வியாழன், மார்ச் 10, 2011

எனது பார்வையில் தமிழக மீனவர்கள் - 3

2011 ஜனவரியில் மீனவர்கள் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இணையத்தில் டுவிட்டரில் எதிர்ப்புக் குரல்கள் வலுவடைந்த போது மற்றவர்களுடன் நானும் எனது கருத்துக்களை எழுத முற்பட்டேன். இணையத்தில் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து வெளியான செய்திகள், பதிவுகள்,  கட்டுரைகள் என்று நிறைய படிக்க ஆரம்பித்தேன்.

'30 ஆண்டுகளில், 539 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்' என்பது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தினாலும் நிறைய கேள்விகளும் எழுந்தன.

1. திட்டமிட்ட தாக்குதல்கள் என்றால் இத்தனை ஆண்டுகளில் 500 சொச்சம் முறை மட்டும்தான் தாக்கினார்களா? உயிரிழப்புகள் இல்லாமல் மற்ற வகையில் தாக்குதல்கள் எவ்வளவு நடந்தன, அவற்றைப் பற்றிய விபரங்கள் என்னென்ன?

2. தாக்குதலுக்குக் காரணமாக இலங்கை கடற்படை சொல்வது என்ன? எல்லை தாண்டி போவது மட்டும்தான் காரணமா, வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்கின்றதா?

3. தமிழக மீனவர்கள் ஏதாவது சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? அதற்கு பதிலடியாக தாக்குதல்கள் நடக்கின்றனவா?

4. மீனவர்களுக்கிடையே இருக்கும் பகையால் தாக்குதல்கள் நடக்கின்றனவா?

5. இத்தனை தீவிரமாக பிரச்சனை இருந்திருக்கும் போது இவ்வளவு காலம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

டுவிட்டரிலும் வலைப்பதிவுகளிலும் எழுதியதைத் தொடர்ந்து சென்னைக் கடற்கரையில் இணையப் பயனர்கள் கூடி அடுத்த நடவடிக்கைகள் பற்றிப் பேசினார்கள். கூட்டத்துக்குப் போக முடியாவிட்டாலும், பேசப்பட்ட விபரங்களையும் அடுத்த நடவடிக்கைகளையும் பற்றி தெரிந்தது.

இணையத்தில் எழுதுவதோடு நின்று விடாமல், இணையத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து களத்திலும் உணர்வுகளைக் காட்ட வேண்டும் என்று பலூன் மாமா வலியுறுத்தினார். குறுஞ்செய்திகள் மூலமாக, மனிதச் சங்கிலி மூலமாக மீனவர் பிரச்சனையைப் பற்றிய விழிப்புணர்வை பரவலாகக் கொண்டு சேர்க்கலாம் என்று ஆலோசனை சொன்னார்.

இவற்றை செய்வதற்கான தயாரிப்புகளும், தொடர்புகளும் இல்லை என்று தோன்றியது. அவை பற்றிய சிந்தனையிலேயே நாட்கள் நகர்ந்தன.

'சரி, டுவிட்டரில் எழுதி விட்டோம், சில நாட்கள் #tnfisherman டிரெண்டிங்கிலும் வந்து விட்டது. உயிர்க்கொலை நடக்கும் போது சத்தம் எழுப்பி விட்டு அத்தோடு மறந்து போய் விடும் பத்திரிகைகள், கட்சிகள் போலத்தானே நாமும் இருக்கிறோம். இதற்கு மேலும் ஏதாவது செய்ய வேண்டும். பதிவர்கள் எல்லோரும் சேர்ந்த நாகப்பட்டினத்திற்குப் போய் ஆர்ப்பாட்டம் நடத்தவது போல திட்டமிடலாமா' என்று ஒரு நண்பர் தொலைபேசி சொன்னார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நாகை சிவா ஒருங்கிணைப்பில் உதவுவார் என்றும் ஆலோசனை சொன்னார். நாகை சிவாவுக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டதும் அவர் தன்னால் ஆன உதவிகளை செய்வதாகச் சொன்னார். வெளி நாட்டில் இருக்கும் அவர் பிப்ரவரி கடைசி வாரத்தில் ஊருக்கு வருவதாகவும் சொன்னார். நாகப்பட்டினத்திலேயே வசிக்கும் அறுசுவை பாபுவிற்கு மடல் அனுப்பி அவரது உதவியை கேட்டார்.

'ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு கட்டமைப்போ, பெருமளவில் திரளும் பதிவர்களோ இருப்பார்களா? பத்தோடு பதினொன்றாக நாமும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்திக் கலைவதால் என்ன பலன் இருக்கும்?  மீனவர்கள் பிரதிநிதிகள் இன்னும் ஒரு ஆர்ப்பாட்டம் என்றால் என்ன ஆர்வம் காட்டுவார்கள்' என்ற குழப்பங்கள்.

இணையப் புலிகள், எழுத்து வித்தை கையில் இருக்கும் நாம் கடற்கரை கிராமங்களில் பயணித்து மீனவர்களை சந்தித்து நமது பதிவுகளை இணையத்தில் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று பட்டது. ஒளிப்படங்கள், காணொளிகள், வலைப்பதிவுகள் மூலம் நாம் திரட்டும் தகவல்களை ஆவணப்படுத்தலாம் என்று திட்டமிட்டோம்.

சிவா ஊரில் இருக்கும் நாட்களில் போனால் நல்லது என்று மார்ச் முதல் வார இறுதியில் 4 நாட்கள் பயணம் என்று திட்டமிட்டோம். நாகப்பட்டினத்தில் தொடங்கி கடற்கரையோரமாக ராமேசுவரம் வரை போய் வருவது என்று திட்டம்.

கருத்துகள் இல்லை: