செவ்வாய், ஆகஸ்ட் 15, 2006

விடை தேடும் கேள்விகள்? (economics 2)

பொருளாதாரவியல் அணுகுமுறைகள்

தனி மனிதர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் எப்படி இயங்குகின்றன என்று படிப்பது மைக்ரோ எகனாமிக்ஸ் எனப்படும் பிரிவு. அரசுகள், கொள்கைகள், பணம் அச்சடிப்பது, வட்டி வீதம் நிர்ணயிப்பது போன்றவற்றைப் படிப்பது மேக்ரோ எகனாமிக்ஸ் எனப்படும் பிரிவு. 1776ல் வெளியான ஆதம் ஸ்மித்தின் நூல்தான் மைக்ரோ எகனாமிக்ஸை முதலில் முறையாக அலசிப் பார்த்தது. 1935ல் கீன்ஸ் என்பவர் வெளியிட்ட கருத்துக்கள்தான் மேக்ரொ எகனாமிக்ஸின் அடிப்படை. இந்த இரண்டும் இணைந்ததுதான் எந்த ஒரு சமூகத்தின் பொருளாதார நடவடிக்கைகள்.

எல்லா துறைகளைப் போல பொருளாதாரவியலும் அறிவியல் அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. தமிழ் நாடு நிதி நிலை திட்டத்தில் இலவச தொலைக்காட்சி திட்டம் அறிவிக்கப்படுவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை, இதே மாதிரி கடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு அப்போது திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இப்போதைய நிலவரத்தின் விபரங்களை கலந்து கண்டு பிடிக்க முயற்சி செய்யலாம். இதிலும் ஒரு சில தப்புத் தாளங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றன.
  • போன தடவை ப சிதம்பரம் நிதித் துறை அமைச்சராக இருந்த போது, பங்குச் சந்தைக் குறியீடு உயர்ந்தது. இந்த முறையும் அவர் அமைச்சராகி விட்டார். நாம் போய் பங்குச் சந்தையில் முதலீடு செய்வோம் என்று ஒருவர் முடிவு எடுத்தால் அவரது பணம் மூழ்கிப் போய் விடலாம்.

  • ஒருவருக்கு அமோக விளைச்சல் கிடைத்தால் அவர் பணக்காரராகி விடுவார். நாட்டில் எல்லா விவசாயிகளுக்கும் விளைச்சல் அதிகமாகி விட்டால், எல்லோரும் ஏழையாகி விடுவார்கள்.

  • ஒருவருக்கு நிறையப் பணம் கிடைத்தால் அவர் என்ன நினைத்தாலும் செய்து கொள்ளலாம். எல்லோருக்கும் நிறையப் பணம் கிடைத்து விட்டால் எல்லோருக்கும் சிரமம்தான்.

    இதெல்லாம் நடைமுறையில் நிகழும் சில உண்மைகள். இதில் எந்த மந்திரமோ மாயமோ கிடையாது.

    சின்ன வயதில் நான், "அரசாங்கம் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும். பேசாமல் நோட்டு அடித்து ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் என்று எல்லாருக்கும் கொடுத்து விட வேண்டியதுதானே" என்று நினைப்பதுண்டு. அப்படிக் கொடுத்தால் நாட்டின் வறுமை ஏன் தீர்ந்து விடாது என்று பொருளாதாரம் அறிவியல் பூர்வமாக விளக்கி விடுகிறது.

    இவ்வளவு நோட்டு அடித்தால் இவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் எல்லாம் இப்போது இல்லா விட்டாலும் எந்த அரசும் அப்படிச் செய்து தம் மக்களுக்கு உதவி விட முடியாது. அப்படி முயற்சி செய்த அரசுகளின் வரலாறுகளும் உண்டு.

    இதை எல்லாம் விளங்கிக் கொள்ள பொருளாதாரப் படிப்பு உதவும்.

  1. நம்மிடம் இருக்கும் அளவான வளங்களை பயன்படுத்தி என்ன உருவாக்க வேண்டும்?
    பிட்சாக்களா, இட்டிலிகளா?
    ஆயிரம் பொதுப் பள்ளிகளா அல்லது நான்கு உயர் மட்ட பள்ளிகளா?

  2. எப்படி உருவாக்க வேண்டும்?
    வீட்டிலேயே இட்டிலி செய்ய வேண்டுமா,
    அல்லது வெளியில் போய் சாப்பிட வேண்டுமா,
    அல்லது வெளியில் மாவு வாங்கி வீட்டில் செய்ய வேண்டுமா?
    பள்ளிகளை அரசு நடத்த வேண்டுமா,
    அல்லது தனியார் நடத்த வேண்டுமா?

  3. யாருக்குப் போய்ச் சேர வேண்டும்?
    இட்டிலி அப்பாவுக்கு நான்கு, அம்மாவுக்கு மூன்று, அண்ணனுக்கு இரண்டு என்று கொடுக்க வேண்டுமா ?
    அல்லது நான்கு பேருக்கும் ஆளுக்கு இரண்டரை இட்டிலி கொடுக்க் வேண்டுமா?
    பள்ளியில் ஏழை மாணவர்கள் படிக்க வேண்டுமா? அல்லது பணம் இருப்பவர்கள் மட்டும்தான் சேர முடியுமா?
    பள்ளி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க இட ஒதுக்கீடு வேண்டுமா இல்லையா?


இந்த மூன்று கேள்விகளுக்கு விடை தேடுவதுதான் பொருளாதார கொள்கைகளின் முயற்சி.

பொருளாதார கோட்பாடுகள்
எல்லாம் சீராக இருக்க வேண்டும் என்று கனவு காணும் போது உருவாவது சோவியத் யூனியன் போன்ற திட்டமிடும் பொருளாதார முறை. ஒரு மத்தியக் குழு, இந்த ஆண்டு என்னென்ன உற்பத்தி செய்ய வேண்டும் அது எங்கு எப்படி உற்பத்தி செய்யப்பட வேண்டும். உற்பத்தியான பிறகு யாருக்கு போய் சேர வேண்டும் என்று திட்டம் போட்டு எல்லோருக்கும் கட்டளை அனுப்பி விடுவது ஒரு வகை.


ஒவ்வொருத்தரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டியது. எதில் லாபம் நிறையக் கிடைக்குமோ அதில் முதலீடுகள் செய்யப்பட்டு அது உற்பத்தி செய்யப்படுகிறது. எவ்வளவு குறைந்த செலவில் வேலை முடியுமோ அந்த வழியில் வேலை நடக்கிறது. யார் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்ள முடியுமோ அவருக்கு பொருட்கள் போய்ச் சேருகின்றன. இப்படி தனி மனிதர்கள், வணிக நிறுவனங்களும் சந்தையின் மூலம் விலை, லாபம் நஷ்டம், ஊதியம் என்று இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை காண்பது சந்தைப் பொருளாதார முறை.

3 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

சுலபமா இருக்கறதைப்போல் தோற்றமளிக்கும் கஷ்டமான கேள்விகள் இவை.

ILA (a) இளா சொன்னது…

ரொம்ப கஷ்டமான கேள்விங்க தான், ஆனா பதில்தான்??

மா சிவகுமார் சொன்னது…

இல்லைங்க, கஷ்டம் எல்லாம் கிடையாது.

ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு மனிதரும் தினசரி விடையளித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்தாம் இவை. அதை முறைப்படி புரிந்து கொள்ளாமல் செய்தாலும், விடைகள் என்னவோ சரியாகவே அமைகின்றன. அதுதான் சந்தைப் பொருளாதரத்தின் மாயக்கை.

அன்புடன்,

மா சிவகுமார்