புதன், மார்ச் 09, 2011

எனது பார்வையில் தமிழக மீனவர்கள் - 1

நான் பிறந்தது, 12ம் வகுப்பு வரை படித்தது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோவிலில். எங்கள் மாவட்டத்தில் கடற்கரையும், மீனவர் சமுதாயமும் குறிப்பிடத்தக்க அளவில் நிறைந்திருக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை

இருந்தாலும், எங்கள் வீட்டில் மீன் சமைப்பது இல்லாததால் மீன் வாங்குவது குறித்த செயல்பாடுகள் கூட இல்லாமலேயே வளர்ந்தேன். ஊருக்கு உறவினர்கள் வீட்டுக்குப் போகும் போது அவர்கள் சமைக்கும் மீன்கள் சாப்பிட்டிருக்கிறேன். நான் மீன் சாப்பிடுவேன் என்று தெரிந்ததும் பக்கத்து வீட்டு அம்மா 'சாப்பிடுற பையனுக்கும் கொடுக்காம கெடுக்குறாங்க' என்று செல்லமாகத் திட்டி அனுப்பும் மீன் சாப்பிடுவது மட்டும் கொஞ்ச காலம் நடந்தது. கூனிப் பொடி என்ற மீனை அவர்கள் சமைத்து அனுப்பியதைச் சாப்பிட்டதில் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாமல் போக மீன் சாப்பிடுவது ஒரு முடிவுக்கு வந்தது.

கடற்கரை கிராமங்களிலிருந்து விலகியிருக்கும் நாகர்கோவில் நகரில் வசித்ததால், மீனவ நண்பர்கள் அதிகம் இருக்கவில்லை. 'கடற்கரை பசங்க முரடங்க' என்று எச்சரிக்கப்பட்டு பழக வாய்ப்பிருக்கக் கூடிய மற்ற இடங்களிலும் பயம் கலந்த மரியாதையுடன் ஒதுங்கி இருந்ததே நடந்தது.

கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்த பிறகு கடற்கரை என்பது மெரீனா, பெசன்ட் நகர் மனமகிழ்வு தளங்களாக போயிருக்கிறேன். நாட்டுநலப்பணித் திட்டத்தின் கீழ் பட்டினப் பாக்கம் போனது மீனவர் கிராமம் ஒன்றை முதன் முதலில் முறையாகப் பார்த்தது.

வேலையில் சேர்ந்து பிற இடங்களைப் பார்த்து விட்டு 2001ம் ஆண்டில் சென்னைக்குத் திரும்பிய பிறகு, கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் மீனவர் கிராமங்களுக்கு குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல் போய்ப் பார்த்திருக்கிறேன். 

கருத்துகள் இல்லை: