செவ்வாய், மார்ச் 08, 2011

ராமேசுவரம் குறிப்புகள் (4வது கடைசி நாள்)

மீனவர்கள் அதிகாலை கடலுக்குப் போகும் நேரத்தில் மீன்பிடித் துறைக்குப் போகலாம் என்று ஆறு மணிக்கெல்லாம் புறப்பட்டுப் போனோம். அழைத்துப் போன திரு சேகர், 'நான் வந்தால் ஒழுங்கா பேச மாட்டாங்க' என்று வெளியில் நின்று விட, படகுகள் நிறுத்தப்பட்டிருந்த கரைக்குப் போனோம்.

ஒரு படகில் ஐஸ் கட்டிகளை ஏற்றி இன்னொரு படகுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கரையில் நின்றபடி மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தவரை அணுகி பேச்சுக் கொடுத்தால், அவரே உற்சாகமாக பேச ஆரம்பித்தார்.

2008ம் ஆண்டில் துப்பாக்கிச் சூடில் குண்டடிபட்டவராம். சொந்தமாக இரண்டு விசைப் படகுகள். தனது தம்பிகள் மகனுடன் கடலுக்குப் போயிருக்கிறார். சூழ்ந்து வந்த இலங்கைப் படையினர் துப்பாக்கியால் சுட இவருக்கு தோளுக்கருகில் குண்டு பாய்ந்திருக்கிறது (துளைத்த இடத்தின் வடுவைக் காட்டினார்). கூட இருந்தவர்கள் தப்பித்துக் கொள்ள, இவரது காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ராமேசுவரம், ராமநாதபுரம், மதுரை என்று மருத்துவனைகளுக்குப் போய் அறுவை சிகிச்சை செய்து நெஞ்சு பகுதிக்குள் இறங்கி விட்டிருந்த குண்டை நீக்கியிருக்கிறார்கள்.

தனது மீன்பிடி வாழ்க்கையில் பலமுறை அடிபட்டிருப்பதாகச் சொன்னார். புறங்காலில் அடிபட்ட காயத் தழும்புகளைக் காட்டினார். துப்பாக்கி காயத்துக்குப் பிறகு கடலுக்குப் போகும் அளவுக்கு உடல்நிலை தேறவில்லை என்று சொன்னார். இப்போது அவரது தம்பிகளும் மகனும்த்தான் படகை எடுத்துப் போகிறார்களாம்.

படகுக்குள் போய் ஓட்டுநர் அறைக்குள் உட்கார்ந்திருந்த அவரது தம்பியிடம் பேசினோம். அவரும் தனது அனுபவங்களைப் பேசினார். அதே படகில் வேலைக்கு போகும் இன்னொருவர், 'தினமும் கடலுக்குப் போகும் போது திரும்பி வந்தால் வகை என்றுதான் போகிறோம்'.

ராமேசுவரம் இலங்கைக்கு இடையேயான கடல்பகுதி மிகவும் குறுகியதாக இருப்பதால், மீனவர்கள் கடலுக்குப் புறப்பட்டாலே இந்தியக் கடல் எல்லையை தாண்டாமல் இருக்க முடிவதில்லையாம்.

மதிய வேளையில் மீனவர் நலனுக்காக உழைக்கும் தில்லைபாக்கியம் என்ற ஆர்வலர் பிரச்சனை குறித்த தனது பார்வைகளை விரிவாகப் பேசினார். ராமேசுவரம் பகுதியில் இலங்கை கடற்படையுடன் சந்திப்பு என்பது தினசரி நிகழ்வாக இருக்கிறது. அரசியல் தளத்தில் தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும்.

பிற்பகலில் தனுஷ்கோடி போகும் வழியில் இருக்கும் தாவுகாடு என்ற கிராமத்துக்கு அழைத்துச் சென்றார் சேகர். இங்கு வசிக்கும் 50-60 குடும்பங்கள், கரையோரமாக மீன் பிடிக்கும் சிறு மீனவர்கள். அரசாங்க சேவைகள் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

குறிப்பு:

நான் எழுதிய இடுகைகள், ரோசாவசந்த், உண்மைத் தமிழன், நான் மற்றும் பிரேம் ஆனந்த் போய் வந்த இடங்கள், சந்தித்த நபர்கள் பற்றிய சிறுகுறிப்புகள் மட்டுமே.

சந்திப்புகளின் போது எடுக்கப்பட்ட காணொளிகள், ஒளிப்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்றவற்றை தொகுத்து அடுத்து வரும் நாட்களில் வெளியிடுகிறோம்.

தொடர்ந்து பயணத்தின் போது, கண்டவற்றையும் கற்றுக் கொண்டவற்றையும் ஒவ்வொருவரும் விளக்கமான பதிவுகளாக வெளியிடுகிறோம். 

4 கருத்துகள்:

-/சுடலை மாடன்/- சொன்னது…

சிவகுமார்,

ரோசாவசந்த், உண்மைத் தமிழன், பிரேம் ஆனந்த் மற்றும் உங்களுக்கு மிகுந்த பாராட்டுகள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

மா சிவகுமார் சொன்னது…

நன்றி சுடலை மாடன்,

நீங்கள் குறிப்பிட்ட பெயர்களுடன்

கலந்து கொண்ட பிற இணையப் பயனர்கள்
அறுசுவை பாபு, நாகை
நாகை சிவா, நாகை
சரண், சிதம்பரம்
கார்த்திகேயன், சிதம்பரம்
அவர்களது நண்பர், சிதம்பரம்,
வசந்த், காரைக்கால்

அந்தந்த ஊர் ஆர்வலர்கள்
சுபாஷ், நாகை
ராமநாதன், கோட்டைபட்டிணம்
ஜெரோன் குமார், ராமேசுவரம்
சேகர், ராமேசுவரம்

ஒருங்கிணைப்பில் உதவிய பதிவர்கள்
கவிதா, நாகை
கும்மி, ஜெகதாபட்டிணம்
பாலபாரதி, ராமேசுவரம்

சாந்தப்பன், அபி அப்பா, டிபிசிடி என்று பலரின் ஊக்குவிப்புக்கும்

நன்றி சொல்ல வேண்டும்.

bala சொன்னது…

really great job

மா சிவகுமார் சொன்னது…

@bala,

சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த வழியில் தட்டிக் கேட்கப்பட வேண்டிய பிரச்சனை இது.

அன்புடன்,
மா சிவகுமார்