புதன், ஏப்ரல் 19, 2006

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் - 3

ஏகபோக வலிமையை பெறும் வழி தொழில் நுட்ப மேன்மை மூலமாகவோ, கடின உழைப்பாலோ, திறமையான நிர்வாகத்தாலோ வந்திருக்கலாம். ஒரு நிறுவனம் ஏகபோக வலிமை பெற்ற பிறகு அரசாங்கமும், அந்த நிறுவனமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இங்கு பேச்சு.

பொருளாதாரக் கோட்பாடுகளின்படி போட்டி இருக்கும்போது, நுகர்வோருக்கு சரியான விலையில் பொருட்கள்/ சேவைகள், மிக உயர்ந்த தரத்தில் கிடைக்கிறது. ஏகபோக வலிமை இருக்கும்போது, அவர்கள் வைப்பதுதான் விலை என்ற நிலைமையோ, அவர்கள் கொடுப்பதுதான் சேவை என்ற நிலைமையோ அல்லது இரண்டுமோ ஏற்பட்டு விடும். நுகர்வோரின் நுகர்வு அதிகப்படியை இந்த ஏகபோகி கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுகிறார்.

சரி, தமிழகத்தில் தொலைக்காட்சி சேவைகளைப் பற்றிப் பேசலாம். அதற்கு ஒரு சின்னக் கணக்கு, ஆங்கில மொழியில் எத்தனை செய்தி ஓடைகள் உள்ளன? இந்தியில் எத்தனை உள்ளன? தமிழில் எத்தனை உள்ளன? கடைசி கேள்விக்கு விடை எல்லோருக்கும் தெரியும். ஒன்று.

ஏன் ஒன்றே ஒன்று? தமிழர்களுக்கு செய்திகளைத் தெரிந்து கொள்வதிலும், விவாதிப்பதிலும் ஆர்வம் இல்லையா? இன்னொரு கணக்கு அதற்கு விடையளிக்கும். தமிழில் எத்தனை செய்திப் பத்திரிகைகள் உள்ளன? தெருமுனைக் கடைக்கு போனால் முகப்பு தாங்காமல் நிரம்பி வழிகின்றன.

இல்லாவிட்டால், இருக்கும் அந்த ஓடை (சன் நியூஸ்), உயர் தரமாக, எல்லோரையும் கவரும் வண்ணம் உள்ளதால் பிறர் உள்ளே வரத் தயங்குகின்றனாரா? இதற்கு விடை எல்லோருக்கும் தெரியும்.

இன்னொரு கோணத்தில், ஏன் ஒரு விகடன் குழுமமோ, குமுதம் குழுமமோ, இந்து பத்திரிகைக் குழுமமோ தமிழ் நாடு சார்ந்த தொலைக் காட்சி ஓடையைத் தொடங்க முனையவில்லை? அவர்களுக்கு என்ன பயம்.

இவை எல்லாம் ஒரு நிறுவனம் சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய கண்ணியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்போது விளையும் நிகழ்வுகள்.

சரி, இப்படி ஒரு ஏகபோக ஆதிக்கத்தை பிடித்து விட்டால், அந்த நிறுவனம் என்றென்றும் ராசாதானா? இதற்கும் தெளிவான விடை ஒன்று உள்ளது.

4 கருத்துகள்:

பிரதீப் சொன்னது…

அதாவது கடின உழைப்பால் ஒரு நிறுவனம் ஏகபோக உரிமை பெற்றால் கூட இன்னொரு தளத்தில் எவ்வளவு மோசமான நிறுவனம் இருந்தாலும் இந்த முன்னணி நிறுவனத்தை நசுக்கி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்கிறீர்களா?

ஜெயக்குமார் சொன்னது…

/ அதாவது கடின உழைப்பால் ஒரு நிறுவனம் ஏகபோக உரிமை பெற்றால் /

அதாவது மத்திய மாநில ஆட்சிகளின் செல்வாக்கைப்பயன் படுத்தி. ஆம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியைப்பிடிக்க எவ்வளவு?! உழைக்க வேண்டியுள்ளது. சரியாகசொன்னீர்கள் பிரதீப்.

மா சிவகுமார் சொன்னது…

"பிரதீப் said...
அதாவது கடின உழைப்பால் ஒரு நிறுவனம் ஏகபோக உரிமை பெற்றால் கூட இன்னொரு தளத்தில் எவ்வளவு மோசமான நிறுவனம் இருந்தாலும் இந்த முன்னணி நிறுவனத்தை நசுக்கி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்கிறீர்களா?"

ஒரு தொழில் நிறுவனம் என்பது அரசும் சமூகமும் கொடுத்த உரிமைகளின் மேல் உருவாக்கப்படுவது. அதன் மூலம் சமூகம் பலன் பெறும் என்ற அடிப்படையில் இந்த உரிமைகளும் வசதிகளும் தொழில்களுக்குக் கிடைக்கிறது. அந்த உரிமைகளும், வசதிகளும் பிறரை பாதிக்கும் வண்ணம் வளர்ந்து விட்டால் அதை நெறிப்படுத்தும் உரிமையும் கடமையும் அரசுக்கு உண்டு.

சம்பந்தப்பட்ட நிறுவனமும் தனது சக்தியை பொறுப்புடன் பெருந்தன்மையுடன் பயன்படுத்தினால் எல்லோருக்கும் நல்லது. இதைப்பற்று மேலும் எழுதுகிறேன்.

Selvakumar சொன்னது…

இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.

சமீபத்திய தகவல்படி,

சன் குழுமம், திரையரங்குகளை விலைக்கு வாங்கி, அதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம், விநியாகஸ்தர்கள் இல்லாமலேயே படங்களை வெளியிடும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கேள்விப்பட்டேன்.

இதுவும் திரைப்படத்துரைக்கு பெருத்த அடியாக அமையலாம்.

இது நடக்க சாத்தியமில்லை என்று கூறவும் முடியவில்லை.