புதன், அக்டோபர் 11, 2006

ஆண்களுக்கு மட்டும்

இன்றைய இந்து சென்னைப் பதிப்பு மெட்ரோ பிளஸ் பகுதியில் தனிசுகாதாரம் பற்றி ஒரு கட்டுரை. உடல் துர்நாற்றம், வாய் நாற்றம், கசங்கிய அழுக்கான ஆடை உடுத்துவது, காலுறை பிரச்சனைகள் என்று பட்டியல் போட்டு விட்டு் முதல் இரண்டுக்கும் வழி எதுவுமே சொல்லாமல் முடித்து விட்டார்கள்.

நல்ல வேர்த்து விறு விறுத்து குளிரூட்டப்பட்ட ஒரு அறைக்குள் நுழைந்தால் நம்முடைய உடலின் வாடை நமக்கே எட்டி விடும். மின்சாரம் நின்று போய், 40 டிகிரி வெயில் அடிக்கும் போது வேர்வையாக ஊற்றும் போது உடலில் நறுமணம் கமழ்கிறதா?

உடல் அழுக்கைப் போக்க சோப்பு தேய்த்து குளிக்கிறோம். பல்லில் படியும் அழுக்கைப் போக்க பல் துலக்குகிறோம். எவ்வளவுதான் கவனமாக காலையில் இந்த இரண்டையும் செய்து, சோப்புகளை மாற்றி மாற்றி முயன்றாலும் மாலை வரை துர்நாற்றத்தை தூர வைப்பது சிரமமாகப் போய் விடுகிறது.

வழக்கமாக பல்லுக்கும் தோலுக்கும் செய்யும் சேவைகளுடன் கூடவே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

வயிற்றில் என்ன இருக்கிறதோ அவையும் இந்த இரண்டையும் பாதிக்கின்றன. ஆங்கிலத்தில் வாய் துர்நாற்றத்தை bad breath (மோசமான சுவாசம்) என்று குறிப்பிடுகிறார்கள். வயிற்றில் கழிவுகள் மக்கிப் போயிருந்தால் அதைத் தொட்டு காற்று வாய் வழியாக வரும்போது அந்த நாற்றத்தையும் எடுத்து வருகிறது.

உடலெங்கும் சுற்றி வரும் ரத்தத்தில் கழிவுகள் கலந்தால் வேர்வையில் துர்நாற்றம் புகுந்து மேல்தோலுக்கு வந்து விடுகிறது.

  1. காலையில் வெறும் வயிற்றில் இரண்டு மூன்று தம்ளர் இளஞ்சூடான நீர் குடிப்பதன் மூலம் வேலைக்குக் கிளம்பும் முன் வயிற்றுக் கழிவுகளை ஓரிரு முறைகளில் முற்றிலும் வெளியேற்றி விடலாம்.
    காலையில் எழுவதற்கும் வேலைக்கு கிளம்புவதற்கும் இரண்டு மூன்று மணி நேரமாவது இருந்தால்தான் இது சாத்தியம். இல்லையென்றால் திண்டாட்டம்தான்.
    முடிந்தால் நன்றாக வியர்க்கும் வரை உடற்பயிற்சி செய்வதும் நல்லது.

  2. அழுக்கான சட்டை, பேன்ட் போட்டாலும் உள்ளாடைகள், காலுறைகளை இரண்டாவது நாள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலுறைகளை ஒரு நாள் அணிந்த பிறகு துவைத்து விட வேண்டும்.

  3. தினமும் ஷூஸ் அணியும் வழக்கம் இருந்தால், குறைந்தது இரண்டு சோடி காலணிகளை பயன்படுத்த வேண்டும். ஒரே காலணியை ஆறு நாளும் தொடர்ந்து அணிந்தால், காலணி உறிந்து கொள்ளும் வியர்வை முற்றிலும் வெளியேற இடைவெளி இல்லாமல் துர்நாற்றம் உருவாக ஆரம்பிப்பதோடு காலணியும் சீக்கிரம் கெட்டுப் போய் விடும்.

  4. சாப்பிட்ட பிறகு நன்றாகக் கொப்பளித்து விடும் நமது நல்ல பழக்கம் பல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. சாப்பாட்டு வேளையைத் தள்ளிப் போட்டு வெறும் வயிற்றோடு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மதியம் சாப்பிடவில்லை என்றால் நான்கு மணிக்கெல்லாம் வயிற்றின் உள்வாசனைகள் எல்லாம் வாய் வழியே வெளிவர ஆரம்பித்து விடுகின்றன.

5 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

என்ன வைசா, எதுக்கெடுத்தாலும்
'அம்மா'வைக் கேக்கணுமா?

என்னதான் தாய்மார்கள் நல்ல பழக்கங்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் வளர்ந்தபிறகு அதைக் கடைப்பிடிக்கறது தனி மனிதரின் பொறுப்புதான்.

வடுவூர் குமார் சொன்னது…

ராத்திரி படுக்கபோகும் முன்பு பல்துலக்குதல் நல்லது அல்லது வாய் கொப்பளித்துவிட்டு உப்புத்தண்ணீரில் வாய்கொப்பளித்தால் கூட நல்ல பலன் கிடைக்கும்.
முதன் முதலாக வயத்துக்குள் போவதை கட்டுப்படுத்தினாலே பாதி கட்டுப்பபடுத்தின மாதிரி தான்.
எங்க!!நம்ம விளம்பரத்துள படுத்து எழும் கணவனுக்கு மனைவி உடனே காப்பி கொடுக்கிறமாதிரி வருதே??
நாலு நண்பர்கள் சொல்லி கொஞ்சம் உறைத்த பிறகு தன்னால் வரும்.

மா சிவகுமார் சொன்னது…

வைசா,

வேலைக்குப் போவது வரை காலுறையே பார்க்காத எங்களைப் போன்றவர்களுக்கு என்ன கதி? :-) இன்றைக்கும் காலுறை அணிந்து ஷூ போட்டு பள்ளிக்குப் போகும் குழந்தைகள் பெரும்பான்மை இல்லையே!

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

துளசி அக்கா,

அதுவும் வயது வந்த பிறகு அம்மா சொல்லித் தந்ததை மறுத்து எதிர்மறையாக செய்யும் இயல்பும் நம்ம பசங்களுக்கு உண்டு. (என்னைத்தான் சொல்கிறேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் குமார்.

'என்னுடைய நண்பன் ஒருவன் இந்தூரில் குளிர் அதிகம் காலைத் தூக்கம் குறையக் கூடாது' என்று முந்தைய இரவே முகமழித்து, குளித்து, போட்டுப் போக வேண்டிய உடைகளை அணிந்து தூங்கி விடுவான். புறப்பட ஐந்து நிமிடங்களுக்கு முன்பு எழுந்து பல் தேய்த்து விட்டு கிளம்பி விடுவான். இப்படிப்பட்டவர்களுக்கு என்ன சொல்வீர்கள்? :-)

அன்புடன்,

மா சிவகுமார்