ஞாயிறு, செப்டம்பர் 20, 2009

சில மீள்பதிவுகள் (2006 - ஏப்ரல்/மே)

துரோகிகளை விட விரோதிகள் மேல். விரோதியின் கையில் அதிகாரம் இருந்தால் விழிப்பாக இருந்து நமது நலன்களை பாதுகாத்துக் கொள்வோம். துரோகிகள் முதுகில் குத்தும் போது எல்லாமே முடிந்து போயிருக்கும்.

2006ம் ஆண்டில், தமிழினத்தின் விரோதியான ஜெயலலிதாவைத் தோற்கடித்து, 'நட்பான' கருணாநிதி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு தமிழருக்கு என்ன நடந்திருக்கிறது?
  1. ஈழத்தமிழர் வாழ்க்கை காரிருளில் ஆழ்த்தப்பட்டிருக்கிறது.
  2. நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசும் அமைச்சர்கள் அதட்டப்படுகிறார்கள், இந்தியாவில் இந்தியில்தான் பேச வேண்டும்.
  3. மைல் கல்லுகள், பர்லாங்கு கல்லுகளில் முதல் கல் - தமிழ், இரண்டாவது கல் - ஆங்கிலம், மூன்றாவது கல் - இந்தி என்று தமிழக முதல்வரே ஏற்றுக் கொண்டு மும்மொழித் திட்டம் வந்து விட்டது.
2006ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எழுதிய சில பதிவுகளிலிருந்து...

எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி

என்னுடைய நோக்கில் திமுக, அதிமுக இரண்டுமே எரிகிற கொள்ளிகள்.

இரண்டில் எது தேறுமோ, எது குறைந்த சேதம் விளைவுக்குமோ அதற்கு வாய்ப்பளிப்பதுதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. 1996ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று மாநிலமே திரண்டு திமுகவிற்கு ஆட்சிப் பொறுப்பை அளித்தது.

2004ல் இப்படியே விட்டால், இந்த அம்மா தன்னை அரசியாக முடிசூட்டிக் கொள்வார்கள் என்று 39 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்தனர் மக்கள்.

2006 தேர்தலில் அப்படித் தலை போகும் பிரச்சனை என்ன?

ஊடகங்கள் என்ற கண்ணாடியின் மூலம்தான் மக்கள் உலகையும், சமூகத்தையும் பார்க்கிறார்கள். ஊடகத்துறை ஒரே கருத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம், திரிக்கப்பட்ட கருத்துகளை அளிக்கும் வண்ணம் வளர்ந்து விட்டது, அவ்வாறு வளர அரசியல் கருவிகள் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலைக்கிடமளிப்பது.

நிலைமை இன்னும் மோசமாகி விடாமல் தடுக்க, திமுகவுக்கு கூடுதல் அரசியல் பலம் கிடைக்காமல் இருப்பது நல்லது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, கூட்டணிக்கட்சிகளை பெரிதும் நம்பி ஆட்சி அமைக்கும் நிலை வருவது மாநிலத்துக்கு நல்லது.

ஆனால், தம்மை ஓரளவே சார்ந்திருக்கும் மத்திய அரசையே தமது குடும்ப தொழில் நன்மைக்கேற்ப வளைக்க முனையும் திமுக தலைமை, மாநில அரசு அதிகாரத்தைத் தனியாகவோ கூட்டாகவோ கைப்பற்றி விட்டால் இன்னும் தீவிரமாக தமது ஊடக ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனையும்.

ஆகவே, இந்த தேர்தலில திமுக ஆட்சி அதிகாரம் பெறாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது என்பது என் கருத்து.

திமுக ஆட்சி அமைத்தால், அதிமுக ஆட்சி அமைத்தால்

திமுக ஆட்சி அமைத்தால்

நன்மைகள்
1. அதிகாரம் பரவலாக்கப்படும். முதலமைச்சருக்கு பயந்து நடுங்கிக் கொண்டு இல்லாமல் அமைச்சர்களும் மற்ற நிர்வாகிகளும் தன்னம்பிக்கையோடு செயல்பட முடியும்.
2. முதல்வர் பத்திரிகைகளும், தோழமைக் கட்சிகளும் எளிதில் அணுகும்படியாக இருப்பார்.
3. மத்திய அரசுடன் நல்லுறவு பேணப்பட்டு தமிழகத்துக்கான திட்டங்கள் சரிவர நிறைவேறும்.

தீமைகள்
1. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கழகங்களைப் பொறுத்தவரை அதிகாரம் == ஊழல். பரவலான அதிகாரம் என்பது பரவலான ஊழல் என்றே பொருள்படும்.
2. வட்டார குண்டர்களுக்கு மீண்டும் துளிர்த்து விடும்.
3. கருணாநிதியின் குடும்பத் தொழில்களின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகி விடும்.

அதிமுக ஆட்சி அமைத்தால்
நன்மைகள்
1. யாராயிருந்தாலும் (வீரப்பன், ஜெயேந்திரர், சரவணபவன் முதலாளி, எஸ் ஏ ராஜா, பேட்டை தாதாக்கள்) தப்பு செய்தால் போட்டுத் தள்ளி விடுவார்கள் என்ற ஒரு பயத்தால் கலவரங்கள், வன்முறைகள் தொடர்ந்து குறைவாக இருக்கும்.
2. உறுதியான தலைமையால் நிர்வாகத்தின் முடிவுகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு பலன்கள் கிடைக்கத் தொடங்கும். வட்டங்கள் மாவட்டங்களின் வால் ஆடுவது ஒரு அளவுக்குள்ளேயே இருக்கும்.
3. தேசிய அளவில் காங்கிரசு, பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

தீமைகள்
1. அண்டை மாநில முதல்வர்களையும், மத்திய அரசையும், அமைச்சரவை சகாக்களையும், பத்திரிகைகளையும் கிள்ளுக்கீரையாக நினைக்கும் தலைமையால், தமிழகத்தை பாதிக்கும் பிரச்சனைகள் சிக்கலாகிக் கொண்டே போகும்.
2. சசிகலா குடும்பத்தின் கெடுபிடிகள் மற்றும் சொத்துக் குவிப்புக்கு இன்னும் ஊக்கம் கிடைத்து விடும்.
3. பெரும்பான்மை மதவாத குழுக்களுக்கு புத்துயிர் வர வாய்ப்புகள் ஏற்படும்.

கலைஞர் அவர்களின் குறுமதி

தமிழகத்தில் அரசை தலைமை ஏற்றுள்ள் கருணாநிதியை தாக்கிக் குறை கூறி எழுதப்படும் பதிவு இது.

முதலில் சமீபத்திய நிகழ்வுகள்.

1. நாங்கள் ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு 15,000 ரூபாய் கொடுக்கிறோம். எதிர்க் கட்சியினர், அவர்கள் வாக்களித்த அரைப் பவுன் தங்கத்தைக் கொடுக்கட்டும் நாம் இணைந்து திருமணங்களை நடத்துவோம் என்று பேட்டியில் கூறி விட்டு, அதே பேட்டியில், எதிர்க் கட்சிகளை எப்படி நடத்துவோம் என்பது தெரிந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.

வெற்றி பெற்று ஆட்சி அமைத்த இவர் 15,000 ரூபாய் கொடுப்பாராம், தோற்று எதிர்க்கட்சியில் அமையப்போகும் மாற்றுக் கட்சியினர் தங்கம் கொடுக்க வேண்டுமாம். அவ்வளவு நக்கல், கேட்டால் அவர்கள் கொள்ளையடித்த பணத்திலிருந்து கொடுக்கலாமே என்று கவிதை எழுதுவார்.

2. "சிறுத்தைகள் உலாவும்போது, சிங்கங்கள் உலாவக் கூடாதா! மிருக சாதிகள் அடித்துக் கொள்வது இயல்புதானே"

இது இயல்பாக இலக்கிய மனதிலிருந்து வந்த சொற்றொடர்கள்தான். இயல்பான சிந்தனைகளே இப்படி இருந்தால் இவர் முயன்று சிந்தித்து நடத்தும் திட்டங்கள் எப்படி இருக்கும்?

3. வைகோ திமுக கூட்டணியை விட்டு அதிமுக கூட்டணியில் சேர்ந்ததை யசோதரா காவியம் என்ற கதையுடன் ஒப்பிட்டு எழுதியது
இவ்வளவு வயதுக்கு அப்புறம், இத்தனை கோடி மக்கள் வழி நடக்கக் காத்திருக்கும் போது, எத்தகைய மன ஓட்டம் இது மாதிரியான ஒப்பீட்டைச் செய்யத் தூண்டியிருக்கும்.

ஆரம்பம் முதலே தனது சுயநல நோக்கங்களுக்காகத்தான் தமிழ், தமிழ் நாடு என்று கலைஞர் பேசி வந்திருக்கிறாரே தவிர, மக்களின் மீது அன்பு பொங்கி அவர் ஆட்சியிலிருக்கும் போதோ, எதிர்க் கட்சியிலிருக்கும் போதோ செய்த பணிகளை யாராவது பட்டியலிட்டால் உதவியாயிருக்கும். அவர் செய்த ஒவ்வொரு திட்டத்துக்கும், அவரது தனி வாழ்க்கை நலம் காரணமாக இருந்திருக்கும்.

4. இலவசத் தொலைக்காட்சித் திட்டம்

மக்களுக்கு இலவசமாக கொடுப்பதாக அறிவித்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தோன்றிய தலைவர்களில் யாருக்கு என்ன திட்டம் தோன்றியது:
அ. மா கோ இராமசந்திரன் - பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டம், முதியோர்களுக்கு வேட்டி சேலை, ஏழைப் பெண்களுக்கு திருமணத் திட்டம்.
ஜெ ஜெயலலிதா - பள்ளி மாணவர்களுக்கு மிதி வண்டி, இலவச அரிசி, பள்ளித் தேர்ச்சி பெற்றால் கணினி

ஆ. மு கருணாநிதி
இலவசமாக தொலைக்காட்சி

முதல் பிரிவு, பசிப்பிணி, வறுமைப்பிணி, அறியாமைப் பணி தீர்க்க வேண்டும் என்று கொடுக்கப்படுபவை. இரண்டாவது பார்ப்பவரை மந்தமாக்கும் முட்டாள்பெட்டி. அறுபது ஆண்டு காலம் அரசியல் பார்த்து விட்ட தலைவருக்கு தோன்றிய திட்டம் இது.

5. ஆடம்பர வீடு
திருக்குவளையில் ஏழைத் தந்தைக்கு மகனாகப் பிறந்து போராட்டங்களைச் சந்தித்து, எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கை நடத்திய தலைவரின் வீட்டை என்டிடிவியின் காட்டினார்கள். வீட்டை இல்லை, வீட்டின் வரவேற்பறையை. அவரது மகள் திருமதி கனிமொழி தொலைக்காட்சி நிருபருடன் பேசுகிறார். அவர்கள் அமர்ந்திருந்த மென் இருக்கைகள் மட்டுமே இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிருக்கும். அவர் போகும் ஊர்தி இலட்சக்கணக்கான மதிப்பிலிருக்கிறது.

அவமானமாக இல்லை! தன்னைத் தலைவராகக் கொண்டாடும் தொண்டர்கள் எங்கே, இவரின் வாழ்க்கைத் தரம் எங்கே?

ஏன்? ஓட்டு வீட்டில், கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு என்டிடிவி நிருபர் தமிழினத் தலைவரை பேட்டி காண்பதுதானே தமிழ் நாட்டின் இயல்புக்குப் பொருத்தம். காணி நிலம் வேண்டும், பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் வேண்டும் என்று கனவு கண்ட தமிழன் வாழ்ந்த அதே நூற்றாண்டில் வாழ்ந்த இவர்தான் தமிழினத் தலைவரா?

என்ன செய்து விட்டார் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறோம்?

6. ஸ்டாலின் உயர்ந்த சாதி தகப்பனுக்கு மகனாகப் பிறக்காததுதான் ஒரே தவறாம். ஏன் ஐயா, ஸ்டாலினின் வயதில் இருக்கும் சராசரித் தமிழனின், கலைஞர் வயதில் இருக்கும் ஒர் சராசரி தகப்பனின் நிலைமையை விட என்ன குறைந்து விட்டது உங்களுக்கு. இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு?

7. முரசொலி மாறனை இலாகா இல்லாத அமைச்சராக வெளி நாடெல்லாம் அனுப்பு மருத்துவம் பார்த்தாரே தமிழினத் தலைவர்? அவரது தொண்டர்களில் எத்தனை பேருக்கு அந்த வசதி கிட்டிடும்?

8. தொண்ணூற்றி சொச்சம் இருக்கைகளே இருந்தாலும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள ஏன் மனமில்லை? இதையே ஜெயலலிதா செய்திருந்தால் இன்றெல்லாம் பதிவுகள் தூள் பறந்திருக்கும்? கவிதைகள் முரசொலியை நிறைத்திருக்கும். என்ன ஒரு ஆணவம் என்று நாடே குமுறியிருக்கும். செய்திருப்பவர் பெருந்தலைவராயிற்றே, எந்த முணுமுணுப்பும் இல்லை.

கலைஞர் மீது சுமத்தப்படும் புகழ் மொழிகளும், பட்டங்களும், தகுதிகளும் அவருக்கு உண்மையிலேயே பொருந்துமா? அவர் செய்பவையும், சொல்பவையும் படித்த வசதி படைத்த மக்களுக்கு ஏன் கண்ணில் தென்படுவதில்லை?

ஆள்பவரின் செங்கோலின் கீழ்தானே நாடு சிறக்க வேண்டும். இத்தகைய குறுமதியுடைய தலைவர் எப்படித்் திரும்ப திரும்ப ஆட்சியில் அமர்ந்து விடுகிறார்?

தமிழகத் தேர்தல்கள்

அற்பனுக்கு வாழ்வு வந்த கதையாக தன்னை முடிசூட்டப்பட்ட அரசியாக நினைத்துக் கொண்டு ஜெயலலிதா தன்னுடைய ஆசைகளை எல்லாம் பதவியைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ள முனைய அதிமுக ஆட்சி மாநில மக்களின் வெறுப்பை ஈட்டிக் கொண்டது. மகாமகத்தில் குளிக்கப் போனதிலிருந்து, சென்னை நகர சாலைகளின் போக்குவரத்தை முடக்கி வைப்பது, வளர்ப்பு மகனுக்கு கல்யாணம் நடத்துவது, நிலங்களை வாங்கிக் குவிப்பது என்று போட்ட ஆட்டம், அடுத்த தேர்தலில் தமிழகமே ஜெயலலிதாவுக்கு எதிராக திரண்டது. திமுக அதன் பலனை அறுவடை செய்து ஆட்சி அமைத்தது.

இந்தத் தேர்தல் நடந்த சமயம் நான் வேலை முன்னிட்டு இந்தூரில், தங்கியிருந்தேன். தமிழகத்தைப் பார்த்து அந்த ஊர் ஆட்கள் எல்லாம் சிரித்தார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசு, ஐக்கிய முன்னணி அரசு, மீண்டும் பாஜக அரசு என்று அதிமுகவும், திமுகவும் மாற்றி மாற்றி ஆதரிக்கும் மத்திய அரசுகள் அமந்தன.

பாஜக என்ற நச்சு சக்திக்கு தமிழகத்தில் முதலில் காலூன்ற வழி செய்த இழி பெருமையை ஈட்டிக் கொண்ட ஜெயலலிதாவின் அடியொற்றி, திமுகவும் தமது பதவி ஆசைக்கு, தனது கொள்கைகள் என்று அது வரை சொல்லி வந்ததற்கு முற்றிலும் எதிரான பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது.

தனது ஐந்தாண்டு ஆட்சி சாதனைகளை முன் வைத்து சாதிக் கட்சிகளின் கூட்டணியுடன், மதக் கட்சியையும் மடியில் கட்டிக் கொண்டு நின்ற திமுக அடுத்த தேர்தலில் தோற்றுப் போனது வருத்தமானது என்றாலும், பாஜக கூட்டுக்கு சரியான தண்டனை என்று நினைத்துக் கொண்டேன்.

ஆணவத்துடன் பாஜகவை மட்டும் கூட்டாகக் கொண்டு தேர்தலை எதிர் கொண்ட ஜெயலலிதா கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வியைத் தழுவியது.

இந்தத் தேர்தலில் மாநிலத்தை எதிர்கொள்ளும் உடனடி ஆபத்து கருணாநிதி குடும்பம் நடத்தி வரும் நெறிபிறழ்ந்த தொழில்களும், அதற்கு கூச்சமில்லாமல் துணை போகும் அந்தக் கட்சியின் அதிகார மையங்களும்தான். ஐந்து வருடங்கள் அவர்கள் கையில் மாநில நிர்வாகமும் போய் விட்டால், பல துறைகளில் நடக்கப்போகும் ஊறுகள் அடுத்த பத்து ஆண்டுகளில் கூட சரி செய்ய முடியாததாகப் போய் விடும்.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் தனக்கு அளிக்கப்பட்ட துணி துறை இணை அமைச்சர் பொறுப்பை, தன்னுடைய சகோதரர் குடும்பம், சம்பந்த்தப்பட துறையில் தொழில் செய்வதால் மறுத்து விட்டாராம் இன்றைய நிதிஅமைச்சர் ப சிதம்பரம். அந்த அரசியல் நேர்மை எங்கே, தமது தொழிலுக்கு சாதகமான துறைகளை மிரட்டிப் பெற்றுக் கொண்டுள்ள திமுக தலைவர் எங்கே?

என்னுடைய விருப்பம் என்னவென்றால் முடிவுகள் கீழ் வருமாறு அமைய வேண்டும்:

திமுக : 80
அதிமுக : 80
(நடுநிலைமை :-)
தேமுதிக : 50
மதிமுக : 10
காங்கிரசு : 10
பாமக : 5 (தமிழ் நாட்டின் சிவசேனா இவர்கள்)

தேமுதிகவை நம்பி கூட்டணி அரசு அமைய வேண்டும். கேட்பாரில்லாமல் ஆடும் இந்தத் தலைகளுக்கு கேள்வி கேட்க ஒரு கூட்டம் வேண்டும்.

4 கருத்துகள்:

ஊர்சுற்றி சொன்னது…

வெகுநாட்களுக்குப் பிறகு இங்கு வருகிறேன்.

உங்களுடைய கணக்கு நிஜத்தில் நடக்க வெகுநாட்களாகும் என நினைக்கிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் ஊர்சுற்றி,

(ஊர் எல்லாம் எப்படி இருக்கு?)

இந்தக் கணக்கு நடக்கத் தேவையில்லாமல் இந்த தீய சக்திகள் மறைந்து போய் விடக் கூட செய்யலாம்!

அன்புடன்,
மா சிவகுமார்

யுவகிருஷ்ணா சொன்னது…

மூன்று வருடங்கள் கழித்தும் இதே நகைச்சுவைத்தன்மை உங்களிடம் நிரம்பியிருப்பது மகிழ்ச்சி :-)

மா சிவகுமார் சொன்னது…

யுவகிருஷ்ணா,

ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி கஞ்சி வைத்துக் குழந்தைகள் குடிக்க, கடையில் சரக்கு வாங்கி அப்பா புரள, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று பொது மருத்துவச் சேவையைத் தனியாருக்குத் தாரை வார்க்க,

என்று வித விதமாக நாட்டைக் கூறு போட்டு விற்கும் இந்த பேய்கள் ஆளும் நாட்டில் வாழும் போது நகைச்சுவை உணர்வு கூட இல்லை என்றால் என்ன ஆவது என்று சொல்லுங்கள்!