திங்கள், செப்டம்பர் 14, 2009

நம்பிக்கைகளும் சடங்குகளும்

1.
'புதிய அலுவலகத்துக்குப் போக வேண்டும். 14ம் தேதி காலையில் கணபதி ஹோமம் செய்ய ஐயர் ஒருவரை ஏற்பாடு செய்ய வேண்டும்'

இப்படி முயற்சித்துக் கொண்டிருந்தோம். 'ரூபாய் 5000க்குக் குறையாது என்று சொல்கிறார். வந்து போக ஆட்டோ கட்டணம் கொடுக்க வேண்டியிருக்கலாம்'

'உங்கள் நம்பிக்கைக்கு செய்வதில் மறுப்பு இல்லை. ஆனால் இப்படி காசுக்காக வியாபாரமாக பூசை செய்வதில் என்ன பலன் கிடைத்து விடும் என்று தெரியவில்லை. குடும்பத்துக்கு அல்லது தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாகத் தெரிந்த பெரியவர் ஒருவர் வந்து பிரார்த்தனை செய்து ஆசிர்வதிப்பது பொருள் உள்ளதாக இருக்கும். முன் பின் தெரியாத ஒருவர், நமக்குப் பொருள் தெரியாத மொழியில் மந்திரங்களைச் சொல்லி, காசையும் பண்டங்களையும் வீணாக்குவதால் என்ன கிடைத்து விடும்'

'அதை விட நாமெல்லாரும் அதிகாலையில் ஒரு மணி நேரத்துக்கு அவரவர் நம்பிக்கைக்கேற்றபடி வழிபாடு செய்வோம். கடவுளை நம்புபவர்கள் கடவுளை நோக்கி, அவரவர் நம்பும் கடவுளுக்கு பிரார்த்தனை செய்யலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் மனமார வாழ்த்துவதாக வைத்துக் கொள்வோம்.'

'அதுவும் சரிதான். குறைந்தது 1 மணி நேரம் செய்ய வேண்டும். எந்த முறையும் முதன்மைப்படுத்தப்பட வேண்டாம். கூட்டாகத் தனித்தனி பிரார்த்தனை செய்து கொள்வோம்'

புரிந்துணர்வும், ஒத்தக் கருத்துக்களும் நிறைந்தவர்களுடன் வேலை செய்வது உண்மையிலேயே பாக்கியம்தான். இரண்டு நாட்கள் பொருட்களை எல்லாம் இடம் மாற்றி, இருப்பிடங்களையும் கணினிகளையும் அமைத்து, வேலை செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விட்டோம். செப்டம்பர் 14ம் தேதி காலையில் 4 மணிக்கு எழுந்து குளித்துப் புறப்பட்டு ஐந்தேகாலுக்கு அலுவலகம் வந்து விட்டேன். ஆறு மணி வரை இடத்தை சுத்தப்படுத்தி விட்டு திட்டமிட்டபடி சரியாக 6 மணிக்கு எனது பிரார்த்தனையை ஆரம்பித்துக் கொண்டேன்.

கண் விழித்துப் பார்க்கும் போது ஏழெட்டு பேர் சேர்ந்திருந்தார்கள். கொஞ்சம் தாமதமாக வந்தவர்கள் தத்தமக்குத் தெரிந்த புரிந்த வகையில் பிரார்த்தனை செய்தார்கள்.

2.
சனிப்பெயர்ச்சியின் போது சிறப்பு வழிபாட்டுக்காக திருநள்ளாரில் ஏற்பாடுகள் செய்துள்ளார்களாம். இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் வரப் போகிறார்களாம்.

நாளென் செய்யும் என்று தொடங்கும் பாடலைப் பற்றி கூகிளில் தேடினால், ஜெயபாரதி ஐயாவின் பொக்கிஷப் பக்கம் ஒன்று திறந்தது.

===============
இது அருணகிரிநாதர் பாடியது. "கந்தர்அலங்காரம்"

நாளென் செயும்வினை தானென் செயும்எனை நாடிவந்த
கோளென் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசர்இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்துதோன்றிடினே!
===============

உண்மையான கடவுள் பக்தி இருப்பவர்களை தவறான வாஸ்துவும், பாதகமான கிரக நிலைகளும், பிறர் செய்யும் வினைகளும் எப்படிப் பாதித்து விட முடியும்? அரைகுறை நம்பிக்கை இருப்பவர்களுக்குத்தான் அலைச்சல்கள், கரைச்சல்கள்.
=========================

தமிழகம் இன்று கடவுள் வியாபாரிகளின் கையில் மாட்டிக் கொண்டிருக்கிறது. 1960களில் பெரியாரும் அண்ணாவும் கண்ட தமிழகத்தில் இன்றைக்கு எந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்தாலும், சுவர்கள் இடித்து மாற்றப்பட்டிருக்கின்றன, கழிவறைகள் பூசையறையாக மாற்றப்பட்டிருக்கின்றன, சமையலறை இருந்த இடம் வாசலாக மாறியிருக்கிறது. நாளிதழ்களில் வாஸ்து ஆலோசகர்கள் 'சர்வரோக நிவாரணியாக' இடிப்பதையும் கட்டுவதையும் பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கக் கோவில் கட்டுகிறேன் என்று ஒருவர், மூச்சு விடச் சொல்லித் தருகிறேன் என்று ஒருவர், தனக்குத் தானே தங்க அபிஷேகம் செய்து கொள்ளும் இன்னொருவர் என்று சாமியார்கள் மக்களை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுக்குக் களம் அமைத்து இலவச விளம்பரத் தேடித் தருகின்றன.

3.
இதற்கெல்லாம் இன்னொரு பெரியாரும் அண்ணாவும் பிறந்தா வர முடியும்!

10 கருத்துகள்:

வனம் சொன்னது…

வணக்கம் சிவக்குமார்
\\கடவுளை நம்புபவர்கள் கடவுளை நோக்கி, அவரவர் நம்பும் கடவுளுக்கு பிரார்த்தனை செய்யலாம்\\
மிகவும் சரி இததான் என் வீட்டில் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் ஆனா மறுப்பது அவர்களின் உரிமையாக இருக்கினறது.

\\இதற்கெல்லாம் இன்னொரு பெரியாரும் அண்ணாவும் பிறந்தா வர முடியும்!\\
வர வேண்டாம் என்பதே என் எண்ணம் யோசிக்க தெரிந்தால், உணரத்த தெரிந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும், தன் முயற்சி, தன்நம்பிக்கை இல்லாதவர்களுக்காகதான் கடவுள் என்பது எல்லாறுக்கும் புரிந்துவிடும்

இராஜராஜன்

பத்மா அர்விந்த் சொன்னது…

மாசி
மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் மீண்டும் பதிய ஆரம்பித்தது.

நேற்று ஒரு பத்திரிக்கையில் படித்த வாசகம் " சீடராக இருக்க வேஷம் கட்டுபவர்கள் குருவாக வேடமிட்டவரிடம் ஆசியும் வாழ்த்தும் பெறுவதாக இருக்கிறது தற்போதய ஆன்மீகம்'.

ILA (a) இளா சொன்னது…

//மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் மீண்டும் பதிய ஆரம்பித்தது./
ரிப்பீட்டேய்

மா சிவகுமார் சொன்னது…

வனம் இராஜராஜன்,

//ஆனா மறுப்பது அவர்களின் உரிமையாக இருக்கினறது.//

நிச்சயமாக. ஆனால், ஒருவரின் உரிமை அடுத்தவரின் இடத்தில் தலையிடாமல் இருப்பது வரை சரிதான்.

//தன் முயற்சி, தன்நம்பிக்கை இல்லாதவர்களுக்காகதான் கடவுள் என்பது எல்லாறுக்கும் புரிந்துவிடும்//

எனக்குத் தெரிந்த தொழிலதிபர் ஒருவர், 'கடவுள் நம்பிக்கை இல்லாமைதான் தன்னம்பிக்கையின்மையின் அடையாளம்' என்று சொன்னார்.
கொஞ்சம் கஷ்டப்பட்டு யோசித்துப் புரிந்து கொள்ள முடிந்தது.

உலகம் மிகவும் சிக்கலானது. அதில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து 100% சரியான முடிவாக எடுக்க முடியாது. கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள், முடிவை எடுத்து விட்டு, கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட்டு நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டிருப்பார்கள்.

கடவுள் நம்பிக்கை இல்லா விட்டால் எப்போதுமே ஒரு விதக் கலக்கத்துடன் (தன் நம்பிக்கை இல்லாமல்தான்) இருக்க வேண்டும்.

பத்மா அர்விந்த்,

வெகுநாள் பிரிந்த உறவினர் ஒருவரை சந்தித்த மகிழ்ச்சி உங்கள் பின்னூட்டம் பார்த்து!

//சீடராக இருக்க வேஷம் கட்டுபவர்கள் குருவாக வேடமிட்டவரிடம் ஆசியும் வாழ்த்தும் பெறுவதாக//

அதுதான் பெரும்பாலான உண்மை, எனக்குத் தெரிந்த வரை.

இளா,
நன்றி :-)

அன்புடன்,
மா சிவகுமார்

வால்பையன் சொன்னது…

தமிழ்மனத்திற்கு நன்றி!
உங்களை மீண்டும் களத்தில் இறக்கி விட்டதற்கு!

வினையூக்கி சொன்னது…

Welcome Back Sir

passerby சொன்னது…

Sorry for writing in English.

It appears you do believe in God; but don't accept all that is being done in his God. That is a feeling shared by so many of us.

So, you want people not to go after such fake men who exploit their gullibility in such things as vastu shastra etc.

Good. Ideal. Thanks.

Still, the question remains -- is it easy to make people give up the habits of falling at the feet of fake men in search of an utopia?

Difficult.

The entire culture -- the climate of prevalent opinion that is created by men and women who influence society, the pattern of thinking, the education that is imparted in schools and colleges, the nature of religion (is it blindly superstitious, calculated to benumb our thinking?) etc. - such are a few co-operative causes that come to mind, and there may be many, which can change how we want our lives to be. The process is long, and needs continual replensihsment to thrive and to reach its result namely, to change us for better.

That will never happen.

The only thing for you to do, is to give expression to such lamentation in this blog-post, and for me, to throw up hands in despair saying --
'That will never happen'.

துளசி கோபால் சொன்னது…

அதென்ன ஒரு மணி நேரம் பிரார்த்தனை செய்யணுமுன்னு?????


உண்மையான மனசோடு ஒரே ஒரு விநாடி கடவுளை வழிபட்டாலே போதும்.

நமக்கெல்லாம் கர்ம யோகம்தான். செய்யும் தொழிலே தெய்வம்.

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

//உண்மையான கடவுள் பக்தி இருப்பவர்களை தவறான வாஸ்துவும், பாதகமான கிரக நிலைகளும், பிறர் செய்யும் வினைகளும் எப்படிப் பாதித்து விட முடியும்? அரைகுறை நம்பிக்கை இருப்பவர்களுக்குத்தான் அலைச்சல்கள், கரைச்சல்கள்//

கடவுளானாலும் சரி எதிரியானாலும் சரி. இடைத் தரகர் இன்றி நேரடியாய் பேசித் தீர்ப்பதே சரி!

மா சிவகுமார் சொன்னது…

வால்பையன்,
//உங்களை மீண்டும் களத்தில் இறக்கி விட்டதற்கு!//
களத்தில் ஆடும் பொறுப்பையும் தொடர்ந்து செய்யத்தான் வேண்டும். நன்றி :-)

வினையூக்கி,
நன்றி.

சிந்திக்க விரும்பும் சிலருக்காக,
நீங்கள் சொல்வது போல மனம் சலித்து நாம் வாளாவிருந்து விட்டால் கடவுள் வியாபாரிகள்தான் மலிந்து விடுவார்கள். நாம் சொல்வதை நாலு பேர் படித்தால் அந்த அளவு தாக்கமாவது ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் நமது பணியைச் செய்து கொண்டே போக வேண்டியதுதான்!

துளசிகோபால்,
'குறைந்தது 1 மணி நேரம் உட்கார்ந்தால்தான் தாக்கம் தெரியும்' என்று அலுவலக நண்பர் உறுதியாகச் சொல்லி விட 1 மணி நேரம். 1 விநாடி மட்டும் வழிபட்டு மனதை அமைதிப் படுத்திக் கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வந்து விடாதே!

தகடூர் கோபி,
//கடவுளானாலும் சரி எதிரியானாலும் சரி. இடைத் தரகர் இன்றி நேரடியாய் பேசித் தீர்ப்பதே சரி!//
உண்மையிலும் உண்மை.

அன்புடன்,
மா சிவகுமார்