திங்கள், மே 08, 2006

எனது பேராசை

தமிழகத்தின் இறுதி நிலவரம்
அதிமுக - 100
மதிமுக - 25
விடுதலைச் சிறுத்தைகள் - 5

திமுக - 60
காங்கிரசு - 25
பாமக - 6
இடது கம்யூனிஸ்டு - 6
வலது கம்யூனிஸ்டு - 6

திமுதிகவின் விஜயகாந்த் - 1

ஜெயலலிதா அறிக்கை

மக்கள் எங்களுக்கு இன்னுமொரு வாய்ப்பை அளித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கூட்டணிக் கட்சிகளான, மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம். திரு திருமாவளவன் துணை முதலமைச்சராக பணி புரிய வேண்டும் என்று விரும்புகிறோம். திரு வைகோ அவர்கள் அரசில் முக்கிய பொறுப்பு ஒன்றை ஏற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.

எம்முடைய முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சிகள் சட்டசபையில் பொறுப்பாக செயல்பட அனுமதிக்கவில்லை என்ற குற்றச் சாட்டை ஆராய்ந்து, இந்த முறை எங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வோம். எஙகள் அமைச்சரவை கூட்டு முயற்சியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்.

மத்திய அரசில் தமிழகத்தின் நலன்களை எடுத்துச் செல்லும் வகையில், தமிழகத்தின் 13 மத்திய அமைச்சர்களுடன் இணைந்து செயல்பட ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். அதில் பங்கேற்க அனைத்துக் கட்சியினரையும் வரவேற்கிறோம்.

தமிழகத்தில் அரசியல் நாகரீகம் குலைந்து விட்டது என்று பலர் எங்களிடம் சுட்டிக் காட்டினர். இனிமேல் தனிநபர் மீதான் தாக்குதல்களை அறவே நிறுத்தி விட எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது. எதிர்க் கட்சி தலைவர்களான, கலைஞர் கருணாநிதி, டாக்டர் ராமதாஸ், திரு சிதம்பரம் போன்றவர்களை நான் சந்தித்து, புதிய அரசுக்கு அவர்களது ஆசியையும், ஆக்க பூர்வமான எதிர்ப்பையும் கோருவேன்.

1. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது எங்கள் முந்தைய ஆட்சியின் குறையாகச் சொல்லப்பட்டது. இன்னொரு முறை, அரசு ஊழியர்கள் அப்படிச் செயல்பட்டால், அதே மாதிரியான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஊழியம் என்பது, மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இடம். தொழிற்சாலைகள் போல லாப நோக்கில் செயல்படாத அரசு நிர்வாகத்தில் வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளுக்கு இடமே இல்லை.

2. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழகம் முழுவதும் மது விலக்கு அமல்படுத்தப்படும். எங்கள் நிர்வாகத்தின் வழக்கமான கடுமையுடன், கள்ளச்சாராயம் ஒழிக்கப்படும்.

3. தவறு செய்பவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்குடையவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எங்கள் அரசின் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.

4. முதலமைச்சர் உட்பட உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மக்கள் நீதிமன்றம் அமைக்கப்படும்.

5. தமிழகத்தில் தமிழ் ஒரு பாடமாகவாவது கட்டாயமாக படிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அமல் படுத்தப்படும்.

6. தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாகவும், உலக பொருளாதார மண்டலங்களில் முதன்மைப்படுத்தவும் காலவரையறுக்கப்பட்ட திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

கலைஞர் அறிக்கை

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம். செல்வி ஜெயலலிதா அவர்களின் அறிக்கையை வரவேற்கிறோம். மாநில அரசுடன் கை கோர்த்து, மாநிலத்துக்கான நலப் பணிகளை செயல்படுத்தப் பாடுபடுவோம்.

அனைத்து உறுப்பினர்களும் சட்டமன்றக் கூட்டங்களுக்கு தவறாமல் சென்று, அரசின் குறைகளையும் செயல் தவறுகளையும் ஆக்க பூர்வமாக இடித்துரைப்போம்.

தமிழகத்தையும் தமிழ் மொழியையும் உலகப் புகழ் பெற வைக்க அயராது பாடுபடுவோம்.

11 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

நல்லாத்தேன் இருக்கு!

ஆனா ஒரே வாரத்துல ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சியைக் கவுத்துருவாங்களே!

பெயரில்லா சொன்னது…

ஐயோ ஹிந்தி சொல்லிக்கொடுக்க மாட்டீங்களா??.

இன்னும் ஒரு தலைமுறயோட வாழ்வு பாழாயிடுமே?.

பெயரில்லா சொன்னது…

The election result is possible. But after that .....

If Amma doesnt want to share the dias with Thiruma - do you think she will share the power???

நாமக்கல் சிபி சொன்னது…

//தமிழகத்தில் தமிழ் ஒரு பாடமாகவாவது கட்டாயமாக படிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அமல் படுத்தப்படும்//

//ஐயோ ஹிந்தி சொல்லிக்கொடுக்க மாட்டீங்களா??. //

தமிழ் ஒரு பாடமாக கட்டாயமாக்கப் படும் என்றுதான் உள்ளது. ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யார் சொன்னது அனானி?

மா சிவகுமார் சொன்னது…

anony,

1. இந்த தலைமுறைக்கு என்ன குறை வந்து விட்டது. இந்தி கற்ற வட மாநிலத்தவர்கள் எல்லாரும் பெங்களூருக்கும், சென்னைக்கும்தான் இப்போது வேலைக்காக யாத்திரை செய்கிறார்கள். இந்தி கற்காததால் எதுவும் குறைந்து விடவில்லை.

2. அதுதான் பேரசை என்று சொல்லி விட்டேனே, திருமாவளவன் முதலமைச்சராக ஏற்கப்பட்டால் தமிழகத்தின் எதிர்காலம் எங்கோ போய் விடும். எந்த சமூகத்தில் சிறுபான்மையினரும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களும் அதிகாரம் பெறுகிறார்களோ, அந்த சமூகம்தான் தளைத்து வளரும்.

சிபி,

விட்டுக் கொடுத்து மக்கள் சேவைக்காக பணியாற்றும் பண்பு வர வேண்டும் என்பதுதான் ஆசை :-)

அன்புடன்,

நன்மனம் சொன்னது…

இது பல "உண்மையான" மகான்கள் கண்ட கனவு. இந்த அறிக்கையை கழகம் முன்னமே தயார் செய்து வெளியிட்டிருந்தால் ஒரு ஓரமா நம்பிக்கை இருந்திருக்கும். இப்பொழுது "பேராசை" மட்டுமே. வாய்ப்பு??????

மா சிவகுமார் சொன்னது…

நன்மனம்,

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொல்வது போல, கனவு காணக் கற்றுக் கொள்வோம், சீக்கிரமே கனவு நனவாகலாம்.

அன்புடன்,

பெயரில்லா சொன்னது…

//இந்த தலைமுறைக்கு என்ன குறை வந்து விட்டது. இந்தி கற்ற வட மாநிலத்தவர்கள் எல்லாரும் பெங்களூருக்கும், சென்னைக்கும்தான் இப்போது வேலைக்காக யாத்திரை செய்கிறார்கள். இந்தி கற்காததால் எதுவும் குறைந்து விடவில்லை.//

மாயவரத்தாரின் இந்த சுட்டிய பாருங்கள்.

தேர்தல் 2006 : ஹிந்தி எதிர்ப்பு [#287]

ஹிந்திக்காக கூப்பாடு போடும் இவர்களுக்கு என்ன பதில்??

I am not trying to divert the topic of this posting.

மா சிவகுமார் சொன்னது…

என்னுடைய கருத்துப்படி இந்தி கற்பது ஒவ்வொருவரும் தேவைக்கேற்ப முடிவு செய்து கொள்ள வேண்டியது. அப்படி கற்க விரும்புபவர்களுக்கு அரசு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். வட நாட்டில் வேலை செய்யப் போவதாக திட்டம் இருப்பவர்கள், வேலை கிடைத்து விட்டவர்கள், அல்லது ஒரு நல்ல/உயர்ந்த மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் இந்தி கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளியிலும் அதைக் கட்டாயமாக்க வேண்டியதில்லை.

நான் இந்தியில் பிரவேசிகா வரை முடித்தேன். வளமான மொழியான இந்தியைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்லவில்லை. அதை ஆட்சி மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் செய்து மற்ற மொழி பேசுபவரை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கி விடக் கூடாது.

அன்புடன்,

ஜெயக்குமார் சொன்னது…

கனவு மெய்ப்படவேண்டும்!.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ஜெயகுமார்.

அன்புடன்,