செவ்வாய், ஏப்ரல் 25, 2006

தினமலர் == கட்டுரை மலர - 1

"செய்திகளே அப்படியே தரும் ஒரே நாளிதழ்" என்று சில நாட்களுக்கு முன் தினமலர் விளம்பரம் செய்தது. பொய் சொல்கிறோம் என்று கூச்சமே இல்லாமல் சொல்லப்பட்ட பச்சைப் பொய் அது.

விகடனோ, குமுதமோ ஏன் துக்ளக்கோ படிக்கும்போது அவை செய்தித்தாள்கள் இல்லை, பத்திரிகைகள் என்று மனதில் கொண்டு ் படிக்கிறோம். அவற்றில் எழுதப்பட்டவை எழுதுபவரின் சொந்தக் கருத்துகள் கலந்து உள்ளன என்று தெரியும்.

இந்து, தினமணி, தினகரன், தினமலர் போன்ற நாளிதழ்கள் (செய்தித் தாள்கள்) பெரும் பகுதியில் நடந்த செய்திகளை கூறுவதுதான் வழக்கம். ஆசிரியர் பக்கம், வாசகர் கடிதம், கருத்துகள் பகுதிகளில் தம்முடைய கருத்துகளைக் கலந்து எழுதுவார்கள்.

இதை உடைத்து எறிந்தது தினமலர். உடைத்ததும் இல்லாமல், தான் செய்தித் தாளாகத் தான் செயல் புரிவதாக விளம்பரமும் செய்து வருகிறது.

எனக்கு நினைவு தெரிந்து எங்கள் வீட்டில் வாங்கிய செய்தித்தாள் தினமலர்தான். தினத்தந்தி டீக்கடையில் படிக்கத்தான் சரி, தினகரன் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாங்குவார்கள், தினமணி படிக்க முடியாதது, தினமலரில்தான் உள்ளூர் செய்திகள் நிறைய வரும். எங்கள் ஊரில் கொஞ்சம் வசதி உள்ளவர்கள் இறந்து விட்டால் அன்னாருக்கு நினைவு அஞ்சலி கொடுக்க பயன்படும் பத்திரிகை தினமலர்தான்.

எங்க அம்மாவின் கருத்துப்படி, ஊரில என்ன நடக்கிறது யார் யார் போய் சேர்ந்த்துட்டா என்று தெரிந்து கொள்ள தினமலர்தான் சரி. இந்துப் பத்திரிகை வாங்கும் எங்க பக்கத்து வீடுகளில் எல்லாம் தினமலர் எங்கள் வீட்டிலிருந்து வாங்கிச் சென்று படிப்பார்கள்.

நான் தினமலர் படித்தது 1980- 90 ஆண்டுகளில்.

தினமலரில் கீழ்த்தரமான செய்தி வெளியீட்டின் முதல் உதாரணம் எனக்குப் பட்டது, 1987 வாக்கில். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், அப்போதைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கிற்கும் நிழல் யுத்தம் நடந்து வந்தது. அரசு அனுப்பும் மசோதாக்களை அங்கீகரித்து அனுப்பாமல் காலம் தாழ்த்துவது, பிரதமரை அலட்சியம் செய்வது என்று குடியரசுத் தலைவர் பதட்டத்தை உருவாக்கி வந்தார். போபோர்சு விவகாரத்தில் ராஜீவும் கேள்விகளைச் சந்தித்து வந்தார்.

ஒரு நாள் காலையில் தினமலரின் முதன்மை தலைப்புச் செய்தி

பிரதமர் டிஸ்மிஸ

அது என்னவாம், பிஜி நாட்டில் ராணுவம் புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றி பிரதமரை பதவியிறக்கம் செய்து விட்டது. அதைத்தான் நமது செல்ல நாளிதழ் இப்படி தலைப்பு போட்டது. மலிவான உத்தி என்று அப்போதே எனக்குப் பட்டது.

கருத்துகள் இல்லை: