வெள்ளி, ஏப்ரல் 21, 2006

எம்ஜிஆர் - 2

எம்ஜிஆர் செய்த இன்னொரு நல்ல முடிவு தொழில்கல்வி சேர்க்கைக்கு நேர்முக முறையை ஒழித்து நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியது. பணம் கொடுத்தால்தான் இடம் கிடைக்கும் என்றிருந்த நிலை மாறி, மாநிலத்தின் எந்த மூலையிருந்தும் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களுக்குரிய இடம், வெளிப்படையான முறையில் கிடைக்க வழி வகுத்தது நுழைவுத் தேர்வு முறை.

இதை எல்லாம் செய்த பிறகு பார்த்தால் தொழில் கல்விக்கான இடங்களுக்குப் போட்டியிடும் மாணவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகி விட்டது. சமூக வாய்ப்புகளில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை மனதில் கொண்டு செயல்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு முறை தந்தக் கோபுரங்களின் கதவுகளை அவர்களுக்கும் திறக்க முன் வந்த போது, அதுவரை நமக்கெல்லாம் எங்கே இடம் கிடைக்கப் போகிறது என்று இருந்து விட்ட பெருவாரியான மாணவர் கூட்டம், புதிய நம்பிக்கையில் தொழிற்கல்விக் கூடங்களினுள் நுழைய முற்பட்டனர்.

இதற்கான விடைதான் தனியார் பொறியியல் கல்லூரிகள். அவற்றை ஆரம்பித்து வைத்த பெருமையும் எம்ஜிஆரைத்தான் சேரும். பணம் பண்ணும் தொழிற்கூடங்களாக மாறி விட்டதாக பழிக்கப்படுபவையாக பல கல்லூரிகள் இருந்தாலும், பல தரமான கல்வியை பரவலாக கிடைக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளன. அப்படி உருவாக்கப்பட்ட இளம் பொறியாளர் படைதான், மாநிலத்தின் தகவல் தொடர்பு துறை வளத்துக்கு வழி வகுக்கிறார்கள்.

எம்ஜிஆர் ஒரு கோமாளி, சினிமா நடிகர், அவருக்குப் பொருளாதாரம் தெரியாது, அவருக்கு நிர்வாகம் புரியாது, என்றெல்லாம் கூறப்படுவதில் பெருமளவு உண்மை இருக்கலாம். ஒரு தலைவர் பல்துறை வல்லுநராக இருக்க வேண்டியது தேவையில்லை. தன்னை நம்பி அதிகாரத்தைக் கொடுத்த மக்கள் கூட்டத்தில் மிக நலிந்த மனிதனையும் வாழ வைக்க வேண்டும் என்ற பெருங்கருணை உள்ளம்தான் தலைவரை உருவாக்குகிறது.

எம்ஜிஆருக்கு அந்த கருணை உள்ளம் இருந்தது என்று நான் நினைக்கிறேன். பெண்களும், வறியவர்களும் படும் பாடுகளை உணர்ந்து அதைத் தீர்க்க தேவையான எல்லாம் செய்ய முனைந்தார் அவர். நியாய விலை அரிசிக்காகவே மத்திய அரசுகளுடன் (முதலில் ஜனதா அரசு, பிறகு காங்கிரசு அரசு) நல்லுறவை வலிய ஏற்படுத்திக் கொண்டார் என்று கூட கூறலாம்.

மக்களுக்கு இலவசத் திட்டங்களை அறிவித்து அவர்களை சோம்பேறி ஆக்கி விட்டார் என்பது இன்னொரு குறைபாடு.

இருவர் படத்தில் ஒரு காட்சி. படத்தில் முதல்வராக வரும் பாத்திரம் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மேடை ஏறும் முன்பு அவரது அமைச்சரவை சகா ஒருவர், "உங்க பேரச் சொல்லி கொள்ள அடிக்கிறாங்க, ஊழல் மலிந்து விட்டது, மக்கள் வெறுப்படைந்து விடுவார்கள்" என்று கூற முதல்வர் எதுவும் பதில் கூறாமல் மேடை ஏறி விடுவார். அடுத்தக் காட்சியில், முதல்வர் தனது உரையில் "அடுத்த மாதம் முதல் எல்லா முதியோருக்கும் வேட்டி சேலை வழங்கப்படும்" என்று அறிவிப்பதாகக் காட்டுவார் மணிரத்தினம்.

இந்தக் காட்சி எம்ஜிஆரின் ஆட்சி பாணியை படம் பிடித்துக் காட்டி விட்டது.

1980ல் திமுக, காங்கிரசு கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 38/40 தொகுதிகளை வென்ற பின்னர், அதே கூட்டணியுடன் எம்ஜிஆரின் ஆட்சியை கலைத்து நடத்திய தேர்தலில், தனிப் பெரும்பான்மை வெற்றி பெற்றார் எம்ஜிஆர். தம் மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும், எதிர்க் கட்சியின் ஆதரவுகளை வெட்டி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு சாகும் வரை நல்லுறவைப் பேணி தமிழகத்தின் நலன்களை பாதுகாத்துக் கொண்டார்.

அவர் பெயர் சொல்லி தன்னை வளர்த்துக் கொண்டு, அவர் அமைத்த கட்சியின் பெயரில் வாக்குகள் திரட்டி ஆட்சியில் அமர்ந்த அம்மையார், தன்னுடைய அகங்காராத்தாலும், தன் மூப்பாலும் மத்திய அரசையும், பக்கத்து மாநிலங்களையும் பகைத்துக் கொண்டு மாநில நலன்களை தமது ஆணவத்தீயில் இரையாக்கி வருகிறார்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்-ங்கற உங்க எண்ணம் வாழ்க.

நல்லா எழுதியிருக்கீங்க. தலைப்பு ஏன் அப்டி வெச்சிருக்கீங்க?

Radha N சொன்னது…

உங்களின் கட்டுரை தலைப்பினை மாற்றலாமே?

மா சிவகுமார் சொன்னது…

நீங்கள் சொன்னபடியே, தலைப்பை மாற்றி விட்டேன்.