வியாழன், செப்டம்பர் 17, 2009

செருப்பாலடியுங்கள்

2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது என்டிடிவியின் தேர்தல் நிகழ்ச்சிகளை வழக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் மனதில் பதிந்த படத் துணுக்குகள் இரண்டு:

1. இந்தியா ஒளிர்கிறது என்று மேல்தட்டு மக்களின் வீடுகளில் எல்லாம் சாண்டலியர்களுக்கு மெருகேற்றி விட்ட மிதப்பில் தேசிய ஜனநாயக முன்னணி அலட்டிக் கொண்டிருந்த தேர்தல். அந்த முன்னணியின் முன்னணி கட்சியின் இளம் தலைமுறை தலைவர் (50 வயது ஆகி விட்டிருந்தது) பிரமோத் மகாஜன்.

தேர்தல் அன்று காலையில் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்று காண்பிக்கும் போது, இவர் தனது வீட்டில் இருக்கும் உயர்தர தனியார் உடற்பயிற்சி அறையில் ஓட வைக்கும் கருவியில் ஓடிக் கொண்டே பேசுவதாக காண்பித்தார்கள்.

2. தமிழகத்தில் மாபெரும் கூட்டணி அமைத்து - திமுக, காங்கிரசு, பாமக, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் என்ற முன்னணி தேர்தலில் நாற்பதையும் தமதாக்கிய தேர்தல். அந்தக் கூட்டணியின் தலைவர் மு கருணாநிதியை Follow the leader என்ற நிகழ்ச்சியில் பின்தொடர்ந்தார்கள். அவரது வீட்டின் முன்னறை, ஊர்தி நிறுத்தும் முன்பகுதி, ஊர்தி கிளம்பிப் போவது என்று காண்பித்தார்கள்.

அந்த வீட்டின் அமைப்பும் உள் அலங்காரங்களும் தமிழக மக்கள் தொகையில் மேல்தட்டு ஒரு 5% மக்களுக்கு மட்டும் சாத்தியமாகக் கூடிய ஆடம்பரத்தில் இருந்தன.

இந்த இரண்டுமே கிட்டத்தட்ட ஒரு அதிர்ச்சியளிக்கும் காட்சிகளாக எனக்கு தோன்றின. அரசியல்வாதிகள் என்றால் கதர் வேட்டி கட்டிக் கொண்டு மக்களிடம் உண்டியல் குலுக்கி வாழ்வார்கள். திரைப்படங்களில் வரும் அதிரடி வில்ல அரசியல்வாதிகள்தான் அடாவடி செய்து செல்வத்தில் கொழிப்பார்கள் என்ற கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த என்னை உலுக்கி எழுப்பியது.

'ஜெயலலிதா எத்தனை சோடி செருப்புகள் வைத்திருந்தார், எத்தனை புடவைகள் வைத்திருந்தார், எவ்வளவு பணம் செலவழித்து வளர்ப்பு மகனுக்குத் திருமணம் செய்வித்தார்' என்று தகவல்கள் பத்திரிகைகளில் நிரம்பிய 1990களில் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் கோபமும் அடுத்த 10 ஆண்டுகளில் முழுவதுமாக மாறி விட்டனவா என்ன?

'அரசியலில் வந்து விட்டார் என்பதற்காக குடிசையில்தான் வாழ வேண்டுமா என்ன' என்று எதிர்க்கேள்வி கேட்டு சப்பைக் கட்டு கட்டுவார்கள் கருணாநிதியின் அடிப்பொடிகள். 'முதலமைச்சர் ஆகி விட்டார் என்பதால் பெண்ணுக்கு உரிய புடவை, அணிகலன்கள் ஆசையெல்லாம் விட்டுக் கொடுத்த வேண்டுமா' என்று ஜெயலலிதாவுக்கு சப்பைக் கட்டியிருந்தால் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கும்.

இரண்டு சப்பைக்கட்டுக்கும் என்னுடைய பதில் 'ஆமாம், அரசியல்வாதியாகி பொது வாழ்க்கைக்கு வருவதற்கான அடிப்படைத் தகுதி எளிய வாழ்க்கை வாழ்வதும், தமது மக்களின் வாழ்க்கை முறையை பகிர்ந்து கொள்வதும்தான்.' குடிமக்கள் பட்டினியிலும், வேதனையிலும் வாடும் போது கேக் தின்னச் சொன்ன மேரி அரசிக்கும், பிலிப்பைன்சின் இமல்டா மார்க்கோசுக்கும் இந்த கயவாளிகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

குளிரூட்டப்பட்ட ஊர்தியில்தான் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறார்கள்! சொரணை கெட்ட மக்கள் கல்லாலடித்து விரட்டாமல், ஆரத்தி எடுத்து காலில் விழுந்து பிச்சைக் காசு வாங்கி வாக்களிக்கிறார்கள்.

கம்யூனிசக் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் தாம் என்ன தொழில் செய்தாலும் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் கட்சி நிதிக்குக் கொடுத்து விட்டு கட்சி நிர்ணயித்த சம்பளத்தை வாங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள்.

சிக்கனம் கடைப்பிடிக்கச் சொல்லும் காங்கிரசு தலைமை தமது புதுதில்லி அரண்மனை வீடுகளை விட்டுக் கொடுத்து, சாதாரண ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு வசிக்கப் போகட்டும். தமது கட்டுப்பாட்டிலுள்ள அறக்கட்டளைகளை எல்லாம் நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டு பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி அல்லது அரசு கொடுக்கும் ஊதியத்தில் தமது வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொள்ளட்டும்.

அப்படி வாழ மனதில்லை என்றால், அரசியலை துறந்து நல்லதொரு தொழில் செய்து சம்பாதித்து மனம் போல வாழட்டும்.

செருப்பாலடிக்கப்பட வேண்டிய நாய்களை இன்று அரசுக் கட்டிலில் ஏற்றி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

29 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

//செருப்பாலடிக்கப்பட வேண்டிய நாய்களை இன்று அரசுக் கட்டிலில் ஏற்றி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
//

ரொம்ப கோவமாக இருக்கிங்க, ஞாயமான கோவம்

K.V.Rudra சொன்னது…

கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அபயக்குரல் அபயக்குரல் தான்

வால்பையன் சொன்னது…

சரியா சொல்லியிருக்கிங்க!

எளிமையாக இருந்த ஒரு முன்னாள் அமைச்சருக்கு நினைவு நாள் கொண்டாட முடியவில்லை!

மற்ற விளம்பரங்களுக்கு மட்டும் சிரித்து கொண்டே எல்லா பத்திரிக்கையிலும் படம்!

Santhosh சொன்னது…

சிவா,
ரொம்ப கோவமா இருக்கீங்க போல கூல் கூல்...

நம்ம எல்லாருக்கும் ஒரு கெட்ட பழக்கம் ஆவுன்னா அரசியல்வாதியை திட்டுறது.. அவங்கெல்லாம் யாருங்க வானத்துல இருந்து குதிச்சவங்களா? இல்லையே நம்மல ஒருத்தங்க தானே? ஓட்டு போட காசு, மாநாட்டுக்கு போவ காசு, போராட்டத்துக்கு போவ காசு, தேர்தல் நடத்த காசு இப்படி எல்லாத்துக்குமே காசு தேவைப்படும் பொழுது எப்படி அவன் எப்படி எளிமையா இருக்க முடியும்? இம்முட்டு பேசுறோமே நாம் எப்பவாச்சும் பொது பிரச்சனைக்கான ஏதாவது ஒரு போராட்டத்துல கலந்து போராடி இருக்கோமா? நம்ம எப்ப comfort zoneஜ விட்டு வெளிய வந்து பொது நல நோக்கோடு சிந்திக்கிறோமோ அப்ப தான் இதெல்லாம் மாறும்.. சொல்ல போல நம்மளை முதலில் செருப்பால் அடித்து பிறகு அவர்களை அடிக்க வேண்டும்..

கல்வெட்டு சொன்னது…

சிவா,
ஏற்கனவே சொன்னதுதான். தகுதிக்கேற்ற தலைமைதான் வாய்க்கும். தலைவர்களை தேர்ந்தெடுப்பது மக்களே எனும்போது யாருடய குற்றம்?

//இந்த இரண்டுமே கிட்டத்தட்ட ஒரு அதிர்ச்சியளிக்கும் காட்சிகளாக எனக்கு தோன்றின. அரசியல்வாதிகள் என்றால் கதர் வேட்டி கட்டிக் கொண்டு மக்களிடம் உண்டியல் குலுக்கி வாழ்வார்கள். திரைப்படங்களில் வரும் அதிரடி வில்ல அரசியல்வாதிகள்தான் அடாவடி செய்து செல்வத்தில் கொழிப்பார்கள் என்ற கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த என்னை உலுக்கி எழுப்பியது.//

இது பெரிய கொடுமை சிவா. இந்த டிவி பேட்டிகளுக்கு முன்னாள் நிஜமாகவே அரசியல்வாதிகளின் ஆடம்பரங்கள் தெரியாதா? நீங்கள் நிறையவே கனவு கண்டுள்ளீர்கள். சும்மா வார்டு கவுன்சிலரின் சொத்தே மலைக்கவைக்கும். தேன் சாப்பிட்டால் புறங்கையை நக்கவேணடும். அது தவறில்லை என்று ஆரம்பித்து, இன்று முழுத்தேனையும் முழுங்கிவிட்டு , மக்களுக்கு புறங்கையை நக்க கொடுக்கிறார்கள். தேர்தலின்போது 1000 க்கும் 500 க்கும் புறங்கையை நக்கிவிட்டு வெக்கம் இல்லாமல் ஓட்டுப்போடுகிற மக்களை என்ன செய்வது?

//
கம்யூனிசக் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் தாம் என்ன தொழில் செய்தாலும் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் கட்சி நிதிக்குக் கொடுத்து விட்டு கட்சி நிர்ணயித்த சம்பளத்தை வாங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள்.//

இந்த தேர்தலின்போது கூட்டணியில் இருந்து மாறிய கம்யூனிஸ்ட் தலைவரின் அண்ணா நகர் வீட்டு ஆவணங்களை முதல்வரே வெளியிட்டார் என்று நினைக்கிறேன்.

***

மக்கள் நல்ல தலைவரைத் தேடவேண்டும்.
திருப்பதி போனீர்களே நல்ல தலைவரைக் கொடு என்று வேண்டினீர்களா? :-))))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நிறைய எதிர் பாக்குறிய...!

மக்களும் அப்படி இல்லை

ஜடங்கள் ஜடங்களாகவும்,

படங்கள் படங்களாகவும் இருந்து கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

பிரியாணிகள் சுவையாய் இருக்கும் வரை,
குடிமகன்கள்
திருந்த மிகக்குறைந்த வாய்ப்பே இருக்கு.

:)))))

:(((((

மதி.இண்டியா சொன்னது…

அரசர்களுக்கு கீழ் இருந்த அடிமைபுத்தி அவ்வளவு சீக்கிறம் போகுமா ?

மூன்றாம் வகுப்பில் பயணம் செய்த காந்தியை கிண்டலடிக்கும் தேசம் , அப்படிதான் இருக்கும் .

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கோவி கண்ணன்,

எழுதும் போது உங்கள் எழுத்துக்களை நினைத்துக் கொண்டேன். இப்படி எல்லோரும் கோபப்பட ஆரம்பிப்பதே ஒரு ஆரம்பம்தான்.

வாங்க ருத்ரா,
உங்க கருத்து சரியா புரியவில்லை. எதுவும் மாறி விடப் போவதில்லைன்னு சொல்றீங்களா?

வால் பையன்,
அரசியல்வாதின்னா இப்படித்தான் இருக்க முடியும் என்று வரையறையையே மாற்றிப் போடுகிறார்கள் இவர்கள். எளிமையாகவும் முதலமைச்சர் இருந்திருக்கிறார் என்று 'இப்படியும் இருந்தது' என்று நம்பினால் நம்புங்களில்தான் எதிர்கால குழந்தைகள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

சந்தோஷ்,
அரசியல்வாதியைத் திட்டுவதோடு நின்று விடக் கூடாது என்று புரிகிறது. அதற்காக என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று வாய் மூடி மௌனிகளாகவும் இருந்து விட முடியாதே!

நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும், அதுவரை கொள்ளயர்களை விரட்டக் கூடாது என்று எதுவும் இல்லை.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கல்வெட்டு,
உண்மையிலேயே கனவில்தான் இருந்திருக்கிறேன். அதைத்தான் குறிப்பிட்டேன்.

'தேன் சாப்பிட்டால் புறங்கையை நக்கவேணடும். அது தவறில்லை என்று ஆரம்பித்து, இன்று முழுத்தேனையும் முழுங்கிவிட்டு , மக்களுக்கு புறங்கையை நக்க கொடுக்கிறார்கள்.'

அந்த கயவர்கள் எடுப்பதும் நக்குவதும் தேன் இல்லை, குடிமக்களின் ரத்தம். அரசுப் பணத்தில் தன்னலத்தை வளர்த்துக் கொண்ட எந்த நாயாக இருந்தாலும் அதன் கையிலும், வாயிலும், வயிற்றிலும் ரத்தக் கறைகள்தான். உடம்பெங்கிலும் மக்களின் கண்ணீர்தான் ஓடும். அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.

நீங்கள் சொல்லும் வார்டு கவுன்சிலர்களில் ஆரம்பித்து 'தமிழினத்தின் தன்னிகரில்லா தலைமகன்' வரை எல்லோருக்கும் பொருந்தும் இது.

//திருப்பதி போனீர்களே நல்ல தலைவரைக் கொடு என்று வேண்டினீர்களா? :-))))//

உங்களுக்கு சம்பந்தம் இல்லாத டிபார்ட்மெண்டில ஏன் தலையிடுறீங்க :-))

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அத்திவெட்டி ஜோதிபாரதி,
முத்திப் போயிருக்கிறது இந்த சமூக நோய். வெடித்த பிறகு விழித்துக் கொள்வதை விட இப்போதை எழுந்து விடுவோம்

மதி இண்டியா,

//மூன்றாம் வகுப்பில் பயணம் செய்த காந்தியை கிண்டலடிக்கும் தேசம் , அப்படிதான் இருக்கும்//
உண்மை.

அன்புடன்,
மா சிவகுமார்

துளசி கோபால் சொன்னது…

// தேன் சாப்பிட்டால் புறங்கையை நக்கவேணடும். அது தவறில்லை என்று ஆரம்பித்து, இன்று முழுத்தேனையும் முழுங்கிவிட்டு , மக்களுக்கு புறங்கையை நக்க கொடுக்கிறார்கள். //


சரியாச் சொல்லிட்டார் கல்வெட்டு.

நேற்றும்தான் இதைப் பற்றிப் பேச்சு வந்துச்சு. நாப்பது வருசத்துக்கு முன்னேகூட இவ்வளவு மோசமில்லை. அரசாங்கம் கட்டிக் கொடுத்த வீடுகள் இப்போக்கூட பரவாயில்லாமல் இருக்கு. ஆனால்..... நாலு வருசத்துக்கு முன்னே கட்டிக்கொடுத்த (சுநாமி) வீடுகளோட கதிகளைப் பாருங்க.....

மொத்தக் காலனிக்கும் ஒரு மூட்டை சிமெண்டு மட்டும்தான். மற்றதெல்லாம் சுருட்டிட்டாங்க போல(-:

இது ஒரே ஒரு எ.கா. இன்னும் பலது கிடக்கு(-:

தமயந்தி சொன்னது…

வணக்கம் சிவகுமார் வாழ்த்துக்கள்... ஒரு சின்ன சந்தேகம்.. தாங்கள் தான் கல்கியில் எழுதும் ம.சிவகுமாரா

வனம் சொன்னது…

வணக்கம் சிவக்குமார்

ரோம்ப நியாயமான கோபம்தான்
எனில் அவர்களை அங்கு வைத்தது யார், தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என அறியும் ஆர்வம் எதுவும் இல்லாமல் ஒரு கொண்டாட்ட மனநிலையிலேயே தன்னை எப்போதும் வைத்துக்கொண்டிருக்க விரும்பும் நம் மக்கள்தானே

இராஜராஜன்

யுவகிருஷ்ணா சொன்னது…

ஒரே லைனில் ‘ஜெயலலிதா வாழ்க’ன்னு பதிவு போட்டிருக்கலாம் :-)

SurveySan சொன்னது…

//செருப்பாலடிக்கப்பட வேண்டிய நாய்களை இன்று அரசுக் கட்டிலில் ஏற்றி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.//

hijack பண்ணிட்டாங்களா உங்க ப்ளாகை யாராச்சும்? :)

நாம இயல்பாகவே, 'கொதிக்கத் தெரியா' சமூகம். இப்படியேதான் இருப்போம்.

நீங்க சொல்ற மாதிரி எந்த கம்யூனிஸ்ட் தல நம்மூர்ல இருக்காரு?

Anil சொன்னது…

கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது... அதனினும் கொடிது வறுமையில் வாடும் மக்களின் வாக்குரிமையை விலைக்கு வாங்கும் அரசியல் வியாபாரம். 1000 பணத்துக்கு ஆசைப்பட்டு தொலைக்காட்சிக்கு ஆசைப்பட்டு தனது வாழ்வாதரங்களை தொழைத்து ஒவ்வொரு மாதமும் விலை வாசியால் 1000 அதிகமாக செலவழிக்க வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டு தன்னையும் கெடுத்து தன் சந்ததியையும் கெடுத்து இந்த நாட்டை ரத்தக்கறை படிந்ததாக்கிய அனைவரையும் சேர்த்து அடிக்க வேண்டும்....

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

அவனவன் லண்டன் , பாங்காக் ... ( சுவிஸ் - உண்டான்னு தெரியல )... போய், சொத்தை சரி பார்த்துட்டு வரான் ...நீங்க வேற.

மணிகண்டன் சொன்னது…

One who can compromise/threaten/corrupt/blackmail but who can get things done.

இது தான் அரசியவாதியின் வேலைக்கு தேவைப்பட்ட தகுதிகள்.

எளிமையான, நேர்மையான ஒன்றுக்கும் உதவாத கொள்கைகளை கொண்டு இருப்பதை விட.

எளிமையான, நேர்மையானவரால் இந்த சமூகத்தில் எந்தவொரு பெரிய திட்டத்தையும் செயல்படுத்தமுடியாது.

pessimist ஆக இருக்கலாம். ஆனா நிதர்சனமான உண்மை.

கல்வெட்டு சொன்னது…

//One who can compromise/threaten/corrupt/blackmail but who can get things done. //

மணிகன்டன்,
நீங்கள் சொன்ன எல்லாம் இப்போதுள்ள அரசியல்வாதிகளிடம் உள்ளது.

தற்போதைய முதல்வர் கருணாநிதியிடம் compromise/threaten/corrupt/blackmail /getting things done எல்லாம் உள்ளது

பிரச்சனை என்னவென்றால் "என்ன things" என்பதுதான்.

எளிமை, நேர்மை போன்ற tools பதிவியின் நேர்மையான நோக்கத்திற்காக‌ சிந்திக்க வைக்க உதவும்.

எளிமை இல்லாமலும் அவற்றை அடையலாம்.

ஆனால் நேர்மை இல்லாமல் அடைய முடியாது. நேர்மை என்பது நினைத்த நோக்கங்களை அடைய மக்களுக்காக எடுக்கும் முயற்சிகள் என்று கொள்ளலாம்

கல்வெட்டு சொன்னது…

மணிகன்டன்,
நீங்கள் தற்போதைய அரசியல் தலைவர்களின் தலைமைப்பண்புகளை அல்லது அவர்களின் சாதுர்யங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள் என்றே தெரிகிறது.

அவர்கள் அதில் மிகவும் தேர்ந்தவர்கள். ஆனால் அந்த தலைமப்பண்புகள் எப்படி யாருக்கு எதற்கு பயனாகிறது என்பதுதான் பேசுபொருள்.

**

முதல்வர் கருணாநிதி நினைத்தால் ஏன் குத்தம்பாக்கம் இளங்கோவாக முடியாது?
முடியும். ஆனால் வேறு வேலைகள் உள்ளது. பல இடியாப்பச் சிக்கல்கள் நிறைந்தது.

மணிகண்டன் சொன்னது…

***
எளிமை, நேர்மை போன்ற tools பதிவியின் நேர்மையான நோக்கத்திற்காக‌ சிந்திக்க வைக்க உதவும்.
***
நிச்சயமாக.
***
ஆனால் நேர்மை இல்லாமல் அடைய முடியாது.
நேர்மை என்பது நினைத்த நோக்கங்களை அடைய மக்களுக்காக எடுக்கும் முயற்சிகள் என்று கொள்ளலாம்
****
நிச்சயமாக

வழிமுறையில் pragmatism இருக்கவேண்டும் என்பது நான் சொல்ல வந்தது. நான் விட்டுவிட்ட வார்த்தை manipulate.

பல கம்யூனிஸ்ட் லீடர்களை எளிமைக்காக நாம் போற்றுகிறோம். அதற்கான எதிர்வினை இது.

மழை பெய்தால் எங்கள் தொகுதி MP, MLA/councillor வேட்டியை தூக்கிக்கட்டிக்கொண்டு வந்து தொகுதியில் வேலை செய்தார் என்று பல உடன்பிறப்புக்கள் கூறுவார்கள்.. இவ்வாறான எளிமைக்கான எதிர்வினை அது.

கல்வெட்டு சொன்னது…

//பல கம்யூனிஸ்ட் லீடர்களை எளிமைக்காக நாம் போற்றுகிறோம். அதற்கான எதிர்வினை இது.
மழை பெய்தால் எங்கள் தொகுதி MP, MLA/councillor வேட்டியை தூக்கிக்கட்டிக்கொண்டு வந்து தொகுதியில் வேலை செய்தார் என்று பல உடன்பிறப்புக்கள் கூறுவார்கள்.//


மணிகண்டன்,
வலிந்து திணிக்கப்படும் / திணித்துக்கொள்ளும் எளிமை நாடகமே.

காந்தி கோமணம் கட்டியதாலும், அல்லது 3 வகுப்பில் பயணம் செய்ததாலும் என்ன மாறியது?

அவர் செய்திருக்க வேன்டியது 3 வகுப்பின் தரத்தை உயர்த்துவது அல்லது எல்லாருக்கும் முதல் வகுப்பு வசதி கிடைக்கச் செய்யவேண்டியது.

ஆட்டுப்பால், கடலை என்று அவரின் எளிமை கோட்பாடுகள் காஸ்ட்லியான நடைமுறைச் செலவாகவே அவருக்கு சேவை செய்தவர்களுக்கு இருந்தது.
<<< காந்தி ...... சிவா அடிக்க வரும்முன் நான் ஓடிவிட வேண்டியதுதான் நல்லது. :-))) >>>


**

விரும்பி அணியும் ஆடை வேறு. சமுதாயத்தை ஏமாற்ற போடும் வேசம் வேறு. அன்னை சோனியாவின் எக்கனாமிகிளாஸ் திட்டம் நல்ல எடுத்துக்காட்டு.

மா சிவகுமார் சொன்னது…

துளசி அக்கா,
//மொத்தக் காலனிக்கும் ஒரு மூட்டை சிமெண்டு மட்டும்தான். மற்றதெல்லாம் சுருட்டிட்டாங்க போல(-://

'அதுக்குத்தானே அரசியலில் இருக்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்று பதவி வகிக்கிறோம்' என்று அவர்கள் சொல்ல நாமும் ஏற்றுக் கொண்டு விட்டோம். முன்பு ஒளித்து ஒளித்து செய்தவர்கள் இன்று வெளிப்படையாக அடாவடியாக செய்வதுதான் அவலம்.
====
இல்லை தமயந்தி. அவர் வேறு. நான் வலைப்பதிவில்தான் எழுதுகிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.

வனம்,

'சிலரை சில நாள் முட்டாளாக்கலாம், பலரை பல நாள் முட்டாளாக்கலாம், எல்லோரையும் எல்லா நாளும் முட்டாளாக்க முடியாது' என்ற விதி இந்த வியாபாரிகளுக்கும் வந்து சேருவதற்காகவாவது நமது கோபங்களை ஏதாவது ஒரு வடிவில் வெளிப்படுத்த வேண்டும்.

யுவகிருஷ்ணா!

ஆமா, ஜெயலலிதா பூச்சாண்டி காட்டித்தானே இப்போது அரசியலே நடக்குது. எங்கே அந்த அம்மா வந்துடுவாங்களோன்னு பயமுறுத்தி விட்டால் போதும். எந்த அயோக்கியமும் செய்து கொள்ள உரிமம் கிடைத்து விடுகிறது.

ஒன்றை மட்டும் சிந்தித்துப் பாருங்கள். நாளைக்கு நமது குழந்தைகள் வளர்ந்து வாழப் போவதற்கு இப்படிப்பட்ட உலகத்தைத்தான் விட்டுச் செல்லப் போகிறோமா? கட்சி சார்புகளை ஒதுக்கி வைத்து விட்டு யோசியுங்கள்.

சர்வேசன்,

கம்யூனிஸ்டு கட்சிகளில் விதிமுறை அப்படி. மேற்கு வங்க முதல்வர் அப்படித்தான் வாழ்கிறார் என்று படித்திருக்கிறேன். இரண்டு முறை முதல்வராக இருந்த பிறகு ஒரு பெட்டியில் துணிகளுடன் வெளியேறி நிருபன் சக்ரவர்த்தி பற்றியும் படித்திருக்கிறேன்.

அனில்,

அரசுக்குப் போகும் ஒவ்வொரு ரூபாயும் உழைப்பாளியின், தொழிலாளியின், விவசாயியின் கூடுதல் மதிப்பு. கொஞ்சம் பொருளாதார கணக்குப் போட்டால் எப்படி என்று புரியும்.

அதை துர்பயன் செய்யும் எவரும் பயத்தில் நடுங்க வேண்டிய பாவம் அது.

அது ஒரு கனாக்காலம்,
எவனவனைப் பற்றிச் சொல்றீங்க?

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

மணிகண்டன், கல்வெட்டு

பொதுவாழ்வில் இருக்கும் யாருக்கும் நேர்மையும் எளிமையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்.

அரசியலில் நேர்மையும் ஆடம்பர வாழ்க்கையும் பொருந்தவே செய்யாது.

காந்தி மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வதில் எந்த ஆடம்பரமும் இல்லை. அப்படி ஒரு வேடத்தோடு நின்று விடாமல், தனது வாழ்க்கையையே பொது வாழ்வின் நேர்மைக்குக் கட்டளைக் கல்லாக எளிமையாக வாழ்ந்தவர் அவர்.

தங்கிய இடங்கள், சாப்பிட்ட பொருட்கள், நுகர்ந்த கேளிக்கைகள் என்ற எந்த அளவுகோலிலும் காந்தியின் வாழ்க்கையில் நேர்மையும் எளிமையும் முழுமையாக விளங்கின என்பது நீங்கள் எவ்வளவு கிண்டல் செய்தாலும மாறி விடாத உண்மை.

நீங்கள் சொல்லும் pragmatism இல்லாமல் அவர் ஒரு வாழ்நாளில் சாதித்தவை இந்த so called pragmatic rascals சாதித்ததை விட பல நூறு மடங்கு அதிகம்.

அன்புடன்,
மா சிவகுமார்

கல்வெட்டு சொன்னது…

சிவா,

காந்தி ஏன் கோமணத்தைக் கட்டினார்?

அதற்குப்பதில் எல்லா ஏழைகளுக்கும் நல்ல உடை கிடைக்க ஒரு திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தி இருக்கலாம்?

**

காந்தி ஏன் ஹரிஜன் என்றார்?

அதற்குப்பதிலாக எல்லாரையும் எப்படி சமமாக நடத்த சட்ட வரைவுகள், வாழ்வியல் முறைகளை அறிமுகப்படுத்தலாம் என்று சிந்தித்து இருக்கலாம் அல்லவா.

**

அவர் பிரச்சனைகளுக்குள் போய் , பிரச்சனையை தீர்க்க முயற்சி மேற்கொள்ளாமல் தன்னையும் பிரச்சனையின் (பாதிக்கப்பட்டவர்கள்) ஒரு பகுதியாக‌க காட்ட முற்பட்டார் .


**

பிரச்சனைகளைத் தீர்ப்பவனே தலைவன். வருந்தி மூக்கைச் சிந்துவதால் ஒன்றும் பயனில்லை.

**

அடிக்குறிப்பு:

காந்தியின் அந்தக்கால போர் யுத்திகள் (உண்ணா நோன்பு) அல்லது வாழ்வியல் முறைகளை எனது இந்தக்கால புத்தியோடு எடைபோட நான் முயற்சி செய்யவில்லை.

அவர் எடுத்த முடிவுகள், அவர் வாழ்ந்த வாழ்க்கை அந்தக்காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப எடுத்த முடிவுகள்.

எனது விமர்சனம் தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதும் , எளிமை ஒன்றே தலைமையினை தீர்மானிக்கும் விசயசம் அல்ல என்பதும்தான்.

