வியாழன், அக்டோபர் 19, 2006

சுதேசியா விதேசியா? (economics 34)

அடிப்படையில் பார்த்தால் தனிமனிதர்களோ, குடும்பங்களோ, கிராமங்களோ, மாநிலங்களோ தமக்கு நன்கு தெரிந்த வேலையை மட்டும் பார்த்து, மற்றவருக்கு விற்பது மூலம் வரும் வருமானத்தைப் பயன்படுத்தி தேவைகளை வாங்கிக் கொள்வது போலத்தான் நாடுகளுக்கிடையான வர்த்தகமும். நடைமுறையில் பல வேறுபாடுகள்:
  1. நாட்டு அரசுகள் வருமானத்துக்காக இறக்குமதி ஏற்றுமதியின் மீது சுங்க வரி விதிப்பதால் எல்லைகளைக் கடந்து பொருட்கள் போகும் போது கட்டுப்பாடுகள் போடப் படுகின்றன.

  2. ஒவ்வொரு நாட்டிலும் புழக்கத்தில் இருக்கும் பணம் வெவ்வேறாக இருப்பதால் வர்த்தகத்தில் பணப் பரிமாற்றம் என்ற கூடுதல் சிக்கலும் வருகிறது.

  3. பொருட்கள் எல்லைகளைத் தாண்டி பாய்ந்தாலும், மக்களும், மூலதனமும் அதே சுதந்திரத்தோடு தமக்கு ஏற்ற நாட்டுக்குப் போவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் இருப்பதால் பொருளாதார நடவடிக்கை பாதிக்கப்படுகிறது.
இத்துடன் தேசிய நலன், பாதுகாப்புக் காரணிகள் என்று காரணம் சொல்லியும் பன்னாட்டு வர்த்தகம் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • 'பஞ்சாபில் விளையும் கோதுமையை நம்பி இருந்தால் நம்ம ஊர் பாதுகாப்பு என்னாவது?' என்று தமிழ்நாட்டில் கோதுமை பயிரிட முயற்சி செய்வதில்லை.

  • சிவகாசியில் தீப்பெட்டி, மத்தாப்பு தொழில் வளரும் போது இந்தியாவின் பல பகுதிகளிலும் இருக்கும் அத்தகைய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கும். அதற்கெதிராக யாரும் போர்க்கொடி பிடிக்கவில்லை.
    மத்தாப்பு தொழிலில் வல்லமை பெற்ற தொழிலாளர்கள், ஒரு முடிவு எடுத்து விட்டால் அடுத்த ரயிலைப் பிடித்து சிவகாசி வந்து வேலை தேடிக் கொண்டிருப்பார்கள்.
    அவ்வளவு மாற்றங்களை விரும்பாத தொழிலாளர்கள் அந்த ஊரில் தளைக்கும் தொழிலுக்கு மாறியிருப்பார்கள்.
    தொழில் நடத்தும் முதலாளிகளும் தமது மூலதனத்தைக் கையில் பிடித்துக் கொண்டு சிவகாசியில் தொழில் தொடங்க தடைகள் குறைவு. இப்படியே மொத்த துறையும் மிகச் சிறப்பான வழியில் தன்னை அமைத்துக் கொண்டிருக்கிறது.

