செவ்வாய், ஏப்ரல் 05, 2011

குளச்சல் தொகுதியில் #defeatcongress

"காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது" என்ற பரப்புரையை (உள்ளடக்கம் கீழே) ஒரு A4 அளவு தாளில் இரண்டு பிரதிகள் வரும்படி அச்செடுத்து நகல் செய்து வைத்திருந்தார் நண்பர். (ஒரு தாளில் 2 பக்கங்கள் அச்சிடுதல் என்ற வசதியைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம்).

வெளியூரிலிருந்து வருவதாகச் சொன்ன இன்னொரு நண்பரும் சேர்ந்து கொள்ளப் புறப்பட்டோம். (மொத்தம் 6 பேர்). தென்னை, ரப்பர் மரங்கள் சூழ வீடுகள் இருக்கும் கிராமம். தொடர்ச்சியான தோட்டங்கள், நடுநடுவே வீடுகள், குளுகுளுவென்ற சூழல். வீடு வீடாக போய் துண்டு பிரசுரத்தைக் கொடுத்தோம். பெரும்பாலான இடங்களில் நின்று பேசவில்லை.

கையில் கொடுக்கும் போதே 'காங்கிரசுக்கு ஓட்டு போடக் கூடாது என்று சொல்ல வந்திருக்கிறோம்' என்று சொல்லிக் கொடுத்தோம். ஈழப் படுகொலைகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளடக்கிய வெளியீடு ஒன்றும் கைவசம் இருந்தது.

'தமிழர்களுக்கு எதிராக, ஈழப் படுகொலைகளுக்கு ஆதரவாக, மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்காத காங்கிரசு கட்சிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் வாக்கு வீதம் குறைய வேண்டும். வெற்றி வீதம் குறைய வேண்டும். அப்படிக் குறைந்ததற்குக் காரணம் ஈழப் படுகொலைகளும், மீனவர் மீதான தாக்குதல்களும்தான் என்ற கருத்து வெளியாக வேண்டும்' 

அதற்காகத்தான் இந்த பிரச்சாரம்.

அதிமுக வேட்பாளரின் பிரசுரங்களுடன் கூட வந்து சேர்ந்து கொள்ள முயன்ற ஒருவரை சிறிது நேரத்துக்குப் பிறகு வெட்டி விட்டோம்.

'எந்தக் கட்சி சார்பாகவும் நாங்கள் வரவில்லை. காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க என்று மட்டும் சொல்கிறோம்'

'அப்ப யாருக்கு ஓட்டு போடணும்?'

'காங்கிரசு தவிர்த்த மற்ற வேட்பாளர்களில் உங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள்'

'காங்கிரசுக்கு எதிரான எங்கள் பிரச்சாரம் மற்ற கட்சிகளுக்கு சாதகமாக அமையலாம். குளச்சல் தொகுதியில் அதிமுகவுக்கும், விளவங்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும், கிள்ளியூர் தொகுதியில் போட்டி காங்கிரசு வேட்பாளருக்கும் ஆதாயம் கிடைக்கலாம். ஆனால், எங்கள் நோக்கம் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் கட்சிக்குத் தமிழ்நாட்டில் ஆதரவு கிடைக்காது என்பதை காட்டுவதே. அதனால் ஒரு ஓட்டு ஆனாலும் காங்கிரசுக்கு போடாதீர்கள். காங்கிரசின் வாக்கு சதவீதம் குறைய வேண்டும். காங்கிரசுடன் எதிர்காலத்தில் யாரும் கூட்டணி அமைக்கும் தேவை இருக்கக் கூடாது. தேர்தலுக்குப் பிறகான கூட்டணிகளில் காங்கிரசுக்கு இடம் இல்லாமல் போக வேண்டும்.'

இந்தப் பகுதி மக்கள் பரம்பரை பரம்பரையாக காங்கிரசு ஆதரவாளர்கள். சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி, நேசமணியின் கட்சி என்ற ஆதரவுடன் பலமாக இருக்கிறது காங்கிரசு. காங்கிரசுடன் கூட்டணி வைப்பதன் மூலம் திமுக / அதிமுக கால் ஊன்ற ஆரம்பித்தார்கள். காங்கிரசும் திமுகவும் கூட்டணி சேரும் போது எதிர்த்து நிற்பவர்களுக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்து போகும்.

தீவிர காங்கிரசு ஆதரவாளரான ஒருவருடன் பேசும் போது, காந்தியின், நேருவின், நேசமணியின் காங்கிரசு இல்லை என்பதையும், தமிழர்களுக்கு நல்லது நடக்க காங்கிரசின் சக்தி குறைக்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டார். 'இப்போ புரியுது, என் வோட்டு காங்கிரசுக்குக் கிடையாது' என்று வந்து விட்டார்.

பெண்கள் சிலரிடம், 'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடுமைகளை மறந்திருக்க மாட்டோம். லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள். நம்ம மீனவர்களை கடலில் சுடுகிறார்கள். வயதான அந்த அம்மா, இங்க மருத்துவ சிகிச்சைக்குத்தானே வந்தார், அவரை உள்ளே கூட விடாமல் விரட்டி அடித்தார்களே' என்று சொன்னதும் புரிதல் முகத்தில் தெரிந்தது.

பார்வதி அம்மாவுக்கு மருத்து சிகிச்சை மறுத்தது பெண்களை வருத்தப்படுத்திய ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு ஈழத் தமிழருக்கு எதிரான மத்திய அரசின் கொள்களின் ஒரு வெளிப்பாடு. அதைக் குறியீட்டாக வைத்து தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

வீட்டுச் சுவரில் கைச்சின்னத்துக்கு விளம்பரம் பெரிதாக வரைந்திருந்தவரிடம் போய்ப் பேசினோம். 

'ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்த வைகோவை ஆணவத்துடன் வெளியேற்றிய ஜெயலலிதாவை முதலில் ஒழிக்க வேண்டும். அதுக்கு இந்தத் தடவை நான் காங்கிரசுக்கு ஓட்டு போடுவேன்'. 
'உங்கள் நிலைப்பாடு புரிகிறது. எங்கள் கருத்துக்களையும் யோசித்துப் பாருங்கள்' என்று சொல்லி வந்தோம்.

வழியில் நின்ற பேருந்தின் ஜன்னல் வழியாக பிரசுரங்களைக் கொடுத்தோம்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்த இரண்டு நண்பர்கள் திருவட்டாரில் இருந்து வந்தார்கள். தேநீர் இடைவேளைக்குப் பிறகு பிரதான சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் கடைகளிலும் வீடுகளிலும் வினியோகித்தோம். படித்தவர்கள், சிந்தனையாளர்கள், இளைஞர்கள் மத்தியில் ஈழ நிகழ்வுகளைப் பற்றிய கோபமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வும் இருக்கிறது.

சேரிக்கரை பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி, பள்ளியாடி ரயில் நிலையம் வரை போனோம்.

ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருந்தவர்களிடமும் துண்டறிக்கையைக் கொடுத்து விட்டு சில நண்பர்களிடம் புகைப்படப் புத்தகத்தைக் காட்டினோம்.

வைகோ, திருமாவளவன், ராமதாஸ், நெடுமாறன், சீமான் போன்றவர்கள் சேர்ந்து மூன்றாவது அணி ஏற்படுத்தியிருந்தால்  'யாருக்கு ஓட்டு போடுவது என்று கேட்கும் மக்களிடம், இந்த அணிக்குப் போடுங்கள் என்று சொல்லியிருக்கலாம்'



வினியோகித்த பிரசுரத்தின் உள்ளடக்கம்


தேர்தல் பிரச்சாரத்தில் பொதுவாக ஏதாவது ஒரு கட்சியின் சார்பில் அந்தக் கட்சி வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளைக் கேட்டு வருவார்கள்


நாங்கள் ஒரு கட்சியை எதிர்த்து அந்தக் கட்சி வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை தராதீர்கள் என்று கேட்க வருகின்றோம்.
யாருக்கு? ஏன்?

இன்றைய காங்கிரஸ் கட்சி காந்தியின் நேருவின் காமராசரின் நேசமணியின் காங்கிரஸ் இல்லை.
  • பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு நமது மக்களை அடகு வைக்கும் கட்சி
காங்கிரஸ்
  • தமிழ்நாட்டின் உரிமைகளையும்,
    தமிழ் மொழியின் வளர்ச்சியையும்,
    தமிழ் இனத்தின் எதிர்காலத்தையும் அலட்சியப்படுத்தும் கட்சி
காங்கிரஸ்
  • மக்களுக்காக பணி புரியாமல் தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளை மட்டும் வாங்கிக் கொண்டு பதவிகளைப் பிடிக்கும் போலி தலைவர்களின் கட்சி
காங்கிரஸ்
  • 500க்கும் மேற்பட்ட மீனவர்களின் உயிரையும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதரத்தையும் பலியிட்டது
காங்கிரஸ்
  • லட்சக்கணக்கான தமிழர்களின் இனப்படுகொலைக்குக் காரணமான கட்சி
காங்கிரஸ்

நமது குழந்தைகள் எதிர்காலத்தில் பாதுகாப்பாக வாழ, கௌரவத்துடன் வாழ, நமது மக்கள் தலைநிமிர்ந்து நடக்க
காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்

காங்கிரசின் குற்றங்களுக்குத் தண்டனையாக தமிழ்நாட்டிலிருந்து காங்கிரசை முழுவதுமாக ஒழிப்போம்

காங்கிரசுக்கு எதிரான உங்கள் வாக்கு,
நமது சுயமரியாதைக்கு ஒரு சாட்சி.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

உங்களையும் உங்கள் நண்பர்களையும் இரு கரங்கள் குவித்து வணங்கினேன் மானசீகமாக. நன்றி.