செவ்வாய், ஜூன் 20, 2006

பெண்களை "விற்கிறார்கள்"

காலணி விற்க குட்டைப் பாவாடை அணிந்த ஒரு பெண்ணின் நீண்ட கால்களின் பாதங்களில் செருப்புகள். அப்படி ஒரு புகைப்படம் நாங்கள் போகும் ஒரு வாடிக்கையாளரின் காலணித் தொழிற்சாலையின் வரவேற்பறையில் இருந்தது. அந்த பெண் அமர்ந்து கொண்டு தன் ஒற்றைக் காலைத் தூக்கி வைப்பதாக தரையிலிருந்தான கோணத்தில் ஒரு புகைப்படம். கூட வந்த நண்பர் "என்ன கவர்ச்சியான புகைப்படம், அந்த பெண் என்ன சொல்ல வருகிறாள?்" என்று கிண்டலாகக் கேட்டார்.

எதுவும் சொல்ல வரவில்லை "தோற்றத்தைப் பார்த்தால் வாயு பிரிப்பதற்காக காலைத் தூக்கிக் கொண்டுள்ளார் போலத் தெரிகிறது" என்றேன். உடனடியாக அந்தப் புகைப்படத்தைப் போர்த்தியிருந்த கவர்ச்சிப் போர்வை கழன்று விழுந்தது. அந்தப் பெண்ணும் ஒரு குழந்தையாகப் பெற்றோர்களால் கொஞ்சி விளையாடப்பட்டு, வளர்ந்து வந்தவள். காலையில் பல் தேய்த்து முந்தைய நாளில் செரித்த உணவுக் கழிவுகளை வெளியேற்றி குளித்து, உணவு உண்டு, போன மாதம் கடையில் வாங்கிய ஆடையை அணிந்து கொண்டு வந்திருக்கலாம் என்ற மனித முகம் தோன்றி விட்டது.

காமம், வெறுப்பு, பயம் போன்ற உணர்ச்சிகளை உருவாக்க மனிதர்களிடமிருந்து மனிதத்தன்மையை உரித்து விடுகிறார்கள். விளம்பரத்தில் வரும் பெண்ணின் மனித முகம் மறைந்தால்தான் அவளை ஒரு காமக் கருவியாகப் பார்க்க முடியும். கட்சியின் தலைவர் அணுக முடியாதவராக இருந்தால்தான் ஒரு அதிசயம் இருந்து வரும், மாற்று மதத்தினர் எல்லோரும் நம்மைக் கொல்லக் கருவிகளோடு அலைகிறார்கள் என்று அவர்களை நெருங்க விடாவிட்டால்தான் பயமும், வெறுப்பும் வளரும்.

தன்னை நெருங்க விடாத தலைவர்களையும், பிறரின் மனிதத் தன்மையை உரித்து விடும் போதனைகளையும் கவனமாக அணுகுங்கள். இரண்டுமே மனித மூளைகளை மயக்கி தமக்குத் தேவையானவற்றைச் சம்பாதிக்கத் துடிப்பவை.

அதிகார மையங்களைச் சுற்றி இத்தகைய தீவட்டம் கவனமாக வளர்க்கப்படுகிறது. தங்கத் தாரகையாக இருந்தாலும், தமிழினத் தலைவராக இருந்தாலும் அவர்களும் எல்லோரையும் போல மனிதர்கள்தான். அவர்களுக்கு பசி எடுக்கிறது, மூன்று வேளைச் சாப்பிடுகிறார்கள், உடலுக்கான கடன்களைச் செய்கிறார்கள். விக்கிரகங்களை உடைத்து எறிவோம்.

இவன் முஸ்லீம், இவன் இந்து, இவன் பார்ப்பனன் என்று முத்திரை குத்தும் போக்கு, ஒரு மனிதனை குறிப்பிட்ட வார்ப்புக்குள் அடைத்து அவனது மற்ற பின்னணிகளை இருட்டடிக்கச் செய்யும். எந்த ஒரு மனிதனும் பல பண்புகளின் தொகுப்பு, அவனது மதம், சாதி, மொழி, பிறந்த இடம், படித்த படிப்பு, செய்யும் தொழில், அனுபவங்கள் எல்லாவற்றின் தொகுப்பும்தான் ஒரு மனிதன். மற்ற எல்லாவற்றையும் புறக்கணித்து, ஒரே பண்பை வைத்து உணர்ச்சிகளைத் தூண்டி விடும் தலைவர்கள், கட்சிகள் ஆபத்தானவர்கள்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

நண்பரே,

மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். உங்களை போல எல்லோரும் இதே மாதிரி இருந்தால், இந்த பூமி தான் சொர்க்கம்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ஜான்,
அன்புடன், மா சிவகுமார்