  • இந்தியாவின் தோல் துறையின் பாதிக்கும் மேல் உற்பத்தி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. நாடெங்கிலுமிருந்து தோல்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன.
    தோல் தொழில்நுட்பம் படித்த வல்லுனர்கள் சென்னைக்கு வந்து வேலை பார்க்கிறார்கள். பொருளாதார அடிப்படையில் வெவ்வேறு ஊர்களில் தொழிற்சாலை தொடங்க முயற்சிகள் நடப்பதைத் தவிர எந்த அரசும் தடைகளை விதித்துப் பொருளையும், மக்களையும் சுதந்திரமாக தமக்கு ஏற்ற இடத்துக்குப் போவதைத் தடுப்பதில்லை.
இப்படிப் பொருளாதாரக் கணக்கு மட்டும் போடும் போது, இத்தகைய மாறுதல்களால் தனி நபர்கள் வாழ்வில் ஏற்படும் மாறுதல்கள் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன. தன்னுடைய பிறந்த மண்ணை விட்டு, குடும்பத்தோடு குடி பெயர்வது, அல்லது குடும்பத்தை ஊரில் விட்டு வந்து தனியே பணம் ஈட்ட வருவது என்று பல சிரமங்களை மாற்றங்களுக்கு ஆளாகும் தொழிலாளர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால், ஒட்டு மொத்தக் கணக்கில் போன பதிவின் சர்ஜனைப் போல எல்லோருக்குமே நன்மைதான் அதிகமாகும்.

வரலாற்றுக் காரணங்களால் மக்கள் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டு எல்லைகள், வேறு வேறு பணங்கள், அரசுக் கெடுபிடிகள் என்று பிளவுபட்டிருக்கிறார்கள். இதனால் பன்னாட்டு வர்த்தகம் என்பது பல் பிடுங்குவது போல பலவித தயாரிப்புகளோடு, வலியோடுதான் நடைபெற வேண்டியிருக்கிறது.
  • தமிழ் நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நகரங்களுடன் வர்த்தகத்துக்குத் தடை இல்லை. நாற்பது கிலோமீட்டரில் இருக்கும் தமிழீழம் வேறு நாடு, வர்த்தகம் கிடையாது.
  • பஞ்சாபிலிருந்து கேரளாவுக்கு சரக்கும், மக்களும் போவதில் தடையில்லை, ஆனால் கூப்பிடு தூரத்தில் இருக்கும் பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் வேறு நாடாம்.
  • கல்கத்தாவிலிருந்து குஜராத்துக்கு வர்த்தகம் இயல்பாக நடைபெறலாம். மிக அருகில் இருக்கும் வங்காளதேசத்துக்கு தடைகள் ஏராளம்.
நாட்டு எல்லைகளை மங்கச் செய்து பன்னாட்டு வர்த்தகத்தைப் பெருக்கச் செய்யும் முயற்சிகள் ஏதாவது நடக்கின்றனவா?

3 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

வணக்கம் மா.சி

//நாட்டு எல்லைகளை மங்கச் செய்து பன்னாட்டு வர்த்தகத்தைப் பெருக்கச் செய்யும் முயற்சிகள் ஏதாவது நடக்கின்றனவா?
//

என்ன மா.சி. இப்படி விவரம் புரியாதவராகவே இருக்கிங்க இந்த டங்கல் ஒப்பந்தம் எனப்படும் "wto" இருப்பதெல்லாம் மறந்து விட்டதா?

ஆனால் அவையெல்லாம் அமெரிக்க போன்ற வல்லரசுகளின் பகாசுர பன்னாட்டு நிருவனங்களின் எல்லையற்ற வர்த்தக விரிவாக்கத்திற்காக மட்டும் முனைப்பு காட்டுபவை. எனவே தான் தோகா மாநாட்டில் முன்னாள் வர்த்தக அமைச்சர் முரசொலி மாரன், தற்போது கமல் நாத் போன்றோர் கூட எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இருவழி வியாபர ஒப்பந்தம் அதுவும் அடக்குமுறை , எதேச்சதிகாரம் இல்லாமல் எல்லைகள் துறந்து வர்த்தகம் நடைபெற் வேண்டும் அதனை செய்ய யாரும் இங்கு வர மாட்டார்கள்.

உதாரணமாக , இந்திய வான் எல்லையை அமெரிக்க விமான நிறுவனங்கள் தற்போது ஆக்ரமிக்கின்றன.இந்தியாவில் இருந்து ஒரு பயணிகள் விமானம் அமெரிக்கா சென்றால் அங்கு இருந்து அவர்களது விமானம் ஒன்று இங்கே வரலாம் , ஆனால் அவர்கள் இந்த கட்டுப்பாடு எல்லாம் எங்களுக்கு கூடாது என்று அதிக உரிமையை வாங்கிகொண்டார்கள். அதான் வல்லரசு!

அதே போன்று தான் அனைத்து வர்த்தகத்திலும் ஒரு தலைப்பட்சமான எல்லை மீறல்கள்.

//'பஞ்சாபில் விளையும் கோதுமையை நம்பி இருந்தால் நம்ம ஊர் பாதுகாப்பு என்னாவது?' என்று தமிழ்நாட்டில் கோதுமை பயிரிட முயற்சி செய்வதில்லை.//

இங்கே கோதுமை பயிரிட்டாளும் வளராது அதற்கு தேவையான தட்ப வெப்பம் தென்னிந்தியாவில் இல்லை.கோதுமை முற்றும் போது குளிர் நிலவ வேண்டும் அப்போது தான் சூல்கொண்டு கதிர் வரும். ஆரம்பத்தில் நல்ல மழை வேண்டும் ஆனால் நீர் தேங்கா தன்மை இருக்க வேண்டும். இறுதியில் மழை இருக்க கூடாது , குளிர் வேண்டும் , தமிழகத்தில் அப்படியே உல்டா!!

தமிழகத்தில் அத்தகைய சூழல் கோவையில் உண்டு ஆனால் அங்கே தேவையான மழை இல்லை.கோவையில் குளிர் மிகுதியாக உள்ளதால் தான் அங்கே கரும்பிற்கான விதைகள் உற்பத்தி செய்யும் தேசிய ஆராய்ச்சி நிலையம் உள்ளது.

தமிழகத்தில் தோல் பதனிடுதல் அதிக அளவில் இருக்க காரணம் இங்கே தான் சுற்று சூழல் விதிகள் எளிமையாக இருக்கிறது, அதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது.

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் தோல் பதனிடுதல் தடை செய்யப்பட்டுள்ளது அல்லது கடுமையாக உள்ளது எனவே தான் இந்தியா போன்ற நாடுகளுக்கு தோலை அனுப்பி பதப்படுத்துகிறார்கள்.இங்கே பதனிடும் அளவிற்கு தோல் பொருள் உற்பத்தி நடைப்பெருவதில்லை என்பதிலிருந்தே இதனை அறியலாம்.

பெரிய கப்பலை உடைக்கனும் என்றாலும் இந்தியாவிற்கு தான் அனுப்புவார்கள் ஏன் என்றால் உலகின் குப்பை தொட்டி இந்தியா!

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

மா.சி வவ்வாலுக்கு என் நன்றியைத்
தெரிவிக்கவும்

மா சிவகுமார் சொன்னது…

வவ்வால்,

இந்தியா முழுமைக்கும் நல்லது செய்யும் பொதுச் சந்தை உலகம் முழுவதும் என்று விரியும் போது என்ன சிக்கல்? நீங்கள் சொல்வது போல பணக்கார நாடுகள் தமது நலத்துக்காக உலக வர்த்தக அமைப்புகளை பயன்படுத்திக் கொள்வதை குறை சொல்லும் அதே நேரம், தடையற்ற வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் பலன்களை, அதன் பக்க விளைவுகளை சரியாக சமாளித்து, எல்லோருக்கும் போய்ச் சேர வைப்பது நல்லதுதானே?

தமிழ் நாட்டின் மாசுக்கட்டுப்பாட்டுச் சட்டங்கள், வேறு எந்த இந்திய மாநிலத்துக்கும் குறைந்ததில்லைதான். இதே தோல் துறையை அப்படியே இடம் பெயர்த்துச் செல்ல குறைந்தது ஒரு டஜன் மாநிலங்கள் தயாராக இருப்பார்கள்.

உலக வர்த்தகத்தின் அநீதிகளைக் களைந்து எல்லோருக்கும் சம வாய்ப்புகள் உருவாக்க வேண்டும்.

அன்புடன்,

மா சிவகுமார்