ஞாயிறு, மார்ச் 06, 2011

ஜெகதாபட்டிணம், கோட்டைபட்டிணம் + ராமேஸ்வரத்தின் பாம்பன் (3வது நாள்)

காலை 7 மணிக்குப் புறப்பட்டு  இரண்டு வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு தாக்குதலில் உடல் முழுதும் தீக்காயமடைந்த மீனவர் ராஜ்மொகமது வீட்டுக்குப் போனோம்.

இன்னும் ஆறாத தீக்காயங்களுடன் படுக்கையில் இருந்தவரைப் போய்ப் பார்த்தோம். மூன்று பேர் படகில் போயிருக்கிறார்கள். சுற்றி வளைத்த படகுகளிலிருந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியிருக்கிறார்கள். இவர் படகின் உரிமையாளர், கூட இருந்தவர்கள் வேலை செய்பவர்கள். இவர் மீது தீப்பிடித்து காயமடைந்திருக்கிறார்.

மருத்துவச் செலவுக்கு கொடுத்த உதவித் தொகையை விட இரண்டு மடங்கு செலவழித்து அதற்கு மேல் மருத்துவமனையில் தங்க முடியாமல் புண் குணமாகாமலேயே வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

படுத்த படுக்கையாக இருக்கிறார். பார்க்கும் போது முழுவதும் குணமாகி தொழிலுக்குப் போக பல மாதங்கள் ஆகும் என்று படுகிறது. அது வரை அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கும். என்ன செய்யலாம்?

இந்தியக் கடற்படை பாதுகாப்பு குழுவில் தமிழ் பேசும் வீரர்கள் குறைவு. மீனவர்கள் தமது பிரச்சனைகளைச் சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது. ஆங்கிலம் அல்லது இந்தி மட்டும் தெரிந்தவர்கள் இவர்களிடம் தகவல் சேகரிக்க வருகிறார்கள்.
 

ஜெகதாபட்டிணம் மீனவர் சங்கத் தலைவரிடம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படையின் இரண்டு வீரர்கள் வந்து

'யூ ஹேவ் எனி பிராப்ளம்' என்று அந்த மீனவரைக் கேட்டார்கள்.

அவர் அவசர அவசரமாக 'நோ பிராப்ளம்' என்று சொல்லி விட்டார்.

தொடர்ந்து நாங்கள் கடற்படையினருடன் ஆங்கிலத்தில் பேசி விபரங்களைக் கேட்டோம்.


ஜெகதா பட்டிணத்தை அடுத்த மீனவர் கிராமத்துக்குப் போனோம். பெரும்பாலும் வள்ளங்களில் போய் மீன் பிடிக்கும் தொழில் செய்பவர்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியிலிருந்து வந்து குடியேறியவர்கள். இலங்கை படையின் தாக்குதலால் அவர்கள் வழக்கமாக செய்யும் தொழிலை ஒதுக்கி வைத்து விட்டு கரையோரமாகவே மீன் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கிறது.

தொடர்ந்து கோட்டைப்பட்டிணத்தின் மீன்பிடித் துறைக்குப் போனோம். பெருமளவு விசைப்படகுகள் தொழில் புரியும் கிராமம். இங்கு கடலோரக் காவற்படையின் விரைவுப் படகுகள் கட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம். இவை பெரும்பாலும் கடலில் சுற்றுவது குறைவு என்று சொன்னார்கள்.

விசைப்படகு உரிமையாளர் ஒருவரிடம் பேசி விட்டுப் புறப்பட்டோம்.

மூன்றரை மணி நேர பேருந்து பயணத்துக்குப் பிறகு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். ராமேஸ்வரத்தில் பணியாற்றி வரும் சமூக ஆர்வலர் சேகர் வழிகாட்ட பாம்பன் கிராமத்தில் யோவான் என்ற மீனவரைச் சந்தித்தோம். அவர் 25 ஆண்டு கால அனுபவத்தில் இலங்கை கடற்படை, விடுதலைப் புலிகள், இந்தியக் கடற்படை, மீன் துறை, காவல் துறை இவர்களிடம் அவரது அனுபவத்தை விளக்கினார்.

அந்த ஊர் இசுலாமிய தலைவர் சைஃபுதீனைச் சந்தித்தோம். அவர் இணையத்தில் செயல்படுகிறார். அவரது மின்னஞ்சல் முகவரியை வாங்கிக் கொண்டு tnfisherman குழும மின்னஞ்சலைக் கொடுத்தோம்.

நாளை ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சி மடம் மீனவர்களைச் சந்திக்கத் திட்டம்.

ஜெகதாபட்டிணத்தில் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தது கும்மி. ராமேஸ்வரத்தில் பாலபாரதியின் நண்பர் ஜெரோம் எங்களை கையில் எடுத்துக் கொண்டார்.

மீனவர்கள் தாம் சந்திக்கும் தாக்குதல்களை உடனுக்குடன் பதிவு செய்து இணையத்தில் ஏற்ற ஒரு செல்பேசி எண் உருவாக்கி மீனவர்களுக்குக் கொடுத்து வருகிறோம். இதில் சொல்லப்படும் தகவல்களை இணையத்தில் பதிவு செய்வதாகத் திட்டம்.

11 கருத்துகள்:

உமர் | Umar சொன்னது…

//மருத்துவச் செலவுக்கு கொடுத்த உதவித் தொகையை விட இரண்டு மடங்கு செலவழித்து அதற்கு மேல் மருத்துவமனையில் தங்க முடியாமல் புண் குணமாகாமலேயே வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.//

தாக்குதல் நடைபெற்ற மறுதினம் மாநில அமைச்சர் ஒருவர் சென்று பார்த்து தொலைக்காட்சியில் முகம் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.

அவருக்கென்ன வந்த வேலை முடிந்தது என்று திரும்பிவிட்டார். அகப்பட்டவர்கள் மீனவர்கள் அல்லவா?

Unknown சொன்னது…

மிக நல்ல காரியம் செய்கிறீர்கள் மா.சி.! வாழ்த்துகள்.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கடற்படை வீரர்கள் உரையாடுகிறார்கள் என்றால், அது மேலாண்மை / அரசியல் ரீதியான தவறு. இதை பெரிய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

//இதில் சொல்லப்படும் தகவல்களை இணையத்தில் பதிவு செய்வதாகத் திட்டம்.// இவற்றுக்கான ஆங்கில மொழியாக்கம் மிகத தேவையானது. இது பெரும் அளவு மக்களைச் சேர்ந்தடைய வேண்டும். இணையத் தளத்தில் மீனவர்களின் பதிவுகளை உடனுக்குடன் (எகிப்து / ட்விட்டர் போல) பதியவும், ஆங்கிலத்தில் அனைவரும் அறிய பதியவும் ஆவன செய்ய வேண்டும். கடல் கடந்து வாழும் என்னைப் போன்றவர்கள் எம்மாதிரி உதவி செய்யக் கூடும் என்று சொல்லுங்கள்! நன்றி!

மா சிவகுமார் சொன்னது…

கும்மி,

ராஜா முகமதுவையும் அவரது குடும்பத்தையும் பார்த்த போது, நமது சமூகத்தின் மீது வெறுப்புதான் விஞ்சியது.

நாங்கள் பயணத் திட்டமிட்ட போது இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரிந்திருக்கவில்லை. ஒரு மனித வாழ்வை இவ்வளவு துச்சமாக மதிக்கும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் நாம் நினைத்ததை விட கேவலமான இடத்தில் இருக்கிறார்கள் என்று தோன்றியது.

நம்மால் ஆன பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி கெக்குபிக்குணி,

//ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கடற்படை வீரர்கள் உரையாடுகிறார்கள் என்றால், அது மேலாண்மை / அரசியல் ரீதியான தவறு. இதை பெரிய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.//

உண்மை. இந்திய அரசு இந்தப் பகுதி மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்று தோன்றுகிறது. உள்ளூர் மக்களைப் பாதுகாக்க அடிப்படை முறைகளைக் கூட பின்பற்றாமல் இருக்கிறார்கள்.

கடலில் நடக்கும் சம்பவங்கள், 'நாம் என்ன செய்தாலும் கேட்பார் இல்லை' என்ற இலங்கைப் படையில் சிலரின் மனநிலை காரணம் என்று எனக்குத் தோன்றியது.

தனது குடிமக்களைக் பாதுகாக்காத முடியாத இந்திய அரசு வெட்கப்பட வேண்டும்.

நீங்கள் சொல்வது போல பயணக் குறிப்புகள், புகைப்படங்கள், ஒலி/ஒளிப் பதிவுகளை இணையத்தில் பெருமளவில் பரவச் செய்வோம். ஆங்கில மொழிபெயர்ப்பு subtitleகளுடன் தமிழ் தெரியாதவர்களுக்கும் இந்த நிலைமையைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

நடப்பவைகள் எந்த வழியிலும் நியாயப்படுத்த முடியாதவை.

மா சிவகுமார்

காவேரிகணேஷ் சொன்னது…

மா.சி , தங்களின் சமுதாய நோக்குக்கு வாழ்த்துக்கள்.

கல்வெட்டு சொன்னது…

சிவா,

மொழி தெரியாத, மக்களுடன் கலந்துவிடமுடியாத வீரர்களை அனுப்புவது என்பது அரசாங்கம் கடைபிடிக்கும் தந்திரம். தமிழ்நாட்டுப்பிரச்சனைக்கு தமிழ்நாட்டு வீரர்கள் அனுப்பப்படவே மாட்டார்கள். அதுபோல காஷ்மீரில் அந்த மாநிலத்து போர்வீரன் இருக்கமாட்டான். மேல்மட்டக் கட்டளையை அப்படியே செயல்படுத்த, உள்ளூர்வாசிகளுடன் இணைந்து மனம்மாறி சுயமாகச் சிந்திக்கால் இருக்கச் செய்ய இது ஒரு புரோட்டாக்கால். இதை மாற்றமுடியாது. ஏன் என்றால் இந்த அரசாங்கம் மக்களுக்கானது அல்ல.

நாம் குற்றம் சாட்டவேண்டியது, நம்மை அடகுவைத்து தனது குடும்பத்தை வளர்க்கும் தமிழகத்தலைமையும் அது போடும் சின்ன சின்ன ரொட்டித்துண்டுக்காக அல்லக்கையாக அலையும் தொண்டர்கள் எனும் பிரியாணிக்குஞ்சுகளையும்தான்.

மங்காத்தா 3 சீட்டுக்காக வாபஸ் பெறும் த‌லைவர் , இன்னும் 100 மீனவன் செத்தாலும் "அம்மா ஆட்சியில் 150 " என்று லாவணீ அரசியல்தான் செய்வார் தவிர மக்கள் நலன்காக்க ஏதும் செய்யமாட்டார்.


.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி காவேரி கணேஷ்,

@கல்வெட்டு,
//நாம் குற்றம் சாட்டவேண்டியது, நம்மை அடகுவைத்து தனது குடும்பத்தை வளர்க்கும் தமிழகத்தலைமையும் அது போடும் சின்ன சின்ன ரொட்டித்துண்டுக்காக அல்லக்கையாக அலையும் தொண்டர்கள் எனும் பிரியாணிக்குஞ்சுகளையும்தான்.//

அந்தத் தலைமையை எதிர்த்துப் போராடாமல் வாளவிருந்து எதிர்க்கட்சித் தலைமை, சோற்றாலடித்த பிண்டங்களாக இருந்த நம்மையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மா சிவகுமார்

கல்வெட்டு சொன்னது…

//அந்தத் தலைமையை எதிர்த்துப் போராடாமல் வாளவிருந்து எதிர்க்கட்சித் தலைமை, சோற்றாலடித்த பிண்டங்களாக இருந்த நம்மையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
//

100 % Agreed Siva


.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கல்வெட்டு,

1. தாக்குதலுக்குப் பயந்து வழக்கமாக செய்யும் மீன்பிடி முறையை ஒதுக்கி வைத்து விட்டு, தெரியாத புது முறையில் தொழில் செய்ய முயற்சித்து தவிக்கும் ஒரு ஏழை மீனவர்.

2. இந்தத் தொழிலில் வேண்டாம் என்று தன் மகனை கடையில் விற்பனையாளர் பணிக்கு அனுப்பிய தந்தை

3. தாக்குதலில் அடைந்த காயத்தால் கடலுக்குப் போவதையே நிறுத்த வேண்டி வந்தவர்.

இவர்களைப் பார்த்த போது இன்னும் எத்தனை பேர் இப்படி தமது வாழ்க்கையை இழந்து மௌனமாக தவிக்கிறார்கள் என்று தோன்றியது.

நேர்மையான ஒரு தொழிலைச் செய்யும் உரிமையைக் கூட பாதுகாக்க முடியாத நமது சமூகமும் அரசாங்கமும் இருந்து என்னதான் பயன்?

Unknown சொன்னது…

//மொழி தெரியாத, மக்களுடன் கலந்துவிடமுடியாத வீரர்களை அனுப்புவது என்பது அரசாங்கம் கடைபிடிக்கும் தந்திரம்// அவரவர்கள் அவரவர்களின் கட்டுப்பாடுகளை நிலைநிறுத்தும் சதுரங்க விளையாட்டு.

எனவே, தமிழ் தெரிந்த வடமாநிலத்தவர் வேண்டும், அந்த பேட்டிகளுக்கான அத்தாட்சி வேண்டும்னு கேட்கலாம். How do we put them on the spot?

//இவர்களைப் பார்த்த போது இன்னும் எத்தனை பேர் இப்படி தமது வாழ்க்கையை இழந்து மௌனமாக தவிக்கிறார்கள் என்று தோன்றியது// மா.சி., உங்கள் சந்திப்புகள் ஆடியோ அல்லது விடியோவில் கிடைக்குமா?

மா சிவகுமார் சொன்னது…

கெக்கே பிக்குணி,

நாகையிலும், ராமேசுவரத்திலும் வீடியோ/குரல் பதிவுகள். ஜெகதாபட்டிணம், கோட்டை பட்டிணம், ஐயம்பட்டிணம் பகுதிகளில் குரல் பதிவுகள் மட்டும் இருக்கும் என்று நினைக்கிறேன் (வீடியோ கேசட் தீர்ந்து போயிருந்தது).

பதிவு செய்யும் போது பேசியவர்களின் அனுமதி பெற்றுத்தான் செய்திருந்தாலும், அவற்றை வெளியிடுவதால் அவர்களுக்கு ஏதும் தொந்தரவுகள் வராமல் இருக்க வேண்டும் என்று ஒரு கவலை இருக்கிறது.

பதிவு செய்த கோப்புகளை ஒரு முறை பார்த்து/கேட்டு விட்டு ஒவ்வொன்றாக இணையத்தில் சேர்த்து விடுவோம். ரோசா வசந்த், பிரேம் ஆனந்த், உண்மைத் தமிழனுடன் ஒருங்கிணைந்து அடுத்த நாட்களில் இதைச் செய்து விட முடியும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்