***

உணர்ந்து கடைபிடிக்கும் எளிமை நிச்சயமாக ஒர் நல்ல அழகான வாழ்க்கைக்கு tool உதவும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

Deepa சொன்னது…

இம்மாதிரியான பதிவுகளும் சிந்தனைகளும் ஏராளம் வரவேண்டும்.
வாழ்த்துக்கள் சிவகுமார்.
எல்லாமே மரத்துப் போய் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம் என்பது வெட்கக்கேடு.

ஆனால் இது போல் சமூக அக்கறையுடன் அனைவரும் ஏற்கக்கூடிய உண்மைகளையே எழுதும் போது கூட ”அந்த அரசியல் வாதிக்கு ஆதரவாக எழுதி இருப்பாரோ, இவருக்கு இவர் எதிரியோ” என்று சிலர் மேம்போக்காகக் கொச்சைப் படுத்துவது மிக வேதனையளிக்கிறது.

அவற்றைப் பொருட்படுத்த வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

மா சிவகுமார் சொன்னது…

//அதற்குப்பதில் எல்லா ஏழைகளுக்கும் நல்ல உடை கிடைக்க ஒரு திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தி இருக்கலாம்?//

செயல்படுத்தினாரே! அதுதான் கைராட்டையும், கதரும். அந்தக் காலத்தில் அவரது சூழலில் அதுதான் வழியாகப் பட்டது அவருக்கு.

//அதற்குப்பதிலாக எல்லாரையும் எப்படி சமமாக நடத்த சட்ட வரைவுகள், வாழ்வியல் முறைகளை அறிமுகப்படுத்தலாம் என்று சிந்தித்து இருக்கலாம் அல்லவா.//

சிந்தித்தாரே! அதன் விளைவுகள்தான் நாம் இன்று வாழும் இந்திய அரசியலமைப்பு சட்டம்.

//அவர் பிரச்சனைகளுக்குள் போய் , பிரச்சனையை தீர்க்க முயற்சி மேற்கொள்ளாமல் தன்னையும் பிரச்சனையின் (பாதிக்கப்பட்டவர்கள்) ஒரு பகுதியாக‌க காட்ட முற்பட்டார் .//

இல்லவே இல்லை. காந்தியின் மீது என்ன குறை சொன்னாலும், அவரை வாய்ச் சொல் வீரர், படம் காட்டி வாழ்ந்த ஏமாற்றுப் பேர்வழி என்று நீங்கள் சொல்ல முடியாது. தான் சரி என்று நம்பிய எதற்காகவும் செயல்முறையில் இறங்கி வாழ்ந்து காட்டிய வாழ்க்கை அவரது.

//எளிமை ஒன்றே தலைமையினை தீர்மானிக்கும் விசயசம் அல்ல//
பொதுவாழ்வில் ஒருவருக்கு காசு எங்கிருந்து கிடைக்கும்?
1. அரசு ஊதியம் - அது பொதுமக்கள் பணம். அதை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது எப்படி நேர்மையாகும்?

2. பக்கவாட்டில் தனித் தொழில் செய்து பொருள் ஈட்டுவது - அரசுப் பொறுப்பில் இருக்கும் போது அப்படித் தொழில் நடத்தினால் அவரது கொள்கை முடிவுகள் தமது தொழில் துறைக்கு ஆதாயமாக இருந்தால் அது எப்படி நேர்மையாகும்?

3. தாத்தா சம்பாதித்து வைத்த சொத்தில் ஆடம்பரமாக வாழ்ந்தால், சொத்துக்கள் குறித்த கொள்கை முடிவுகளில் அவர் எப்படி நேர்மையாக இருக்க முடியும்?

நன்றி தீபா,

இது போன்ற சிந்தனைகளை வெளிப்படுத்தும் போது கொச்சைப் படுத்துபவர்களின் குரலுக்கு கொஞ்சமாவது வெளிச்சம் குறையுமல்லவா!

அன்புடன்,
மா சிவகுமார்

சீனு சொன்னது…

"என்னது காந்திய சுட்டுட்டாங்களா?"-னு கேக்கறீங்க...புரியுது.

மா சிவகுமார் சொன்னது…

எப்படி சீனு!
ஒரு வரி பின்னூட்டத்தில் இவ்வளவு சொல்லி விடுறீங்க! :-)

அன்புடன்,
மா சிவகுமார்