வியாழன், மார்ச் 10, 2011

தமிழக மீனவர்கள் எனது பார்வையில் - 6

தாக்குதலுக்குக் காரணமாக இலங்கை கடற்படை சொல்வது என்ன? எல்லை தாண்டி போவது மட்டும்தான் காரணமா, வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்கின்றதா?

1. எல்லை தாண்டி போவது குறித்து:
'இந்திய வேசை மகன்களா, ஏண்டா எங்க தண்ணிக்கு வரீங்க, ஓடுங்க' என்று சொல்லி விரட்டுகிறார்கள் என்று இரண்டு மூன்று இடங்களில் கேட்கக் கிடைத்தது.

கச்சத்தீவை அடிப்படையாக வைத்து தமது எல்லையை வரையறுத்துக் கொண்டு அந்தக் கோட்டை பாதுகாப்பதாக செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது.

'எங்களுக்கு எல்லை எங்க தெரிகிறது. இது ஒரு கடலே இல்லை, குளம் போலத்தான். படகில் ஏறி கொஞ்ச தூரம் போனா எல்லை என்றால், மீன்பிடித் தொழிலே செய்ய முடியாது.'

'எல்லை தாண்டிப் போனால் தாக்கப்படுவார்கள், அதனால் அதைத் தவிர்க்க வேண்டும்' என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா சொல்வது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்கிறார்கள் மீனவர்கள்.

'அவருக்குக் கடல் தெரியுமா, இங்க வந்து பார்த்திருக்காரா. நாட்டுக்கும் ராணுவத்துக்கு எல்லை இருக்கலாம், எங்களுக்கு  வலை வீசிய பிறகு நீரோட்டத்தோடு நகரும் வலை எல்லை தாண்டினால் நாங்க இழுத்துப் பிடிக்கவா முடியும்?' என்று கேட்கிறார்கள் மீனவர்கள்.

'சிலபேர் நல்லவங்களா இருக்காங்க, மத்தியான வேளையில தண்ணி போட்டு விட்டு வந்தாங்கன்னா கொடுமையா நடக்கிறாங்க' 

2. மீனவர்களுக்கிடையேயான சச்சரவுகள்

தடை செய்யப்பட்ட இழுவை படகுகள் மூலம் இரட்டை மடி வலை, சுருக்கு வலை மூலம் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை எதிர்க்கும் இலங்கை மீனவர்கள் தாக்குகிறார்கள் என்று இன்னொரு வாதம் முன் வைக்கப்படுகிறது.

இழுவை படகுகளில் இரட்டை மடி முறையில் மீன் பிடிப்பவர்கள் கூட தாங்கள் செய்வது தவறு என்று ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு விசைப்படகில் கொக்கி முறையில் மீன் பிடிக்கும் மீனவர்கள், கண்ணாடி இழை படகுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள், நாட்டுப் படகு மீனவர்கள் என்று தமிழ்நாட்டின் மற்ற தரப்பு மீனவர்களிடையேயும் எதிர்ப்பு இருக்கிறது.

இழுவை படகுகள் வேகமாக போகும் போது சிறிய மீனவர்களின் வலைகள் அறுபடுதல், இரட்டை மடி முறையில் மீன் பிடிப்பதால் அந்த இடத்தின் மீன்வளம் நிரந்தரமாக பாதிக்கப்படுதல் போன்றவை பரவலாக பேசப்படுகின்றன. இந்த முறையை நிறுத்துவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆனால், இலங்கைப் படையினரால் தாக்கப்படுவதில் கணிசமான பகுதியினர் கண்ணாடி இழைப்படகில் அல்லது நாட்டுப் படகில் மீன்பிடிக்கப் போகிறவர்கள். மீனவர்களுக்கு இடையே (இரு கரைகளிலும்) இருக்கும் பிரச்சனைகள் அவர்களுக்குள் பேசித் தீர்க்கும் அளவில்தான் இருக்கின்றன.

மீனவர்களை தாக்குவது, துன்புறுத்துவது, மீன்களை பறி முதல் செய்வது, வலைகளை அறுத்து விடுவது, மீன்பிடிக் கருவிகளை கவர்ந்து செல்வது போன்ற இலங்கைப் படையின் நடவடிக்கைகளுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் தொடர்பில்லை என்றே நம்புகிறார்கள்.

3. 'தமிழர்கள் மீதான வெறுப்பை இந்திய மீனவர்கள் மீது காட்டுகிறார்கள்' என்றும் சிலர் நினைக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் செயல்பாட்டில் இருந்தவரை இது போன்ற நிகழ்வுகள் குறைவாக இருந்தன. 'நெருங்கி வரும் இலங்கைக் கடற்படை படகு ஒன்று தூரத்தில் விடுதலைப் புலிகளின் படகு வந்தால் ஓடிப் போய் விடுவார்கள்' என்றார் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர்.

கருத்துகள் இல்லை: