செவ்வாய், ஏப்ரல் 25, 2006

நிலச் சூதாட்டம்

"இருக்கிற காசில் ரெண்டு கிரவுண்டு நிலம் வாங்கிப் போடு, இரண்டு வருஷத்தில நாலு மடங்கு ஏறி விடும். தங்க விலதான் எப்பவும் ஏறிக் கொண்டே இருக்கும், பத்து பவுன் வாங்கி வைத்தால் நல்ல பாதுகாப்பு." கையில் நாலு காசு கிடைத்தால் நமக்கு வரும் முதல் எண்ணம் இதுதான்.

பணத்தை முதலீடு செய்வதை மூன்று வகைகளாகப் பிரிப்பேன். முதல் வகை சூதாட்டம் - சூதாட்ட அரங்கிற்கு சென்று குறிப்பிட விளையாட்டில் பண்த்தைக் கட்டினால், பல மடங்கு கிடைக்கலாம். போனால் எல்லாம் போச்சு.

இரண்டாவது வகை ஆக்கம் செய்யும் முதலீடுகள். இந்தக் காசை ஒரு தொழிலில் போட்டு அதில் விளையும் பொருட்களை விற்று பணத்தைப்் பெருக்குவது இதில் சேரும். தொழில் சொந்தத் தொழிலாகவோ, பிறரது தொழிலாகவோ இருக்கலாம்.

மூன்றாவது வகை - மேலே இரண்டுக்கும் இடையில் சூதாட்டத்துக்கு கொஞ்சம் அருகில் இருப்பது. Speculation எனப்படும் இத்தகைய முதலீடுகள் மதிப்பில் உயர்வது உங்கள் கையில் இல்லை. பிறரது செயல்கள், திட்டங்கள், எதிர்பார்ப்புகள்தான் இந்த முதலீடுகளை வளரச்செய்யும்.

கூடுவாஞ்சேரி அருகில் ஒரு லட்சத்துக்கு நான்கு ஆண்டுகள் முன்பு வாங்கிப் போட்ட மனை இன்று ஐம்பது லட்சத்துக்கு விலை போவது, வாங்கியவர் வியர்வை சிந்தி உழைத்ததால் நடந்து விடவில்லை. பக்கத்தில் புதிய தொழிற்பேட்டை வந்ததும், அரசு நல்ல சாலைகள் போட்டதும், பிறர் அந்தப் பகுதியில் மனை வாங்க முற்பட்டதும்தான் காரணம்.

இந்த வகையான மதிப்பு அதிகரிப்பின் பயன் சமூகத்துக்கே போய்ச் சேர வேண்டும் என்றுதான், அரசு நில விற்பனை மீது வரி விதிக்கிறது. அதையும் ஏய்ப்பதுதான் மற்ற வகையில் நேர்மையானவர்கள் கூட செய்ய வேண்டியிருக்கிறது.

சீனா போன்ற பொதுவுடமை நாடுகளில், எல்லா நிலங்களும் அரசுடமை. தேவைக்கேற்ப நீண்ட கால பயன்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ் தனி மனிதர்களும், நிறுவனங்களும் அரசிடமிருந்து நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

தனி மனிதர்கள் தங்கம் வாங்குவதும் இது போலத்தான்.

கருத்துகள் இல்லை: