திங்கள், செப்டம்பர் 21, 2009

எப்போதும் நட்சத்திரம் - தமிழ்மணம்

இணையத்தில் தமிழ் மொழியின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவையாகவே இருக்கின்றன. தமிழ் டாட் நெட் என்று மடற்குழு ஆரம்பித்து, டிஸ்கி தகுதரம் உருவாக்கி குறியாக்கத்தை நெறிப்படுத்தியதில் ஆரம்பித்து, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், ஆயிரக்கணக்கான தமிழ் பயனர்களின் கூட்டு உழைப்பில் தமிழ் நிறைய சாதித்திருக்கிறது

வலைப்பதிவுகளைப் பொறுத்தவரை தமிழ் வலைப்பதிவுகள் என்றால் தமிழ்மணம் என்று சொல்லப்படும் வகையில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு தொடர்ந்து தாக்கம் குறையாமல் செயல்படுகிறது தமிழ்மணம். அப்படி வலைப்பதிவுகள் என்றாலே தமிழ்மணம் என்ற உருவகம் ஆரோக்கியமானதுதானா என்று பல விவாதங்களும் நடந்திருக்கின்றன, நடக்கின்றன. அது ஒரு புறம்.

என் பார்வையில் தமிழ்மணத்தின் வெற்றிக்கான அடிப்படை காரணம் அதன் வடிவமைப்பிலிருந்து ஒவ்வொரு கொள்கை முடிவுகளிலும் அடங்கியிருக்கும் 'பதிவர்களும் படிப்பவர்களும்தான் தமிழ்மணத்தை செலுத்துகிறார்கள்' என்ற எண்ண ஓட்டம்தான். ஆரம்பத்திலிருந்தே முகப்பு பக்கத்திலும் சரி, உள்ளடக்கங்களிலும் சரி பதிவர்களின் மற்றும் பின்னூட்டங்களின் போக்குதான் தமிழ்மணத்தை செலுத்தி வருகிறது. contentஐ நெறிப்படுத்தி வழங்கும் போது தனது அடையாளம் தெரியாமல் பின்னணியில் மறைந்து கொள்கிறது தமிழ்மணத்தின் பயன்பாட்டு முறை.

பதிவு எழுதும் ஒவ்வொருவரும் தமிழ்மணத்தில் பங்கேற்பது தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்கிறார்கள். கூடவே ஒவ்வொரு பதிவுக்கும் புதுப்புது உத்திகளில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதையும் செய்து வருகிறது தமிழ்மணம்.

  1. பதிவர் புதிய இடுகையை எழுதிய உடன், புதுப்பிக்கும் பெட்டியில் முகவரியை கொடுத்து தகவல் கொடுத்தல்.
  2. மறுமொழி ஒன்று இடப்பட்டால், அந்த இடுகை மறுமொழி பட்டியலில் காண்பிக்கப்படுதல்
  3. வாசகர் பரிந்துரைக்கும் இடுகைகளின் பட்டியல்
  4. சூடான இடுகைகளின் பட்டியல்
  5. வாரம் ஒரு பதிவரை நட்சத்திரமாக காட்டுவது.
இவற்றில் சிலவற்றில் சர்ச்சைகள், சிக்கல்கள் ஏற்பட்டாலும், ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது வாசகர்களுக்காக, வாசர்களால் செலுத்தப்படும் திரட்டி என்ற உணர்வை தமிழ் மணம் ஏற்படுத்துகிறது.

காசியின் மூளையில் உதித்த இந்த சேவை வடிவம் பெற்று வளர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு TMI நிறுவனத்தால் வாங்கப்பட்டு விட்ட பிறகும் புதுப்புது வடிவங்களில் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறது. வலைப்பதிவுகளை மட்டும் கொண்டு ஒரு சமூகமாக இயங்குவது தமிழ்பதிவர்களைத் தவிர வேறு எந்த மொழியிலும் இணையத்தில் நான் பார்த்ததில்லை. அதற்கு தமிழ்மணத்தின் பணிதான் முதல் முழுக் காரணம்.

மிகவும் தேவையான ஒன்றாக செய்ய வேண்டியது, நீண்டகால பதிவர்கள், தொடர்ந்து பதிபவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள், இவர்களுக்கு ஒரு அடையாளமும், அங்கீகாரமும் கொடுப்பது. நட்சத்திர வாரம் என்ற முறை அதை ஓரளவுக்குச் செய்கிறது. ஆயிரக்கணக்கான பதிவர்களுக்கு இந்த முறை மூலம் முழுமையான அங்கீகாரங்கள் கொடுப்பது சாத்தியமில்லைதான்.

Hall of Fame போல 10 சிறந்த பதிவர்கள், 10 சிறந்த வாசகர்கள் என்று பட்டியல்கள் ஏற்படுத்தலாம்.

நன்றி, வாழ்த்துக்கள்.

5 கருத்துகள்:

-/சுடலை மாடன்/- சொன்னது…

மா.சி.

நேரமின்மைக்கிடையேயும் பல சிறிய நல்ல இடுகைகளை இவ்வாரம் எழுதினீர்கள். வழக்கம் போல் சில கருத்துகளுடன் உடன்பாடும், வேறு சிலவற்றுடன் வேறுபாடுமுண்டு. விவரிக்க நேரமில்லை. நன்றி மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்விடுகைக்கு மட்டும் பின்னூட்டமிடத் தோன்றியது தமிழ்மணத்தை பாராட்டியமைக்காகவல்ல. தமிழ்மணத்தின் பங்களிப்பை *மிகச்சரியாகப்* புரிந்து கொண்டமைக்கே! உங்களது கடைசி யோசனை குறிப்பிடத்தக்கது. தமிழ்மணம் விருதுகளின் அறிவிப்பிலேயே இது பற்றி வெளியிடப்பட்டிருந்தது. பதிவர்களால் தேர்ந்தெடுக்கப் படும் சிறந்த பதிவுகளை நிலை நிறுத்தப் புகழ் அரங்கு (Hall of fame) ஒன்றை ஏற்படுத்துவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இன்னும் செயல்படுத்தப் படவில்லை. தமிழ்மணம் ஆரம்பித்த பின் முதல் இரு ஆண்டுகளில் எழுதப் பட்ட மிக நல்ல பதிவுகளையும் முன்னிறுத்த வேண்டும்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

Tulsi சொன்னது…

இந்த 'நட்சத்திரம்' என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்ததுக்குத் தமிழ்மணத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

காசி போன்ற என்றும் ஜொலிக்கும் துருவ நட்சத்திரத்தின் வழிகாட்டலில்தான் பலர் மின்ன வழி கிடைச்சது.

சில நட்சத்திரம் ரொம்பப் பளீர். சிலது மினுங் மினுங்... பலது எப்பவாவது ஒரு ஜ்லீர்ன்னு வெட்டி மறைவதுன்னு எல்லாமும்தான் இங்கே நம்ம தமிழ்மணத்திலும் நடக்குது.

இந்த வாரம் அருமையாக இருந்துச்சு. சிந்திக்கவும் சில 'பாய்ண்ட்ஸ்' கிடைச்சது.

உங்க தொடர் மட்டும் இன்னும் படிக்கலை.

இனிய பாராட்டுகள் வெற்றிகரமான வாரத்துக்கு!

நா. கணேசன் சொன்னது…

நன்றி, சிவகுமார்!

நா. கணேசன்

மா சிவகுமார் சொன்னது…

சுடலை மாடன்

புகழ் அரங்கு ஒன்றை சீக்கிரத்தில் செயல்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

நா கணேசன்,
நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

துள்சி,

பாராட்டுக்களுக்கு நன்றி.

தமிழ்மணம் போன்றவை தானாக நடந்து விடுவது இல்லை. அதன் பின்பு இருக்கும் உழைப்பும், பிடிப்பும் வெளியில் பெரிதளவு தெரியாமலேயே இருந்து விடுகிறது. நாமெல்லாம் அதை take for granted.

நட்சத்திரம் என்ற அமைப்பும் சொல் தேர்வும் அப்படிக் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய முடிவுகள்தான்.

அன்புடன்,
மா சிவகுமார்