ஞாயிறு, மார்ச் 06, 2011

வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் கிராமங்களில் 2வது நாள்

சனிக்கிழமை காலை 7 மணிக்கு நாகை சிவா, அறுசுவை பாபு, சுபாஷ் மூவருடன் வேதாரண்யம் திசையில் புறப்பட்டோம்.

கொல்லப்பட்ட பாண்டியன் என்ற மீனவரின் கிராமமான வெள்ளப்பள்ளத்துக்குப் போனோம். அந்த ஊர் பெரியவர் ஒருவர் பொதுவான தகவல்களை விளக்கினார்.

பாண்டியன் தாக்கப்பட்ட நேரத்தில் அவருடன் சென்ற மீனவர்களில் ஒருவரான முருகேசன், கடலுக்குப் போக புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் தாக்கப்பட்ட நாளில் நடந்த நிகழ்வுகளை விளக்கினார். சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் கடலுக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்.

இந்த கிராமத்தில் சிறிய கண்ணாடி இழை படகுகளில் மீன்பிடிக்கச் செல்பவர்கள்தான் பெரும்பான்மை. மீன்கள் கரைக்கு வந்து விற்பனை நடக்கும் சந்தையையும் பார்த்து வந்தோம்.

புஷ்பவனம் கிராமத்துக்கு பயணித்தோம். கழுத்து நெறித்துக் கொல்லப்பட்ட ஜெயகுமார் என்ற மீனவரின் கிராமம். ஊரில் மீனவர்களில் பெரும்பகுதியினர் மீன்பிடிக்கச் சென்று விட்டிருந்தனர். ஊரின் பஞ்சாயத்து தலைவர் நடந்ததை விளக்கினார். நாளிதழில் படித்த விபரங்கள் நெருங்கிய வலியுடன் சொல்லப்பட்டன.

அருகில் இருந்த கடலுக்குப் போகும் மீனவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இந்த கிராமத்தில் பெரும்பான்மை மீனவர்கள் சிறிய படகுகளில் தொழிலுக்குப் போகிறவர்கள்,.

தொடர்ந்து வேதாரண்யத்துக்குக் வந்து, புறப்பட்டு போயிருந்த பட்டுக்கோட்டை பேருந்தைத் துரத்தி ஏற்றி விட்டு விட்டு விடைபெற்றார்கள் பாபு, சிவா மற்றும் சுபாஷ்.

இரண்டரை மணி நேர பயணத்துக்குப் பிறகு பட்டுக் கோட்டை வந்து சேர்ந்தோம். மங்களூரிலிருந்து தஞ்சாவூரில் இறங்கி பட்டுக் கோட்டை வந்து விட்ட பிரேம் ஆனந்துடன் சேர்ந்து நான்கு பேரும் பேருந்தில் கோட்டை பட்டிணத்துக்குப் புறப்பட்டோம்.

கோட்டைப் பட்டிணத்துக்கு வரும் போது இரவாகி விட்டதால், அந்த ஊரில் தாய்த் தமிழ் பள்ளி நடத்தும், உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்கும், தமிழ் உணர்வாளர் ராமநாதன் அவர்கள் பள்ளியிலேயே தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்தார்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

GTNTV: post war situation in jaffna and north (portion on #TNFisherman issue) http://www.youtube.com/watch?v=bTQTU01yX50&t=5m13s

-/r.