வியாழன், மார்ச் 10, 2011

தமிழக மீனவர்கள் - எனது பார்வையில் - 5

நான்கு நாட்கள் பயணத்தில்
  • நாகப்பட்டினம், கீச்சாங்குப்பம், அக்கரைப் பேட்டை, நாகூர்
  • வெள்ளப்பள்ளம், புஷ்பவனம்
  • ஜெகதாபட்டிணம், ஐயம்பட்டிணம், கோட்டை பட்டிணம்
  • பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி 
பகுதி மீனவர்களிடம் பேசியதில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. 

1. சமீபத்தில் ஊடகங்களில் பேசப்பட்ட 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைத் தவிர குறைந்த அளவு தீவிரத்துடன் தாக்குதல்கள் நடந்தனவா? நடக்கின்றனவா?

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி  மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தினசரி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது என்று தெரிய வந்தது. ஆரம்பத்தில் பரபரப்பாக பேசப்பட்டு, போராட்டங்களை நடத்தினாலும். போகப்போக இலங்கை கடற்படையுடனான நிகழ்வுகளை அன்றாட மீன்பிடி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நினைத்து தொழிலை செய்து வருகிறார்கள்.  

25 ஆண்டு தொழில் அனுபவத்தில் ஒவ்வொரு மீனவரும் சில நூறு முறைகள் தாக்கதல்களை சந்தித்திருக்கிறார்கள். 


இந்த வரைபடத்தைப் பார்த்தால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியிலிருந்து இலங்கையுடனான கடற்பகுதி எவ்வளவு குறுகியதாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். 

வேதாரண்யத்திலிருந்து ராமேசுவரம் வரையிலான வளைகுடா கடற்கரையும் இலங்கையின் வடக்குப் பகுதிகளுடன் இணையாக அமைந்துள்ளது. இந்தப் பகுதி மீனவர்கள் கணிசமான அளவு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். 


நாகப்பட்டினத்தை ஒட்டிய பகுதி மீனவர்களில், வெகு தூரம் பயணிக்கும் விசைப்படகினர் அவ்வப்போது தாக்குதல்களை சந்திக்கிறார்கள். 

கடலில் நடந்த நிகழ்வுகளை காவல் துறையிடமோ, மீன்வளத் துறையிடமோ முறையிட்டால் 'நீங்க அந்தப் பக்கம் போயிருப்பீங்க, அதுதான் அடிச்சிருப்பாங்க' என்று பதிவு கூடச் செய்யாமல் நிராகரித்து விடுவதாகச் சொன்னார்கள். 

கொலை வழக்குகளுக்குக் கூட முறையான முதல் தகவல் அறிக்கை பதியவில்லையாம். காயமடைந்தவர்கள்,  வன்முறைக்கு உள்ளானவர்கள், மீன்களை அள்ளிச் சென்றது, வலைகளை அறுத்து நாசம் செய்தது,  மீன்பிடி கருவிகளை கவர்ந்து சென்றது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு மீனவரின் செவி வழிச் செய்தியாகவே இருந்து வருகிறது. பக்கத்து கிராமங்களில் வசிப்பவர்களுக்குக் கூட எல்லா விபரங்களும் தெரியாமல் இருக்கின்றன.  

கருத்துகள் இல்லை: