வியாழன், மே 12, 2011

8. இனப் போராட்டங்கள் (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

=============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
 =============

29. 1970களின் போது தெற்கில் வசிக்கும் சிங்கள இளைஞர்கள் வர்க்க அடிப்படையில் ஒதுக்கப்படுவதாக ஒரு பக்கமும், இன அடிப்படையில் ஒதுக்கப்படுவதாக வடக்கில் தமிழ் இளைஞர்கள் இன்னொரு பக்கமும், தேசிய கட்டமைப்புகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். தீவிரவாதத்தைக் கையில் எடுத்து அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டங்களை நடத்தினார்கள்(7).

அரசு இந்த இயக்கங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே கருதியது. அடிப்படையான அரசியல் பிரச்சனைகளை தீர்க்காமல், அரசின் அதிகாரத்தை எதிர்க்கும் போராட்டங்களை, ஆட்களை காணாமல் போகச் செய்வது, சட்ட விரோதக் கொலைகள் மற்றும் சித்திரவதை போன்ற அடக்குமுறைகள் மூலம் அரசு (8) ஒடுக்கியது.

30. பாரபட்சமான அரசு கொள்கைகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும் சூழலில் 1950களில், தமிழர்களின் உரிமைப் போராட்டம், ஆரம்பத்தில் காந்திய வழியில் அகிம்சை போராட்டமாக ஆரம்பித்தது. போகப்போக தமிழ் தீவிரவாதம் மற்றும் ஆயுத எதிர்ப்பாக உருவெடுத்தது. தமிழர்களுக்கான தனிநாடு என்பது இந்தப் போராட்டங்களின் மத்திய கோரிக்கையாக இருந்தது.

1970களில் உருவான விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் அரசியல் தீவிரவாதக் குழுக்கள் அரசியல் விவாதங்களை சமரச அணுகுமுறையிலிருந்து பிரிவினையை நோக்கித் திருப்பினார்கள். தமிழர்கள் மீதான  சிங்கள பேரினவாதிகளின் வன்முறை அடக்குமுறைகள் தீவிரமாகி வரும் நேரத்தில் தமிழ் போர்க் குழுக்கள் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களும் அதிகரித்தன.

அரசின் சில பகுதிகள் 1977, 1979, 1981 மற்றும் 1983ல் தமிழர் எதிர்ப்பு வன்முறைகளுக்கு ஊக்கம் அளிப்பதாகவும், சில நேரங்களில் நேரடி உதவி செய்வதாகவும் செயல்பட்டன. இந்த வன்முறைகள் 1983ல் நடந்த பரவலான தமிழர் எதிர்ப்புத் தாக்குதல்களில் முடிந்தன. சிங்கள வன்முறை கும்பல்கள் அரசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு, அதிகாரபூர்வ வாக்காளர் பதிவுப் பட்டியல்களைப் பயன்படுத்தி தமிழர்களை அடையாளம் கண்டு குறி வைத்தார்கள். ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன, பெருமளவு இடப்பெயர்வும், தமிழர்களின் சொத்து அழிப்பும், தமிழர்கள் வெளிநாட்டுக்கு இடம் பெயர்வதும் நடந்தது.

13 இலங்கை வீரர்களை வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் கொன்றதற்கு எதிர்வினையாக தாக்குதல்கள் நடந்தன என்று அரசாங்கம் வாதிட்டது. இரண்டு பக்கமும் வன்முறையில் ஈடுபட்டது அந்த ஆண்டுக்கு முன்பும் நடந்திருந்தாலும் 1983ம் ஆண்டு வன்முறைகள் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரின் தொடக்கம் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

2. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்.
31. 1983 இனக் கலவரங்களுக்குப் பிறகு தமிழர்கள் மீதான அடக்குமுறை அதிகரிக்கவே தமிழ்சமூகம் தீவிரவாதத்தை நோக்கித் திரும்பியது. தமிழ்நாட்டில் நிலவிய பயிற்சி மற்றும் அமைப்புக்கு சாதகமான சூழலை ஆதாயமாக பயன்படுத்தி தீவிரவாத குழுக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகியது. தமிழ் விடுதலை இயக்கமாக ஆரம்பித்த விடுதலைப்புலிகள், மிகவும் கட்டுப்பாடான, மிகவும் தேசிய உணர்வுள்ள தமிழ் தீவிரவாதக் குழுவாக உருவெடுத்தார்கள்.

1980களின் மத்தியில் பிரிவினை வாதத்தை முன்வைக்கும் பெரிய குழுவாக விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்தது. இந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் போகப்போக தீவிரமான வன்முறை உத்திகளை கையாண்டார்கள். மற்ற தமிழ் குழுக்களை வாயடைக்கச் செய்ய வன்முறையைக் கையாண்டார்கள், தம்மைத் தாமே தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். அதன் மர்மமான தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், முழுமையான விசுவாசத்தை எதிர்பார்த்தார், கண்மூடித்தனமான பின்பற்றுபவர்களை உருவாக்கினார்.

இயக்கத்தினுள் மாற்றுக் கருத்துகள் சகித்துக் கொள்ளப்படவில்லை. அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதாகவோ, அரசு சார்பில் வேலை செய்வதாவோ சந்தேகிக்கப்படுபவர்கள் துரோகிகள் என்று பெயர் சூட்டப்பட்டு கொல்லப்பட்டார்கள். விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கு எதிராக அவிழ்த்து விட்ட வன்முறை தமிழ் சமூகத்தினிடையே பயத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கியது.

(7) தெற்கு இலங்கையில் படித்த ஏழை கிராமப்புற இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இடது சாரி ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி அல்லது மக்கள் விடுதலை முன்னணி) 1971ல் அதன் முதல் ஆயுதம் தாங்கிய எழுச்சியையும், 1987ல் இரண்டாவது எழுச்சியையும் நடத்தியது. அரசின் விலக்கி வைக்கும் கொள்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் பாரம்பரிய தமிழ் அரசியல் தலைவர்களுக்கு சவாலாகவும் பல தமிழ் தீவிரவாத இளைஞர் இயக்கங்கள் உருவாயின.

(8) தன்னிச்சையற்ற இடம் பெயர்தல் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை குழுமத்தின் இறுதி அறிக்கை (முழு தீவு), 2001;
மேற்கு, தெற்கு மற்றும் சபரகாமுவா மாகாணங்களில் தன்னிச்சையற்ற இடம்பெயர்வு மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை குழுமத்தின் இறுதி அறிக்கை, 1997;
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தன்னிச்சையற்ற இடம்பெயர்வு மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை குழுமத்தின் இறுதி அறிக்கை, 1997;
மேற்குப் பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை குழுமத்தின் இடைக்கால அறிக்கை (www.disappearances.org/news/mainfile.php/reports_srilanka);
மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் , “Sri Lanka:
காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கொலைகளில் ‘காணாமல் போவது மற்றும் கொலையை கிளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தும் உத்தி”
(ஆம்ஸ்டர்டாம், 1994), p. 26.

(தொடரும்)

கருத்துகள் இல்லை: