ஞாயிறு, மே 14, 2006

முதல்வரின் முத்தான கையெழுத்துகள்

  1. ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் வேலையாக, நியாய விலைக் கடைகளில் கிலோவுக்கு இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்ட முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு நன்றிகள், வாழ்த்துகள்.

    முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவர்களும், நியாய விலைக்கடைகளில் அரிசி வழங்கப்படும் முறையை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். திரு கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, காங்கிரசு தலைவர்கள், மருத்துவர் ராமதாசு, கம்யூனிஸ்டு தலைவர்கள், வைகோ மற்றும் திருமாவளவன், நியாய விலைக் கடைகளுக்குச் சென்று தங்கள் சொந்த வீட்டில் பயன்படுத்த அரிசி வாங்கி வர வேண்டும். இதற்காக இவர்களுக்கு தமிழ் நாட்டில் எந்த நியாய விலைக் கடையிலும் அரிசி வாங்கும்படியான குடும்ப அட்டையை அரசு வழங்க வேண்டும். இப்படிச் செய்தால் கடையில் கிடைக்கும் அரிசியின் தரமும் அளவும் சீராக இருக்கும்படி அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்.

  2. சத்துணவில் வாரத்துக்கு இரண்டு முட்டைகள் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்ட முதல்வருக்கு பாராட்டுகள்.

    கலைஞர் அவர்கள் தனது பேர் சொல்லும்படியாக, எல்லாப் பள்ளிக் குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன். மா கோ ராமசந்திரன் மதிய உணவுத் திட்டத்தில் தனது பெயரைப் பதித்தது போல, பல்லாயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளின் எதிர் காலத்தில் தன் முத்திரையைப் பதிக்க கலைஞருக்கு ஒரு வாய்ப்பு. வேண்டும் என்றால், இலவச வண்ணத் தொலைக் காட்சிக்குப் பதிலாக இந்தத் திட்டம் என்று அறிவித்து விடுங்கள்.

  3. விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்த முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

2 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

//கிலோவுக்கு இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்ட முதலமைச்சர்//
ஹோட்டல் அதிபர்கள் காட்டில் இனிமேல் அரிசி மலையோ அரிசி மழையோ தான்.

மா சிவகுமார் சொன்னது…

கோவிக் கண்ணன்,

அதை தடுக்க வேண்டியது, நிர்வாகத்தின், மக்களின், அரசியல்வாதிகளின் கடமை. பார்க்கலாம்.