புரியும்.

தன் வீட்டில் வரவுசெலவு திட்டமிடலே பல ஆண்டுகளாகத் தேவைப்படவில்லை என்று சொல்லும் ப சிதம்பரம் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் ஏழைகளின் துன்பம் எப்படிப் புரியும்?

5 கருத்துகள்:

வினையூக்கி சொன்னது…

//தன் வீட்டில் வரவுசெலவு திட்டமிடலே பல ஆண்டுகளாகத் தேவைப்படவில்லை என்று சொல்லும் ப சிதம்பரம் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் ஏழைகளின் துன்பம் எப்படிப் புரியும்?//
:):):):)

K.R.அதியமான் சொன்னது…

Mayawathi is worse than all others
and she has forgotton her roots or
her poor brethren. she will ruin the nation if she becomes PM.
it is a wrong to assume that those
from poor backgrounds will be most
sensitive to the needs of poor while the rich are insensitive and
ruthless. these are gross genralisations. there are very good
leaders and philonthropists among rich. And P.Chidambaram is better
than many other politicians. he has
his demerits, but his wealthy
background doesn't make him unfit.
he started his career as a trade
union leader and knows both the sides of labour unions and effects
of 'socialism'

Dr.Krishnasamy and Ramadass are
worst among the lot and are unethical, fasist and corrupt.
they do not tolerate dissent or
opposition to their views and use
goondas and muscle power.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி வினையூக்கி.

அதியமான்,

பெரிய படிப்புப் படித்தவர்கள்தான் ஆட்சி அதிகாரிகளாக இருக்கிறார்களே. அரசியல் தலைமையாவது பெரும்பான்மை மக்களின் நிலையைப்ப பிரதிபலிக்கும் பிரதிநிதிகளின் கையில் இருக்கட்டுமே. அப்போதுதான் சரியான சமநிலை இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

Nehru was from a wealthy family and
was well educated. wasn't he
sensitive to the poor ?

does leaders from poor background
and not well educated make better
and sensitive leaders ? or are they
less corrupt ? most of our leaders
are from such backgrounds..

மா சிவகுமார் சொன்னது…

அதியமான்,

'படிப்பும், செல்வச் செழிப்பான வாழ்க்கை தெரிந்தவர்கள் மட்டும்தான் உயர் பதவி வகிக்க வேண்டும்' என்று இருப்பதைத்தான் எதிர்த்தேன். மக்களின் நிலையை உணரக் கூடிய தன்மைதான் தேவை நல்ல தலைவர்களுக்கு.

அன்புடன்,

மா சிவகுமார்