சனி, ஜூலை 01, 2006

இட ஒதுக்கீடு - ஒரு புதிய அணுகுமுறை

சதீஷ் தேஷ்பாண்டே என்ற சமூக அறிவியிலாளரும், யேகேஷ் யாதவ் என்ற புள்ளி விபர வல்லுநரும் தயாரித்துள்ள இட ஒதுக்கீட்டுக்கு மாற்றான அணுகுமுறையைப் படித்தேன்். சாதி என்ற ஒரே காரணியை மற்றும் நம்பாமல், அதற்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுத்து கூடவே பெற்றோரின் கல்வி/வேலை பின்னணி, படித்த பள்ளியின் தரம், வாழும் பகுதியின் நிலைமை, ஆணா பெண்ணா என்ற கேள்வி அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மே 22, 23 தேதி இந்து நாளிதழில் இரண்டு பகுதியாக வெளியாகிய இந்தக் கட்டுரை முதலில் பிற்படுத்தப்பட்ட, வாய்ப்புகள் குறைந்த பகுதியினருக்கு உதவி செய்ய வேண்டியதன் தேவையை அலசியது. இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு பின் தங்கச் செய்யும் காரணிக்கும் மதிப்பெண்களைக் கொடுக்கும் முறையை விளக்குகிறார்கள்.

தாழ்த்தப்படோருக்கு ஒதுக்கப்பட்ட 22% தவிர்த்து எஞ்சியிருக்கும் 78% இடங்களுக்குப் போட்டியிடும் மாணவர்கள் அவர்கள் தேர்வில் எடுத்த மதிப்பெண்களோடு (80%), கூடுதல் காரணிகளுக்கான மதிப்பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு இடங்களை ஒதுக்கலாம். அதாவது இப்போது கணக்கு (100), இயற்பியல் (50), வேதியல் (50), நுழைவுத்தேர்வு (50) என்று இருப்பதுடன் சமூகக் காரணிகளுக்கான மதிப்பெண்கள் 50 சேர்த்து 300க்கு தரப்பட்டியல் தயாரிக்கலாம்.

முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெரிய நகரத்தில் வசித்து, ஆங்கில ஊடகப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஒரு மருத்துவர் தந்தை/ஆசிரியர் தாயின் மகனுக்கு சமூகக் காரணி மதிப்பெண்கள் எதுவும் கிடைக்காது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறிய கிராமத்தில் படித்து, அரசு பள்ளியில் இறுதி வகுப்புகளை முடித்த விவசாயக் குடும்பத்தின் மகளுக்கு 50 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு, அவரது தர வரிசையை அவருக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு ஈடு செய்து மாற்றி அமைக்கலாம்.

மற்றவர்களுக்கு எவ்வளவு பின் தங்கும் காரணிகள் உள்ளனவோ, அதற்கேற்றவாறு சமூக மதிப்பெண்கள் கிடைக்கும்.

இதில் என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் வரும். இதை இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவரும், ஆதரிப்பவரும் ஏற்றுக் கொள்வார்களா?

கருத்துகள் இல்லை: