புதன், மார்ச் 09, 2011

எனது பார்வையில் தமிழக மீனவர்கள் - 2

2004ம் ஆண்டு கோடை விடுமுறையில் மே 15 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு கடற்கரையோரமாக நாகர்கோவில் வரை இரு சக்கர வண்டியில் ஒரு நண்பருடன் பயணித்தேன்.
  • சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலையில் போய், மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் என்று முதல் நாள்.

  • அடுத்த நாள் காலையில் சீர்காழி, திருக்கடையூர், தரங்கம்பாடி, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் போய்ச் சேர்ந்தோம். அன்று மாலையில் கோடிக்கரை காடு அதன் அருகிலுள்ள கடற்கரைக்குப் போய் வந்தோம்.

  • மூன்றாவது நாள் அதிராமபட்டிணம், சேதுபவசத்திரம், அம்மா பட்டிணம், கோட்டை பட்டிணம், ஜெகதாபட்டிணம், மீமிசல், தொண்டி, தேவிப் பட்டிணம் வழியாக ராமநாதபுரம் வந்து சேர்ந்தோம். இந்த சாலைகள் குண்டும் குழியாக உடலைக் குலுக்கி எடுத்தன.

  • நான்காவது நாள் மண்டபம், பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி வரை (சாலையில் மட்டும்) போய் விட்டு ராமநாதபுரம் வந்து தெற்கு நோக்கி பயணித்தோம். இருட்டிய பிறகும் பயணித்து தூத்துக்குடி போய் தங்கினோம்.

  • ஐந்தாவது நாள் திருச்செந்தூர், உவரி, கூடங்குளம், கன்னியாகுமரி போய் நாகர்கோவில் போய்ச் சேர்ந்தோம். 

இந்தப் பயணத்தில் வழியில்  மக்களுடன் உறவாடும் வாய்ப்புகள் எதுவும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. கடற்கரையோர கிராமங்கள்/நகரங்கள், சாலைகள், குளங்கள், தொழில்கள் என்று கண்ணால் கண்ட காட்சிகளும், சுவாசித்த கடல் மணமும் தமிழகக் கடற்கரை வாழ்க்கையின் ஒரு அறிமுகமாக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு பயணத்துக்கு அது ஒரு தயாரிப்பாகக் கூட இருந்திருக்கிறது. 

2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியின் போது நான் சென்னையிலிருந்து வேலூருக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். நான் போன பேருந்தில் பாத்திரங்களுடனும், மூட்டைகளுடனும் ஒரு அம்மா ஏறியிருந்தார். 'கடற்கரை எல்லாம் தண்ணி, சென்னை இன்னும் சாயங்காலத்துக்குள் மூழ்கி விடுமாம்' என்று அழுகையும் குழப்பமும் நிரம்பிய குரலில் சொன்னார். வேலூர் பேருந்து நிலையத்தில் தினமலர் நாளிதழின் சிறப்பு வெளியீட்டில் கடற்கரை எங்கும் நிகழ்ந்திருந்த இயற்கை சீற்றம் பற்றி எழுதியிருந்தார்கள். 

கருத்துகள் இல்லை: