சனி, ஏப்ரல் 22, 2006

அரசியலுக்கு வர என்ன தகுதி வேண்டும் - 3

பொறியியல் பட்டதாரிகள், ஆட்சிப்பிரிவு அதிகாரிகள், மேலாண்மை வல்லுநர்கள் இவர்களால் மட்டுமே நல்ல ஆட்சியைத் தந்து விட முடியுமா?

லோக் பரித்ரன் என்று தேர்தலில் போட்டியிடும் அமைப்பு அதுவே போதும் என்று நினைக்கிறது. அப்படி என்றால், இப்போதைய அரசு இயந்திரம், அரசியல்வாதிகளை நீக்கி விட்டு வேலை செய்தால் போதுமே!

அரசியல்வாதி என்பதுடன் ஒட்டியுள்ள எல்லா குறைபாடுகளையும் நீக்கி விட்டுப் பார்த்தால், ஒரு அரசியல் தலைவரின் பணி என்ன? திறமையான நிர்வாகம்? நிர்வாகம் செய்ய அதற்கென பயிற்சி எடுத்துள்ள அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கும் மேலே அவர்களையும் வேலை வாங்கும் ஒரு அரசியல் தலைவர் என்ன பங்களிக்கிறார்?

நான்கு வருடம் படித்தால் பொறியியல் பட்டம், ஐந்து வருடம் படித்தால் மருத்துவராக பணிபுரியலாம், ஆட்சிப்பிரிவு பயிற்சி பெற்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகலாம். மேலாண்மை பட்டம் பெற்றால பன்னாட்டு நிறுவன நிர்வாகி ஆகி விடலாம்.

அரசியல்வாதிக்கு மட்டும் ஏன் தகுதி எதுவும் விதிப்பதில்லை என்பது படித்தவர்கள் மத்தியில் பெரிதும் விவாதிக்கப்படும் ஒன்று. குற்றப்பத்திரிகையில் பெயர் வந்தவர்கள், பள்ளிக்கூடத்தினுள் காலெடுத்தே வைக்காதவர்கள் போன்ற அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமாகி விட்டது என்று புலம்புகிறோம். உச்ச நீதி மன்றம் குற்றம் புரிந்தவர்களை தேர்தலில் போட்டியிடத் தடைவிதித்தால் அதை வரவேற்று ஆரவாரம் செய்கிறோம். அதே சூட்டில், படிப்பு தகுதி இல்லாதவரையும் அரசியலில் நுழைய தடை விதிக்கவில்லை என்று கேள்வி எழத்தான் செய்கிறது.

சரி, பெரிய படிப்பு படித்து குற்றமே செய்யாத ஒருவர் சரியான தலைவராகி விட முடியுமா? காமராசர் எப்படித் தலைவர் ஆனார்?

இந்தியா முழுவதும் பயணம் செய்து முடித்த சிலரைப் பாருங்கள். விவேகானந்தர், காந்தியடிகள் போன்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களைப் பார்த்து, அவர்களின் கவலைகளைப் புரிந்து கொண்டார்கள். ஒரு பிரச்சனை எழும்போது, அதற்கான தீர்வாக ஒரு முடிவு செய்யும் போது அத்தகைய தலைவரின் மனபிம்பத்தில் அந்த பிரயாணத்தின், மூலை முடுக்குகளில் எல்லாம் சந்தித்த மக்களின் வேறுபட்டகவலைகள் தோன்றி அனைவருக்கும் பொதுவான ஒரு முடிவு உருவாகும்.

அரசியலில் நுழைய, தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் அமர விளையும் ஒவ்வொருவரும், குறைந்தது ஐந்து வருடங்களாவது முழு நேரமும் மக்களிடையே தொண்டு செய்திருக்க வேண்டும் என்று தகுதி வரைமுறை விதிக்கலாம். ஒரு தயாநிதி மாறனோ, அன்புமணி ராமதாஸோ தமது படித்த மூளையைப் பயன்படுத்தி குருட்டாம்போக்கில் பெரும்பான்மையினருக்கு நல்லது பயக்கும் முடிவுகளை எடுக்க முடியலாம். ஆனால், ஒரு கருணாநிதியோ, ஜெயலலிதாவோ ஏன் ஸ்டாலினோ புரிந்து கொள்ளும் அளவில் மக்கள் பிரச்சனைகள் அவர்களுக்குப் புரிய வழியே இல்லை.

ஜெயலலிதாவும், கருணாநிதியும் கூட ஆரம்ப காலங்களில் மக்களிடையே செலவிட்ட நேரத்தின் அடிப்படையில் இப்போது சமாளித்து வருகிறார்கள். அவர்களது பல முடிவுகள் அதிகாரிகளின் புத்திசாலித்தன முடிவுகளாகவே அமைந்து விடுகின்றனவே ஒழிய, ஒர் அரசியல்வாதியின் முத்திரை அதில் காணாமல் போய் விடுகிறது. படித்த நடுத்தர வர்க்கம் அத்தகைய ஆட்சியைப் போற்றிப் புகழ்ந்தாலும், பெரும்பான்மை மக்களுக்கு அது போய்ச் சேராமல் போய் விடுகிறது.

மன்மோகன்சிங் ஆட்சி இதே காரணத்துக்காக இப்படி உப்பு சப்பில்லாமல்தான் இருக்கப் போகிறது. பெரிய பெரிய ஆட்சிப்பணி அதிகாரிகளும், தேர்ந்தெடுக்கப்பட அரசியல்வாதியின் உத்தரவுக்கு கட்டுப்படுமாறு நமது அரசியலமைப்பு இருப்பது காரணத்தோடுதான்.

1 கருத்து:

மா சிவகுமார் சொன்னது…

====
Only qualification to be in politics - "He/she should have good helping heart". It does not matter whether literate or illiterate.
=====
That is the same point I want to make.