புதன், செப்டம்பர் 16, 2009

தப்பும் தண்டனையும்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு

கஸ்தூர்பா திலகம் என்பது பரணீதரன் அறுபதுகளில் எழுதிய தொடராம். ஸ்ரீதராகவும் மெரீனாவாகவும் எழுதியவர் பரணீதரன் என்ற பெயரில் எழுதிய முதல் தொடர் இதுவாம். அதன் பிறகு அதே பெயரில் திருத்தல யாத்திரைகள் பற்றிய தொடர்களை எழுதியிருக்கிறார்.

இந்த நூலை நேற்றைக்கு வித்லோகா புத்தகக் கடையில் வாங்கிக் கொண்டேன்.

என்ன ஒரு வாழ்க்கை! "மகாத்மாவாம், மகாத்மா, துப்புக் கெட்ட மனிதன்" என்று உதறித் தள்ளிக் கொண்டு போக வழியிருக்கவில்லை என்றா சொல்ல முடியும். அன்னையிடம் இருந்த ஆத்மாவின் புனிதம்தான் அவரைக் கடைசி வரை காந்தியுடன் வாழ்ந்து துன்பங்களை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது.

நேற்றைக்குக் காலையில் எழுந்திருக்கும் போது மணி ஏழே கால். கடந்த இருபது நாட்களில் பல நெகிழ்வுகள். காலை மாலை தியானம் செய்வது, ஒதுக்கிய உணவு வகைகளைத் தவிர்ப்பதில் மட்டும் அதிக விட்டுக் கொடுத்தல் இல்லை. தூக்கம், படிக்கும் புத்தகங்கள், எழுதுவதில் சுணக்கம் என்று பல சறுக்கல்கள். "ஏன் ஆனந்த விகடன், குமுதம் படிப்பதைத் தவிர்க்க வேண்டும், என்ன தப்பு?" என்ற கேள்வியும் புரிகிறது, இப்போது.

ஒரு கஸ்தூரிபாவின் வாழ்க்கையையோ, அறிவியல் உண்மைகளையோ படிக்கும் போது கிடைக்கும் நல் அமைதியும் மனத் தெளிவும், பிரகாஷ் ராஜின் வாழ்க்கை வரலாற்றை அவர் சுவையாகச் சொல்ல அல்லது நமீதாவின் கைப்பிடிக்க நான்கு ஆண்கள் போட்டி போடும் நிகழ்ச்சியைப் பற்றி படிப்பதால் கிடைத்து விடுவதில்லை. எதை உண்கிறோம் என்பதில் இருக்கும் கவனம், எதைப் படிக்கிறோம் என்பதிலும் இருக்க வேண்டும்.

பழம் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று சாத்துக்குடி தோலை நகத்தால் உரிக்கும் போது நக இடுக்கில் புகுந்து கொண்டது ஒரு கனத்தத் தோல் துணுக்கு. இரண்டு மூன்று நாட்கள் சிறிய தொந்தரவைக் கண்டு கொள்ளவில்லை. சனிக் கிழமை காலை முதல் வலி வருத்த ஆரம்பித்து விட்டது. அன்று முழுவதும் பல வேலைகள் வேறு. பெங்களூரிலிருந்து வந்திருந்தவருடன் சுற்றியது விவாதங்கள் என்று மாலை ஏழு மணியானதும் வெளியே போய் சீன உணவு சாப்பிடலாம் என்று ஏற்பாடு. "எங்களுக்காக ஒரு நாள் விட்டுக் கொடுங்கள்" என்றதற்கு நானும் போக ஒப்புக் கொண்டிருந்தேன்.

கை வலி உறுத்திக் கொண்டே இருந்தது. பெருவிரல் நகத்துக்குள்ளே பழுப்பு வைத்து கொப்புளத்தின் நடுவில் கறுப்பாக தெரிந்தது. சாத்துக்குடித் தோல் துணுக்குத்தான் இன்னும் உள்ளே இருக்கிறது. அதை மட்டும் வெளியே எடுத்து விட்டால் சரியாகிப் போய் விடும் என்று கறுப்பு புள்ளியை நோக்கி குண்டூசி நுழைத்துக் கொண்டேன். இரண்டாவது முரட்டுச் செயல்.

உடனடியாக வலி குறைந்து, அரைக் கிண்ணம் சூப்பும் ஒரு சில கரண்டிகள் நூடில்ஸும் சாப்பிட முடிந்தது. வீட்டுக்கு வந்து தூங்கி எழுந்து காலையில் பார்த்தால் வலியும் சீழும் புது உயரத்தைத் தொட்டிருந்தன. ஞாயிறு முழுவதும் வலியிலேயே ஓட்டிக் கொண்டேன். யாரிடமும் சொல்லவும் இல்லை. மாலையில் நண்பன் வந்து பார்த்த போது மருத்துவரைப் பார்க்கச் சொன்னான். அவன் ஆராய்ச்சி, உணவுக் கட்டுப்பாடுகள் என்று நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தான்.

திங்கள் காலையில் அலுவலகத்துக்குப் போகும் போது இரவுத் தூக்கம் சரிவர இல்லாமல் உடலெல்லாம் சோர்ந்திருந்தது. வலி விண் விண்ணென்று தெரித்தது. எப்படியாவது இந்த வலி போனால் போதும் என்ற தவிப்பு. ஒரு மணி நேரத்துக்குள் எல்லோரிடமும் பேசி விட்டு மருத்துவமனை போய் விட்டு வீட்டுக்குப் போய் விடுவதாகக் கிளம்பி விட்டேன்.

கேதார் மருத்துவமனையில் அவசர மருத்துவர் ஒரு பெண்மணி. கையைப் பார்த்ததும் முகத்தைச் சுளித்தார். அவர் தொடும் போது வலியில் கையை பின்னிழுத்துக் கொண்டேன். 'இந்த நிலையில் ஒன்றும் செய்ய முடியாது. இரண்டு நாட்கள் மாத்திரை சாப்பிடுங்கள், அதன் பிறகு இதைக் கீறி விடலாம் என்று மாத்திரை எழுதிக் கொடுத்தார். முப்பது ரூபாய் மருத்துவருக்குக் கட்டணம். இருபத்தி எட்டு ரூபாய் மருந்து கட்டணம். ஒரு மாத்திரை சாப்பாட்டுக்கு முன்னால் மூன்று வேளையும், இன்னொன்று சாப்பிட்ட பிறகு காலையிலும் மாலையிலும். வீக்கத்தைத் தடுக்கவாம்.

வீட்டுக்கு வந்து மாத்திரைகளை ஆரம்பித்து விட்டேன். மூன்றாவது தவறு??

மாத்திரை வேலை செய்ய ஆரம்பித்த உடன் வலி நின்று ஒரு மாதிரி விறுவிறுப்பான உணர்வு மட்டும். அரை மயக்கத்தில் திங்கள் பகல் முழுவதும் கழிந்தது. இரவிலும் விழிப்பும் தூக்கமுமாகக் கழிந்தது. செவ்வாய் காலையிலும் அலுவலகத்துக்கு மட்டம். நாள் ஏற ஏற கை கொப்புளம் பெருத்துக் கொண்டே போனது, மாத்திரைகளை உள்ளே தள்ளும் போது கிடைக்கும் ஆறுதல் ஓரிரு மணி நேரம்தான் நீடிக்கிறது. மீண்டும் பொறுமை போனது.

'அலுவலகமும் போக முடியவில்லை. நாளைக்குப் போய் கீறி விட்டால் இன்னும் ஒரு நாள் "வீணாகி" விடும். இன்றே மருத்துவமனைக்குப் போய்க் கீறி விட்டுக் கொள்வோம் என்று கிளம்பி விட்டேன். நல்ல வேளையாக தங்கச்சி வண்டி ஓட்ட பின்னால் சவாரிதான்.

மருத்துவமனையில் இன்னொரு பெண் மருத்துவர். கையைப் பார்த்ததும் அவருக்குச் சிரிப்பு. "எத்தன நாளா வச்சிட்டு இருக்கீங்க, எலுமிச்சம் பழம் எல்லாம் வச்சிப் பார்த்திருப்பீங்களே" என்ற கிண்டல்களுக்கிடையே கீறி விட்டு விடுவதாகச் சொன்னார். வலிக்கும், கையை இழுக்கக் கூடாது என்று பல எச்சரிக்கைகளுடன் திறமையாகக் கையைப் பிடித்துக் கையில் வெட்டு பிளேடை வாங்கிக் கொண்டார். வலியைக் காணவில்லை. கொப்புளத்தை உடைத்து துடைக்கிறார். தோலை இடுக்கியால் இழுத்துப் பிடித்து உள் அழுக்குகளை அழுத்தி வெளியேற்றுகிறார். ஒரு வித விறுவிறுப்பான உணர்ச்சியைத் தவிர வேறு வலி எதுவும் இல்லை.

"என்ன சத்தமே காணோமே" என்று கிண்டலுடன் வந்த வயதான செவிலியை மற்றவர் அடக்கி விட்டாலும், வலியே இல்லாத போது சத்தம் போட வழியும் இல்லை. ஆனால் முழுவதுமாகத் துடைத்து விடாமல் அந்த விறுவிறுப்பு தடுத்து விடக் கட்டுப் போட்டு விடுவதாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு திரும்ப வந்து விடுமாறும் சொன்னார். நல்லா மருத்துவர். மிகத் திறமையாக வெட்டித் தூய்மை செய்திருந்தார். இன்னொரு செவிலி கட்டுப் போட்டு விட, ஏற்கனவே சொல்லியிருந்த டிடி ஊசி போடச் சொன்னார்கள்.

இடுப்பில் போட வேண்டும் என்று ஊசியை எடுத்துக் கொண்டு வந்ததுதான் தெரியும். உடனேயே போய் விட்டால் அந்த வயதான செவிலி. "என்னா போட்டாச்சா" என்று கேட்டுத்தான் உறுதி செய்து கொள்ள வேண்டியிருந்தது. வலி என்ற உணர்ச்சியே இல்லை. கிளம்பும் போது நூற்றைம்பது ரூபாய்க்கு இன்னும் மாத்திரைகள்.

சீழ் எல்லாம் வடிந்து விடக் கைக்கு நிம்மதி. இரவும் ஓரளவு நிம்மதியானத் தூக்கம். இன்றைக்கு மாத்திரைகளை ஆரம்பிக்க வேண்டாம். தேவைப்பட்டால் காலையிலிருந்து பார்க்கலாம் என்று விட்டு விட்டேன். பல எண்ணங்கள், மருந்துகளின் விளைவுகளை நினைத்து கலக்கம். இரண்டு நாட்கள் முப்பது ரூபாய் மாத்திரை சாப்பிட்டு வலி எல்லாம் கொன்று போட்டிருக்கிறது. இப்போது என்னவோ என்று புரியாத தவிப்பு.

உடம்புக்கு வரும் பெரும்பாலான நோய்கள், நாம் கவனக் குறைவாக இருந்ததால், நமது தவறுகளால் வருகின்றன. நோய்க்கு மருந்து உடலுக்கும், மனதுக்கும் வேண்டும். உடலைச் சரி செய்து கொள்வது போல அதே நேரத்தில் மனதுக்கும் பாடங்கள் கிடைக்கின்றன. புதிய புதிய மருந்துகளால் உடலுக்கு உடனடி நிவாரணம் தேடிக் கொள்கிறோம். மனதிற்கு பாடங்களே இல்லை!

மழையில் விளையாடிய குழந்தைக்கு மதியத்திலிருந்தே காய்ச்சல். மாலை ஏழு மணிக்கு ஒரு விருந்துக்குப் போக வேண்டும். 'ஒரு குரோசின் கொடுத்தால் காய்ச்சல் தணிந்து விடும்' என்று மாத்திரை கொடுத்து கேளிக்கைக்குப் போகும் கணவன் மனைவி தெரியும். சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் குழந்தைக்கு உடம்பு சரியில்லை, வாந்தி, காய்ச்சல். "எங்காவது வந்தாலே இவனால் தொந்தரவுதான்" என்று அம்மா சலித்துக் கொள்ள எப்படியோ மனதைச் சமாதானம் செய்து கொண்டு தற்காலிக நிவாரணம் மருந்துகளால் வாங்கி அந்தக் குழந்தை அலைக்களிக்கப்படுகிறது.

மருந்துகள் கண்டிப்பாக வேண்டும். உடலின் குணப்படுத்தலுக்கு உதவி செய்யும்படி அவற்றைப் பயன்படுத்தினால் சரி. கிருமிகளைக் கொல்ல அவற்றுடன் போராட மாத்திரைகளைப் புரிந்து கொள்ளலாம். கவனமாகத் தோல் உரிக்காத, குண்டூசி வைத்துக் கிளறிய செயல்களுக்குப் பாடம் எப்படிக் கிடைக்கும்? கை குணமாகும் போது வலியுடன் வாழ்வது ஒரு வழியா? அந்த வலியைக் கொன்று விட்டால் அப்புறம் இதே தவறைத் திரும்பச் செய்ய உரிமம் கிடைத்து விடுகிறதே!

சமோசா சாப்பிட்டால் செரிக்காது என்று ஜெலூசில் சாப்பிட்டு விட்டு சமோசா சாப்பிடுபவர்கள் எத்தனை பேர்! உடலை அலைக்களித்து நமது சிற்றின்பங்களுக்கு ஒத்துழைக்க அதைப் பாழ்படுத்திக் கொள்கிறோம்.

சுருக்கமாக, புதன் கிழமையும், அதன் பின்னரும் நூற்றைம்பது ரூபாய்க்கு மேல் வாங்கி வந்திருந்த மாத்திரைகளைத் தொடவே இல்லை. புதன் கிழமை காலை ஓரளவு போனது. மதியம் மீண்டும் வலி ஆரம்பித்தது. இரவில் வலியுடன் கூடிய தூக்கம். அன்று முழுவதும் வேலையைத் தொடர்ந்து இரவும் அலுவலகத்தில் தங்க வேண்டி இருந்தது. வியாழக் கிழமை வலி உச்சக் கட்டத்தை அடைந்தது. தீப் பிடித்தது போல எரிச்சல். உட்கார முடியவில்லை, நடக்க முடியவில்லை. அரை மயக்க நிலையில் படுத்துக் கிடந்தேன்.

மாலையில் சீக்கிரமாகக் கிளம்பி வீட்டுக்கு வந்ததும், 'மாத்திரை சாப்பிடாமல் மருத்துவமனை போனால் திட்டுதான் விழும். நாமே அவிழ்த்துப் பார்ப்போம்' என்று பார்த்தால் சீழ் விரல் கடை வரை பரவியிருந்தது. அவிழ்க்கும் போதே உடைந்து விட, மருந்துக் கடையில் பஞ்சும், சல்ஃபோனின் பொடியும் கட்டுத் துணியும் வாங்கி வந்தேன்.

நீரில் செவ்லான் விட்டு வலிக்காமல் துடைத்து விட்டு, நிறையப் பொடி போட்டுக் பஞ்சு வைத்துக் கட்டுப் போட்டுக் கொண்டேன். அப்புறம் படுத்தது அடுத்த நாள் காலையில்தான் எழுந்திருந்தேன். காலையில் திறந்து பார்த்து மீண்டும் துடைத்துக் கட்டு. அன்று வேலை சுமுகமாகச் செய்ய முடிந்தது. மாத்திரை சாப்பிடாத கலவரம் இன்னும் இருந்தது.

வெள்ளி மாலையில் இன்னும் தெளிவு. ஆனால் இன்னும் சீழ் உருவாவது நிற்கவில்லை. இதற்கிடையில் ஒரு ஆயுர்வேத களிம்பு என்று ஒரு நண்பர் அன்புடன் வாங்கிக் கொடுத்திருந்தார். அதைப் போடவில்லை. சனிக் கிழமை வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் ஒரு சுற்று அடிக்க முடிவு செய்யவும் முடிந்தது.

5 கருத்துகள்:

சென்ஷி சொன்னது…

:-(

உடம்பை பார்த்துக்குங்க தலைவா!
(இதை நான் சொல்லவேண்டியிருக்குது பாருங்க :-) )

வினையூக்கி சொன்னது…

மா.சி சார் இடம் இருந்து மற்ரும் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி

துளசி கோபால் சொன்னது…

சூஷிச்சால் துக்கமில்லை.

ஒரு கத்தியை வச்சுத் தோலை(அதான்...அந்தச் சாத்துக்குடித் தோலை)உரிச்சுருக்கலாம்.........

Indian சொன்னது…

Take care.

Wondering why you are defying the instructions w.r.t tablets.

மா சிவகுமார் சொன்னது…

சென்ஷி,

மூணு வருஷத்துக்கு முந்தைய கதை. இப்போ நல்லாத்தான் இருக்கேன் :-)

வினையூக்கி,
என்ன பாடம்...., உள்குத்து எதுவும் இல்லையே :-)

துளசிஅக்கா,
//ஒரு கத்தியை வச்சுத் தோலை(அதான்...அந்தச் சாத்துக்குடித் தோலை)உரிச்சுருக்கலாம்//
அதே! அதே!

Indian
//Wondering why you are defying the instructions w.r.t tablets.//
மருந்துகளின் மீது பெரிய அவநம்பிக்கை உண்டு. இந்த அனுபவத்திலும் மருந்தின் விளைவுகள் எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியை சொல்ல முயற்சித்தேன்.

அன்புடன்,
மா சிவகுமார்