வெள்ளி, ஏப்ரல் 21, 2006

தமிழகத் தேர்தல்கள் - 1

எனக்கு நினைவு தெரிந்த முதல் தேர்தல, 1977ல் எம்ஜிஆர் வென்று ஆட்சி அமைத்த தேர்தல். மருங்கூர் என்ற ஊரில் எங்கள் தாத்தா வீட்டில் வளர்ந்த்து வந்த எனக்கு ஒரு காட்சி நினைவு இருக்கிறது.

தினமும் மாலை இருள் படர்ந்து சற்று நேரத்தில் எங்கள் தெருவின் மறு மூலையில் ஒரு கூட்டம் தீப்பந்தங்களுடன், உரக்க முழக்கம் எழுப்பியபடி ஒரு கூட்டம் தெரியும். பத்து பதினைந்து நிமிடங்களில் எங்கள் வீட்டுக்கு முன் வந்து சேர்ந்து விடும் அந்த கூட்டத்தில் எல்லாமே இளவட்டங்கள். "அத்த ரெட்ட இலக்கு ஓட்டுப் போட்டுடுங்க", "ஆச்சி ரெட்ட இலய மறந்திராதீங்க" என்று ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பெண்மணியும் உறவு கொண்டாடும் அளவுக்கு நெருக்கமான இளைஞர்கள்களின் கூட்டம் அது.

அந்தத் தேர்தலின் முடிவுகள் வரும்போது, நாகர்கோவிலில் எங்கள் வீட்டில் நடந்தது இது:
"தமிழ்நாட்டு முதலமைச்சர் யாருன்னு ஸ்கூல்ல கேள்வி வந்தா என்ன எழுதுவே" - அப்பா அண்ணனிடம்.
"எம்ஜிஆர்" புத்திசாலித்தனமாக பதில் அளித்து விட்ட திருப்தியுடன், அண்ணன்.
"ஏய் அப்படி எல்லாம் எழுதி விடாதே, ஏதோ நடிகன் பெயரை எழுதி விட்டேன்னு சொல்லிடுவாங்க. எம் ஜி ராமச்சந்திரன் என்று எழுத வேண்டும்." நடிகர் முதல்வராகி விட்ட வியப்பும், ஓரளவு திருப்தியும் நிலவியதாக நினைவு.

அடுத்த தேர்தல்1980 நாடாளுமன்ற தேர்தல். ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருந்த எம்ஜிஆர் கட்சியை இரண்டே இரண்டு இடங்களைத் தவிர எல்லா இடங்களிலும் திமுக-காங்கிரசு கூட்டணி தோற்கடித்து வெற்றி வாகை சூடிய தேர்தல் அது. "இந்திராகாந்தி வந்தால் வெலவாசி எல்லாம் குறஞ்சிடும்" இரண்டரை வருடம் முன்பும் இப்போதும் என்று அரிசி, துவரம் பருப்பு, எண்ணெய் என்ற மளிகைச்சாமான்களின் ஒப்பீடு விலைப்பட்டியல் வினியோகிக்கப்பட்டது. "தாய்க்குலமே ஏமாத்திட்டயே" என்று எம்ஜிஆர் கதறி இருப்பார் என்றார் எங்கள் அப்பா.

நாங்கள் எல்லாரும் ஜனதா கட்சி அனுதாபிகள். மக்களின் ஆதரவை இழந்து விட்டது என்ற காரணத்தைக் காட்டி எம்ஜிஆரின் இரண்டரை வருட ஆட்சியைக் கலைத்தது புதிதாக அமைந்த மத்திய காங்கிரசு அரசு. திமுகவும் காங்கிரசும் ஆளுக்கு 117 இடங்களில் வெற்றி பெற்றால், கருணாநிதிதான் முதல்வர் என்ற ஒப்பந்தத்துடன் போட்டியிட்டன.

எம்ஜிஆர் தன்னுடைய வழக்கை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சென்றார். "அநியாயமா கலச்சுப் போட்டாங்களே" என்ற பரிவுடன், பெரு வெற்றியைக் கொடுத்தனர் மக்கள். கருணாநிதியை முதல்வர் என்று அறிவித்ததால்தான் கூட்டணி தோற்றது என்று குற்றம் சாட்டியது காங்கிரசு. சில நாட்களிலேயே கூட்டணி முறிந்தது.

அடுத்த தேர்தல் 1985ல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, எம்ஜிஆர் உடல் நலம் சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்த போது நடந்தது. இதற்குள் அதிமுக, காங்கிரசு கூட்டணி ஏற்பட்டு விட்டிருந்தது. எம்ஜிஆர் வாய்ப்பாடு எனப்படும், நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரசு/அதிமுக 2:1 என்ற விகிதத்திலும், சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் போட்டியிட்டன.

"இந்த அமைச்சர்கள் கையில் ஆட்சியைக் கொடுத்து விடாதீர்கள். எம்ஜிஆர் திரும்பி வந்தால் நான் அதிகாரத்தை அவருக்குக் கொடுத்து விடுகிறேன்."
"பத்து ஆண்டு தண்டனை போதாதா"
என்றெல்லாம் கருணாநிதியின் ஆதங்கள் வெளிப்பட்ட தேர்தல் இது. மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் அதிமுக அரசும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தன. சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சியாக காங்கிரசு அங்கீகரிக்கப்பட்டது. கருணாநிதி மேலவையில் எதிர்க்கட்சி தலைவராயிருந்தார். திமுக மேலவையில் வைத்திருந்த செல்வாக்கைப் பொறுக்க முடியாமல், அந்த அவையையே ஒழித்து விட்டார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டு, காங்கிரசும் தனியாகப் போட்டியிட நான்கு முனை தேர்தல் நடந்தது 1989ல். நான் ஆதரித்த ஜானகி அணி ஒரே ஒரு இடத்தைத் தவிர எல்லா இடங்களிலும் மண்ணைக் கவ்வி ஜெ அணியுடன் ஐக்கியமாகி விட்டது.

இரண்டுபட்ட ஊரில் கொண்டாடும் விதமாக, திமுக ஆட்சி பீடத்தில் ஏறியது. புதிய அதிமுகவும், மத்தியில் ஆட்சியை இழந்து விட்ட காங்கிரசும் கை கோர்த்துக் கொண்டன. கலைஞர் ஆட்சியை ஆளுநர் பரிந்துரை இல்லாமலே கலைத்து, மத்தியில் சந்திரசேகரின் அற்பாயுசு ஆட்சியை தள்ளி விட்டு, இன்னும் ஒரு முறை சட்ட மன்ற / நாடாளுமன்ற தேர்தல் சேர்ந்து நடந்தது.

தாம்பரத்தில் தங்கியிருந்த வீட்டில் காலையில் பால் போட வந்த பால்காரர், ராஜீவ் காந்தியை குண்டு வைத்து கொன்று விட்டார்களாம் என்று கூறிச் சென்றார். திமுகவின் பிரச்சார கொடிகள், சொத்துகள் காங்கிரசு குண்டர்களால் சூறையாடப்பட்டன. தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜீவ் காந்தி கொல்லப்பட, அதிமுக/காங்கிரசு கூட்டணி மாநிலத்திலும், காங்கிரசு மத்தியிலும் ஆட்சியைப் பிடித்தன.

கருத்துகள் இல்லை: