வெள்ளி, செப்டம்பர் 01, 2006

கொசுறு மதிப்பு - மேலும் (economics 16)

இந்தக் கொசுறு மதிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த இன்னொரு பதிவு.

பொதுவாக மேற்கத்திய வகுப்பறைகளில் நவீன பன்னாட்டு நிறுவனங்கள், நுகர்பொருள் விற்பனை நிறுவனங்கள் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்க முடிவது பொருளாதார விதிகளின் படி சமூக நலத்துக்கு எதிரானது என்பதை ஆழமாக விவாதிப்பது இல்லை.

இந்த லாபங்களுக்கு பல முகங்கள் இருந்தாலும் பெரும் பங்கு வகிக்கும் ஒரு காரணி இப்படி வாடிக்கையாளர்களின் நுகர்வு கொசுறு மதிப்பையும், தமக்கு பொருட்களை விற்பவர்களின் உற்பத்தி கொசுறு மதிப்பையும் சமூக நெறிகளுக்கு மாறாக கொள்ளை அடித்துக் கொள்வதுதான் ஒரு வணிக நிறுவனத்தின் வெற்றியாகவும், பங்குச் சந்தையில் அதன் பங்குகள் விலை உயரவும் காரணியாகவும் கருதப் படுகின்றன.

ஒரு நிறுவனத்தின் எல்லா செலவுகளும் போக, போட்ட முதலுக்கான பலனும் கிடைத்த பிறகு எஞ்சி நிற்கும் பெருமளவு பணம் இப்படி ஈட்டப்பட்டதுதான். இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். ஒரு ஆண்டில் நிறுவனத்தின் செலவு விபரம் இதோ:
  • மூலப் பொருட்கள் வாங்கியது - 10 கோடி ரூபாய்
  • ஊழியர்களுக்கு சம்பளம் - 6 கோடி ரூபாய்
  • கட்டிடம், மின்சாரம், போக்குவரத்து போன்ற செலவுகள் - 4 கோடி ரூபாய்
  • வங்கி வட்டி முதலான செலவுகள் - 3 கோடி ரூபாய்

  • சந்தைப்படுத்துதல் தொடர்பான செலவுகள் - 20 கோடி ரூபாய்

  • மொத்தச் செலவினம்: 43 கோடி ரூபாய்
வருமானம்:
  • உற்பத்தியான பொருட்களின் எண்ணிக்கை - பத்து லட்சம்
  • ஒரு பொருளின் விலை - 1000 ரூபாய்
  • மொத்த வருமானம் - 100 கோடி ரூபாய்
  • மொத்த லாபம் 57 கோடி ரூபாய்

  • வருமான வரி அரசுக்கு (சமூகத்துக்கு) - 20 கோடி ரூபாய்

  • மொத்த முதலீடு - 1 கோடி ரூபாய்
எஞ்சி இருக்கும் 37 கோடி ரூபாயை 1 கோடி ரூபாய்க்குக் கிடைத்த ஆதாயமாகக் கணக்கிட்டு கொண்டாடிக் கொள்கிறார்கள்.

பொருளாதார உண்மைகளின் படி சந்தையில் சரியான போட்டி இருந்தால் விலை கடைசி அலகுக்கு ஒரு வாடிக்கையாளர் கொடுக்கத் தயாராக இருந்த விலையான 400 ரூபாய்க்குத்தான் விற்றிருக்க முடியும்.

இப்படியே ஒவ்வொரு தலையிலும் பார்த்தால், மூலப் பொருள் வாங்கும் போது விவசாயியின் நிலையைப் பயன்படுத்தி சரியான சந்தை விலை அமைய விடாமல், தனது ஆதிக்கத்தின் மூலமாக குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டதில் ஐந்து கோடி ரூபாய் மிச்சம், ஊழியர்களுக்கு போட்டி நிலவும் சந்தையில் அமையும் சம்பளம் கொடுத்து விடாமல் தனது பெருவிரலுக்கிடையே கசக்கிப் பிழிந்து சேமித்ததில் இரண்டு கோடி ரூபாய் மிச்சம் என்று கழித்துக் கொண்டே வந்தால் சரியான போட்டி நிலவும் ஒரு சந்தையில் இந்த நிறுவனத்தின் கணக்கு இப்படி அமையலாம்:

  • 1. மூலப் பொருட்களை வாங்கியது - 15 கோடி ரூபாய்
  • ஊழியர்களுக்கு சம்பளம் - 8 கோடி ரூபாய்
  • கட்டிடம், மின்சாரம் முதலியவை - 4 கோடி ரூபாய்
  • வங்கி வட்டி முதலானவை - 3 கோடி ரூபாய்
  • சந்தைப் படுத்தல் செலவுகள் - 2 கோடி ரூபாய் (என்ன செய்தாலும் தனது விற்கும் விலையை சந்தை விலைக்கு மேலே ஏற்றிக் கொள்ள முடியாததால் வீண் செலவு தவிர்க்கப்படுகிறது)

  • மொத்தச் செலவினம்: 32 கோடி ரூபாய்
வருமானம் :
  • உற்பத்தி அளவு : 10 லட்சம்
  • பொருளின் விலை : 400 ரூபாய்
  • மொத்த வருமானம் : 40 கோடி ரூபாய்

  • மொத்த ஆதாயம் - 8 கோடி ரூபாய்
  • அரசுக்கு வரிகள் - 2 கோடி ரூபாய்
  • ஒரு கோடி முதலீட்டுக்கு ஆறு கோடி ரூபாய் ஆதாயம்.
குடுவையில் இருந்து விடுவித்த பூதம் போல பெரிதாக வளர்ந்த இந்த நிறுவன நலன்கள் அவை சேவை செய்வதற்கான மக்களின் நலன்களை விட பெரிதாகி விடுகின்றன. சரி எதற்கு இத்தகைய வணிக நிறுவனங்கள் முதல் முதலில் அனுமதிக்கப்பட்டன? அத்தகைய அமைப்புகளின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்?

கருத்துகள் இல்லை: