வியாழன், மார்ச் 10, 2011

தமிழக மீனவர்கள் எனது பார்வையில் - 4

'ஜெகதா பட்டிணம், கோட்டை பட்டிணம் பகுதிக்கு நீங்கள் தவறாமல் போக வேண்டும். அந்தப் பகுதி மீனவர்கள் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று கும்மி தொலைபேசி சொன்னார். ஊரில் இருக்கும் தனது நண்பர்களுடன் பேசி ஒருங்கிணைப்புக்கும் ஏற்பாடு செய்தார்.

'ராமேசுவரத்தில்தான் பிரச்சனையே, நாகப்பட்டினம் போய் என்ன செய்யப் போறீங்க' என்று ஒரு அதட்டல் போட்ட பாலபாரதி ராமேசுவரத்தில் அவரது நண்பர்களிடம் பேசி பயண ஒருங்கிணைப்புக்கு ஆவன செய்தார்.

பிப்ரவரி 19ம் தேதி சென்னையில் save-tamils.org குழுவினர் ஏற்பாடு செய்திருந்த தகவல் தொழில் நுட்பத் துறையினரின் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். மீனவ பிரதிநிதிகள், தமிழ் இயக்க பேச்சாளர்கள் என்று பலர் பேசினார்கள். அதன் மூலம் பல தகவல்கள் தெரியக் கிடைத்தன.

30 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த பிரச்சனையை தொடர்ந்து கவனத்தில் வைத்திருப்பது அவசியம். உயிரிழப்பு ஏற்பட்டதும் செய்தி வெளியிட்டு விட்டு அதன் பிறகு அடுத்த சூடான செய்திக்கு நகர்ந்து விடும் வெகுஜன ஊடகங்களும், சுயநல அரசியல் மட்டும் செய்யும் அரசியல் கட்சிகளும் இதைச் செய்யப் போவதில்லை. இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நாம் நினைத்தால் இந்தப் பிரச்சனை குறித்து தொடர்ந்த கவன ஈர்ப்பை செய்ய முடியும்.

மீனவ கிராமங்களில் பயணம் செய்வதன் மூலம்
  • நிகழ்வுகளை நேரடியாகக் கேட்டு புரிந்து கொள்ளலாம். 
  • பதிவுகளை ஆவணமாக்கலாம். 
  • இணையத்தில் தமிழர்கள் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதை  மீனவர்களுக்கு தெரிவிக்கலாம். 
பல ஆண்டுகளாக மீனவர் பிரச்சனை குறித்து எழுதிக் கொண்டிருக்கும் ரோசாவசந்த் உடனடியாக கலந்து கொள்வதாகச் சொல்லி விட்டார். வலைப்பதிவுகளில் புகழ் பெற்றிருக்கும் உண்மைத்தமிழனிடம் பேசி அவரும் கலந்து கொள்ள தயாரானார்.

இன்னும் பலர் கலந்து கொள்ள விரும்பினாலும் பணி நெருக்கடி, நேரமின்மை காரணமாக வர முடியாமல் போனது.

பயணத்தில் நேரடியாக கலந்து கொள்ள  முடியாவிட்டாலும், பயணச் செலவுகளுக்கு உதவி தேவைப்பட்டால் அதை தான் அளிப்பதாகச் சொல்லியிருந்தார் பலூன் மாமா. பயணத்தில் செலவு பகிர்ந்து கொள்வதாக ஏதாவது ஏற்பாடு செய்தால், ஒரு பங்கை தனது கணக்கில் சேர்த்துக் கொள்ளச் சொன்னார். 

கருத்துகள் இல்லை: